வீட்டுக்குறிப்பின் உள்ளுணர்வு
சித்திர லேகா

அதிகாரி வீட்டு
வாதுகையில்
ஒரு அவசர விண்ணப்பத்தோடு
மணி அழுத்தி
நான் காத்திருக்க
கதவுக் கண்ணினுள்
ஒரு கண் தெரிந்தது.
என் பின்னே வந்தவனின்
இரங்கல் குரல் கேட்டுத்
திறந்தது கதவம்.
இரங்கியவனுக்குப்
பிச்சையிட்டபின்
எனை நோக்கி,
‘அப்பா அகத்தினுள் இல்லையே ‘
எனக் கூறிய
அதிகாரியின் வாரிசு,
வேகமாய்க் கதவடைத்து
வீட்டினுள் மறைந்தது.
அடைத்த கதவானால் என்ன ?
அதனுள் வாரிசு மறைந்தால் என்ன ?
என் காட்சியில் தெள்ளெனத் தெரியுது,
அதிகாரி அகத்தினுள்ளேயே இருப்பது.