லிவ்விங் டுகெதர் – கலாச்சார புற்றுநோய்.

This entry is part [part not set] of 29 in the series 20101121_Issue

எல்கே


தொண்ணூறுகளில் இந்தியாவின் சந்தை மேற்க்கத்திய நாடுகளுக்கு திறந்து விடப் பட்டது .மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்கள் இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக புற்றீசல் போல் வர துவங்கின. அவற்றின் வரவால் இந்தியாவின் பொருளாதாரம் மேபட்டதும் , வேலை வாய்ப்புகள் அதிகரித்தும் எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு அவற்றால் நமது கலாச்சாரம் சீரழிந்ததும் உண்மைதான்.

அதற்கு முன்பும் நம் நாட்டில் காதல் இருந்தது. ஆனால் அதன் பெயரால் நடக்கும் காம களியாட்டங்கள் இல்லை. காதலர்கள் தினம் என்ற பெயரில் அன்று நடக்கும் ஆபாசங்கள்தான் எத்தனை ??? காதல் என்ற பெயரில் இப்பொழுது வெறும் காமமே நடந்து கொண்டிருக்கிறது.

இந்த வரிசையில் இப்பொழுது புதிதாய் ஒன்று உள்ளே புகுந்து கொண்டிருக்கிறது. திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் லிவ்விங் டுகெதர் என்ற முறைதான் அது. பிடிக்கும் வரையில் இணைந்து வாழ்வோம் ,பிடிக்காத பொழுது பிரிந்து சென்று விடுவோம் என்பதே இதன் சாரம்.

இதைக் கேட்கும் பொழுதே நமது மனதில் பல சந்தேகங்கள் எழும். இதில் என்ன பிரச்சனைகள் உள்ளன ?? இதில் உள்ள சிக்கல்கள் எத்தகையவை ? அவற்றிற்கு நிரந்தர தீர்வு உள்ளதா ? இப்படி பல
கேள்விகள் எழுகின்றன.

முதலில் இவற்றை ஆதரிப்பவர்கள் சொல்லும் விஷயங்களை பார்ப்போம். அவர்கள் கீழ் கண்ட காரணத்தினால் இதை ஆதரிக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

௧. தனி மனித உரிமை இதில் அதிகம் உள்ளது
௨. வரதட்சணை கொடுமை இல்லை
௩. பிடிக்காதவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழத் தேவை இல்லை
௪. எதற்காகவும் யாருக்காகவும் என் தேவைகளை விட்டுக் கொடுக்கத் தேவை இல்லை.

நாம் , நம் கடமையை செய்கிறோமோ இல்லையோ உரிமையை எதிர்பார்ப்போம். முதலில் தனி மனித உரிமை என்று இவர்கள் எதை சொல்லுகிறார்கள் ?? குடும்பம் என்று வந்தால், அதற்கென்று சில பொறுப்புகள் உள்ளன. அவற்றை நிறைவேற்றித்தான் ஆக வேண்டும். அவற்றை நிறைவேற்ற தனது உரிமைகளை சிறிது தியாகம் செய்துதான் ஆக வேண்டும். அதில் என்ன தவறு இருக்கிறது ??

அடுத்தது , இதில் பெண்களுக்கு என்னப் பாதுகாப்பு உள்ளது ? ஒரு உதாரணத்திற்கு ஒரு பெண் நன்றாக இருக்கும் வரை அவருடன் இருந்துவிட்டு, அவருக்கு உடல் நிலையோ இல்லை அவரது பொருளாதாரமோ பாதிக்கப் பட்ட நிலையில் ,எனக்கு உன்னுடன் இருக்க பிடிக்கவில்லை என்று ஒருவன் விலகி சென்றால் அந்தப் பெண்ணின் நிலைமை ??? என்னதான் சட்டரீதியாக பொருளாதார பாதுகாப்பு கிடைத்தாலும் , ஒரு குறிப்பிட வயதைத் தாண்டினால் ஒரு துணை வேண்டும் .

பொதுவாக, விவாகரத்து வழக்குகளில் கூட அதிகம் பாதிக்கப் படுவது அவர்களின் குழந்தைகள்தான் என்று நாம் காண்கிறோம். அதேப் போல் இந்த லிவ்விங் டுகேதரில் குழந்தை பிறந்தால் அவற்றின் எதிர்காலம் கேள்விக் குறிதான் . ஜீவனாம்சம் கிடைத்தாலும், மனரீதியாக குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதி. அவ்வாறு சிறு வயதில் பாதிப்பிற்கு உள்ளாகும் குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் ? கண்டிப்பாக அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப் படும்.

திருமணம் என்பது நமது பார்வையிலும், மேல் நாட்டவர் பார்வையிலும் வேறுபாடும். நமது பார்வையை பொறுத்தவரை திருமணம் ஆயுட்கால பந்தம். ஆனால் அவர்களை பொறுத்தவரை அவ்வாறு இல்லை. அவர்களின் தேவை மாறுபடும் பொழுது உறவு மாறும்.

நமது குடும்பங்களில் பெற்றோரை பார்த்துக் கொள்ளவேண்டிய பொறுப்பும் உள்ளது. ஆனால் லிவ்விங் டுகதரில் இது சாத்தியமா ?? ஒரு கட்டம் வரைக்கும்தான் உங்களுடைய பார்ட்னர் பொறுத்துக் கொள்வார். அதன்பின் நடக்காது. அப்பொழுது அவர்களின் நிலைமை என்ன ஆகும் ??

இது ஒரு கலாசார சீரழிவு என்பதை ஏற்க மறுக்கும் நபர்கள் சொல்வது, திருமணம் தமிழர் கலாச்சாரம் இல்லை என்பதே. இது ஒரு பொய்யான கூற்று. பண்டைய தமிழகத்தில் காதல் மனம்,களவு மனம் போன்றவை இருந்தாலும், பெரும்பாலும் பெற்றோர் செய்து வைத்த திருமணங்களே என்பது பல சங்கப் பாடல்களில் இருந்து நிரூபணம் ஆகிறது.

‘கொடுப்பக் கொள்ளும்’ பெற்றோர் ஏற்பாட்டுத் திருமணமாகவே தென்னிந்தியாவில் திருமணங்கள் காலம் காலமாகவே நடைபெற்று வந்திருப்பதாகச் சமூகவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். தமிழ் இலக்கியத்தை ஆராய்ந்த மேலை நாட்டு அறிஞர் ஒருவரும் இந்த முடிவுக்கே வருகின்றார்.

காதல் திருமணங்கள் நடைபெறவில்லை என்பது இதன் பொருளன்று. “கொடுப்போர் இன்றியும்’ திருமணம் நிகழும் என்பதை தொல்காப்பியமே உறுதி செய்கிறது. “ஏற்பாட்டுத் திருமணங்களே பெரும்பான்மையானவை’ என்பதே ஆய்வாளர்கள் வெளிப்படுத்தும் கருத்து. “தாய்மாமன்’ என்ற உறவு, தமிழ்நாட்டில் திருமண உறவுகளிலும், நிகழ்வுகளிலும் பெற்றிருக்கின்ற இடத்தை அறியாதார் யார்?

திருமணச்சடங்கு பெண்ணுக்கான தேவை என்பது சங்க இலக்கியத்தில் இந்தத் தேவை, அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. “” என்னைப் பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை, என்னை மணந்து கொள் ” (நயவாய் ஆயினும் வரைந்தனை கொண்மோ – ஐங்குறுநூறு, 276 ) என்றும், “” மனைவி என்ற ஸ்தானத்தைக் கொடு ” (பெண்டெனப்படுத்தே, ஐங்குறு, 276 ) என்றும் பெண் ஆணிடம் கெஞ்சிக் கதறுவது, பெண்ணின் திருமணத் தேவையை உறைக்கும்படி வெளிப்படுத்துகிறது.

ஆக மொத்தத்தில் திருமண சடங்குகளில் வேண்டுமானாலும் பிற்காலத்தில் மாறுதல் வந்திருக்கலாம். ஆனால் திருமணம் என்பது சங்க காலம் தொட்டே தமிழக கலாச்சாரத்தில் ஒரு பகுதியாகத்தான் உள்ளது. இதை யாரும் மறுப்பதற்கு இல்லை.

திருமண பந்தத்திலும் இன்று பிடிக்கவில்லை என்றால் விலகி செல்ல விவாகரத்து இருக்கிறது. அதில் சட்ட ரீதியான பாதுகாப்பு பெண்களுக்கு உள்ளது .அதேப்போல் இருவருக்கும் இடையில் பிரச்சனை என்றால் அதை தீர்த்து வைக்க குடும்ப பெரியவர்கள் இருக்கிறார்கள் .நாம் செய்யும் தவறை தட்டி கேட்க பெரியவர்கள் இருக்கிறார்கள் என்றாலே தவறு செய்ய யோசிப்பார்கள். லிவ்விங் டுகதரில் இவை எல்லாம் இல்லை.

பொதுவாக, இதை அதிக காசு வைத்துக் கொண்டு இருக்கும் சிலரும், இந்தியக் கலாச்சாரத்தில் வளர்ந்து ,இன்று வெளிநாட்டில் நல்ல வேலைகளில் குடுபத்துடன் செட்டில் ஆனவர்களும் மட்டுமே வரவேற்கின்றனர். அவர்களுக்கு ஒரு கோரிக்கை உங்களுக்கு பிடித்தால் நீங்கள் அவ்வாறு அங்கேயே இருந்து கொள்ளுங்க. எங்கள் தாய் திருநாட்டிற்கு கொண்டு வர வேண்டாம்.

எங்களுக்கு சமாளிக்க வேறு பல பிரச்சனைகள் உள்ளன. இந்த விஷச் செடியால் வரும் பிரச்சனைகளை சமாளிக்க நேரம் இல்லை எமக்கு .

பி.கு : நீல நிறத்தில் கொடுக்கப் பட்டுள்ள வரிகள் ” யாழ் ” இணையத் தளத்தில் இருந்து 30-11-2004, மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழல்புலமும், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கமும் இணைந்து நடத்திய உலகத் தமிழாசிரியர்களுக்கான தமிழர் பண்பாட்டுச் சிறப்பு பயிற்சி வகுப்பு, மதுரை, பற்றியத் தலைப்பில் வந்த செய்தியில் இருந்து கையாளப் பட்டுள்ளது

Series Navigation

எல்கே

எல்கே