This entry is in the series 20040827_Issue

அருளடியான்


காவல் துறை அதிகாரிகளின் காம விளையாட்டுகளை ஜெயலட்சுமி என்ற பெண் அம்பலப்படுத்தி இருக்கிறார். காவலர்களுக்கு அதிக சலுகைகளை கொடுத்து தமிழக முதல்வர் அவர்களை தனக்கு விசுவாசமாக மாற்றி வருகிறார். இந்த நேரத்தில் இச்செய்தி வெளியாகி உள்ளது. தமிழ் நாட்டில் கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. காவலர்கள் என்ன செய்கிறார்கள் என பொது மக்கள் கேட்கிறார்கள். இப்போது, அவர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்விக்கு ஜெயலட்சுமி பதில் சொல்லி இருக்கிறார். கொள்ளையடித்து தப்பியோடியவர்களிடம் இருந்து காவல் துறை அதிகாரிகள் பங்குத்தொகை பெற்ற செய்தியும் சென்ற மாதம் வெளியானது.

உயர் நீதி மன்றக் கிளையை, மதுரையில் திறப்பதற்கு சென்னை வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள். இதற்கு தி.மு.க தலைவர் மு. கருணாநிதி மறைமுக தரவு தெரிவித்து வருகிறார். மதுரை உயர் நீதி மன்றக் கிளைக்கு மாவட்டங்களை பிரித்தளிப்பதில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும். உயர் நீதி மன்றக் கிளையே கூடாது என்பது, தென் மாவட்ட மக்களுக்கு செய்யும் அநீதியாகும். நீண்ட காலமாக இவர்கள் போராடி வருவது கண்டிக்கத் தக்கது. தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா சர்வாதிகாரப் போக்குடன் ட்சி செய்த போது, வழக்கறிஞர்கள் சற்று பயத்துடன் ஒழுங்காக நடந்து கொண்டனர். தற்போது, தமிழக முதல்வர் அப்படி நடந்து கொண்டது சரிதான் என்று நடு நிலையாளர்கள் நினைக்கும் படி வழக்கறிஞர்கள் நடந்து கொள்கின்றனர்.

நடிகர் கமலின் ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் ‘ படத்தின் தலைப்பிற்கு தமிழ் நாடு மருத்துவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. அப்படி எதிர்ப்பு தெரிவிக்க தமிழ் நாடு மருத்துவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. தமிழ்நாடு மருத்துவ மனைகளின் மனிதாபிமானமற்ற பகல் கொள்ளையை நடிகர் விஜயகாந்த் நடித்த ‘ரமணா ‘ படம் மிகச்சரியாக காட்டியது. தமிழ்நாடு மருத்துவர்கள் தாங்கள் செய்யும் சிகிச்சை குளறுபடிகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க கூடாது என்று வாதாடுகின்றனர். தங்களுக்கு சாதகமான செய்திகளுக்கு எல்லாம் மேலை நாடுகளை மேற்கோள் காட்டும் தமிழ்நாடு மருத்துவர்கள், இதற்கு மட்டும் அப்படிச் செய்வதில்லை. தவறான மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால் பாதிக்கப் பட்டவர்கள் வன்முறையைக் கையாள மாட்டார்களா ? மருத்துவமனைகள் மீது கல்வீச்சு என்ற செய்திகளைப் படிக்கிறோமே! மருத்துவர்கள் தங்களை விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட உயர்சாதியினர் என்று நினைப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

***

aruladiyan@netscape.net

20040827_Issue

ரவி சுப்பிரமணியன் கவிதைகள்