ஒரு இந்துவின் பதில் – திரு.திருமாவளவனுக்கு

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

வரதன்


அன்புள்ள திரு.திருமாவளவனுக்கு,

உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பிருக்கிறது.

நாளைய தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் சிலரில் நீங்களும் ஒருவர் எனும் அக்கறையின் வடிவே இக் கடிதம்.

உங்களை ஜாதி ரீதியாகப் பார்க்காமல், மனித ரீதியாகப் பார்த்து, நீங்கள் சார்ந்த இனத்திற்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் எனத் துடிப்பது கண்டு , உங்கள் முயற்சி வெற்றி அடைய ‘பெருமாளையும், சிவனையும் ‘ வேண்டுபவனில் நானும் ஒருவன்.

நான் ஒரு இந்து என பெருமையுடன் சொல்கிறேன்.

உங்கள் கேள்விக்கு என் பதில் இது – ஒட்டு மொத்த இந்துக்களின் பதில் அல்ல.

1. செல்வி.ஜெயலலிதாவின், மதமாற்றச் சட்டம் அவசியமற்றது. தேவையில்லாதது.

அதே சமயம், இஸ்லாம் மதம், கிறிஸ்துவ மதம் இரண்டிலும் ஜாதிப் பிரிவுகள் இல்லை என்று ஏன் உங்கள் அப்பாவி மக்களிடம்

சொல்கிறீர்கள்.

ஈராக் , பாக்கிஸ்தானிலேயே முஸ்லீம்கள் பல பிரிவு தான்.

இந்தியாவிலோ, மதம் மாறிய பின் நாடார், கிறிஸ்துவ நாடார் ஆனார். பிள்ளை கிறிஸ்துவப் பிள்ளை ஆனார்.

அதனால், மதக்கலவரங்களில், தலித்துகள் என்பதற்காக கிறிஸ்துவர், முஸ்லிம்கள் தாக்கப்படுகிறார்கள் எனச் சொல்வது உணர்ச்சி வேகத்தில் கைத்தட்டு வேண்டுமானால் கிடைக்கச் செய்யும், ஆனால் அதில் உண்மையில்லை என உங்கள் மனதிற்கு நன்றாகத் தெரியும்.

தலித் ஜாதிய பிரச்சனைகளூம் மதக்கலவரங்களும் வேறு வேறு.

2. திரு.சங்கராச்சாரியாரின் பங்களிப்பு காலத்தின் கட்டாயம். அவரின் செயல்கள் அத்தனையிலும் உடன்பாடு இல்லாத பலரில் நானும் ஒருவன்.

ஆனால் கோடாரிக்காம்புகள், ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு எல்லா வேஷமும் போட்டு ஓட்டுக்காக மண்டியிடும் போட்டு, அவர்கள்

கொழுக்கட்டை திண்பதை மறுக்கும் போது, திரு.சங்கராச்சாரியார் முக்கியத்துவம் பெற்றார்.

அதற்கு காரணம் செல்வி.ஜெயலலிதாவும் கிடையாது. திராவிட இயக்கத்தினர் தான்.

அதுவும் பார்பணர்களையும் பாம்பையும் கண்டால் , பார்ப்பணரை அடி என்று சொல்லி துவேஷ விஷத்தை வீதியில் தூவி விட்டு, வீட்டில் ஐயர் மருமகள் கண்டவர்கள்.

3. வெண்மணி தியாக சீலர்கள் நினைவிடத்தில் ஜாதிய அடையாளம் இன்றி கம்யூனிஸ்டுகள் பணிசெய்த போது, நீங்கள் அஞ்சலிக்கு அவ்விடம் சென்ற போது உங்களை அனுமதிக்க அவர்கள் மறுத்தனர். அதன் காரணம், ஜாதிய ரீதியாக அணுகினால், தலித்துகள் தனித்தீவாக ஆகி விடுவார்கள் எனும் நிஜ அக்கறையினால்.

4. வேறு ஒரு விஷயத்திற்காக திரு.பெரியார் ஒரு முறை சொன்னர், நாயை அவிழ்த்து விடத் தெரிந்தால் மட்டும் போதாது. தேவையான சமயத்தில் இழுத்துப் பிடித்துக் கட்டிப் போடவும் தெரியணும், என. நாய் = தீவிரவாதம் எனக் கொள்ளலாம்.

அது போல் தான் தலித்துகளை உங்களின் சிறுத்தையாக மாறத்தூண்டும் அறிவிப்பு.

சிறுத்தை ஒன்று காட்டிலிருக்கும் இல்லை கூண்டிலிருக்கும். ஆனால் தலித்துகள் நாட்டில் மக்களாக எல்லா உரிமையுடனும் வாழ வேண்டியவர்கள், திராவிடர்களின் அடிவேர் – ஆணிவேர்.

இப்படி எல்லா ஜாதியினரும் அரிவாள் , துப்பாக்கி எடுத்தால், தலித்துகளின் போராட்ட்ம் எப்படி வெற்றி பெறும்.

சமாதியிலும் பூக்கள் பூக்கும், ஆனால் சுடிக் கொள்ளத் தான் ஆளிருக்காது.

5. தாழ்த்தப்பட்டவர்களுக்கு, அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காகவே அநீதி இழைக்கப்பட்டால் அதை இரும்புக்கரம் கொண்டு தான் தடுக்க வேண்டும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

அது போலவே, தலித்துக்களால் கொடுமைப்படுத்தப்படும் ‘சலவைத் தொழிலாளிகளும் ‘ காக்கப்பட வேண்டும்.

6. தாழ்த்தப்பட்டவருக்கு பூணுல் போட்ட பாரதி இந்து. பிறாமணர். மதுரை மீனாக்ஷி கோவிலுக்கள் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துச் சென்றவர், ஐயர் தான். இந்து தான். தாழ்த்தப்பட்டவர்கள் பள்ளிக் கூடம் சென்ற போது, பாடம் சொல்லிக் கொடுத்தவர்களில் ஐயரும் உண்டு, பிள்ளையும் உண்டு, கோனாரும் உண்டு. அம்பேத்காருக்கு கல்விக்கு உதவி செய்தது உயர் ஜாதி சேர்ந்தவரா இல்லையா.. ?

– அவர்கள் மனதில் ஜாதி தாண்டி மனித நேயம் இருந்தது. அவர்கள் இந்துவாகவும் இருந்தார்கள்.

இஸ்லாமியர்கள் , கிறிஸ்துவர்கள் தாழ்த்தப்பட்டவர்களின் மேல் மிக அக்கறையுள்ளவர்கள் என்றிருந்தால், பல நூறு காலம் இந்தியாவை அவர்கள் ஆண்ட போது தாழ்த்தப்பட்ட இனத்தையே உயர்த்திருக்கலாமே.. ? ஏன் செய்யவில்லை…. ?

7. தாழ்த்தப்பட்டவரை அறநிலையத் துறை அமைச்சராக நியமித்து, போகும் கோவிலில் எல்லாம் முதல் மரியாதை கிடைக்கச் செய்து, தாழ்த்தப்பட்டவர்களுக்கு மனபலம் தந்த ‘திரு.காமராஜர் ‘, இந்து தான்.

8. இந்து மத கோட்பாடுகளில் நம்பிக்கையில்லா, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆட்சியில் தாழ்த்தப்பட்டவருக்கு இந்த அங்கிகாரம் தரப் பட்டதா… ?

தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சனையின் ஆதார காரணம் இந்து மதம் இல்லை. அப்படியிருந்தால் இந்து மதம் இல்லாத அமெரிக்கா, ஆப்பிரிக்கா கண்டத்திலே தாழ்த்தப்பட்டவர்கள் போல் கொடுமைக்குள்ளான கறுப்பர்கள் ஏன் துன்புற்றார்கள். தங்கள் உரிமைக்காக போராடிய அவர்கள், இஸ்லாமியர்களாகவோ, புத்த மதத்தினராகவோ மாறி பிரச்சனையில் இருந்து வெளி வந்திருக்கலாமே… ?

-அவர்களுக்காகப் பாடுபட்ட ‘திரு.மார்டின் லூதர் கிங் ‘ காந்தியின் படத்தைத் தன் அறையில் வைத்து, ‘ ‘..in the nonviolent resistance philosophy of Gandhi… the only morally and practically sound method open to oppressed people in their struggle for freedom. ‘ என்று சொன்னாரே.. அந்த திரு.காந்தி இந்து தான்.

அந்த திரு.மார்டின் லூதர் கிங், தன் சுயலாபத்திற்கு மக்களைத் தூண்டி விடாமல், அவர்களுக்கு உண்மை வழி காட்டியவர்.

9. தாழ்த்தப்படுத்தப்பட்டவர்களுடன் கோவிலுக்கும் போகும், மழையில் குடை பிடித்துப் போகும், அவர்கள் வந்த சூழல் தெரிந்து பொறுமையாக வேலை நுணுக்கம் கற்றுத் தரும் பல உயர் ஜாதி இந்துக்கள் எனக்குத் தெரியும். அந்த நிலையை அடைய அந்த தாழ்த்தப்பட்டவர்கள் படித்தார்கள். பதவிக்கு வந்தார்கள்.

– நீங்களே தாழ்த்தப்பட்டவன் என்ற ஒரே காரணத்துக்காக எத்தனை பேரை, உங்கள் இயக்கத்தில் பதவியில் அமர்த்துவீர்கள்.. ? தகுதி , திறமை பார்க்கிறீகளா இல்லையா… ?

அதனால் அவர்கள் படிப்பதை , திறமை வளர்த்துக் கொள்வதை உற்சாகப்படுத்துங்கள்.

பாதுகாப்புக்கு அவர்கள் வீச்சரிவாள், துப்பாக்கி ஏந்தச் சொல்வது மட்டும் ஒரு வாழும் சுழலை தந்து விடாது. அவர்கள் வாழவும் வேண்டும்.

10.தேவர், நாடார்கள் கீழ்மட்ட ஜாதி நிலையில் இருந்த போது, வெகுவாக, ராணுவத்திலும், போலிசிலும் சேர்ந்தார்கள். அது போல், தலித் மக்களுக்கு விழிப்பூட்டி, ராணுவத்திலும், போலிசிலும் சேரச் சொல்லுங்கள். அது ஒரு நல்ல மன நிலையைக் கொடுக்கும். பாதுகாப்பு சுழலைக் கொடுக்கும்.

நாடார்கள் ‘சாணாப்பயலுக ‘ என்றும், தேவர்கள், ‘கள்ளப்பசங்க ‘ எனும் கீழ்மட்டமாக பேசப்பட்டுள்ளனர்.

அதிலும், தேவர்கள் குற்றப்பரம்பரையினராக அறிவிக்கப்பட்டு, பொழுது சாயும் நேரத்தில், காவல் நிலையங்களின் முன்னே மைதானத்தில் வட்டம் வரையப்பட்டு அதனுள் விடியும் வரை அமர வைக்கப்பட்டனர்.

ஆனால், அவர்கள், திரு.நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ‘INA ‘ வில் அதிக அளவு சேர்ந்தனர். குற்றப்பரம்பரையினரின் அடுத்த சமுதாய நிலைக்கு அது படிக்கட்டாக இருந்தது.

நாடார்கள் ஊரு விட்டு ஊரு போய் வியாபாரத்தில் இணைந்தார்கள். விழுந்து அடிபட்டு எழுந்து நடந்தார்கள்.

அரசியலில் புகுந்து கொடி பிடித்து முன்னேறி, கோட்டையைப் பிடித்தார்கள், தேவர்கள், கவுண்டர்கள்.

அது போல், தாழ்த்தப்பட்டவர்களயும் வெகுவாக பல துறைகளில் நுழையச் செய்ய வேண்டும். அதற்கு பயிற்சி முகாம் நடத்தலாமே.

வியாபார நுணுக்கங்கள் சொல்லித்தரலாமே… ?

திரு.காமராஜர் காலத்தில் தலித் ஒவ்வொருவர் வீட்டுக்கும் கொடுக்கப்பட்ட ஒரு எக்டேர் நிலம் , இன்றைய நில மதிப்பீட்டில் பல லட்சம் பெறும். அது வேலை பார்த்து சேமித்தவனின் சேமிப்பை விட அதிகம்.

அப்படி தொலைநோக்குப் பார்வை கொண்ட திரு.காமராஜர் போல் ஒரு பார்வை கொண்ட திட்ட வடிவு வேண்டும்.

யாரும் இங்கே அரிவாள் தூக்கி முன்னேறவில்லை.

கனிவாய் வாழ்ந்த மகான்கள் புத்தன், இயேசு, காந்தி போன்றவர்கள் இன்றும் தொழப்படுகிறார்கள்.

அங்கனமின்றி வன்முறையையும், இரத்தத்தையும் வழிமுறையாகக் கொண்டு தலைமை கண்டவர்கள், ஒருவரேனும் இன்று போற்றப்படுகிறார்களா… ?

ஜாதிப் பிரச்சனை தலித்துகளுக்கு மட்டுமல்ல, நாடாருக்கும், தேவருக்கும் , கள்ளருக்கும், வன்னியருக்கும், பிள்ளைக்கும் உண்டு. குறிப்பாக தலித்துகள் துன்புறுத்துவதாக சமீபத்தில் திரண்டு கூட்டம் போட்ட ‘வண்ணான் ‘ தொழில் புரிவோருக்கும் உண்டு.

தலித்துகளுக்கு பல இடங்களில் இருக்கும் பிரச்சனை, நில சம்பந்த வேலை வாய்ப்பைத் தழுவியது. அதற்கான திட்ட வடிவு காணுவதை விடுத்து, மன ரீதியாக தூண்டி விடுவது, மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதைப் போல் தான்.

உங்களுக்கே தெரியும், பாண்டிபஜார் ஹோட்டலில் பக்கம் அமர்ந்து உண்பவன், தலித்தா, தேவரா, நாடாரா, செட்டியாரா யாருக்குத் தெரியும்.. ?

பின் ஏன் கிராமத்தில் மட்டும் பிரச்சனை. தலைமுறை தலைமுறையாக சிறு குழுவாக உள்ள அதே நபர்கள் அதே பிரச்சனை…

இடம் பெயர்தல் ஒரு புத்திசாலித்தனமான முறை.. அனைவரும் அல்ல… வீட்டுக்கொரு தலித், நகரம் நோக்கி வேலை தேடி இடம் பெயர உதவலாமே உங்கள் இயக்கம்.

11. உங்கள் புத்தக வெளீட்டு விழாவிலே இருந்த , வந்தவர்களில் இந்துவும் உண்டு, மேல் சாதிக்காரர்களும் உண்டு.

எதிரில் தெரிவதால் மட்டுமே, சமுகமே எதிரி என்று நீங்கள் நினைத்தால் பின் உங்கள் அருகே வந்து உங்களுக்கு அங்கீகாரம் தரும் இவர்கள் யார்….. ?

சொல்லுங்கள்.

12. பிறக்கும் போது இந்துவாகப் பிறந்ததால் இழிவும், சாகும் போது பெளத்தராக இறந்ததால் உயர்வும் அம்பேத்காருக்கு கிடையாது. அவர் வாழும் போது வாழ்ந்த வாழ்க்கைக்காக கிடைக்கும் மரியாதை அது.

புரியும் உங்களுக்கும்.

13. காஞ்சி பற்றி தாக்க வேண்டும் என்று , தேவாலய கூட்டமைப்புக்கு கொடி பிடிக்கிறீர்கள். வாடிகன் ஆய்வேட்டு மையம் திறந்த ஆராய்ச்சிக்குத் திறந்து விட்ட போது, போப் ஆண்டவரே கடந்த காலத்தில் வாடிகன் கிறிஸ்துவ மதத்தின் பெயரால் சமுதாயத்திற்கு இழைத்த கொடுமைகளுக்கு மன்னிப்புக் கேட்டது பற்றி உங்கள் மக்களிடம் சொல்லுங்கள்.

பாவம் அவர்கள். கொதிக்குது தீச்சட்டி என்று உங்களிடம் சொன்னால் அவர்களைத் தீயில் தூக்கிப் போட்டு விடாதீர்கள்.

நமது கடமை தீயை அணைத்து அவர்களைக் காக்க வேண்டியது.

14. எங்களுக்கும் இந்த செல்வி.ஜெயலலிதா மற்றும் காஞ்சி.சங்கராச்சாரியாரிடம் சொல்லனும்- இந்த மத மாற்ற சட்டத்தை தூரப் போடுங்கள், என்று. சங்கிலியில் கட்டி வைக்க இந்து அடிமையில்லை என்று. இந்தச் சட்டத்தினால் எங்களைக் கேவலப்படுத்துகிறார் – செல்வி.ஜெயலலிதா.

15. திரு.திருமாவளவனுக்கு, உங்களைக் கொம்பு சீவி விட்டு கூத்துப் பார்க்க விரும்பாததால் தான், இக் கடிதம்.

இது கசக்கலாம் – ஆனால் வேப்பங்கொழுந்து போல் மருந்து.

யாராவது, தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாதவர், உங்களுக்கு யோசனை சொல்ல அல்லது உதவி செய்ய வந்தால் ஒன்றே ஒன்றைக் கேளுங்கள் – ‘ அவர்தம் உறவிலோ, நட்பிலோ யாராவது ஒருத்தருக்கு தாழ்த்தப்பட்டவரைக் கல்யாணம் செய்விக்க முயற்சிக்க முடியுமா.. ? ‘ – என்று.

‘விடு ஜூட் ‘ என ஓடாதவரிடம் மட்டும் ஆலோசனை பெறுங்கள்.

பல இந்துக்களுக்கு நிஜ அக்கறை உண்டு – தாழ்த்தப்பட்டவர்கள் மேல்.

அவர்களை ஓட வைத்து விடாதீர்கள். உங்கள் கோரிக்கையின் ஞாயத்தை எடுத்துச் சொல்ல அந்தப் பக்கம் ஆளில்லாவிட்டால், தீர்வு என்று ஒன்றே வராது.

சத்திரியனே சாணக்கியனாகவும் மாற முயலும் காலகட்டத்தில், நீங்கள் வெறும் சத்ரியனாக மாறத் துடிப்பது விந்தையிலும் விந்தை.

காந்திகிராமத்தைத் திண்டுக்கல்லில் கண்ட ஜோடி, ஐயங்காரும், தாழ்த்தப்பட்டவரும் தானே… ?

அந்த ஐயங்கார் பெண்மணி -தமிழகத்தின் மிகப் பெரிய தொழில் குடும்ப பெண் வாரிசு – அதனால் இழந்த சுகம் சொத்து அப்பாடி………!!!!!!!!!!!!

அந்த வரலாறு நீங்கள் அறியாததல்ல….!

தவறான மன்னனால் அழிந்த சமூகத்தை விட, தவறான மந்திரிகளின் யோசனை கேட்கும் மன்னனால் தான் பல சாம்ராஜ்ஜியங்கள் அழிந்திருக்கின்றன.

தவறான யோசனைகளில் தரம் & தடம் புரண்டு விடாதீர்கள். ஒரு சமூகம் உங்களை நம்பியிருக்கிறது.

இப்படிக்கு

வரதன்

varathan_rv@yahoo.com

Series Navigation

வரதன்

வரதன்