பின்நவீனத்துவ ‘டெஹல்கா’ :ரவி ஸ்ரீனிவாசிற்கு ஓர் எதிர்வினை

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

கண்ணன்


திண்ணையில் வெளிவந்த ரவி ஸ்ரீனிவாசின் கட்டுரையின் முதல் வரியில் அவர் கூறுவது போல, நான் காலச்சுவடில் எழுதியது ஒரு கட்டுரை அல்ல. ‘மெளனத்தின் சிறகடிப்பு’ என்ற ஒரு பக்க பத்தி. இதை நான் குறிப்பிடுவதன் காரணம் ஸ்ரீனிவாசன் என்னுடைய பத்தியை கட்டுரையாக திரித்துக் கூறி மோசடி செய்துவிட்டார் என்று குற்றஞ்சாட்ட அல்ல. அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று தீர்ப்பு வழங்குவதற்காகவும் அல்ல. அத்தகைய அதிகாரம் எதுவும் என்னிடம் இல்லை. மாறாக இது ஒரு பத்தி என்பதை உணர்வது அந்தப் பதிவின் வரையறைகளைப் புரிந்து கொள்ள உதவும்.

அந்தப் பத்தியில் உள்ள விபரங்கள் EPWவில் இருந்து எடுக்கப்பட்டவை என்று அப்பத்தியிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். ணிறிகீ கட்டுரையை நான் மொழிபெயர்ந்து வெளியிடவில்லை. மேற்படி விவகாரம் தொடர்பாக விரிந்த வாசிப்பை நான் கோரவில்லை. என்னுடைய குறைந்தபட்ச வாசிப்பு என் கட்டுரைகளில் பட்டியிலிடுதற்காக மேற்கொள்ளப்படுவது அல்ல.

என் பத்தியின் வெளிப்படையான, பத்தியிலேயே தெளிப்படுத்தப்பட்டிருக்கும் நோக்கம், சோக்கல் விவகாரம் பற்றிய ஒரு முழு அறிமுகத்தைத் தருவது அல்ல. மாறாக தமிழில் பின் நவீனத்துவத்தில் நிபுணத்துவத்தை கோருபவர்களுக்கு சோக்கல் விவகாரம் பற்றித் தெரியவில்லை என்பதை சுட்டிக் காட்டுவது; சோக்கலின் கட்டுரை ஒரு பகடிக் கட்டுரை என்பதை வாசகர்கள் கவனத்திற்குக் கொண்டுவருவது. அத்தோடு ஒரு பகடிக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்ந்து வெளியிட்டால் தமிழில் விஜயம் அறிந்தவர்கள் அது பற்றி வாய் திறக்க மாட்டார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுவது.

சோக்கல் விவகாரத்தின் முழு பரிணாமத்தையும் அறியாத, பின் நவீனத்துவத்தில் நிபுணத்துவமும் இல்லாத நான் இவ்விஜயத்தைப் பதிவு செய்ய நேர்ந்ததின் காரணத்தையும் அப்பத்தியிலேயே சுட்டிக் காட்டியிருக்கிறேன். இதற்குக் காரணம் நம் அறிஞர்களின் தந்திரமான மெளனம். அ.மார்க்ஸ் தலைமையில் தமிழ் அறிவுலகில் இயங்கிவரும் கும்பல் தம்மைப் பற்றிய விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது இவர்களுக்குத் தெரியும். தம் முறைமைகளால் தம்மைப் பற்றிய விமர்சனங்களை தடை செய்வதில் இவர்கள் கணிசமான வெற்றி கண்டுள்ளனர். இந்த மனோபாவம் ரவி ஸ்ரீனிவாசன் கட்டுரைகளிலும் துலக்கமாகவே வெளிப்படுகிறது. என்னை அதிகபட்ச கடுமையான வார்த்தைகளால் தாக்குவதையும் அ.மார்க்ஸ் கும்பலிடம் குழைவதையும் இக்கட்டுரையில் தெளிவாகக் காணலாம். அவர்கள் செய்வது பிழையாக இருந்தாலும் அதை ஆதரிப்பது அல்லது தந்திரமான மெளனத்தை மேற்கொள்வதுதான் இவர்களுக்கு ‘சரியான அரசியல்’. காலச்சுவடை வலிந்து தாக்குவதும் ‘சரியான அரசியல்’.

என் பத்தி தொடர்பான ரவி ஸ்ரீனிவாசின் சில நேரடியான குற்றச்சாட்டுகள் பற்றிய தெளிவுகளை தர விரும்புகிறேன்.

சோக்கல் விவாகாரம் பின் நவீனத்துவம் பற்றியது மட்டும்தான் என்று திரித்துக் கூறுகிறேன் என்கிறார் அவர். சோக்கல் விவகாரம் பின் நவீனத்துவம் பற்றியது என்ற சித்தரிப்பு என் பத்தியில் உள்ளது. ஆனால் பின் நவீனத்துவம் பற்றியது மட்டும்தான் என்று நான் கூறவில்லை. இந்த விவாதம் அடிப்படையில் பின் நவீனத்துவம் பற்றியதுதான் என்றே இப்போதும் கருதுகிறேன். தத்துவம் சார்ந்த விவாதங்கள் பல துறைகளிலும் கிளை பரப்புவதில் அச்சரியமில்லை. சோக்கல் விவகாரம் பற்றிய விவாதத்தை படித்துவரும் ரவி ஸ்ரீனிவாஸ் இந்த விவாதத்தின் ஒரு பகுதிதான் பின் நவீனத்துவம் என்று கருதுகிறார். இந்த விவாதத்தில் பங்குபெற்ற மீரா நந்தா, ‘அறிவியல் ஆய்வுகள்’ (Science Studies) என்ற கல்வி சார்த்துறையை பகடி செய்து எழுதப்பட்டது அலன் சோக்கலின் கட்டுரை; அறிவியல் ஆய்வுகள் பின் நவீனத்துவத்தின் உயிர் நாடி (Science Studies constitutes the beating heart of postmodernism) என்று குறிப்பிடுகிறார். (Postmodernism and Religious Fundamentalism – A Scientific Rebuttal to Hindu Science, navayana, 2003) பின் நவீனத்துவத்தின் ‘உயிர் நாடி’ பற்றிய விவாதத்தை பின் நவீனத்துவம் பற்றிய விவாதமாக, ஒரு பத்தியில் குறிப்பிடுவதில், மோசடி எதுவுமில்லை.

பின் நவீனத்துவம் இவ்விவாதத்தின் ஒரு பகுதிதான் என்று கூறி ரவி ஸ்ரீனிவாஸ் திரிப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் கோரவில்லை. ரவி ஸ்ரீனிவாஸ், மீரா நந்தா ஆகியோர் இவ்விவாதம் பற்றிய வெவ்வேறு பார்வைகளைக் கொண்டுள்ளனர். இது இயல்பானதுதான். ஆனால் தனது புரிதலுக்கு அப்பாற்பட்டதை மோசடி, திரித்தல் போன்ற வார்த்தைகளால் ரவி ஸ்ரீனிவாஸ் தாக்குவது விவேகமற்ற செயல்.

இவ்விவாதம் 12 துறைகள் சார்ந்து நடந்தது என்றும் இவ்விவாதத்தை முழுமையாக பதிவு 550 பக்க நூல் எழுதவேண்டிவரும் என்றும் ரவி ஸ்ரீனிவாஸ் கூறுகிறார். ஒரு பக்கப் பத்தியில் இதை எளிமைப்படுத்தாமல் பதிவு செய்வது சாத்தியமா ? அறிவியல் ஆய்வுகள் பற்றிய பரந்துப்பட்ட அறிமுகம் தமிழில் இல்லை. அறிவியல் ஆய்வுகள் என்ற தொடர் தமிழில் பரிச்சயமான ஒன்று அல்ல. எனவே பின் நவீனத்துவம் என்ற நன்கு அறிமுகமான தொடரை கையாள்வது, இவ்விவாதம் பின் நவீனத்துவத்தின் உயிர் நாடி பற்றியதாக பார்க்கப்படும் நிலையில், பொருத்தமானது என்றே நினைக்கிறேன்.

இரண்டாவதாக கறுப்பு தொகுப்பில் வெளிவந்த கட்டுரை சுருக்கப்பட்டது என்று ரவி ஸ்ரீனிவாஸ் நூலை படிக்காமல் ஊகிக்கிறார். இதை என் கட்டுரையில் குறிப்பிடாதற்காக நான் கறுப்பு தொகுப்பாளர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அவன் சோக்கல் கட்டுரையில் உள்ள அடிக்குறிப்புகள் சான்று பட்டியல்கள், எந்தத் தகவலும் இன்றி ‘கறுப்பு’ தொகுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. மூலக் கட்டுரையின் தலைப்பு கூட முழுமையாக கொடுக்கப்படவில்லை. இருப்பினும் கட்டுரையின் உள்ளடக்கத்திலிருந்தும் ஆங்கிலத்தில் இருக்கும் உப தலைப்புகளிலிருந்தும் இது சர்சைக்குரிய பகடி கட்டுரைதான் என்பது தெளிவாகிறது. மேற்படி கட்டுரையை சுருக்கி வெளியிடுவதான அறிவிப்பும் ‘கறுப்பி’இல் இல்லை. அக்கட்டுரை முழுமையாக வெளிவந்திருந்தாலும் சுருக்கப்பட்டு வந்திருந்தாலும் என்னுடைய விவாதப் பொருள் தொடர்பாக எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை என்பதால் அதுபற்றி நான் எதுவும் எழுதவில்லை. தமிழில் மொழிபெயர்க்க முடியாத ஒரு கட்டுரையை ‘மொழி-பெயர்த்து’, எந்தக் குறிப்பும் இன்றி பிரசுரிப்பவர்களை ‘ஆர்வக் கோளாறு’ என்று செல்லம் கொஞ்சிவிட்டு, என்னிடம் ‘மன்னிப்பு கேள்’ என்று உத்தரவு பிறப்பிப்பது அநீதியானது.

சோஷியல் டெக்ஸ்ட் இதழ் சோக்கல் விவகாரத்தில் பிழை விட்டதற்காக நான் கொக்கரிக்கவில்லை. சோக்கலின் பகடி முயற்சியை ஆதரிக்கவுமில்லை. நான் சொல்ல விரும்பும் விஜயத்திற்கு பின்புலமாக நடந்த விஜயங்களை பதிவு செய்யும் விதத்திலேயே எழுதியிருக்கிறேன். பத்தியின் இறுதியில் சோஷியல் டெக்ஸ்ட்டிற்கு நிகழ்ந்ததை ‘சோக நாடகம்’ என்ற தொடர் மூலமே சுட்டியிருக்கிறேன்.

***

கண்ணன் காலச்சுவடு இதழின் ஆசிரியர். kalachuvadu@sancharnet.in

Series Navigation

கண்ணன்

கண்ணன்