பூபேன் காக்கரின் மறைவும் இந்திய ஓவியங்களின் எதிர்காலமும்

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

வெங்கட்ரமணன்


இன்று காலை தி ஹிந்துவின் மின்பதிப்பில் ஓவியர் திரு பூபேன் காக்கரின் மறைவு குறித்து படிக்க நேர்ந்தது. எழுத்தாளர், நாடக ஆசிரியர், சமூக விமர்சகர் என்று பல முகங்களைக் கொண்ட அறிவாளி திரு காக்கர். அவரது மறைவு மிகுந்த வருத்ததைத் தருகிறது.

காக்கரின் ஓவியங்களுக்கு எனக்கு பெங்களூர் ஐஐஎஸ்சியில் படிக்கும் பொழுது அருள் செல்வன் மூலமாக அறிமுகம் கிடைத்தது. (எனக்கு நவீன ஓவியத்தை அறிமுகம் செய்துவைத்ததே அருள்தான். அருளின் ஓவியங்களை தமிழவனின் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் புத்தகத்தில் காணலாம்). ஓரினச் சேர்க்கையில் ஆர்வம் கொண்டவராகத் தன்னை வெளியே காட்டிக்கொண்ட காக்கர் அதனால் மிகுந்த தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். கட்புல ஊடகத்தில் ஓரினர் செய்தியாளரென முன்னின்றார். காக்கரின் ஓவியங்கள் பலத்த சர்ச்சையை எழுப்பியவை. குறிப்பாக,

ஐந்து குறிகளையும் ஒழுகும் மூக்கையும் கொண்டவன் என்ற இந்திய ஓரினர் நிலை குறித்த படம்.

பனாரஸில் இரண்டு ஆண்கள் என்ற ஓரினர் படம். இந்தப்படம் இந்துத் தீவிரவாதிகளிடையே பலத்த அதிர்வையும் (எதிர்வினையையும் ஏற்படுத்தியது). இரட்டைச் சட்டகத்தையும், அவற்றினிடையே அளவு மாறுபாட்டையும் கொண்ட இதன் வலப்புறத்தில் பெருகியோடும் கங்கை நதியும், துறவிகளும் இன்னபிற சீலங்களும் இருக்க, இடப்புறத்தில் இரண்டு ஆண்கள் தங்கள் உறுப்புகள் ஒன்றோடொன்று உரசும் நிலையில் பிணைந்திருக்கிறார்கள். இதில் தலைநரைத்த முதியோன் முகத்தை மறைத்துப் பின்னிருக்க இளைஞன் தெளிவாக முகத்தைக் காட்டிக்கொண்டு முன்னால். இது வெளிச்சத்துக்கு வரும் இந்திய ஓரினர்களைத் தெளிவாக உணர்த்துகிறது. இணையில் இருக்கும் இளைஞனின் முக அடையாளங்களை வைத்துக் கொண்டு அது காக்கர்தான் என்று பலரும் ஊகித்தார்கள்.

மிகப் பிரபலமான அவரது ஓவியங்களுள் ஒன்று யாயதி . புராணக் கருவுடன் தனது ஓரின ஆர்வத்தை இணைத்து அவர் வரைந்த சித்திரம் இது.

காக்கர் ஓரினப் புணர்வை எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல், வக்கிரங்களும் இல்லாமல் தெளிவாக வரைந்தவர். இதற்குத் தன்னுடைய பாலியல் சுயதேடல்களை அவர் முன்னிருத்தியதே காரணம் என்று அவர் நண்பர்கள் சொல்கிறார்கள்.

இது ஒன்றுதான் காக்கரின் ஓவியங்களின் சாரம் என்று குறுக்கிவிட முடியாது. அவரது ஓவியங்களில் ஒரு எள்ளல் இருக்கும். குறிப்பாக ‘காட்சியில் சிவன் ‘ என்று தலைப்பிடப்பட்ட அவரது ஓவியத்தில் மத்தியவர்க்க வீட்டு வரவேற்பறையில் இன்னபிற சாதனங்களுடன் இடம் பெற்றிருக்கும் நடராஜர் ஓவியம் இன்றைய சூழ்நிலையில் கடவுளும் ஆன்மீகமும் கொள்ளும் இடத்தைச் சுட்டுகிறது. சமூக விமர்சனங்களைத் தைரியமாக முன்வைத்தவர் காக்கர். இன்னொரு உதாரணமாக, மசூதியைச் சூழந்த முஸ்லீம்கள் என்று தலைப்பிடப்பட்ட கொலாஜ் ஓவியம். இதிலும் தொழுகைத் தலத்தில் சூழ்ந்துள்ள ஆசாரங்களுடன் முன்னிருத்தப்பட்ட முக்காடிட்ட முஸ்லீம் பெண்ணின் உருவம்.

தன்னுடைய ஓரினச் சேர்க்கை ஆர்வத்தைப் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைக்க வேண்டிய கட்டாயம் பிற இந்தியர்களைப் போலவே காக்கருக்கும் இருந்திருக்கிறது. என்னுடைய விருப்பங்கள் என் நண்பர்களுக்குத் தெரியவந்தால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர எனக்கு வேறுவழியில்லை என்று காக்கர் நினைத்திருந்தார். பின்னர், அவரது இங்கிலாந்து பயணத்தில் அங்கிருக்கும் சமூக நிலையைக் கண்டு, தனது விருப்பங்களில் எந்தத் தவறும் இல்லை என்று உறுதி கொண்டார். என்றாலும், அவரது மரியாதைக்கும் உரிய தாய் இறக்கும் வரையில் அதை இரகசியமாகவே வைத்திருந்தார். பெற்றோரைக் குறித்த பல விம்பங்கள் அவரது ஓவியங்களில் இடம்பெறுகின்றன.

வல்லர்பாய் ஷா என்னும் ஆண்துணையுடன் வாழ்ந்து வந்த காக்கர், தன் இணைத் தோழன் இறந்த சில நாட்களுக்குள்ளே காலமாகியிருக்கிறார்.

பின் குறிப்பு :

அவரது மறைவு எழுப்பிவிட்ட ஆர்வத்தில் சமீபகாலங்களில் இந்திய ஓவியங்கள், மற்றும் ஓவியர்களின் நிலை எப்படியிருக்கிறது என்று இணையத்தில் தேடினேன். இணையத்தின் வருகையால் ஓவியர்கள் இந்தியாவின் சமயத் தீவிரவாதிகளிடமிருந்தும், ஆசார சிப்பாய்களிடமிருந்தும் தப்ப முடிகிறது. இணையத்தின் வழியே அவர்கள் உலகெங்கும் அறியப்படுகிறார்கள். மின் வணிகத்தின் மூலமாக அவர்களது படைப்புகளைப் பன்னாட்டு ஓவியர்கள், சிற்பிகளுக்கு இணையான சன்மானங்களுக்கு விற்க முடிகிறது. இது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

பன்னாட்டுச் சந்தையில் இந்திய கலைப்பொருட்களுக்குக் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுக்கிறார்கள் போலிருக்கிறது. உதாரணமாக, அதி உன்னத, வரலாற்றுச் சாதனை படைத்த இந்தி திரைப்படம் ஹம் ஆப் கே ஹை ஹெளன் சுவரொட்டி இணையத்தின் வழியே விலைக்குக் கிடைக்கிறது. சல்மான் கானின் கல்லுக்குத் தயாராக தன்னுடைய பிருஷ்டத்தைக் காட்டியுதவும் பெண்ணரசி மாதுரி தீட்சித்தின் அச்சம் கலந்த ஆர்வமும். குறிவைக்கும் திருவாளர் கானின் கண்களில் மின்னும் குறும்பும் கோடி கவிதைகளை உங்கள் மனதில் எழுப்பும் என நம்புகிறேன். விலை மிகவும் குறைவுதான் நூறு அமெரிக்க டாலர்கள். அதாவது கிட்டத்தட்ட நாலாயிரத்து அறுநூறு இந்திய ரூபாய்கள். கோடிக்கணக்கில் அச்சிடப்பட்ட இந்த காவிய ஓவியம் எவ்வளவு அந்நியச் செலாவணியை இந்தியாவிற்குப் பெற்றுத்தரும் என்று கற்பனை செய்தால் மெய்சிலிர்க்கிறது. இந்திய கலைஞர்களின் எதிர்காலம் மிகப் பிரகாசமாக இருக்கிறது.

http://www.tamillinux.org/venkat/myblog

Series Navigation

வெங்கட்ரமணன்

வெங்கட்ரமணன்