ஏன் அமெரிக்க விவசாயிகளுக்கு கொடுக்கும் மானியம் ஏழை நாட்டு விவசாயிகளுக்குப் பேரிடியாக இருக்கிறது ?

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

ஆண்ட்ரூ கேஸல்


(இந்தியாவில் மானியங்களை நிறுத்தவேண்டும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தரக் கூடாது, உரங்களுக்குத் தரும் மானியத்தை நிறுத்த வேண்டும், தண்ணீருக்கு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று குரல் எழும்பியுள்ளது. ஜெயலலிதா ஆட்சி இதை நடைமுறைப் படுத்தவும் முனைந்துள்ளது. மானியங்களின் அரசியலும், எப்படி வளர்ந்த நாடுகள் தம் விவசாயிகளுக்கு மானியம் அளித்து , மற்ற நாடுகளின் விவசாயிகளை அழிக்க முயல்கிறது என்பது பற்றிய கட்டுரை இது.)

சென்ற வருடம், வாழ்க்கையும் கடனும் என்ற பெயரில் ஒரு விவரணப்படம் பற்றி நான் எழுதினேன். எவ்வாறு உலகமயமாதல் என்ற குலோபலைசேஷன் ஜமைக்கா என்ற ஏழை நாட்டு மக்களை பாதிக்கிறது என்பது பற்றியது இந்த விவரணப் படம்.

இது பிபிஎஸ் என்ற அமெரிக்க பொது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இது எவ்வாறு ஜமைக்காவின் விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள் என்பதையும், எவ்வாறு அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் உணவுப்பொருட்களுக்கு எதிராக போரிட முடியாமல் இருக்கிறார்கள் என்பதையும் காட்டியது.

படத்தயாரிப்பாளர் ஸ்டெஃபனி ப்ளாக் அவர்கள் ஜமைக்காவில் உற்பத்தியாகும் உணவுப்பொருட்கள் எவ்வாறு அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை விட அதிக விலையில் இருக்கின்றன என்பதைக் கண்டு கடும் கோபமடைந்தார். இந்த பிரச்னைக்கு காரணம் ‘சுதந்திர வர்த்தகம் ‘ என்றே அவர் கருதுகிறார்.

ஜமைக்கா நாடு தன்னுடைய வெளிநாட்டு கடனிலிருந்து தப்புவதற்கு உதவ முன் நிபந்தனையாக வெளிநாட்டு கடன் உதவி நிறுவனங்கள் இந்த நாட்டின் இறக்கு மதி வரியை மிகவும் குறைக்க உத்தரவிட்டன. ஆகவே, இவ்வாறு குறைந்த வரியின் காரணமாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும், சர்க்கரை, தான்யம் மற்றும் உணவுப்பொருட்களைத் தடுக்க முடியவில்லை. இதனால் ஜமைக்கா விவசாயிகள் மாட்டிக்கொண்டார்கள்.

இது மற்ற ‘முற்போக்கு சிந்தனையாளர்கள் ‘ சொல்வது போன்று சுதந்திர வர்த்தகத்தாலோ அல்லது உலகமயமாதலினாலோ வரும் பிரச்னை அல்ல. அப்படித்தான் என்று நினைத்தீர்கள் என்றால் உண்மையான பிரச்னையை நீங்கள் பார்க்கவில்லை என்று பொருள். சென்றவாரம் அமெரிக்க காங்கிரஸ் தன்னுடைய விவசாயிகளுக்கு உதவ பெரும் பணத்தொகையை மான்யமாக வழங்கியது. அதுதான் ஜமைக்கா விவசாயிகளின் பிரச்னையின் ஊற்றுக்கண்.

இந்த விவசாய சட்டம், அமெரிக்க மக்களிடமிருந்து வாங்கிய வரியில் 180 பில்லியன் டாலர்களை வரும் பத்தாண்டுகளில் விவசாயிகளுக்கு மான்யமாக வழங்க இருக்கிறது. இது இன்றைய தேதிக்கு எவ்வளவு அமெரிக்க விவசாயிகளுக்கு மான்யமாக வழங்கப்படுகிறதோ அது போல சுமார் 70 சதவீதம் அதிகம். இன்று இந்த மான்யம் பணக்கார விவசாயிகளுக்கும் விவசாய தொழிற்சாலைகளுக்கும் நேரடி பணப்பட்டுவாடாவாக செல்கிறது.

இந்த மான்யங்களே பல மில்லியன் டன் உணவுப்பொருட்களை ஜமைக்கா போன்ற நாடுகளிலுள்ள ஏழை விவசாயிகள் கூட போட்டி போட முடியாத அளவுக்கு குறைந்த விலையில் ஏற்றுமதி செய்ய காரணமாகின்றன.

சோளம், அரிசி சோயாபீன்ஸ் போன்றவைகளுக்கு குறைந்த பட்ச விலையை அமெரிக்க அரசாங்கம் கொடுப்பது அமெரிக்க விவசாயிகள் ஏராளமாக உற்பத்தி செய்யக் காரணமாகின்றது. இது சந்தை விலையை ஏகத்துக்குக் குறைக்கிறது. சந்தை விலை குறைவதால் அடிபடக்கூடிய அமெரிக்க விவசாயிகளைக் காப்பாற்றவென்று, இது இன்னும் அதிகமாக அரசாங்கம் மான்யம் கொடுக்கும் படிக்கு அரசாங்கத்தை தூண்டுகிறது. இந்த மான்யம் இன்னும் அதிகமாக தான்யங்களை உற்பத்தி செய்ய அமெரிக்க விவசாயிகளை தூண்டுகிறது. இந்த அதிக உற்பத்தி, ஜமைக்கா போன்ற நாடுகளுக்கு குறைந்த விலையில் ஏற்றுமதி செய்ய காரணமாகின்றது.

1996இல் அமெரிக்க காங்கிரஸ் இந்த முட்டாள்த்தனத்தை உணர்ந்தது. அமெரிக்கச் சட்டமன்றம் இன்னொரு சட்டத்தை உருவாக்கி இப்படிப்பட்ட மான்யங்களில் இருக்கும் மோசமான விஷயங்களைக் குறைக்கவும் நீக்கவும் முயன்றது.

இதன் கருத்து, விவசாயிகளே எந்த தான்யத்தை எப்போது பயிரிடவேண்டும் என்று முடிவெடுக்கத் தூண்டுவதுதான். ஆனால் இப்போது விவசாயிகள் சந்தைக்கு பதிலாக எதில் அதிக மான்யம் கிடைக்கும் என்று பார்த்து அதைப் பயிரிட ஆரம்பித்துவிட்டார்கள்.

முக்கியமான அரசியல் கட்சிகள் இந்த கருத்தை ஆதரிக்க பல காரணங்கள் இருக்கின்றன. குடியரசுக் கட்சி அரசாங்கம் மக்களின் முதுகில் சவாரி செய்வதை எதிர்க்கிறது. ஜனநாயகக்கட்சி இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு மான்யம் வழங்குவதை எதிர்க்கிறது.

இப்படிப்பட்ட மான்யங்கள், நிறுவனங்களுக்கு அரசாங்கப் பணம் கொடுத்து ஆதரிப்பது என்பதுதான் என்பதில் எந்தவிதமான வேறு கருத்தும் இருக்க முடியாது. ஏழை விவசாயிகளுக்கு 1930களில் உதவுவதற்காக இப்படிப்பட்ட திட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டாலும், சென்றவருடம் இந்த பணம் அமெரிக்க விவசாயிகளில் உயர்மட்ட பணக்காரர்களான 10 சதவீத விவசாயிகளுக்கே சென்றடைந்தது.

இப்படிப்பட்ட லட்சம் டாலருக்கு மேலாக பணப்பட்டுவாடா பெற்றவர்கள் ஜான் ஹன்னோக் லைஃப் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி, டேவிட் ராக்கபெல்லர், பாஸ்கட் பால் வீரர் ஸ்காட் பிப்பன் ஆகியோர். என்ரான் சேர்மனாக இருந்த கென்னத் லே கூட பணம் பெற்றார். தேர்தல் நடக்கும் ஆண்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விவசாய மாநிலங்களில் வெற்றிபெறுவது முக்கியம் என்பதால் இந்த மானியப் பணம் எதிர்க்க முடியாத அரசியல் சுய நலமாகிவிடுகிறது. அரசியல் கொள்கை, சிக்கனமாக அரசாங்கப்பணத்தை செலவு செய்வது, பகுத்தறிவு உள்ள பொருளாதாரம் ஆகியவை ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறியப்பட்டுவிடுகின்றன. இந்த வள்ளல்தனம் காரணமாக நகரத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் சுமார் 4377 டாலரை வரிப்பணத்தில் இழக்கிறது. இது சுமார் 462 பில்லியன் டாலர் 10 வருடங்களில். விவசாயக் குடும்பங்கள், சிறு தொழில் குடும்பங்களைக் காட்டிலும் முக்கியம் என்ற அமெரிக்கப் பார்வை தான் இந்த அநீதி தொடரக் காரணம். பொது வரிப்பணத்தைக் கொள்ளையடிக்க சட்டசபையின் மீது அழுத்தம் தரவென்றே கம்பெனிகள் உள்ளன.

இது ஒரு மாயக்கதை. 97 சதவீத அமெரிக்கர்கள் பண்ணையில் வாழவில்லை. இங்கே அதிகரிக்கும் விவசாய மான்யம் உலக வர்த்தக பேச்சுக்களில் அமெரிக்காவின் நிலையை வெகுவாக பாதிக்கும். மற்ற நாடுகளில் இருக்கும் விவசாய மான்யத்தை குறைக்க அமெரிக்கா முயலும்போது இது அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்தப்படும்.

ஐரோப்பாவும் ஜப்பானும் அமெரிக்காவின் உணவுப்பொருட்களை வாங்க மாட்டார்கள். அவர்களது விவசாயிகள் வெகுவாக அந்தந்த அரசாங்கங்களால் மான்யம் கொடுக்கப்பட்டு காப்பாற்றப்படுகிறார்கள். இப்படிப்பட்ட வர்த்தக தடைகளை பணக்கார நாடுகளிலிருந்து இறக்கினால்தான், ஆப்பிரிக்கா, கரீபியன், ஆசியாவில் இருக்கும் ஏழை நாடுகள் தங்களது உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்து வளர முடியும்.

இன்றைய அமெரிக்க விவசாய பில், பெருமளவு பின்னோக்கிச் செல்லும் வகையில் உள்ளது. ஜனாதிபதி புஷ் இதனை கையெழுத்திடுவதாக உறுதி அளித்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை உலக வர்த்தக சூழ்நிலையை பெரும் மோசமான நிலைக்கு ஆளாக்கும்.

இது ஜமைக்காவின் ஏழை விவசாயிகளுக்கு நல்ல செய்தி அல்ல. இந்த பிரச்னைகள் சுதந்திர வர்த்தகத்தால் வருவதல்ல. அப்படிப்பட்ட சுதந்திர வர்த்தகம் பணக்கார நாடுகளால் செய்யப்படாமல் இருப்பதால் வருவது.

http://www.commondreams.org/views02/0506-09.htm

Series Navigation

ஆண்ட்ரூ கேஸல்

ஆண்ட்ரூ கேஸல்