பார்வையும் களவுமாக

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

சூர்யா லட்சுமிநாராயணன்



வரிசையில் என் முன்னாள் நின்றவன் என்னைப் பார்த்ததும் நான் எப்படி பயந்து போய் நடுங்கிய வண்ணம் உடல் முழுவதும் சிலிர்க்க முகத்தை மறைத்துக் கொண்டு ஒளிந்தேனோ, அதே போல் அவனும் ஒளிந்தான் என்பது சற்று நேரத்திற்குப் பிறகு தான் யோசித்து உணர்ந்தேன்.

நிம்மதியாக ஒரு இடத்தில் உறங்கப் போகும் முன் அந்த வழியாக 2 பாம்புகள் வாக்கிங் செல்லும் எனத் தெரிய வந்தால் எப்படி நிம்மதியாக உறங்க முடியும். அதிகாலை வேளையில் நிம்மதியாக காபி அருந்த முற்படும் போது, எருமை மாடு கழனித் தண்ணீர் குடிப்பதைப் போல் சத்தம் போட்டபடி காபி குடிப்பவன் அருகில் இருந்தால் எப்படி நிம்மதியாக காபி குடிக்க முடியும்.

அதுபோல், அதேபோல் நிம்மதியாக குடும்பத்தை உருவாக்குவது எப்படி என்று தெரிந்து கொள்வதற்காக ஒரு படம் பார்க்கலாம் என்று டிக்கெட் எடுக்கும் போது வரிசையில் தெரிந்தவன் நின்றால், எப்படி நான் நிம்மதியாக படம் பார்க்க முடியும். கொலைக் குற்றவாளிகள் போல ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டு, ஒரே உறைக்குள் இரு கத்திகளைப் போல திருதிருவென விழித்தபடி, இதையத்தை ஏதோ ஒரு வெட்க உணர்வு பிசைந்த படி, ச்ச்ச்சேய்…… ஒன்று அவனை தொலைத்துக் கட்ட வேண்டும். அல்லது நான் தொலைந்து போக வேண்டும். அடுத்த பிறவியில் ஏதாவது ஒரு வெளிநாட்டில் பிறக்க வேண்டும். இந்தியாவில் மட்டும் தான் இதுபோன்ற காட்சிகள் அனைத்தும் காணக்கிடைக்கும். 30 வயதிலும் பாலுணர்வு இங்கு தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது. அப்படி மட்டும் தவிர்க்க வில்லையென்றால் பாரம்பரியத் துரோகி என்கிற பட்டப்பெயரைக் கொடுத்து கில்லட்டினுக்கு அடியில் வைத்து தலையை துண்டித்து விடுவார்கள். இங்கு ஒரு பண்ணையாராக இருந்து 10 பெண்களை வப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாம். அது பெருமையான விஷயம். ஒரு பணக்காரனாக இருந்து தினம் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம். அது சகஜமான விஷயம். ஒரு நடிகராக இருந்து என்னவேண்டுமானாலும் செய்யலாம். மறு பேச்சே இல்லை. ஆனால் காசு இல்லாதவன் முறையே 1. ஒரு பெண்ணை நிமிர்ந்து பார்க்கக் கூடாது. 2. காதலியை கூட்டிக் கொண்டு கடற்கரைக்கு செல்லக் கூடாது. 3. குறைந்த பட்சம் ஒரு குடும்பப்படம் கூட பார்க்கக் கூடாது.

பாலுணர்வில் வெட்கமும், வெட்கமின்மையும் எப்பொழுது தேவை, எப்பொழுது தேவையில்லை என்பதில் மிகப்பெரிய குளறுபடிகள் எனக்கு மட்டும் அல்ல நிறைய பேருக்கு இருப்பதை தெளிவாகவே பார்க்க முடிகிறது. பாலுணர்வு தேவையா, தேவையில்லையா? என வரிசையில் நின்ற அத்தனை பேரையும் அமர வைத்து கருத்துகணிப்பு நடத்தினால், அத்தனை பேரும் ஒருமுடிவைத்தான் எடுப்பார்கள் எனத் தெரிகிறது. அது தேவைதான் என்பதாகத்தான் இருக்கும் எனத் தோன்றுகிறது. பின் எதற்காக இந்த வெட்கமும், பயஉணர்வும்.

அது சகஜமானதுதான் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்த பின்னரும் அது ஏன் சகஜமாக இல்லை. அது ஒவ்வொருவரின் ஆழ் மனதுள்ளும் சகஜமானதாக இருக்கிறது. ஆனால் அதே உணர்வு 4 பேர் மத்தியில் சகஜமாக இல்லை. அது சகஜமாக இருக்க வேண்டுமானால் தனிமை தேவைப்படுகிறது. சினிமா இருட்டில் காட்டப்படுகிறது என்பது எவ்வளவு வசதியாய் போய்விட்டது. எல்லா உணர்வுகளும் இருட்டில் உள்ளுணர்வை தொட்டுச் செல்கிறது.

ஒடுக்கப்பட்ட பாலுணர்வு வெளிப்படும் போது, அது கோபமாகவும், பழிவாங்கப்படுதலாகவும் வெளிப்படும் என்பதை இந்த சமூகம் உணர்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதற்காக மட்டுமே நான் இந்த செயலில் அதாவது ஒரு படம் பார்க்கும் செயலில் ஈடுபட்டேன் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உண்டு. இல்லையென்றால் யார் இதையெல்லாம் வேலை மெனக்கெட்டு பார்க்கப் போகிறார்கள். எனக்கு இந்த சமுதாயத்தை பலி வாங்க வேண்டும் அவ்வளவுதான்.

பெண்களை சைட் அடிக்க அனுமதிக்காத இந்த சமூகத்தை மிகுந்த கோபத்துடன் பழிதீர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பை அவன் பறித்து விடுவான் போல. இந்த சமுதாயத்துக்கு எதிரான போராட்டத்தில் அவனும் பங்கு கொண்டதில் எனக்கும் சந்தோஷம் தான். ஆனால் அதை வேறொருநாள் வைத்துக் கொள்ள வேண்டியது தானே. என் பழிதீர்க்கும் திட்டத்தில் நான் கூட்டு வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பதை அவனுக்கு நான் எப்படி உணர்த்துவது என்றே தெரியவில்லையே.

13 வயது முதல் 60 வயது வரை சிறுவர்-பெரியவர் என அனைவரும் பாரபட்சமின்றி கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் ஒரே ஒருவன் மட்டும் நெருடலாக இருப்பதற்கு காரணம் அவன் எனக்கு மிகத் தெரிந்தவன் என்கிற ஒரே காரணம் மட்டுமே. அவன் மட்டும் அறிமுகம் அல்லாதவனாக இருந்திருந்தால் பிரச்னை இருந்திருக்காது. அவன் என்னைப் பற்றிய நல் அபிப்ராயங்களுடன் கூடிய தெரிந்தவன் அவ்வளவுதான். பிரச்னை இன்னும் நுன்மையாக்கினால் நல் அபிப்ராயங்கள் என்பதில்தான் அது ஒளிந்திருக்க வேண்டும்.

நான் நிச்சயமாக சமுதாயத்திற்கு நல்லவனாக இருக்கக் கூடாது. நான் கெட்டவனாக இருந்திருந்தால் பல்வேறு சூழ்நிலைகளை எளிதாக கடந்து விட முடியும். ஆம் நான் கெட்டவன். பின் எதற்கு பயப்பட வேண்டும். நான் ஏற்கனவே கெட்டவன். புதிதாக கெட்டவனாவதற்கு என்ன இருக்கிறது. அதனால் பழைய கெட்ட விஷயங்கள் புதிய கெட்ட விஷயங்களுக்கு போஷாக்குஅளிக்கின்றன. ஆனால் நல்லவன் என்றுமே ஆபத்தின்மீதே பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. நல்லவன் பயந்து கொண்டே பயணிக்க வேண்டியிருக்கிறது. நல்லவன் தனது நல்ல தன்மைகளை இயல்பானதாக இல்லை என்பதை உணர்ந்தும், அதை தக்க வைத்துக்கொள்வதற்காக நல்லவனாக நடிக்க வேண்டியிருக்கிறது. அப்படியென்றால் நல்லவன், நல்லவன் இல்லை. நல்லவனும் கெட்டவனே. உலகில் ஒரே தன்மை தான் உண்டு. அது கெட்டது. கெட்டவன் மட்டுமே இங்கு உண்டு. நல்லவன் முயற்சி செய்து கொண்டே இருக்கிறான் நல்லவனாக இருக்க. ஆனால் கெட்டவன் இயல்பாக கெட்டவனாக இருக்கிறான். இயல்பாக இருப்பது தானே உண்மையானது. கெட்டவன் மட்டுமே நடிப்பில்லாதவன். நல்லவன் சரியான நாடகக் காரன். அவனை நம்பக் கூடாது.

நான் நல்லவன் என்ற இமேஜை எப்பொழுது எப்படி உருவாக்கித் தொலைத்தேன். அந்த வரிசையில் நின்றவன் என்னை நல்லவன் என்று ஏன் நம்பிக்கொண்டிருக்கிறான். நான் அவன் மனதில் கெட்டவன் என்ற இமேஜை உருவாக்க என்ன செய்ய வேண்டும். அவனை வரிசையிலிருந்து இழுத்து போட்டு நாலு மிதி மிதிக்கலாமா? என்னை மகா ரவுடி என்ற அவன் நினைத்துக்கொண்டால் விஷயம் சுலபமாக முடிந்து விடும்.

திடீரென அந்த சம்பவம் நடந்தது.

அவன் என்ன நினைத்தானோ என்னவோ திடீரென வரிசையிலிருந்து விலகி குறிப்பாக தலையை தொங்கவிட்டபடி பார்வையை அந்தபக்கம் இந்தப்பக்கம் அலையவிடாமல் நேரே நடக்க ஆரம்பித்தான். சின்னப்பயல் அவனுக்கே இவ்வளவு தைரியம் இருக்கையில் நான் என்ன சும்மாவா?

அவனைக் கூப்பிட்டேன் நான். இவ்வாறு அவனிடம் கூறினேன்.

நான் : டேய்! இங்க வா…….

அவன் பேசாமல் அருகில் வந்தான். அவன் இன்னும் தலையை தொங்கப் போட்டுக்கொண்டுதான் இருந்தான்.

நான் : அப்பாகிட்ட போய் போட்டுக் கொடுத்திராத….

அவன் சரி என்பது போல் தலையை ஆட்டினான். மனதிற்குள் இவ்வாறு நினைத்திருப்பான். படுபாவி எனக்குப் போய் அண்ணனா பொறந்து தொலைச்சிருக்கானே என்று…..

Series Navigation

சூர்யா லட்சுமிநாராயணன்

சூர்யா லட்சுமிநாராயணன்