ராகு கேது ரங்கசாமி (தொ ட ர் க தை -1)

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/1/

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பக்கமாய் இருக்கிறது சபேசனுடைய ஜாகை. சித்திரக்குளம் அருகே மகாதேவ சாஸ்திரி தெரு. இப்போது அவர் சாஸ்திரி அல்ல- ஜாதிப்பேராம். எடுத்து விட்டார்கள். வால் இழந்தார் நரி. மாற்றங்கள்!

தெருவுக்குப் பழைய அடையாளங்கள் அழிந்து புது அடையாளங்கள் வந்திருக்கின்றன. தெரு துவக்கத்தில் ஆவின் பூத். முன்போ அங்கே மாடுகட்டி அதிகாலை நாலு நாலரைக்கெல்லாம் நுரைக்க நுரைக்க பால் கறப்பார்கள். விடியலின் தளிர் வெளிச்சத்தையே அவர்கள் இப்படி சர்ர் சர்ரென்று பாத்திரத்தில் பிடிக்கிறாப் போலிருக்கும்.

தெருவில் இப்போது உயரமாய்க் கட்டடங்கள் எழுந்து விட்டன. இத்தனை காலமாய் அவற்றை யாரோ பூமிக்கு அடியிலேயே காலால் அழுத்தி ஒளித்து வைத்திருந்தார்கள். அதிரடியாய் மாற்றங்கள் விரல் சொடுக்கும் பொழுதுக்குள். மாற்றங்கள் வருகிறதைப் பற்றிக்கூட இல்லை. ஆனால் அது வரும் விரைவு… மலைப்பாய் இருக்கிறது.

ஒரு பத்து பதினைந்து வருடம் முன்னே இந்த டேப்ரிகார்டர், சி/டி, தொலைக்காட்சி, காணொலி (வீசியார்) இதெல்லாம் இத்தனை பரவலாய்ச் சீரழியும் என்று யாராவது எதிர்பார்த்தார்களா ? இனடர்நெட், அதில் பத்திரிகை, அதிலும் தொடர்கதை!… யாராவது கனவாவது கண்டோமா ? ஆளாளுக்குக் கையில் கம்பியூட்டர், ஆங்கிலத்தில் ‘மடிமேல் ‘ என்கிறார்கள்!… சொல்லாமல் கொள்ளாமல் மையங் கொண்டது எலட்க்ட்ரானிக் புயல். ஊருக்குள் புகுந்த புதுமை வெள்ளம். நகர்மயமாதல். நவீனமயமாதல். இயந்திரமயமாதல்… இயந்திரங்கள் உயிர் பெற்றதில், மனிதர்களே இயந்திரம் ஆகிப் போனார்கள்!

என்ன வேகம், என்ன ராட்சஸ வளர்ச்சி… ஃபேக்ஸ். சிரிப்பு-மெய்ல். இன்டர்நெட். தவிர இந்த செலுலர் ஃபோன்கள். உலகம் உள்ளங்கைக்குள் என்பது நிஜமாகி விட்டதே. ஒரேயொரு அணுகுண்டு – அது அத்தனை இஸங்களையும் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டதே… இஸங்களின் மேல் விழுந்ததோ குண்டு!

தெருவின் இருமருங்கிலும் இதமான வேப்பமரங்கள் எங்கே ? இப்போது வெயில் வாட்டி யெடுக்கிறது. இரு சக்கர, மூன்று நான்கு சக்கர வாகனங்கள் நிறைய வாசலில் நிற்கின்றன. எப்போதும் ஜனநடமாட்டமாய் இருக்கிறது. மக்களுக்கு பகலுக்கும் ராத்திரிக்கும் வித்தியாசம் குறைந்து கரைந்து போனது. இப்போது அந்த வழியே பஸ் போகிறது. ஃபேன்சி ஸ்டோர், ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானக் கடை, ஜெராக்ஸ், பிசிவோ மற்றும் காபிப்பொடி-அப்பள-வத்தல்- வடகக் கடைகள். திடார்க்கடைகள். அவற்றில் திடார் சாம்பார் பொடி, புளியோதரைப் பொடி எல்லாமே கிடைக்கிறது. தோசைக்கு அரைத்துத் தருகிறார்கள். தோசைமாவு விற்கிறார்கள்.

சபேசன் வீடுமாத்திரம் தொன்மை மங்காத முகமங்கலுடன் தனித்திருந்தது. அதை யார் யாரோ ரியல் எஸ்டேட்காரர்கள் வந்து விலைக்குக் கேட்டுப் பார்த்தார்கள். நல்ல நல்ல பார்ட்டிகள். சபேசன் இடங்கொடுக்கவில்லை. இடத்தைக் கொடுக்கவில்லை.

புதையலை பூதம் காப்பது என்பார்கள். இந்த வீட்டுக்கு ஜெகதாம்பாள். நார்மடிப்பாட்டி. சபேசனின் மாமியார். பெண்ணைக் கட்டிக் கொடுத்த கையோடு அவளும் கூடவே வந்துவிட்டாள்.

பெரிய சதுரத்தரையில் முன்பக்க ஒதுக்கமாய்ச் சிறு வீடு. சுற்றிலும் புதர் மண்டிக் கிடந்தது. மாதம் ஒருமுறை முடிவெட்டிக் கொள்வது போல, தரையையும் ஒழுங்குபடுத்தினால் நன்றாய் இருக்கும். அதற்கு ஐவேஜ் இல்லை. பின்பக்கமாய்த் தள்ளி கிணறு. அருகே குளியறை. தனியே கழிவறை. காலத்தை அனுசரித்தும், பெண் கீதாவின் சங்கடத்தாலும் சபேசன் இப்போது வீட்டை ஒட்டியமாதிரி, குளியறை இணைந்த கழிவறை – டூ இன் ஒன் – கட்டினான். என்றாலும் அதைப் பயன்படுத்த பாட்டி முகம் சுளித்தாள்.

இந்த வீட்டுக்கு என்று வந்து சேர்ந்ததில் இருந்து, இப்போது சபேசனுக்கே ஒரு பிள்ளையும் பெண்ணும் என்ற, இன்றுவரை பாட்டிக்கு மாப்பிள்ளை பற்றி ஒரே அபிப்ராயம்தான். சபேசனுக்கு சமத்து பத்தாது. அதில் மாற்றமேயில்லை.

சமத்து இருந்தால் ஏன் உம் பொண்ணைக் கட்டிக்கறேன், என்று சபேசன் பதிலடி கொடுக்கிறவன்தான். எத்தனை சண்டை சச்சரவு என்றாலும் அவனுக்கு மாமியாரிடம் வாஞ்சை, மட்டு மரியாதை உண்டு. வயதானவள். தனக்கு தாயார் ஸ்தானம். இந்த வயதில் இந்த மனோதிடமும், குடும்பத்துக்கே பெரிய தலையாக இருந்து அணைச்சுக் கொண்டு போவதும் யாருக்கு வரும் ? அவள் இருந்ததில் தலைமைப் பொறுப்பு தெரியாமல் சபேசன் ஹாயாக இருந்தான்.

உலகத்தில் என்ன களேபரம் வந்தாலும், சபேசனுக்கு காலை எஃப் எம்மில் இசையரங்கம் கேட்டாக வேண்டும். காலைக்காபி போல அவனுக்கு சங்கீதப் பித்து. செய்தித்தாள் திறந்தால் அவன் முதலில் பார்ப்பது, இசையரங்கத்தில் இன்று பார் பாட்டு என்றுதான். அடுத்தது ராசிபலன்… இன்ற நாள் எப்படி ? – பிறகுதான் சுனாமி பற்றியும் சோனியா பற்றியும்… நினைப்பு ஓடும்.

ரமணி தொலைக்காட்சியில் விளையாட்டு பார்ப்பதில் பிரியமானவன். கால்பந்தோ, கிரிக்கெட்டோ இந்தியா விளையாடும்போது ஊரே விழித்திருந்து பார்த்து, யாராவது டக் அடிக்கும்போது ஊரே ச் கொட்டியது. தெருவில் இளைய பட்டாளம் கைக்குக் கிடைத்த கட்டையை எடுத்துக் கொண்டு கிரிக்கெட் என்று அலைய ஆரம்பித்தது, பாம்பு அடிக்கப் புறப்பட்டாப் போல.

பெண் கீதாவுக்கு சினிமா. கதாநாயகியின் புதிய உடைகள் அவளுக்குப் பார்க்கப் பார்க்க அலுக்கவில்லை. அவளுகள் மாட்டிக் கொண்டு வரும் உடைகளும், அவற்றின் கிளர்ச்சியூட்டும் வடிவமைப்பும்… தெருவில் அதையெல்லாம் போட்டுக்கிட்டு நடமாட முடியுமா ?

பாக்கியலெட்சுமிக்கு சீரியல். கதை புரியுதோ, தொடர்ச்சி புரியுதோ, அதைப் பத்தியில்லை, பார்த்துக் கொண்டிருப்பாள். சீரியல் பெண் பாத்திரங்கள் எதற்காகவாவது அழுதுகொண்டே யிருந்தார்கள். அதிலும் வயதான அம்மா அப்பாக்களை இந்தப் பிள்ளைகள் சரியாக மதித்து நடத்தினால்தான் என்ன ?… என்ன டி.வி, என்பாள் பாட்டி அலட்சியத்துடன். எப்பவாவது சாமிபடம் போட்டால் வந்து உட்கார்வாள். திடார் திடாரென்று டி.வியைப் பார்த்து ‘மஹாப்ரபோ, நாராயண நாராயண… ‘ என்று கன்னத்தில் போட்டுக் கொள்வாள். தலையில் குட்டிக் கொள்வாள், என்னவோ வீட்டுப்பாடம் முடிக்காத மாணவனை வாத்தியார் தண்டித்த மாதிரி.

அதிகாலைபின் பரபரப்புகளில் அம்மா சமையல் கூடத்திலும் வெளியேயும் ஓடியாடித் திரிவது, கால்பந்து விளையாடுவது போலவே இருக்கும். அம்மாதான் கால்பந்து. வீட்டில் ஆளாளுக்கு அவளை உதைத்து அனுப்புகிறார்கள். வாசலில் கீதாவை நிற்கச் சொல்லி தலை பின்னி விட்டுக் கொண்டிருப்பாள். திடாரென்று ‘பருப்பு தீயறதோ… குக்கர்ல தண்ணி பத்தலை போல. பாத்திட்டு வரேன் ‘ என்று ஓடுவாள். அதற்குள் ‘வெந்நீர் விளாவி வெச்சிட்டியாம்மா ? ‘ என்று கேள்வியால் இயக்குகிற ரமணி. நேரமாகிறது என்று குளிக்காமலாவது ஓடுவானே யொழிய, ஒருநாளாவது பச்சைத் தண்ணியில் குளித்தானில்லை. அப்பாவுக்கு காபி அடுப்பில் இருந்து எடுத்த ஜோரில் தொண்டைக்குள் இறங்க வேண்டும். நெருப்புக் கோழி. பின்கட்டில் கனகாம்பரம் புதராய் மண்டிக் கிடக்கிறது. பாட்டி பூஜைக்கு என்று உட்காருமுன் அதைப் பறித்துத் தயாராய் வைக்க வேண்டும். தானே பறிக்கிறேன் என்று அங்கக்கே முள் கீய்ச்சிக் கொண்டாள் பாட்டி. குளித்து முடித்து ஈரப்புடவை சுற்றிக் கொண்டு குளிர்நடுக்க உள்ளே வருவாள் பாட்டி. குளிருக்கு உடலும், வாயும், வாயில் புரளும் ஸ்லோகமும் நடுங்கும்.

சபேசனுக்கு இன்னவேலை என்றில்லை. சமையல் வேலை என்று துணை ஆளாய்ப் போய்வருவான். வேலை தெரியாது. சமையல்கார சாம்புவையர் லிஸ்ட் தந்தால், போய்ப் பலசரக்குக் கடையில் கேட்டு வாங்கி வருதல், சமையல் பாத்திரங்களை சரிபார்த்து வாங்கி வைத்தல், இத்யாதி. சுற்று வேலைகள். ஆனாலும் மயில்க்கண் வேஷ்டியும் ஜபர்தஸ்துமாய் வந்து நின்றால் ஆளை அசத்திப்பிடும். வாயில் வெற்றிலை பன்னீர்ப் புகையிலையுடன் மணக்க மணக்க ‘அண்ணா அண்ணா ‘ என்று பழகுவான். யாருமே அவனுக்கு அண்ணாதான். லேசான ரோஸ் பவுடர். கண்ணுக்கு சற்று வெளியே தெரியாத பவிஷில் மையிட்டுக் கொண்டிருப்பான்… அந்தக்கால நம்பியார், வீரப்பா, எம்ஜியார் எல்லாரும் மை போட்டுக் கொண்டவர்கள்தானே ? சிறு சந்தன குங்குமப் பொட்டு.

இந்த லட்சணத்தில் மயங்கிப் போய்த்தான் ஜெகதாம்பாள் தன் பெண்ணுக்கு அவனை மாப்பிள்ளை யாக்கினாள். இவன்தான் ஹெட்குக் என்று நினைத்திருந்தாள் அவள். சபேசனால் வீட்டில் சும்மா யிருக்க முடியவில்லை. வேறு எந்த வேலைக்கும் துப்பு கிடையாது. ஆனால் மனுஷன் நல்ல சங்கீத ரசிகன். ஓரளவுக்கு மகாராஜபுரம் பாணியில் பாடவும் செய்வான். மூடு வந்துட்டா, வாயில் புகையிலையோடு ‘நகுமோமு ‘ மணக்கும். பெரிய கல்யாணங்களில் நல்ல நல்ல வித்வான்களின் கச்சேரி வைத்தார்கள். அதற்கென்றே சாம்புவையரை சிநேகம் பிடித்துக் கொண்டு கூடக் கிளம்பி விடுவான்.

பாத்தியதைப் பட்ட பழைய வீடு இருந்தது. பாட்டன் முப்பாட்டன் என்று அவன் கையில் வந்து சேர்ந்த வீடு. இடம் கவலை யில்லை. கோவில் வாசலில் ஓய்ந்த நாளில் பூணல், திருமாங்கல்யச் சரடு, குங்குமம், விபூதி, சுலேகப் புஸ்தகம் என்று விற்றால் பொழுது ஓடிவிடும். பிராமணார்த்தம் என்று அவ்வப்போது வேலை வந்தால் ஏற்றுக் கொள்வான். நீர் துள்ளும் மீனை லபக்கென்று கவ்வும் கொக்குபோல் நேரம் பார்த்து ‘ததாஸ்து ‘ சொல்ல வேண்டும்…. கிளி சீட்டெடுப்பது போல. கல்யாண சீஸனும் இழவு சீஸனும் பூமி சுழலும்வரை ஓயப்போவதில்லை. வேலைக்குப் பஞ்சமில்லை.

வீட்டு நிர்வாகம் பற்றிக் கவலை ஒன்றுமில்லை. பாட்டி இருக்கிறாள். பார்த்துக் கொள்ளுகிறாள். இந்த வயதிலும் பாட்டி உட்கார்ந்து சாப்பிட மனசில்லாதவள். அவளும் பொண்ணுமாய்ச் சமையல் வேலை என்று போய்வந்தார்கள். சுமங்கலிப் பிரார்த்தனை, சீமந்தம், திவசம் என்று வீட்டு வைபவங்கள். தவிர தீபாவளி பட்சணங்கள் வகையறாக்களும் நன்றாகச் செய்து, வரும்போது கையில் கொண்டுவருவார்கள் சபேசனுக்காகவும், குழந்தைகளுக்காகவும். இன்னிக்குத் தேதிக்குச் சமையல்-பெண்களுக்குப் போல கிராக்கி வேறு எந்த வேலைக்கும் கிடையாது. குழந்தைகள் படிப்பு உட்பட சபேசனுக்கு சிரமந் தெரியவில்லை. அவனுக்குத் தெரிய வேண்டியதும் இல்லை. குழந்தைகள் அம்மாவின், பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தார்கள். உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம் என்று சபேசன் கோவில்காளையாட்டம் திரிந்தான்.

உலகம் பற்றிய விசாரம் போதுமானதாய் இருந்தது சபேசனுக்கு. என்ன கிளிண்டன் இப்பிடிப் பண்ணிட்டாரு, என அவனுக்கு ரொம்ப வருத்தம். டில்லியில் வெங்காயம் விலை எக்குதப்பா விக்கிறதாமே ?… ஜனங்க பொழைக்கிறதா சாகிறதா, என அவனுக்கு ஆத்திரம் வந்தது. அதுவும் பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்து விட்டால், கபாலீசுவரர் குளத்தங்கரையில் விலாவாரியாய் விவாதம் விளாசுவான்.

பசிக்கு வீடு திரும்பினால் போதும். பழைய சாதத்துக்குத் தண்ணியூத்தி வெச்சிருந்தாலும் சரி, யதேஷ்டம். டிரான்சிஸ்டரை எடுத்துக் கொண்டு மாடிக்குப் போவான். பழைய பாடல்களின் ரசிகன் அவன். பாடல் மாற மாற, யார் இசை – டி. சலபதிராவா, எஸ். எம். சுப்பையா நாயுடுவா, ஆதி நாராயணராவா… என்றெல்லாம் யோசனை ஓடும். கண்டசாலா அபிமானி. ராஜசேகரா!… என்ன பாடல்! என்ன பாடல்!

கீதா இப்போது பிளாஸ் டூ. அடுத்து அவளைக் கல்லுாரிக்கு அனுப்புவதா ? எந்தப் பாடம் எடுப்பது ? அடுத்து அவள் வேலைக்குப் போகட்டுமா வேண்டாமா ? சரி, யாராவது மாப்பிளையைப் பார்த்துத் ‘தள்ளி ‘ விட்றலாமா ?… அவனுள் ஊடே ஊடே இப்படிக் கேள்விகள் வரும்.

இதுவரை குழந்தைகள் சார்ந்து எந்த முடிவையும் அவன் எடுக்கவில்லை. பள்ளிக்கூடத்தில் அவளை அம்மா சேர்த்தபின் அப்பா என்று கையெழுத்து, தெரிந்த தினுசில், போட்டான்… அதைவிடு, அதுகளும் நன்றாய்ப் படித்தன. சரஸ்வதி கடாட்சம் – அதையும் சொல்லணும். பாட்டி மேற்பார்வை சும்மா சொல்லக் கூடாது. கீதா வீடு திரும்பத் தாமதமானால் வாசலுக்கும் உள்ளுக்குமாய் அவள் பிரசவ வலி வந்தாப்போல நடப்பாள் பார்க்கணும்1… பாட்டிக்குப் பிரசவ வலியா ? – சபேசனுக்குச் சிரிப்பு வரும். அப்பா கவலைப்பட பாட்டி சிரிக்க வேண்டும் – இங்கே எல்லாம் தலைகீழாய் இருந்தது.

ஜெகதாம்பாளுக்கு சபேசனும் ஒரு குழந்தை அவ்வளவுதான். சில நெகிழ்ந்த நாட்களில், பெளர்ணமி என்று நிலாப்பால் கொட்டிக் கொண்டிருக்கிற வேளைகளில், பாட்டி கற்சட்டியில் குழையக் குழைய தயிர்சாதம் பிசைந்து எடுத்துக் கொண்டு மாடிக்கு வருவாள். துளி மாங்காய்த் தொக்கும் சேர்த்து அவரவர் கையில் போடுவாள். வயிறு திறக்க எல்லாரும் திருப்தியாய்ச் சாப்பிடுவார்கள். இதில் சபேசன் – ரமணி என்ற, அப்பா பிள்ளை பேதங்கூட அழிந்து போய்விடும். அங்கே யாவரும் பாட்டியின் குழந்தைகள்.

சுற்றிலும் பெரிய பெரிய சலவைக்கல் கட்டடங்கள். நடுவே திருஷ்டிப் பரிகாரம் போல இருந்தது வீடு. அழகான ஹாலில் ஓரம் சாணாச்சுருணைத் துணிபோல. கோவில் பிராகாரத்தில் ஜமா சேர்ந்தவர்கள், பாதி ஏக்கமும் பாதி பொறாமையுமாய் ‘அவனுக்கென்னப்பா கொடுத்து வெச்ச ஆத்மா. இப்டியொரு எரியால வீடும் நிலமும் ‘ என்பார்கள். சபேசனுக்கே அதில் ஒரு பெருமை, கிறுகிறுப்பு உண்டு. ‘இன்னிக்கு இங்கத்த ரேட் என்ன தெரியுமாவே ? அம்பது! ‘ என்பான் உற்சாகத்துடன். ‘அம்பது கொடுத்தாலும் கிடைக்கணுமே, அதைச் சொல்லும்! ‘

பின்பக்க மரத்தோடு கயிறு கட்டி துணி காயப் போட்டிருப்பார்கள். சுற்றி ஒரே காடு. எப்ப பாம்போ தேளோ வீட்டுக்குள் நுழையுமோ… பாட்டி இன்றைக்கும் கிணற்றடியையும், அது தாண்டிய பாத்ரூம், கழிவறை என்று பயன்படுத்தினாள். வீட்டில் டார்ச் கிடையாது. பின்கட்டு விளக்கு அழுது வழியும். ராத்திரி பாட்டி எழுந்து பின்கட்டுக்குப் போனால் சபேசன் கவனித்து எழுந்து கூட துணைக்குப் போனான்.

சில சமயம் சபேசனுக்குத் துணை என்று பாட்டியும் எழுந்து வருவாள்!

எத்தனையோ வந்து அந்த இடத்தைக் கேட்கிறார்கள். காரில் வந்து அவன் முன் உட்கார்ந்து, ‘எவ்ளவு எதிர்பார்க்கிறீங்க, அம்பதுதானே ? ஒரே பேமென்ட் – இந்தாங்க பிடிங்க. ரெடி கேஷ்! நாளைக்கே பத்திரம் பதிஞ்சிறலாம்… ‘ என்று புன்னகைத்தார்கள். நல்ல பார்ட்டிதான்… தெரிகிறது.

அவர்களிடம் ஒரு சிரிப்புடன் தான் விற்பதாக இல்லை, என்று சொல்லவே அவனில் பெருமிதம் வழிந்தது. சபேசன் ஏமாளி அல்ல. அவனிடம் யார் பருப்பும் வேகாது. ‘தலையைக் கிலையை ஆட்டிப்பிடாதேடா பாவி… ஆச்சி. என்காலம் முடியட்டும். அப்றம் நீ என்ன வேணாப் பண்ணிக்கோ. என் தலை இங்கதான் சாயணும், புரிஞ்சதா ? ‘ என்றாள் பாட்டி. ‘நான் விக்கவும் போறதில்லை, உன் தலை சாயவும் வேணாம் ‘ என்றான் சபேசன் எச்சில் கூட்டி முழுங்கியபடி. ச், பாட்டி தலை சாய்ந்தால் வீடே குடைசாய்ஞ்சிறாதா என்ன ?

கீதாவுக்கு ஸ்கூல் கிட்டத்தில். ரமணி இனடர்நெட் ப்ரெளசிங் அது இதுவென்று போய்வர என்று புழக்கத்துக்கு இந்த இடம் நல்ல வசதி. நாலு வீடு தள்ளினாப் போல பஸ் நின்று அவர்களை எற்றிக் கொண்டு விரும்பிய இடம் சேர்த்தது. ‘சபேசன் வீடு நிறுத்தம்! ‘ – என்பான் அவன் சிரிப்புடன்.

சதா ஜன நடமாட்டம். பயங் கிடையாது. தெரு ஆரம்பத்தில் அவ்வப்போது அரசியல் கூட்டம். சபேசன் தவறாமல் அங்கு ஆஜர்.

ரமணியை விட குழந்தை கீதா நன்றாய்ப் படித்தாள். ரமணி பி. எஸ்சி., விவேகானந்தா, முடித்து ஒரு வருடம் ஆகிறது. நெளக்ரி டாட் காமில் பதிவு செய்திருக்கிறான். வேலைக்கு எழுதி எழுதிப் போட்டுக் கொண்டிருக்கிறான். இப்போதெல்லாம் பத்து தலை ராவணர்களாய வேலைக்கு எடுக்கிறார்கள். அசகாய சூரர்களாய் எதிர்பார்க்கிறார்கள். கம்பியூட்டர் தெரியா விட்டால் கேவலமாய்ப் பார்க்கிறார்கள். வீட்டில் சபேசன் நாட்டு நடப்புகள் அறிய என்று தினமணியும், வேலை வாய்ப்புகளுக்காக என்று ரமணி இந்துவும் வரவழைத்தாகிறது.

ரமணியின் கையெழுத்து ஆங்கிலமும் தமிழும் அத்தனை அழகாய் இருக்கும். வெளியே போய்வர என்று வீட்டு ஹெர்குலிஸை எடுத்துப் போகிறான். அந்தக் காலத்தில் ஹெர்குலிஸ் ஓட்டி, ஹெர்குலிஸே நிராகரித்த வஸ்துவாக இருக்கலாம். மூதாதையிரிடம் இருந்து கை மாறி மாறி வந்த சைக்கிள். அதை விலைக்குக் கேட்டால் அவன் கொடுக்கத் தயார், யார் கேட்கிறார்கள்!… எண்ணெய்ப் பொலிவுடன் ராஜவம்சம் போல, நல்ல எடுப்பு, நல்ல உயரம் – பார்க்க நன்றாய்த்தான் இருக்கிறது, என்பான் சபேசன்.

அவன் சகாக்கள் எல்லாரும் இருசக்கர வாகனம் வைத்திருக்கிறார்கள். ‘அப்பா ? ‘ – ‘அம்மாட்டக் கேட்டுக்க ‘ என்று விட்டார். பிராமணார்த்தம் பார்த்து அவர் கையில் புழங்கும் காசில் பொடி மட்டை வாங்கலாம். யாராவது நல்லாத்மா செத்து, கோதானம் பூதானம் மாதிரி, பைக் தானம் செய்யப்டாதா ? காலத்தை அனுசரித்து யதா செளகர்யம் பண்ணப்டாதா ?… வீட்டில் டூ வீலர் இல்லை என்றாலும் ரமணி எப்படியோ ஒட்டக் கற்றுக் கொண்டு விட்டான். ஸ்கூட்டர், பைக், என்று நண்பர்களின் வாகனத்தை ஒட்டி, ஆசையைத் தீர்த்துக் கொள்கிறான்… அகோரப் பசிக்கு நீர்மோர் போல!… நன்றாய்த்தான் ஓட்டுகிறான்.

‘எப்டிப்பா ஓட்டறேன் ? ‘ என்று ஓட்டிக் காட்டினான்.

‘பேஷ் ‘ என்றான் சபேசன். ‘என்ன ஒர்ரவுண்டு கூட்டிண்டு போயேன்டா… ‘ என்றான் சபேசன்.

‘அப்பா ? ‘

‘அம்மாட்டக் கேட்டுக்க ‘ என்றான் சபேசன் சுதாரித்து.

ரமணி எந்த ஊரில் என்ன வேலை என்று உட்காரப் போகிறானோ ? லஞ்சம் கிஞ்சம் அது இதுவென்று எவ்வளவு ஆகுமோ தெரியாது. திடுதிப்பென்று கீதாவுக்கு எதுவும் வரன் குதிர்ந்தால், என்ன செய்யப் போகிறான் தெரியாது. குழந்தைகள் ரெண்டுபேரும் மொட்டாய் நிற்கிறார்கள். மாலையைத் தொடரும் இரவு மாதிரி, திடுதிப்பென்று அவர்கள் வாழ்க்கைமுகமே மாறிப் போகும். அதைப் பற்றிய யோசனை சபேசனுக்கு இருந்தது. இருந்தும் வெளிமனிதன் போல அதை அவன் வேடிக்கையான எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்!

நம்பக்கூட முடியவில்லை. எப்படியெல்லாமோ ஊர்சுற்றி கடலலைத் துரும்பு போல மிதந்து திரிந்தாகி விட்டது. எந்த ஊரில் எந்தக் கோவில் திருவிழா என்றாலும் பஸ்ஸோ ரயிலோ பிடித்துப் போய்விடுவான். கிடைத்த இடத்தில் கிடைத்த சாப்பாடு. சாம்புவையரோடு சமையல் கோஷ்டியில் ஒருமுறை காசியே பார்த்தாச்சு. இப்ப அங்க குண்டு வெடிச்சதாமே ? நினைக்கவே கஷ்டமா இருக்கு… நல்ல இடத்தில் கல்யாணமும் ஆகி, சபேசன் ரெண்டு பெற்று, வளர்த்து (!) வயது நாற்பதையும் தாண்டியாகி விட்டது… ஓடிவிட வில்லையா என்ன ? இனி சொச்ச வருடமும் ஓடிவிடும், என்ற அசட்டு நம்பிக்கையும் அவனுக்கு இருந்தது. இதுவே சாஸ்வதம் என்று நினைத்தான்.

ஆனால் அவன் வாழ்விலும் நிகழ்ந்தது மாற்றம். அதிரடி மாற்றம். நிலைமையை அப்படியே புரட்டிப் போட்ட, தலைகீழ் மாற்றம்.

– தொ ட ரும் –

storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்