விடையற்ற வியப்புக் குறிகள்!!!
ராமலக்ஷ்மி

‘உன் வயிற்றில்
உதித்த நான்-
உத்தமனாய் வாழ்ந்து காட்டி-
உன் பெயரை
ஊர் உலகம்-
உயர்வாகப் போற்றிடச்
செய்வேனம்மா! ‘
**
மரித்திட்ட
தன் தாய்க்கு-
தந்திட்ட வாக்குதனை-
வேதமெனக் கொண்டு;
வேலை தேடி-
வீதி வழி நடந்தானே!
**
நெஞ்செல்லாம்
இலட்சியக் கனவோடு-
அஞ்சாது செய்திட்ட
சத்தியத்தின் நினைவோடு-
சென்றவனின்
கண்ணிலே பட்டவன்தான்-
பிக்பாக்கெட் தொழிலினிலே
பிரபலக்கேடி!
**
விழிமுன்னே மற்றவரின்
பர்சு ஒன்று-
பரிதாபமாய்
பறி போவதைப்
பார்த்திட்ட அவனுமே;
‘எவன் சொத்தோ போகுதடா
எனக்கென்ன கவலையடா ? ‘
என்று-
இன்று இப்
புனிதப்
பூமியிலே-
போற்றிக் காக்கப்படும்
பொன்னான கொள்கை-
புரியாதவனாய்-
பாய்ந்தோடிக்
கேடியினைப் பிடித்தானே!
**
கேடியெனும்
பட்டமெல்லாம் சும்மாவா ?
கில்லாடியான அவன்-
கிட்டத்தில் ஓடிவந்த
காவலரின்
கரத்தினையே-
தேடிப் பற்றி
சம்திங் தந்தானே!
**
நீதி
காக்க வேண்டிய
காவலரோ-
கரன்சி செய்த வேலையினால்-
கமுக்கமாகச் சிரித்தபடி-
கயவனவன் முதுகினிலே-
‘செல் ‘லுமாறு
செல்லமாகத்
தட்டி விட்டு;
அப்பாவியான இவன்
கழுத்தினிலே கை போட்டு-
‘அட
நடடா, இது புது கேசு ‘
என்றாரே!
****
மலர வேண்டிய பருவத்திலே
மடிய நேரும்
மொட்டுக்கள்!!!
**
கலர் கலராய்
கண்ட கனவுகள்
கருகிப் போகும்
சோகங்கள்!!!
**
பழி ஓரிடம்
பாவம் ஓரிடம்-
பரிதாபப் பட
யாருமின்றி
பரிதவிக்கும்
பலியாடுகள்!!!
**
‘அவரவர் விதி ‘யென்றும்
அவன் தலைச் சுழி ‘யென்றும்-
ஆராய அவகாசமின்றி
அவசர கதியில்
அள்ளித் தெளிக்கப் படும்
ஆழமற்ற
அனுதாபங்கள்!!!
**
ஆங்கோர் பக்கம்-
சி.பி.ஐ
ஆதாரங்களுடன்
கைதாகும்
கனவான்கள்-
சில மணியில்-
சிரித்தபடி
சிறை விட்டு
விடுதலையாகி
வெளியேறும்
விநோதங்கள்!!!
**
அவருக்காக
குரல் கொடுத்துக்
கவலைப் பட
கணக்கற்ற
கூட்டங்கள்!!!
**
இப்படி
ஏராளமாய்
இருக்கின்றன-
விடையற்ற
வியப்புக் குறிகள்!!!
****
ramalakshmi_rajan@yahoo.co.in