This entry is in the series 20101219_Issue

சின்னப்பயல்


பிறர் ஒரு விடயத்தை
ரசிக்கிறார் என்று எவ்வாறு உணர்வது ?

காலாட்டிக்கொண்டிருக்கலாம்
கைகளின் விரல்களால் காற்றை
அரிந்து கொண்டிருக்கலாம்
அல்லது நறுக்கிக்கொண்டிருக்கலாம்.

புன்முறுவலுடன் தன்
உடம்பை முழுதுமாகக்
குலுக்கிக்கொள்ளலாம்

பிறர் அறியாவண்ணம்
தனக்குத்தானே சொல்லிப்பார்த்துக்
கொள்ளலாம்.

காதுகளில் இயர்ஃபோன் இருந்தால்
திடீரென பிறர் எதிர்பார்க்காத வேளையில்
சத்தமிடலாம் அவர் கேட்கும் வண்ணம்
பிறகு தான் போட்ட சத்தம்
தனக்கும் கேட்பதை எண்ணி
மகிழலாம்.

கண்களை மூடிக்கொண்டு தனக்குள்
லயித்துக்கொண்டிருக்கலாம்

எதுவும் நினைக்காதவர் போல
அமைதியாகவுமிருக்கலாம்.

அல்லது என்னைப்போல
பிறர் எவ்வாறு ரசிப்பர் என
நினைத்து இதுபோல
மனதுக்குள் கவிதையும் எழுதலாம்.

chinnappayal@gmail.com

Series Navigation