This entry is in the series 20080131_Issue

தேவமைந்தன்


அன்புள்ள ஆசிரியர்

அவர்களுக்கு,

வணக்கம்.

‘திண்ணைப் பேச்சு – ஜனவரி 24. 2008’ கண்டேன்.

‘மீராபாய் கவிதைகள்’ தலைப்பில், இந்திய மொழிகளின் காப்பியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது ஏற்படும் சிக்கலை நன்றாகச் சுட்டியுள்ளீர்கள். நுண்ணுணர்வு பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள், நிகழ்நிலையில் நிலவும் ஒருவரின் சொந்தப் பெயரான இயற்பெயரில் என்ன கவனம் காட்டுவார்களோ, அதே கவனத்தை இதிகாச – காப்பியப்பெயரிலும் காட்டுவார்கள்.

நம் தொன்மங்களில் உள்ள பெயர் ஒவ்வொன்றும் காரணப் பெயர் என்பதை முதலில் அறிந்துகொண்டும்; பிறகு அந்தக் காரணங்கள் என்ன என்னவென்று அறிந்துகொண்டபின்பும்தான் ஆங்கிலத்திலோ வேறு மொழிகளிலோ மொழியாக்கம் செய்யத் தலைப்படுவார்கள்.

தன் பெயர் எழுத்து மாறாமல் வருவதுடன் ஒலிப்புக்குறி(accent)யும் மாறாமல் வரவேண்டும் என்றே பிரெஞ்சுக்காரர்கள் விரும்புகிறார்கள். அதில் ஒரு சிறுபிழை ஏற்பட்டுவிட்டாலும், “இது எனக்குரியதல்ல, வேறு யாருடையதோ!” என்று அழைப்பைக்கூட ‘முகத்தில் அடிப்பதுபோல்’ திருப்பித் தந்து விடுகிறார்கள்.

காரணப்பெயர்களை அப்படியே மொழியொலிமாற்றம்(transcription) செய்துவிட்டு, பெயர்க்காரணத்தை அடிக்குறிப்பில் விளக்குவதுதான்
நேர்மையான மொழியாக்கத்தின் இலக்கணம்.

அன்புடன்,

தேவமைந்தன்

(அ.பசுபதி)


20080131_Issue

காலத்தைக் கசக்கிப்பிழிந்து………(Geometrical dynamics of space-time-wrap)