கூர் மழுங்கிய வாள்களும் தென்னைமரத்தேள் கடியும்!

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

நல்லடியார்


கடந்த சிலவாரங்களாகத் திண்ணை வாசகர்களுக்கு நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை. கடந்த இரு வாரங்களாக மலர்மன்னன் கிச்சு கிச்சு மூட்டினார்.வெகுண்டெழுந்த வஹ்ஹாபி, அறிவுப்பூர்வமான எதிர்வினைக் கருத்துக்களால் ஜிஹாத் செய்தார்.(ஜிஹாத்=போராட்டம்,முயற்சி) அதாவது மலர்மன்னனின் வரலாற்று அறியாமையை தெளிவுபடுத்த முயன்றுள்ளார். ம்ஹூம்! பலனில்லை!
வழக்கமாக சவூதி அரேபியா,பாகிஸ்தான் என்று மேற்குப்பக்கம் மூக்குசிந்தும் நேசகுமார் சற்று வித்தியாசமாக கிழக்குப் பக்கம் சிங்கப்பூர் குறித்து எழுதி இருந்தார்.தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரிகட்டும் என்பதுபோல்,மலர்மன்னனுக்கு வஹ்ஹாபி வைத்த ஆதாரப் பூர்வமான எதிர் வினைகளுக்கு,மலர்மன்னன் சார்பில் நேசகுமார் ‘கருப்பாவேசம்’ வந்து சாமியாடியதோடல்லாமல், சாதிகளின் பெருமைகளைச் சிலாகித்து எழுதியதோடு இஸ்லாத்தையும் வம்புக்கிழுத்திருந்தார். இஸ்லாம் குறித்த ஐயப்பாடுகளுடன்கூடி அவதூறுகளுக்கு பலமுறை விளக்கம் கொடுக்கப்பட்டு விட்ட போதிலும், மீண்டும் வவ்வாலாகத் தொங்கிக் கொண்டிருக்கிறார்.வழக்கம்போல் நாமும் அவருடன் சேர்ந்து லாவணி பாடலாம்
***
இந்து மதத்தின் சாதிகளின் இருப்பு அவசியமே என்று கருத நேசகுமாருக்கு உரிமையுண்டு! தனது சாதியை இரண்டாம்தரச் சாதியாகச் சொல்லிக் கொண்டு முதல்தர சாதியினருடன் உறவாட அவை உதவக்கூடும்! இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நேசகுமாரின் முன்னோர்களாகிய இந்துக்களில், இஸ்லாத்தை ஏற்ற பின்னரும் சாதி அடையாளம் கொஞ்சகாலம் தொடர்ந்தது உண்மைதான். காரணம் மதம் மாறிய பின்னரும் இந்துமத சாதிய வட்டத்திலேயே அவர்களிடம் தங்கி விட்டதால், அடையாளங்கள் மதம்மாறிய பின்னரும் முஸ்லிம்களிடமும் சில காலம் தொடர்ந்தன என்பது உண்மையே.
முகலாயர்கள் படையெடுத்து வந்து கற்பழிக்கப்பட்ட இந்தியப் பெண்களுக்குப் பிறந்தவர்களே இந்திய முஸ்லிம்கள் என்று சங்பரிவாரி ஒருவர் என் நண்பரிடம் சொன்னதற்கு,”படையெடுத்து வந்து உங்கள் வீட்டுப் பெண்களை கற்பழிக்கும் வரையில் உங்கள் முன்னோர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?என்று நருக்கென்று கேட்டதும், சங்பரிவாரியின் முகத்தில் ஈயாடவில்லை.
முகலாயர்கள் படையெடுத்து வந்து இந்துக்களை மதம் மாற்றினார்கள் என்று சும்மா ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், மூன்று நூற்றாண்டுகளாகியும் இன்னும் ஏன் அதே மதத்திலேயே அவர்கள் தங்கி விட்டார்கள்? “அம்மா மதம் திரும்பியிருந்தால் இன்னேரம் மோட்ஷப் பதவி கிடைத்திருக்குமே?” என்று அறிவுப் பூர்வமாகக் கேட்டுத் தொலைத்து விட்டால் பதில் கிடைக்காது. இன்றைக்காவது “இஸ்லாத்திலிருந்து மீண்டும் மதம் மாறினால் கழுத்துக்கு கத்தி வரும்” என்ற மாக்காண்டியை முன்னாள் முஸ்லிம் குஷ்புவை டீவியில் பார்த்துக் கொண்டே எழுதலாம். ஆங்கிலேயரின் இருநூற்றாண்டு ஆட்சியிலும் மற்றும் ஒளிர்வதாகச் சொல்லப்பட்ட வாஜ்பாயின் பொற்கால ஆட்சியிலும் அம்மா ஆட்சியிலுக்கூட எந்த இந்திய முஸ்லிமும் அம்மா மதத்திற்குத் திரும்ப விரும்பவில்லையே!
இந்து மதம் திரும்பினால், சாதிய சனியனையும் மீண்டும் சுமக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். சாதிய வாள் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும்போது எவருக்குத்தான் தாய்மதம் திரும்ப மனது வரும்? இஸ்லாம் வாளால் பரவியது என்பதெல்லாம் காலாவதியான கட்டுக்கதைகள் என்பது வெள்ளிடைமலையாகி விட்ட காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இஸ்லாம் வேகமாகப் பரவும் மதமென்று அரசாங்கப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவுக்கும் எந்த முஸ்லிம் மன்னர்கள் படையெடுத்துச் சென்றார்கள் என்று விளக்க முடியுமா?
//இங்கே ஒரு விஷயம் கவனிக்கத் தக்கது. இஸ்லாத்தில் ஜாதிகள் இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது என்றில்லை.இஸ்லாம் பிறந்த சவுதியிலேயே இன்னும் ஜாதிகள் இருக்கின்றன.உயர் சாதி அரபிப் பெண்ணை தாழ்ந்த சாதி முஸ்லீம் மணப்பது ஷரீயத்துக்கு முரணானதாக, கடவுளுக்கு பிடிக்காததாக கருதப்படுகிறது.//
வரலாற்றுச் செய்திகளில்தான் வசதிப்படி புரட்டு வேலைகளைச் செய்யலாம். இணைய யுகத்திலிருந்து கொண்டிருக்கும் இக்காலத்திலும் அரபு நாடுகளில் சாதிய முறை இருப்பதாக கதையளப்பது அறியாமையா அல்லது வீம்புக்காக எதையாவது எழுதித் தொலைக்க வேண்டும் என்பதற்காகவா என்று தெரிய வில்லை. முதல்நாள் ஏதேனும் ஒரு விக்கிபீடியாவில் பதிந்து விட்டு, மறுநாள் அதையே ஆதாரமாகக் காட்டும் கயமைத்தணம் இவர்களுக்குத்தான் தெரியும்.
கர்பளா யுத்தத்தில் வஹ்ஹாபிகள் கற்பினிகளின் வயிற்றைக் கிழித்தார்களாம்.அதற்கு ஆதாரம் 2007 இல் ‘சாத்தானின் கவிதைகள்’ புகழ் பெங்குயின் பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் ஆதாரமாம்! நல்ல வேளை தினமலர் ஆன்மீகமலரை ஆதாரமாகக் காட்டாமல் இருந்தவரை சந்தோசம்!
வரலாற்று நிகழ்வுகளுக்கு சப்பைக் கட்ட நேசகுமாருக்கு கோயின்ஸ்ராட் எல்ஸ்டுக்குப் பிறகு ‘Tகெ ‘The Siege of Mecca: The Forgotten Uprising”, எழுதிய Yaroslav Trofimov தான் கிடைத்திருக்கிறார். இப்படி அட்ரஸில்லாதவர்கள் சொன்னதெல்லாம் ஆதாரம் எனக் கொண்டால், ராமர் பாலம் சங்கர் சிமெண்டாலலும் அம்மன் TRI முறுக்குக் கம்பியாலும் கட்டப்பட்டது என்று கூடச் சொல்லி விடலாம்.
இஸ்லாம் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு நேர்மையாக நேசகுமார் ஆதாரங்களை முன் வைத்து எழுத முடியாது. இப்படி எங்காவது முகவரி இல்லாதவர்கள் எழுதியதை வைத்து ஆய்வுக் கட்டுரை என்று சிலாகித்து எழுதி, அதையே ஆதாரமாகக் காட்டினால்தான் உண்டு! பாவம்! அவதூறு சொல்ல எவ்வளவு கஷ்டப்பட வேண்டியுள்ளது!
//சாதி என்பதை ‘ட்ரைப்’ என்று ஆங்கிலத்தில் எழுதுவதால் பல சமயம் அது சாதி என்பதை நாம் கவனிக்காமலேயே இருந்து விடுகிறோம்அவ்வளவுதான். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவின் ஜாதி முறையை விட கடுமையான ஜாதிக் கட்டுப்பாடுகள் அரபுகளிடையே உண்டு. //
//தமிழில் இஸ்லாமியர்கள் நூல்களை மொழிபெயர்க்கும்போது கவனமாக இவற்றை ஜாதிகள் என்று குறிப்பிடாமல் கோத்திரங்கள் என்று குறிப்பிடுவர்.//
Tribus என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றிய Tribe என்ற ஆங்கிலச் சொல்லுக்கு குலம் ,கோத்திரம்,வம்சம்,குடும்பம் என்று பல்வேறு அர்த்தம் கொள்ளலாம். மக்காவைச் சுற்றியிருந்த அரபுக்கள் குலப்பெருமை, கோத்திரப் புகழ் என்று இன்றைய பிராமணர்களைப் போலவே இருந்தார்கள். இஸ்லாம் இதற்கெல்லாம் ஆப்பு அடித்தது! முஹம்மது நபி அவர்கள் கூட உயர் குலமாகக் கருதப்பட்ட குரைஷியராக இருந்ததால்தான், இஸ்லாத்தைச் எடுத்துச் சொல்லும்போது குலப்பெருமைகளைச் சிதைக்கும் நோக்கில் அல்லது உயர் ஆதிக்கத்தைக் கைப்பற்றச் செய்யும் சூழ்ச்சி என்று குற்றம்சுமத்தி புறம்தள்ள முடியாமல் அன்றைய குரைஷியர்கள் தவித்தார்கள்.
***
ஒவ்வொரு நபியும் தனித்தனி நோக்கங்களுக்காக அனுப்பப் பட்டனர்; ஐவேளைத் தொழுகை முஹம்மது நபி மூலம் கடமையாக்கப்பட்டது. பில் கேட்ஸ்தான் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்தார் என்று சொல்வதற்கும் முஹம்மது நபிதான் இஸ்லாத்தை ஏற்படுத்தினார் என்பதற்கும் அதிகம் வித்தியாசமில்லை. இன்னொருவகையில் Hindu பத்திரிக்கைதான் இந்துமதத்தின் வேதநூல் என்பது எவ்வளவு அபத்தமோ அதேயளவு அபத்தம் கொண்டதே முஸ்லிம்களை Mohammedan என்று அடையாளப்படுத்துவதும்.
அன்புடன்,
நல்லடியார்


nalladiyar@gmail.com

Series Navigation

நல்லடியார்

நல்லடியார்