பேற்றேனே துன்பம் பெரிது!

This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

அகரம்.அமுதா


ஆஸ்திரியாவில் தான் பெற்ற மகள் எலிசபெத்தை 24 ஆண்டுகள் வீட்டின் பாதாளச் சிறையில் வைத்து அவள் ஏழு குழந்தைகளுக்குத் தாயாகக் காரணமானான் ஜோசப் ஃபிரிட்சல்!

-செய்தி-

(எலிசபெத்தின் நிலையிலிருந்து எழுதப்பட்டது!)

காமக் கயவனவன் கைக்குள் சிறைப்பட்டுச்

சாதப் பொழுதுகளில் சீரழிந்(து) -ஊமையாய்

இன்றுவரை வாழ்வில் இடர்பட்டேன் வேறுண்டோ

என்போல் உழந்தார் இடர்?

தொட்டில் உறவைத் துளிர்த்துவரும் காமத்தால்

கட்டிலுற வாக்கிக் களித்திட்டான் -இட்டமில்லாத்

தன்மனையைக் கூடத் தழுவத் தடையிருந்தும்

என்றனுக் கிந்தநிலை ஏன்?

அழுது புலம்பி அவனிருதாள் பற்றித்

தொழுது துவண்டு; துடித்தேன் -உழன்றேன்

இனிப்புத்தான் என்மேனி என்றெறும்பாய் மொய்த்தான்

நினைக்கத்தான் கூசுதென் நெஞ்சு!

அன்னைக்குத் தன்மகளே ஆனாள் சகக்கழுத்தி

என்னுமிழுக் கேற்பட்ட தென்னாலே! -என்விதி

ஏட்டிலே காணா எழுத்தாச்சே! என்கதை

நாட்டிலே காணா நடப்பு!

வெங்கானம் தானேகி வெந்துத் தணிந்தாலும்

மங்கைநான் முன்புற்ற மாசறுமோ? -பங்கமெல்லாம்

உற்றும் உயிர்வாழக் கற்றேனே! பெற்றவனால்

பெற்றேனே துன்பம் பெரிது!

அன்பைப் பொழிந்துநாளும் அன்னையவள் மஞ்சத்தில்

தன்னை வருத்தித் தவம்கிடந்து -முன்னம்

கொடுத்தான் உயிரைக் கொடுத்தவன்பின் கற்பைக்

கெடுத்தான் அருகில் கிடந்து!

தான்பெற்ற பெண்ணென்னை தாரமென் றெண்ணியென்

ஊன்மீது மோகவெறி உற்றவனை -யான்பெற்ற

சேய்களெல்லாம் தந்தையெனச் செப்ப விழைந்திடுமே!

தாய்வழிப் பாட்டனைத் தான்!

அப்பனை ஆசையால் ஆளன் எனஅழைக்க

எப்படியென் நெஞ்சம் இடம்கொடுக்கும் -அப்படியே

கற்பனையும் காணக் கடவுவதோ? அய்யோநான்

முற்பிறப்பில் செய்தவினை யோ?

அகரம்.அமுதா

Series Navigation

அகரம்.அமுதா

அகரம்.அமுதா