பதுங்குகுழி நாட்கள் – பா.அகிலன் கவிதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

கருணாகரன்



அப்போது யாழ்ப்பாணம் முற்றுகைக்குள்ளாகியிருந்தது. (இப்போதும் அது முற்றுகையிடப்பட்டேயிருக்கிறது). முற்றுகையிடப்பட்ட யாழ்ப்பாணத்தில் ஆட்கள் காணாமற் போனார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல. ஆயிரக்கணக்கில். காணாமற்போவோர் பற்றிய துயரம் சாதாரணமானதல்ல. ஒருவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று முடிவு தெரியாத நிலை அது. அது அவ்வளவு சாதாரணமானதல்ல. இந்த நிலையைப் பற்றிய பிறவி என்ற மலையாளப்படம் இப்போது உங்களின் ஞாபகத்துக்கு வரலாம். தினமும் காணாமற்போவோரின் செய்திகளோடுதான் யாழ்ப்பாணத்தின் காலைகள் விடிந்தன.

பயங்கரங்களின் ஆழ்கிடங்கில் தள்ளப்பட்டிருந்தது யாழ்ப்பாணம். எங்கும் பீதி. எப்போதும் பயங்கரம். எல்லோரும் அச்சத்தில் உறைந்திருந்தனர். நம்பிக்கை தரும் நட்சத்திரங்கள் எவையும் இல்லை. சுற்றியிருக்கும் கடல் மிகவும் பயங்கரமாக இருந்தது. அது எந்த வழிகளையும் காட்ட மறுத்தது. ஒரு காலம் பாய்மரக்கப்பல்களில் அமெரிக்காவரை போய்வந்த யாழ்ப்பாணம் இப்பொழுது அருகிலிருக்கும் சிறு தீவுகளுக்கே பயணஞ்செய்ய விதியற்றுச் சிறைகிடந்தது. கடல் வலயச் சட்டத்தில் அது சிறைப்பிடிக்கப்பட்டிருந்தது.

இந்த உலகத்தில் கோடானுகோடி பாதைகளிருக்கின்றன. ஆனால் வரலாற்றுச் சிறப்புடைய இந்த நகரத்துக்கு இப்போது பாதையில்லை. முற்றுகையிடப்பட்ட நகரத்துக்கு எப்படிப் பாதைகள் இருக்கும். பாதையில்லாமல், பயணமில்லாமல் சிறைப்பட்டிருந்தார்கள் சனங்கள்.

அப்போது யாழ்ப்பாணத்திலிருந்து மிகப்பிந்தி எப்போதாவது ஒரு கடிதம் வரும். அப்படி வரும் கடிதத்திலும் எந்தச் சேதிகளும் தெளிவாக இருக்காது. அது தணிக்கைகளின் காலம். ஒவ்வொரு கடிதமும் படையினரால் மோப்பம் பிடிக்கப்படும் என்ற அச்சத்தில் சனங்கள் எல்லாவற்றையும் சுய தணிக்கைக்குட்படுத்தினார்கள்.

அவ்வாறிருந்த சூழலில் எதிர்பாராமல் சில கவிதைகள் யாழ்ப்பாணத்திலிருந்து எப்படியோ அந்த முற்றுகையின் தீராத வலிகளைச் சுமந்து, காயங்களோடு வந்தன. அவற்றில் பா.அகிலன், இயல்வாணன் ஆகியோருடைய கவிதைகள் முக்கியமானவை. இவ்வாறு வந்த சில நல்ல கவிதைகள் அந்த நாட்களில் கையெழுத்துப்பிரதியில் வாசிக்கப்பட்டன. அவற்றை உடனடியாகப் பிரசுரிக்கும் ஆர்வம் இருந்தபோதும் அவற்றை எழுதியோரின் பாதுகாப்புக் கருதி அது தவிர்க்கப்பட்டது. ஆனால் கையெழுத்துப்பிரதியாக இருந்த நிலையிலேயே அவை உள்ளக வாசிப்பில் மிகவும் அதிகமான அளவுக்கு வாசிக்கப்பட்டன.

நெஞ்சை உலுக்கும் விதமாக இருந்த அந்தக்கவிதைகளே அன்றைய யாழ்ப்பாணத்தின் ஆன்மா. ஏறக்குறைய பத்தாண்டுகள் கழிந்த பின்னர், இப்போதும் இதுதான் அங்கே நிலைமை. இந்த நிலையிலேயே யாழ்ப்பாணம் தொடர்ந்தும் இருக்கிறது. அந்த மக்கள் முன்னரை விடவும் மிக மோசமான அவலத்திற்குள் சிக்கியிருக்கிறார்கள். இது பொதுவாகவே ஈழத்தமிழர்களுக்கான தண்டனைக்காலமா என்று ஒருவர் கேட்டதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது.

அகிலனின் கவிதைகளும் கடிதங்களும் நிலாந்தனுக்கு வந்தன. தமிழர்கள் ஒவ்வொரு பிரதேசமாக இராணுவ வலயங்களால் பிரித்துத் தடுக்கப்பட்டிருந்தார்கள். அதற்குள் பெரும் படையெடுப்புகள். தொடர் இராணுவ நடவடிக்கைகள். அப்போதுதான் நிலாந்தன் யாழ்ப்பாண முற்றுகையை மையமாக வைத்து, அந்த இருண்ட நாட்களை யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே என்ற நீண்ட கவிதையாக எழுதினார். அகிலனுடைய கடிதங்களும் கவிதைகளும் எழுப்பிய தூண்டல்தான் நிலாந்தனை அப்படி அந்த நெடுங்கவிதையை எழுதவைத்ததோ என்று தோன்றுகிறது.

நிலாந்தன் எழுதுகிறார்,

யாழ்ப்பாணம் அல்லது அமைதி நகரம்

1996 ஏப்ரில் மாதம் சனங்கள் வீடு திரும்பிய பிறகு யாழ்பாணத்திலிருந்து வந்த கடிதங்கள் சில-

1.24.06.996

யாழ்ப்பாணம்

இம்முறை மிக நீண்ட கோடை

ஒரே வெயில்

ஒற்றனைப்போல ரகசியமாய் வீசும் காற்று

இரவு

ஊழையிடும் நாய்களுக்கும்

உறுமிச் செல்லும் ட்ரக்குகளுக்குமுரியது

பகலெனப்படுவது

இரண்டு ஊரடங்குச் சட்டங்களுக்கு

இடையில் வரும் பொழுது

தெருவெனப்படுவது

ஒரு காவலரணில் தொடங்கி

இன்னொரு காவலரணில் முறிந்து நிற்பது

இதில் வாழ்க்கையெனப்படுவது

சுற்றி வளைக்கப்பட்ட

ஒரு மலட்டுக்கனவு

………..

……….

2. 21.08.1996

யாழ்ப்பாணம்

மின்சாரம் வந்து விட்டது

பஸ் ஓடுகிறது

மினி சினிமா கொகோ கோலா

புளு பிலிம் எல்லாம் கிடைக்கிறது

………..

………..

காணாமற் போனவர்களைப் புதைத்த

வெளிகளில்

உப்பு விளைகிறது

ஊரி சேர்கிறது

3. 23.10.1996

யாழ்ப்பாணம்

உன்னுடைய பெரிய ஓவியங்கள் பத்திரமாயுள்ளன. ஆனால் திருநெல்வேலியில் வைக்கப்பட்டிருந்த சிறிய சைஸ் ஓவியங்களைக்காணவில்லை. மாற்குவின் ஓவியங்களும் அதிகம் தொநை;து போய் விட்டன. மிஞ்சியிருப்பவற்றைப் போய் எடுக்கலாமா என்று யோகன் கேட்டான். ஆனால் பயமாயிருக்கிறது. கைலாசநாதனுடைய ஓவியங்கள் முழுதும் தொலைந்து விட்டன. அ. இராசையாவின் ஓவியங்களும் அநேகமாக மிஞ்சவில்லை.

எல்லாவற்றையும் திரும்பவும் முதலிலிருந்தே வரைய வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் முதலிலிருந்தே தொடங்க வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் எல்லாவற்றையுமே…

(யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே)

என்று.

இதுதான் அங்கிருந்த நிலைமை. இப்போது அகிலனின் கவிதைகள் பற்றிய இந்தக்குறிப்பை எழுதும் இந்த இரவிலும் இதுதான் தொடரும் கதை. எனவே இந்தப்பின்னணியோடு நாம் இப்போது பா. அகிலனின் கவிதைகளைப் பார்க்கலாம்.

அகிலனின் கவிதைகள் தனியே யாழ்ப்பாண முற்றுகையோடு மட்டுப்பட்டவையல்ல. அல்லது அரசியலை மட்டும் பேசுவனவுமல்ல. சமகாலம் என்ற நிகழ்காலப் பரப்பிற்குள் அடைபடுவனவுமல்ல. காலம் இடம் என்ற எல்லைகளைக்கடந்து பிரபஞ்சத்தில் ஊடுருவி முன்னும் பின்னுமான வெளியில் சஞ்சரிப்பவை. எல்லைகளற்ற வெளிநோக்கியவை. தம் படைப்பின் அடிப்படைகளாலும் அவற்றின் தகுதிகளாலும் நிரந்தரத் தன்மையைக் கொண்டிருக்க எத்தனிப்பவை. அந்த எத்தனத்தில் வெற்றியடைந்தவையும் கூட.

2

போர்க்காலத்தின் மீது படிந்திருக்கும் பயங்கரம், துயரம், அவலம், அழிவின் ஓலம், குருதி, அதன் தீராத நெடி, தீ, புகை, இருள் பெருகிய நாட்களின் வாசனை எல்லாவற்றையும் அகிலன் கவிதைகள் தம்முள் நிரப்பி வைத்திருக்க்pன்றன. துயர் உருகிப் பரவும் வெளியாக இந்தக்கவிதைகள் உள்ளன.

போரை எந்த நிலையிலும் விரும்பாத போதும் போர் தொடர் வியூகங்களில் சிக்க வைத்துக் கொண்டேயிருக்கிறது. அதனிடமிருந்து தப்பவே வழியில்லை. அது முடிவில்லாமல் துரத்துகிறது. துரத்திக் கொண்டேயிருக்கிறது. இரவு பகல் என்ற கால பேதங்கள், ஓய்வொழிச்சல் இல்லாமல் போதை நிரம்பிய வன்மத்தோடு அது துரத்துகிறது. எதற்காக அவ்வாறு துரத்துகிறது என்று தெரியாது. யாருக்கும் அது தெரியாது. கேள்விகள் இல்லை. விளக்கங்கள் இல்லை. நியாயங்கள் இல்லை. எல்லாவற்றின் மீதும் அது முழு ஆதிக்கத்தோடு முழு வலிமையோடு தன் வன்முறையைக் பிரயோகிக்கிறது. அதற்கு எந்தத்தடையுமில்லை. எல்லாவற்றையும் அது தன் காலடியில் போட்டு நசிக்கிறது. போரை விரும்பாதபோதும் அதை நாம் விட்டு வில முனைகிறபோதும் அதற்கு அது இடமளிக்கவில்லை. இந்த வலியும் நீதியின்மையும் அதன் வன்முறையும் தாங்கமுடியாத அளவுக்கு உயிரை வதைக்கிறது. அகிலன் இவற்றை, இந்த நிலையை மிக நுட்பமான மொழியில், உக்கிரமான தொனியில் வலிமையாக மொழிகிறார். அவருடைய இந்த மொழிவுக்கு தமிழ் மரபும் பிற இலக்கியப் பரிச்சயங்களும் உதவுகின்றன. இவற்றின் வேர்களிலிருந்தே அகிலனின் கவிதைகள் பிறக்கின்றன.

வேகமும் அதிர்வும் தரும் மொழியில் இந்தக்கவிதைகளிருக்கின்றன. ஒவ்வொரு சொல்லிலும் ஒவ்வொரு வரியிலும் புதிய கணங்களையும் வௌ;வேறு நிலை அனுபவங்களையும் எழுப்பும் ஆற்றல் இங்கே குவிக்கப்பட்டுள்ளது. சில கவிதைகள் ஓவியத்தைப்போல காட்சியை விரிக்கிறது. சில நாடக அசைவை காட்டுகின்றன. பதுங்குகுழி நாட்கள்-3 என்ற கவிதையில் வரும் இறுதி அடிகள் இதற்கு நல்ல சான்று.

கரைக்கு வந்தோம்

அலை மட்டும் திரும்பிப் போயிற்று

சூரியன் கடலுள் வீழ்ந்த போது

மண்டியிட்டழுதோம்

ஒரு கரீய ஊழை எழுந்து

இரவென ஆயிற்று

தொலைவில்

மயான வெளியில் ஒற்றைப்பிணமென

எரிந்து கொண்டிருந்தது எங்க@ர்

பெரிய அரங்கொன்றில் நிகழும் காட்சி அவற்றுக்கான ஒளிமாற்றங்களோடு புலனேறுகிறது. ஆனால் இவ்வாறு வரும் கவிதையின் முடிவு வரி இந்தநிலையை மாற்றி வேறொரு நிலைக்கு கொண்டு போகிறது. இதனால் நமது மனதில் பல நேர்நிலை எதிர்நிலைச் சித்திரங்கள் உருவாகின்றன.

பெரிய வெள்ளி

உன்னைச் சிலுவையிலறைந்த நாள்

முதல் வரியிலேயே கவிதையை சடுதியாக வேகமெடுக்க வைக்கும் பண்பை அகிலன் கொண்டிருக்கிறார். அந்த வேகம் ஒரு போதும் தணிவதில்லை. கவிதை முடிந்த பிறகும் அதன் விசை குறைவதில்லை. எவ்விதம் கவிதை தொடங்கியதோ அதேபோல அதே வேகத்தோடு அது முடிகிறது. முடிவற்றுத் தொடந்து கொண்டேயிருக்கிறது அதிர்வு. பின்னரும் நான் வந்தேன்,எனக்குத் தெரியாது, வாவிகள் நிரம்பிவிட்டன, இங்கேதான் இவ்வாறு தொடங்கும் வரிகள் உடனடியாகவே ஏவு ஏவுகணையைப்போல வேகம் கொள்கின்றன.

3

தொண்ணூறுகளுக்குப்பின்னான ஈழக்கவிதைகள் பெரும்பாலும் போர் மயப்பட்டவையே. போரை அவை எந்த நிலையில் எந்தக்கோணத்தில் அணுகியிருந்தாலும் அவை போர் பற்றியவையாகவே இருந்தன. எண்பதுகளில் உருத்திரண்ட அரச பயங்கரவாதம் தொண்ணூறுகளில் பெரும் போராக விரிந்தது. உள்நாட்டுப் போராக இருந்த போதும் அது இரண்டு இராணுவங்கள் மோதிய பெரும் போர்.

அதனால் எண்பதுகளில் அரசபயங்கரவாதத்தை எதிர்த்தும் விமர்சித்தும் வந்த கவிதைப்போக்கு இப்போது போரை எதிர்ப்பதாகவும் விமர்சிப்பதாகவும் அல்லது அதை வெற்றியை நோக்கி திருப்புவதாகவும் அமைந்தது.

அகிலனுடைய கவிதைகள் போரை விமர்சிக்கின்றன. அதை உள்@ர எதிர்க்கின்றன. அதனால் ஏற்படும் வலிப்பெருக்கை நெகிழ்ந்து ததும்பும் மொழியில் சொல்பவை. போரின் வலி எப்படி பிற சமூகங்களின் ஆன்மாவையும் வாழ்வையும் பாதித்திருக்கின்றன என்று அவர் அறிந்திருக்கிறார். குறிப்பாக அவரே சொல்வதைப்போல ரஷ்யாவின் இருண்ட கால அனுபவங்களை அவர் அன்னா அக்மதோவாவினூடாக பெற்றிருக்கிறார். அதைப்போல இன்னும் எல்லாத் திசைகளிலிருந்தும் எல்லாக்காலங்களிலிருந்தும் போர் ஏற்படுத்திய அழிவுகளையும் அதன் வலியையும் காயங்களையும் தெரிந்திருக்கிறார். அவருடைய அறிதல் முறை இதைச் சாத்தியமாக்கியுள்ளது.

போர்க்காலத்தின் புலம்பல்களை மகா பாரதத்திலிருந்தும் ராமாயணத்திலிருந்தும் வேதாகமத்திலிருந்தும் அகிலன் கேட்கிறார். இப்போது தன்னிலத்திலிருந்து அவை குருதியொழுக ஒழுக அவருடைய புலன்களில் ஏறுகின்றன. அகிலன் பதற்றமடைகிறார். என்ன செய்ய முடியும். அவர் விரும்பாத போர். அவர் சம்மந்தப்படாத போர். ஆனால் அது அவரை உள்ளே இழுக்கிறது. இழுத்துப்புரட்டுகிறது. புரட்டிப்புரட்டி அது பழிவாங்குகிறது. என்ன செய்ய முடியும். கடவுளே… கடவுளே…

சனங்கள் எதுவுஞ்செய்ய முடியாமல், எங்கேயும் போக முடியாமல் அந்தரிக்கிறார்கள். உயிர் எல்லாவற்றையும் விடப்பாரமாகிவிட்டது. எதுவும் இப்போது பெரிதில்லை, உயிரைத்தவிர. உயிர்தான் இப்போது சுமையானது. அதுவும் பெருஞ்சுமையாக இருக்கிறது. சிலபோது உயிரும் பெரிதாக தோன்றாமற் போகிறது. நிலைமை அப்படி.

வீடு பாதுகாப்பற்ற வெளியாகிவிட்டது. வீட்டைவிடவும் பதுங்குழிதான் பாதுகாப்பானது என்ற நிலை. இதுவே யதார்த்தம். ஆனால் பதுங்குகுழியோ இருண்டது. உண்மையில் இருண்ட காலம் இது. நிலாந்தன் சொல்வதைப்போல இப்போது ஈழத்தமிழர்கள் ஈருடக வாசிகளாகி விட்டனர். பதுங்கு குழிக்கும் வீட்டுக்கும் இடையிலான வாழ்க்கையில் அவர்கள் கிடந்து அல்லாடுகின்றார்கள். தவளையைப்போல மனிதப்பிராணி ஆகிவிட்டது.

4

அகிலனின் குரல் சனங்களின் குரல். அது பொதுக்குரல்;. அதுவும் யாழ்ப்பாணம் முற்றுகைக்குள்ளான காலத்தின் குரல். அந்த முற்றுகைக்குள்தான் கிறிஸ்து பாலன் பிறக்கிறார். அந்த முற்றுகைக்குள்தான் தேவலயத்தின் மணிகள் ஒலிக்காமல் அடங்கிப்போயிருக்கின்றன. கூரையில்லாத தேவாலயத்தில் நடக்கும் பிரார்த்தனை முற்றுகைக்குள்ளான யாழ்ப்பாண நிலவரத்துக்கு அசலான படிமம்.

ஸ்தோத்திரம் சுவாமி

கூரை பெயர்க்கப்பட்ட வீட்டிலிருந்து

எனது இராக்காலப் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும்

இவ்வருடம் நீர் பிறந்தபோது

அடைக்கப்பட்டிருந்தன தேவாலயங்கள்

கைது செய்யப்பட்டிருந்தது

நள்ளிவு மணியோசை

………

………

ஊரடங்கிய இரவில்

பிதாவே, நீர் பிறந்தபோது

அன்னியராய் இருந்தோம்

எங்கள் நகரில்,

மந்தைகளாக நடத்தப்பட்டோம்

எங்கள் முற்றங்களில்

……..

……..

பிதாவே,

சிதறிப் போனார்கள்

குரல்கள் கைப்பற்றப்பட்;ட சனங்களெல்லாம்

வெறிச்சோடியுள்ளன வீடுகள்

தேவாலயத்தின் வழிகளெல்லாம்

உதாசீனம் செய்யப்பட்ட அவர்களின் துயரங்கள்

………

………

(யாழ்ப்பாணம் 1996-நத்தார்)

இந்தக்கவிதை வந்தபோது நான் வன்னியிலிருந்தேன். அப்போது தமிழ் மக்கள் வாழும் பகுதிகளை அரசாங்கம் தன்னுடைய ஒடுக்கு முறைக்கேற்றமாதிரி துண்டு துண்டாகப் பிரித்து வைத்திருந்தது. அப்படிப் பிரித்துத் தனிமைப்படுத்தப்பட்டு முற்றுகையிடப்பட்ட யாழ்ப்பாணத்தில் அகிலன் இருந்தார். நாங்கள் வன்னியில் போர் வியூகத்துள் சிக்கியிருந்தோம். வலியுமம் துயரமும் நம்மீது கவிந்திருந்த காலம் அது.

அகிலன் துயருற்ற யாழ்ப்பாணத்து மனிதனின் குரலாய்ப் பேசினார். இந்திரா காந்தியின் நெருக்கடிகாலத்தை ஆத்மாநாம் கவிதைகள் விமர்சிப்பதைப்N;பால. ஸ்டாலின் காலத்தின் இருண்ட நாட்களை அன்னா அக்மதோவாவின் கவிதைகளை இன்றைக்கும் நமக்குக் காட்டுவதைப்போல முற்றுகைக்கும் போருக்கும் உள்ளான யாழ்ப்பாணத்தை அகிலன் கவிதைகள் காட்டின.

வாழும் காலத்தின் நெருக்கடிகள் தவிர்க்க முடியாமல் ஏதோவகையில் எந்தக்கவிஞரையும் பேசவைக்கின்றன. ஒரு கவி அந்தக்காலத்தினது சாட்சி. கவிதையும் அந்தக்காலத்தின் சாட்சியே.

ஆனால், இதிலும் சில முரண்களிருக்கின்றன. வாழும் காலத்தில் நான்கு முக்கிய வகை இயல்புடைய கவிகளை வரலாறு எப்போதும் கொண்டிருக்கிறது. ஒன்று ஒடுக்குமுறை அல்லது அதிகாரத்துக்கு ஒத்துப் போகும் கவிகள். அல்லது அதனைச் சார்ந்திருக்கும் கவிகள். இரண்டாவது, ஒடுக்குமுறையையும் அதிகாரத்தையும் எதிர்ப்போர். இவர்களில் புரட்சிகரமான போராட்டத்துக்கு ஆதரவான கவிகளும் உண்டு. ஆனால் இந்தக்கவிகளும் சார்பு நிலைப்பட்டவர்களே. இவர்கள் விமர்சன ரீதியாகவும் அறச் சார்போடும் ஒரு எல்லைக்கப்பால் நகர்வதில்லை. மூன்றாவது வகையினர், என்ன நடந்தாலும் அவற்றில் எந்த நிலையிலும் எந்த வகையிலும் சம்மந்தப்படாது விலகியிருப்பவர்கள். தட்டாமல் முட்டாமல் நடந்து கொள்பவர்கள் இவர்கள் என்ற சொல்லலாம். அடுத்தது நான்காவது வகையினர். இவர்கள் அறத்தைப் பிரதானமாகக் கொண்டவர்கள். எந்த நிலையிலும் சனங்களின் துயரத்தையும் பாதிப்பையும் முதன்மையாகக் கொண்டவர்கள். இவர்கள் சாட்சிகள். அன்னா அக்மத்தோவா ஒரு சாட்சி. ஆத்மாநாம் ஒரு சாட்சி. அடோனிஷ் இன்னொரு சாட்சி. நமது சூழலிலும் இத்தகைய சாட்சிகள் உண்டு. அதில் ஒருவர் அகிலன்.

ஒரு கவியில் இரண்டு நிலை அம்சங்களைப்பிரதானமாக அவதானிக்கலாம். ஒன்று அவர் கொள்ளும் பொருட்பரப்பு. அதாவது அவருடைய புலன் கொள்ளும் கவனத்தின் பரப்பு. அடுத்தது அவர் தன் கவிதைகளை வெளிப்படுத்தும் இயல்பு. அவருடைய மொழிதல். அதற்குப்பயன்படுத்தும் மொழி. அதற்கான சொற்கள். அந்தச் சொற்களை இணைக்கும் அல்லது அமைக்கும் தன்மை.

இவை இரண்டிலுமே ஒரு கவியின் ஆளுமையும் தனித்துவமும் இருக்கின்றன. இவைதான் ஒரு கவியின் முக்கியமான அடையாளத்தைத்; தீர்மானிக்கும் பிரதான காரணிகள். இவையே அந்தக்கவியை காலத்தின் மீது ஊன்றுவதும் காலத்திலிருந்து விலக்குவதும்.

பொதுவாக நெருக்கடி காலக்கவிகள் எப்போதும் அந்த நெருக்கடியை சனங்களின் நிலையில் நின்று காலத்தின் முன்னும் பின்னுமாகச் சஞ்சரித்து நிகழ்காலத்தை மதிப்பிடுவர். ஆனால் அவர்கள் ஒரு போதும் நிகழ்காலத்தின் சலனங்களுக்குள் நிற்பதில்லை. உள்ளடங்கி விpடுவதுமில்லை. அப்படி எதிர்பார்ப்பதும் தவறு. அத்தகைய மதிப்பீடு என்பது கவியின் முக்காலத்தையும் ஊடுருவும் பார்வைத்திறனாகும். வரலாற்றின் அனுபவத்தொகுதியும் எதிர்காலம் குறித்த அறத்தோடிணைந்த கனவும் நிகழ்கால உண்மையும் கவியின் இந்தப் பார்வையை உருவாக்குகிறது.

இந்த அடிப்படையைக் கொண்டே யாழ்பாண முற்றுகை எப்படி இருந்தது என்பதை அகிலன் கவிதைகள் காட்டுகின்றன. இது சனங்களின் நிலை நின்று நோக்கப்படும் உணரப்படும் அடையாளம். இந்த முற்றுகையை ஒரு படைத்துறை ஆய்வாளர் வேறு விதமாகவே சித்திரிப்பார். முற்றுகையிடும் தரப்பின் ஊடகக்காரர் இன்னொரு விதமாக இதை நோக்குவார். முற்றுகையை எதிர்க்கும் அல்லது எதிர்த்துப் போரிடும் தரப்பைச் சேர்ந்த கவிஞர் இதை வேறொருவிதமாக வெளிப்படுத்துவார். ஒரு என். ஜீ. ஓ ஆள் இதை வேறுவிதமாக உணருவார். ஆக வௌ;வேறு நோக்குநிலைகள் கொண்ட ஒரு விவகாரம் அவையெல்லாவற்றையும் கடந்து பொதுத்தளத்தில் கவிப் பெறுமமானத்தை அடைகிறது என்றால் அது எவ்வாறு என்பது ஒரு முக்கியமான கேள்வியாகும்.

இந்தக்கேள்விக்கான பதிலை நாம் அகிலனின் கவிதைகளில் காணலாம். முற்றுகையின் நிலை மாறாலாம். அது நிச்சயம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மாறிவிடும். அது தவிர்க்க முடியாத விதி. அப்போது அந்த முற்றுகையின் பெறமானமும் மாறிவிடும். வரலாற்றில் இதுமாதிரியான விசயங்களுக்கு எப்போதும் பெறுமதி இல்லை. நிகழ்காலத்தின் பெறுமதி மட்டுமே இவற்றுக்கு உண்டு. ஆக அப்போது சனங்களின் நிலைநின்று சாட்சி பூர்வமாக எழுதப்படும் கவிதைகளுக்கு மட்டுமே பெறுமதியிருக்கும். மற்றதெல்லாம் அந்தக்காலத்தோடு பெறுமதியற்றுப் போய்விடுகின்றன. தேவைகளுக்காக செய்யப்படும் காரியங்கள் எப்போதும் அந்தத் தேவைகள் முடிந்த கையோடு அவற்றின் பெறுமதியை இழக்கின்றன. ஆனால் அந்தத் தேவைகள் இருக்கும் போது அவற்றுக்கான பெறுமதி மிக அதிகமாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஒவ்வொரு தேவையும்தானே வரலாற்றை நிர்ணயிக்கும் காரணிகளாகின்றன என்று வாதிடுவோரையும் இங்கே நாம் கவனத்திற் கொள்ளுதல் அவசியம். ஆனால் அவற்றின் நிரந்தரத்தன்மை அவை கொண்டிருக்கும் உண்மையிலும் அதற்கான அறிவிலுமே தங்கியிருக்கிறது.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் அப்பால் மனித அடிப்படை விதிகளையும் தேவைகளையும் நலன்களையும் வைத்தே பொது விதிகள் உருவாகின்றன. அந்த விதிமுறைகளை பேணாத எந்த நோக்கமும் மனவெளிப்பாடும் நிரந்தரமானதல்ல. பொதுவானதுமல்ல. எனவே அவற்றுக்கான ஆயுட்காலமும் பெரிதாக இருக்க முடியாது.

5

ஒரு கவிதை எதன் அடிப்படையில் முக்கியத்துவமடைகிறது. எப்படி காலங்களைக் கடந்து செல்கிறது. எப்படி அது பிரதேசங்களைக்கடந்து, மொழியைக்கடந்து, பண்பாட்டைக்கடந்து, பிற சமூகங்களிலும் பிற காலங்களிலும் ஊடுருவுகிறது. எவ்வாறு அது மற்றச் சமூகங்களில் அறிமுகத்தையும் செல்வாக்கையும் செலுத்துகிறது. இந்தக் கேள்விகள் முக்கியமானவை.

இங்கே கவிதையின் பொருட்புலமும் வெளிப்பாட்டம்சமுமே இந்தப்பயணத்தை நிகழ்த்துகின்றன. இவை இரண்டும் இணைந்த நிலையில்தான் இந்தச் சாத்தியம் நிகழ்கிறது. தொன்மையான மொழியை அது நவீனப்படுத்துகிறது. நவீன வாழ்வை அது தொன்மை அம்சங்களோடு கலந்து நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்குமாக உருவாக்க எத்தனிக்கிறது. மனதின் எல்லா அறைகளிலும் கலாச்சாரத்தின் அத்தனை அடுக்குகளிலும் இருந்து அது தன் திரவியங்களைத் தேடிக்கொள்கிறது.

கவிதை கலாச்சார வெளியில் கொண்டிருக்கும் இடம் மிகப்பெரியது. பொறியாகக் கனலும் அதன் இயல்பு இன்னொரு நிலையில் ஒரு துளி நீராகவும் இருக்கிறது. பொறி பெருந்தீயை உருவாக்கக்கூடியது. நீரோ கடலை, சமுத்திரத்தைத் தன்னுள் கொண்டிருப்பது. இவ்வாறு அது பல நிலைகளில் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. இந்தத்தன்மைகள் எல்லாம் கவிதைக்கு நிரந்தரத்தன்மையை அளிக்கின்றன.

எப்போதும் மொழியில் உருகிக் கொண்டிருக்கும் வடிவம் அது. உள்ளீடும் அதுதான். மொழியில் நிகழும் அசாத்தியங்கள் கவிதையைப் போல வேறு எந்த மொழிவழி அடைவுகளிலும் உருவாகுவதில்லை. எனவேதான் அது எப்போதும் எல்லாச் சமூகத்திலும் மிகச் சுலபமாகவே ஊடுருவுகிறது. தொன்மையும் அதி நவீனமும் இணைந்த இந்தக்கலவை இயற்கை அம்சத்தை உருவாக்குகிறது. இயற்கை எப்போதும் மிகப்பிரமாண்டமானது. வியப்பூட்டுவது. நிரந்தரமானது. கவிதையும் அப்படித்தான். இந்த அம்சங்களோடு, இந்த வகையில் தமிழ்;க்கவிதையிலும் பிற மொழிவழிக்கவிதைகள் பழக்கமாகியுள்ளன.

கடந்த முப்பதாண்டுகளில் பலஸ்தீனக் கவிதைகள், குர்திஸ் கவிதைகள், ஆபிரிக்கக்கவிதைகள், லத்தீன் அமெரிக்கக்கவிதைகள், வியட்நாமியக்கவிதைகள், கறுப்பினக்கவிதைகள், ரஷ்யக்கவிதைகள், மூன்றாமுலகக் கவிதைகள், சீனக்கவிதைகள் ஈழக்கவிதைப்பரப்பில் செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றன. இந்தளவுக்கு தமிழகக் கவிதைகள் கூட ஈழத்தில் அறிமுகத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் அவற்றைப்பற்றிய அவதானிப்பும் அறிமுகமும் இருந்தது. ஆனாலும் அந்த அறிமுகம் மேலே சொல்லப்பட்ட கவிதைகள் செலுத்திய செல்வாக்கை இவை பெறவில்லை. குறிப்பாக லாங்ஸ்டன் கியூஸ், மர்முட் தர்விஷ், அடோனிஷ், அன்னா அக்மதோவா, பெரோல்ட் பிரெக்ட், பெய்ஸ் அகமத் பெய்ஸ் போன்றோர் ஈழக்கவிதைப்பரப்பில் பெரும் செல்வாக்கைச் செலுத்தினர். ஈழக்கவிஞர்களைப்போலவே இவர்கள் உணரப்பட்டனர். இதற்கு பிரதான அடிப்படைக்காரணம் இந்தப் பரப்புகளின் கொந்தளிக்கும் வாழ்நிலையே. ஒத்த வாழ்க்கை நிலைமையும் அனுபவங்களும் இந்தப்பரஸ்பரத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதேவேளை தனியே இந்த நிலைமைகள் மட்டும் இந்த நெருக்கத்தைக் கொடுக்கவில்லை. அதற்கப்பால் அவை எட்டிய கவித்துவ எல்லைகள் ஏற்படுத்திய ஈர்ப்பும் முக்கிய காரணம்.

இதிலும் அவரவர் தத்தம் வழி நின்றும் அனுபவத்தின் வழியாகவும் அவரவர் பண்பாட்டு நிலைப்பட்டும் தங்கள் கவிதையை நிகழ்த்தியிருக்கின்றனர். இங்கே கவிதை இவர்களிடையே ஒரு நிகழ்வெளிப்பாடாகவே, உரையாடலாகவே அமைந்திருக்கின்றது. எதிர்ப்புக் குரலாகவும் விடுதலை வெளியாகவும் அமைந்த இந்தக்கவிதைகள் சமூக கலாச்சார இயக்கத்தில் பிரதான அசைவைக் கொண்டன.

அகிலனிடத்தில் அன்னா அக்மதோவாவின் பாதிப்பு அதிகமுண்டு. இதை அவரே சொல்கிறார். கூடவே சுகுமாரனின் பாதிப்பையும்.

என்னுள் வெடிகுண்டு போல வந்து மோதி வெடித்தவை சுகுமாரனின் கவிதைகள். அவரின் காயவார்த்தைகளும் அன்னா அக்மத்தோவாவின் மென்னுணர்வும், துயரமும் கவிந்த வார்த்தைகளும் பெரும் பாதிப்பை என்னிடம் உண்டாக்கின. என் கவிதைகளை உற்று நோக்கும் எவரும் அன்னாவின் நோவா நதியை, சுகுமாரனின் சவரக்கத்தியின் பளபளக்கும் கூர்முனையை அவற்றில் காணவே செய்வர்.

அநாதிப்புகையிரதம், கடதாசிப்படகின் மரணம்-2, யாத்திரை-1, யாத்திரை-2, தலைப்பிடாத காதல்கவிதை போன்றவை நேரடியாகவே சுகுமாரனின் பாதிப்பையுடையவை. ஆனால் இவர்;களைக் கடந்து அகிலன் தனக்கான திசையில் பயணிக்கிறார். அதுவே இந்தக்கவிதைகளை முதனிலைப்படுத்துகின்றன. ஐதீகங்கள், தொன்மங்களை அகிலன் புதிய நிலைகளில் இணைக்கிறார். அதிகம் எழுதாமல் மிகக் குறைவாகவே எழுதியுள்ள அகிலனின் இந்தக்கவிதைகளில் எதுவும் ஒன்றிலிருந்து ஒன்று இறங்கிக் கொள்ளவில்லை. ஒரு சீரான நிலையை குலையாமல் அகிலன் பேணுகிறார்.

தொண்ணூறுகளில் ஈழக்கவிதைப்பரப்புக்கு வந்த முக்கியமான கவிஞர்களில் அஸ்வகோஸையும் எஸ்போஸையும் பா.அகிலனையுமே நான் அதிக தடவைகள் வாசித்திருக்கிறேன். இன்னும் அந்தத்தவனம் தீரவில்லை.

இந்தத் தொகுதியிலுள்ள சில கவிதைகளை 1994,95 காலப்பகுதியில் நான் வெளிச்சம் இதழ்களில் பிரசுரித்திருக்கின்றேன். அவற்றை பிரசுரத்துக்கு முன்னர் பார்த்தபோது மலைகளின் ஆழ்மன ஓட்டத்தையும் கடலின் தீராத அசைவையும் உணர்ந்தேன். ஒரு தீவிர வஸீகரம் அவற்றில் இருந்தது. அந்த வஸீகரம் இப்போது இந்தக்கவிதைகளை வாசிக்கும்போதும் இருக்கிறது. எப்போதும் எந்த வாசகனுக்கும் அது இருக்கும். என்றும் அது தீர்ந்து விடாது.


poompoom2007@gmail.com

Series Navigation

கருணாகரன்

கருணாகரன்