“ஞாபகம் வருதே…ஞாபகம் வருதே’ – சரித்திரம் செய்த சாதுக்களின் சவால்கள்

This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

மலர்மன்னன்


சென்னையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தின் மீது கைவைக்கும் எண்ணம் தமது அரசுக்கு இல்லை என்று தமிழக சட்டமன்றத்தில் மிகத் தெளிவாக அறிவித்து ஆறுதலளித்த முதலமைச்சர் கருணாநிதி, அத்துடன் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தால் பழைய ஞாபகங்கள் எழ வேண்டிய அவசியம் பலருக்கு ஏற்பட்டிருக்காது. ஆனால் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துத் துறவிகள் விவேகானந்தர் இல்ல விவகாரம் தொடர்பாகச் சட்டரீதியில் செயல்படுவது குறித்து ஆலோசிக்கப் போவதாகத் தெரிவித்ததைக் குறிப்பிட்டு, “சாதுக்கள் சவால் விடக்கூடாது’ என்றும் முதலமைச்சர் கருணாநிதி கூறியது, கடந்த காலத்தில் சாதுக்கள் பலர் மக்கள் நலனுக்காகவும் நாட்டின் நன்மைக்காகவும் சவால்கள் விடுத்து, சாதனை படைத்து, சரித்திரத்தையே மாற்றியிருப்பது நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.

சமரச சன்மார்கர் தாரா ஷýகோ

மொகலாயப் பேரரசர் ஷாஜஹான் தில்லி செங்கோட்டையிலமர்ந்து அரசாண்ட காலத்தில் தமது ஆட்சிக்குட்பட்ட நிலப் பரப்பைச் சில வட்டாரங்களாகக் பிரித்து ஒவ்வொன்றின் நிர்வாகப் பொறுப்பையும் தமது ஒவ்வொரு மகனிடம் ஒப்படைத்திருந்தார். அதற்கு இணங்க ஹிந்துக்களின் தலையாய புண்ணியத் தலமான காசி மாநகரமும் அதனைச் சார்ந்த பகுதிகளும் ஷாஜஹானின் மூத்த மகன் தாரா ஷýகோவின் ஆளுமைப் பொறுப்பில் இருந்தன. தாரா ஷýகோ சகிப்புத் தன்மையும், சமரச மனப்பான்மையும் மிக்கவராக இருந்ததோடு வியக்கத் தக்க அளவுக்கு ஹிந்து தத்துதவ ஞானம், ஹிந்து கலாசார மரபு ஆகியவற்றின் மீது மிகுந்த ஈடுபாடும் மதிப்பும் கொண்டிருந்தார். உபநிடதங்கள் பலவற்றைப் பாரசீக மொழியில் ஆக்கிய பெருமையும் அவருக்கு உண்டு. எனினும், முந்தைய ஹிந்து சமய வெறுப்பாளர்களால் ஆலயங்கள் நிறைந்த காசி மாநகரமே சிதைந்து பொலிவிழந்து கிடந்ததை அவர் கண்டும் காணாததுபோலத்தான் இருக்க வேண்டியதாயிற்று. தமது மதத் தலைவர்களின் கட்டளையை மீறி காசியின் பெருமையை மீட்டெடுக்கும் துணிவு, இயல்பாகவே சாந்தமான குணம் படைத்திருந்த தாராவுக்கு இருக்கவில்லை. ஒரு சூழ்நிலைக் கைதியாகத்தான் அவர் இருந்தார். பிற்காலத்தில் அவரது சமரச மனப்பான்மையினையே ஒரு குறைபாடாகக் கூறித் தமது மதத் தலைவர்களிடையே ஆதரவு திரட்டி, உடன் பிறந்த அண்ணன் ஷýகோவைச் சித்ரவதை செய்து கொன்றுவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினார் அவரது தம்பி ஒளரங்க சீப் என்கிறது, சரித்திரம்.

சிங்க வாகன குமர குருபரர்

அந்தச் சமயத்திலேதான் தென் தமிழ் நாட்டிலிருந்து ஹிந்து சமயச் சிறப்புகளையெல்லாம் எடுத்துக் கூறி மக்களின் தன்னம்பிக்கையினையும், தன்மானத்தையும் தூண்டியவாறு வட திசை நோக்கி நெடும் பயணம் செய்த குமர குருபரர் என்கிற சாது, காசிக்கு வந்து சேர்ந்தார். சிவ பெருமானே மரிப்போரின் செவியில் மந்திரம் ஓதி மோட்ச மளிக்கும் உன்னதத் தலமான காசி ஒளிகுன்றிக் கிடப்பது கண்டு மனம் வருந்தினார். காசியிலேயே தங்கி மடம் ஒன்றை நிறுவி சமயப் பணியும் சமூகப் பணியும் தொடங்க முடிவு செய்தார். தாரா

2
ஷýகோவுக்கு சமரச மனப்பான்மை இருந்த போதிலும், தமது மதத் தலைவர்களை மீறி அவரால் எதுவும் செய்ய இயலாது என்று காசியைச் சேர்ந்த பிரமுகர்கள் குமர குருபரரிடம்
அவநம்பிக்கையுடன் அங்கலாய்த்தனர். அவர்களுக்கு தைரியமளித்து, நம்பிக்கையூட்டிய குமர குருபரர், காசியில் புனித கங்கை ஆற்றின் கேதார் கட்டத்தையொட்டி, சிதைக்கப்பட்டிருந்த கேதாரீசுவரர் ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்பி, அங்கேயே தமது மடத்தையும் நிறுவ முற்பட்டார். ஆதிக்க பலம் மிக்க மாற்றுச் சமயத் தலைவர்கள் அதற்கு இடையூறு விளைவித்தனர். எப்படியும் தனது திட்டத்தை நிறைவேற்றி, தமது சமுதாயத்தவர்களுக்கு நெஞ்சில் உறுதியூட்டியே தீருவேன் எனச் சூளுரைத்து , ஆளுநர் பொறுப்பில் இருந்த தாரா ஷýகோவை நேரில் சந்திக்கப் புறப்பட்டு விட்டார், குமர குருபரர்.
தாராவைச் சந்திக்க விடாமல் குறுக்கே நின்றவர்கள் அஞ்சி விலகியோடும் விதமாகத் தாம் வளர்த்த சிங்கத்தின் மீதேறிச் சென்றார். சிங்க வாகனராய் எழுந்தருளிய குருபரரைக் கண்டதுமே அவரது மகிமையைக் கண்டுணர்ந்துவிட்டார், ஷýகோ. அவரை மரியாதையுடன் உபசரித்து, வந்த காரணத்தைக் கேட்டறிந்தார். அவர் விரும்பிய வண்ணமே கேதார் கட்டமும் கேதாரீசுவர ஆலயமும் அமைந்த பகுதியை அவரிடம் ஒப்படைத்து, அவரது விருப்பம் போலப் பணியாற்றிக் கொள்ள அனுமதியளித்தார். நோக்கம் நிறைவேறிய குமர குருபரர் கேதார் கட்டத்தையும், கேதாரீசுவரர் ஆலயத்தையும் சீரமைத்து, அங்கு ஒரு மடாலயத்தையும் நிறுவி சமய, சமூக நலப் பணிகளுக்கு ஏற்பாடு செய்தார். அவர் நிறுவிய மடாலயம் இன்றளவும் அங்கு சிறப்பாக இயங்கி, குமர குருபரர் சூளுரைத்து வெற்றி கண்ட கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

தாயுமானவரின் தன்மானம்

விஜய ரங்க சொக்க நாத நாயக்கர் திரிசிரபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காலத்தில் அவரது அவையில் அமைச்சராகப் பொறுப்பேற்று நிர்வாகம் சீராக நடைபெறத் துணை நின்றவர் பிற்காலத்தில் தாயுமானவர் என்னும் துறவியாய் சமயப் பணியும் சமூகத் தொண்டும் செய்த கேடிலியப்பர். சொக்க நாதர் காலத்தில் ஆர்க்காடு நவாபுகளுக்குப் பணிந்து போய்விடாதவாறு சொக்க நாதரைக் காத்த தாயுமானவர், அவரது மறைவுக்குப்பின் அரசுக் கட்டிலில் அமர்ந்த அவர் மனைவி ராணி மீனாட்சி வீசிய மோக வலையிலிருந்து தப்பித்து ராமநாதபுரம் சென்றடைந்தபோது, அங்கும் அவரது திறமையறிந்து ஆட்சிக்குத் துணை நிற்குமாறு சேதுபதி மன்னர்கள் அவரை வேண்டினர். போர்த்துக்கீசியரின் ஆக்கிரமிப்பு அபாயத்தை ராமநாதபுர சமஸ்தானம் எதிர்நோக்கியிருந்த தருணம் அது. ஆட்சிக்குத் துணைபுரியும் வாய்ப்பினைப் பெற்ற தாயுமானவர், அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். தாயக மண்ணைஅந்நியர் ஊடுருவலிலிருந்து காப்பதாய்ச் சூளுரைத்த தாயுமான சுவாமிகள், வீரஞ் செறிந்த மறவர்களை ஊக்குவித்து, கடல் வழி படையெடுத்து வந்த போர்த்துக்கீசியரைத் தடுத்து நிறுத்தினார்.

இப்படி பாரத தேசத்தின் வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தோமானால், சாதுக்களும் சந்நியாசிகளும் தாம் தேவைப்படும் போதெல்லாம் மக்கள் நலனையும் நாட்டின் பாதுகாப்பையும் காக்கச் சவால் விடுத்துக் கடமையை நிறைவேற்றுவதில் முழு மூச்சுடன் இறங்கியிருக்கிறார்கள் என்பதை அறியமுடியும்.


3
வித்யாரண்யரும் ராமதாசரும்

விஜய நகரப் பேரரசு நிறுவப்பட்டு, பாரத தேசத்தின் கலாசாரமும் சமயத் தொன்மையும் பாதுகாக்கப்படக் காரணமாக இருந்த ஹரிஹரர், புக்கர் இருவரும் வலுக்கட்டாயமாக மத மாற்றம் செய்யப்பட்டவர்கள். அவர்களைத் தாய் மதம் திரும்பச் செய்து அவர்களுக்கு தேசப்பற்றையும் கலாசாரப் பற்றையும் ஊட்டியவர் சுவாமி வித்யாரண்யரே அல்லவா? சிருங்கேரி மடத்தின் பீடத்தை அலங்கரித்த அந்த சாது மஹராஜ்தான் ஹிந்து சமயத்தையும் ஹிந்து கலாசாரப் பெருமையினையும் காக்கும் பொருட்டு அரண் ஒன்று அமைப்பதாய்ச் சூளுரைத்து, விஜய நகர சாம்ராஜ்யம் தோன்றச் செய்தார். இதேபோல் பாரதத்தின் தொன்மையான பாரம்பரியத்தைக் காக்கச் சூளுரைத்து அதன் பொருட்டு மராட்டிய மண்ணில் சத்ரபதி சிவாஜிக்குப் புத்துணர்வூட்டி ஹிந்தவி சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க வைத்தவர் சுவாமி ராம தாசரே அல்லவா?

எத்ததைய சோதனைகள் வந்தாலும் பாரதத்தின் ஆழ்ந்த தத்துவக் கோட்பாட்டையும் ஆன்மிக உணர்வையும் கலாசாரச் சிறப்பையும் அழிய விடமாட்டோம் எனச் சூளுரைத்து பக்தி ஆவேசத்துடன் சாதுக்களான சைத்தன்ய மஹாப் பிரபுவும் அவருடைய சீடர்களும் உயிரையும் துச்சமெனக் கருதி வங்கம், கலிங்கம் என அன்றைய கிழக்கு பாரதமெங்கணும் ஒரு சூறாவளியைப் போலச் சுற்றி வரவில்லையா? தாம் வழிபடும் ஆலயங்களுக்குச் செல்லவும் துணிவற்றுக் கிடந்த மக்களுக்குத் துணிவூட்டி இறையுணர்வைத் தூண்டி விட்டவர்கள் அந்தச் சாதுக்களேயன்றி வேறு யார்?

சாதுக்களின் வந்தே மாதர முழக்கம்

வங்கத்து பங்கிம் சந்திரர் எழுதிய “ஆனந்த மடம்’ என்கிற புதினம் சாதுக்கள் சவால் விடுத்து தேசத் தொண்டு செய்த கதையைத்தான் சொல்கிறது. விடுதலைப் போராட்ட காலத்தில் மக்களின் ரத்த நாளங்களிலெல்லாம் புது ரத்தம் பாய்ச்சி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தையே மிரளச் செய்த “வந்தே மாதரம்’ என்கிற கோஷத்தை முழக்கிச் சென்றவர்கள் அநத்ப் புதினத்தில் விவரிக்கப்படும் சாதுக்கள்தாம். ஒரு போர்ப் பரணியாக அதனைப் பாடிச் சென்ற அந்தச் சந்நியாசிகள் அந்நிய ஆதிக்கத்தை வேரறுப்போம் எனச் சவால் விடுத்து வீதியில் இறங்கினார்கள்.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து பாரதத்தை மீட்பதே பிறவிப் பயன் எனச் சவால் விடுத்து சுதந்திரக் கனல் மூட்டிய ஆரிய சமாஜத் துறவிகள் பலர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர், மத வெறிக்கு பலியான சுவாமி சிரத்தானந்தர்.

நமது சமுதாயத்தில் மலிந்துவிட்ட தீண்டாமை போன்ற தீய வழக்கங்களை அடியோடு களையச் சூளுரைத்துப் புறப்பட்ட சாதுக்களின் எண்ணிக்கையும் ஏராளம். ராமானுஜர், வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகள், ஐயா வைகுண்டர், நாராயண குரு என ஒரு நீண்ட சாதுக்கள் பரம்பரையே அவரவர் காலத்து முறைகேடுகளைக் களைய சவால் விடுத்துக் களத்தில் இறங்கியதான வரலாற்றுப் பெருமைக் குரியவர்கள்தான், நாம். அவ்வளவு ஏன், காலம் பூராவும் சவால்கள் பல விடுத்து,”செய் அல்லது செத்து மடி’ என இறுதிச் சவாலும் விட்டு, விடுதலைப் போரட்டத்தை முன்னின்று நடத்திய காந்திஜியைக் கூட ஒரு சாதுவாக, “காந்தியடிகள்’ என்றுதான் குறிப்பிட்டு வருகிறோம் அல்லவா?


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்