நானும் முட்டாள் தான்
சக்தி சக்திதாசன்

நெஞ்சம் பதறுதே ! உள்ளம் துடிக்குதே !
இத்தரை மாந்தரை எண்ணி விட்டால்
எத்துணை துயரம் கண்ணுற்றாலும்
சொட்டுணை உணர்ச்சியும் தொட்டிடார்
சுற்றமுடை மக்கள் பட்டிடும்
கண்ணீரோடேகிய வாழ்க்கையை
சற்றேனும் ஏறிட்டே பார்த்திடா
கற்பாறை இதயத்தை கொண்டிட்டார்
நித்தமொரு யுத்தம் தாமவர் வாழ்வு
சத்தமில்லாமல் மடிந்திடும் கூட்டம்
தத்துவம் பேசியே பொழுதினில்
புத்தரைப் போலவே நடக்கிறார்
பறப்பன, நிற்பன, ஊர்வன
அனைத்தையும் பாதுக்காத்திட
அழகாய்ச் சட்டம் போட்டிடும்
அழிந்திடும் மனிதரை மறந்திடும்
மாந்தரின் செய்கைகள் சரியோ
சொல்லு நீ தெய்வமே !
முத்தமிழ் பெருமைகள் பேசிடும்
நற்றமிழ்க் கவிதைகள் வடித்திடும்
முட்டாள்கள் மலிந்த நம் பூமியில்
வாழ்ந்திடும் நான்கூட முட்டாளே !
http://www.thamilpoonga.com