தேவதேவனின் மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 20 in the series 20010805_Issue

விரும்பினேன் என் தந்தையே, புலியின் தனிமை, பேசாத சொற்கள்


1] விரும்பினேன் என் தந்தையே

பேயோ தெய்வமோ
எந்த ஓர் அச்சம்
ஆட்டிப்படைத்தது உம்மை என் தந்தையே
நீ படித்தது போதும்
எல்லாரும் மேற்படிப்பு படித்தேகிவிட்டால்
இருக்கும் பிற வேலைகள் எல்லாம்
யார் செய்வார் என்றறைந்தீர்.

கடும் உழைப்பை அஞ்சினேனா ?
கூட்டாகப் புரியும் பணிகளிலே
இருக்க வேண்டிய தாளம்
இல்லாமை கண்டு அஞ்சினேனா ?

விரும்பினேன் நான் என் தந்தையே
விண்ணளவு பூமி விரிந்து நிற்கும் நிலங்களிலே
ஆடுகள் மேய்த்து புதர்நிழலில் களைத்து அமர்ந்து
அமைதி கொண்டு முடிவின்றி இப்புவியை
பார்த்துக்கொண்டு இருப்பதற்கும்

காலமெல்லாம் திருவிழாவும்
மழலைகளின் கொண்டாட்டமுமாய்
என் வாழ்வை இயற்றிடலாம் என்று எண்ணி
ஊர் ஊராய் சுற்றிவரும் பலூன் வியாபாரி ஆவதற்கும்

மொய்க்கும் குழந்தைகளின் நிர்மால்யம் தேடி
பள்ளிக்கூட வாசலிலே இனிப்பான
பெட்டிக்கடை வைத்து காத்துக் கிடப்பதற்கும்
விரும்பினேன் நான் என் தந்தையே

வியர்வை வழிந்தோட வீதியிலும் வெயிலிலும்
உழைப்ப்போர் நடுவே
அடுப்பு கனலுகிற சுக்கு வெந்நீர் காரனாகிநடமாடவும்

சாதி மதம் இனம் கடந்து அலைகிற
யாத்ரிகப் புன்னகைகள் அருந்தி என் உள்ளம் குளிர
வழிகாட்டி வேடம் தரிக்கவும்
விரும்பினேன் என் தந்தையே
அன்பர் குழுக்கள் நடுவே வாத்தியமிசைக்கவும்
பாடவும் நடமிடவும்
விரும்பினேன்

இன்று விரும்பியதெல்லாம் நான் அடைந்தேன்
இன்று நினைத்துப் பார்க்கிறேன் உம்மை என் தந்தையே
நம்மை ஆட்டிப் படைத்த மறைபொருளின் நோக்கையும்.

2] புலியின் தனிமை

[அ]
மனிதரற்ற வீதியில் நடந்து
வனத்துக்கு திரும்பியது
ஒருமனிதனையும் காணாத
பசி வேதனையால வாடிய புலி

மீண்டும் பெருத்த தினவுடன் ஒரு நாள்
ஒரு நகரத்துக்குள் நுழைந்துவிட
அலறியடித்துக் கொண்டு ஓடி
தம் ஓட்டுக்குள் சுருண்டுகொண்ட மனிதர்
துப்பாக்கி தூக்கி பாய்ந்து வந்த ராணுவம்
கூண்டுக்குள் பிடிக்கத்துடித்த சர்க்கஸ் மனிதர்
பத்திரமாய் பிடித்து காட்டுக்குள் அனுப்ப
தீர்மானம் கொண்ட ‘கருணையாளர்கள் ‘

யாவரையும் எண்ணி எண்ணி
தாளாத துக்கம் கனல
தகித்துக்கொண்டிருந்தது கானகத்தில்

[ஆ]

ஓ கடவுளே!
எத்தனை ஆபத்தானது இந்த அறியாமை!

அதி உக்கிரமான ஓர் அழகையும்
முடிவற்ற விண்ணாழத்தால்
பற்றவைக்கப்பட்ட பார்வையையும்
அதிராது சுமந்து செல்லும் பெரு நடையையும்
இங்கு அறிந்தவர் எவருமில்லையோ

தன்னை அறியாது
உறுமிக்கொண்டிருக்கும் இந்த வலிமை
மிருகச்சிறை
எவ்வளவு ஆபத்தானது!

[இ]

தன்னை அறிகையில் புலி
அறியாத வேளையில் விலங்கு.

[3] பேசாத சொற்கள்

மாடிக்கூளங்களை காற்று பெருக்கிவிடும்
கவலை கொள் வதற்கு இன்று அவசியமில்லை
மரங்களின் அழுக்கினை மழை கழுவிவிடும்
கவலை கொள்வதற்கு இன்று அவசியமில்லை

இந்த மைனாக்களின் குரல்களில்
வேப்பம் பழத்தின் இனிமை
இந்த மெளனத்தின் இதழ்களில்
சொற்கத்தின் இனிமை

எனினும் இங்கேதும் நிரந்தரமல்ல
அமைதியும் அழிந்து அக்கினி வறுக்கும்

காவ் காவ் என்று கரைகின்றன இன்று
கறுப்பு பறவை அலைகள் எங்கும்
நானா எப்படி என்றென் திகைப்பு
அறிந்தது போலும் தோன்றும்
அப்போது
தெய்வத்தின் குரல் போல
உதிக்கும் சில சொற்கள்

‘ ‘ நீ பேசும் சொற்களை எவனும் பேசிடுவான்
நீ பேசாத சொற்களைப் பேசு ‘ ‘

***
[நன்றி .சொல் புதிது 6]
தேவதேவனின் கவிதைகள் தேர்வு ஜெயமோகன்

Series Navigation

'அந்நியமற்ற நதி ' தொகுப்பிலிருந்து.

'அந்நியமற்ற நதி ' தொகுப்பிலிருந்து.