This entry is in the series 20110102_Issue

சத்யானந்தன்



கடலின் அருகில் செல்வதில் அலை ஓசையைத் தவிரவும்
பல அசௌகரியங்கள் உண்டு
சில தர்ம சங்கடங்களும்

ஆமைகளைக் கொத்திப் போக கழுகுகள்
வட்டமிடும்
மீன்களின் வீச்சத்துடன் காயும் வலைகள்

குழந்தை விற்பனையாளர்களின் நகர்வு கூவல்
சாம்பரைக் கரைக்கும் குடும்பகள்
பலூனைக் கிழிக்கும் இரும்புத் தோட்டா

சிறு பெண்ணின் ஓயாப் பேச்சு
கவனிப்பது போல் ஒரு வாலிபனின் பாவனை
அவர் எழுந்ததும் மணலுடன் உதிர்ந்து மறைபவை

நண்டுகள் மட்டுமே மணல் அலை
என்னும் புள்ளிகளைத் தாண்டாது ஆனந்தமாய்

கடற்கரையைத் தொடும் சாலையில் அமர்வதும்
பாந்தமில்லை இரைச்சல் புழுதி

கடலைத் தாண்டி என் மொழி பேசுவோரின் மண்
அவர்கட்கும் எனக்கும் இடையே கடல் மட்டுமில்லை

Series Navigation