This entry is in the series 20040729_Issue

குண்டலகேசி


கவிஞர் தங்கமணி –

தலைவா,

நீ வீரத்தில் விஜயன் விவேகத்தில் அரிஸ்டாடில்

அறிவு கூர்மையில் லேசர் ஆற்றலில்

நீ நியூக்லியர்

கம்ப்யூட்டரில் க்ரே கரடியில் பாண்டா

பறவையில் பீனிக்ஸ் பூக்களில் பாரிஜாதம்

மியூசிக்கில் நீ ஜாஸ் மிதியடியில் நீ நைக்கி

காற்றுக்கு டோர்னடோ ஆளுவதற்கு நீ ஜால்ராவுக்கு நான்

உன் பேனாவின் பவரில் தமிழ்நாட்டுக்கே மின்சாரம் தயாரிக்கலாம்

உன் அறிவின் வெளிச்சத்தில் வீனஸ் காணாமல் போய்விட்டது

செவ்வாயிலே செம்மொழி பரப்பினாய்

திங்களிலே தேனை நிரப்பினாய்

தமிழ்த் தேனை நிரப்பினாய்

தமிழுக்கு நான்காம் சங்கம் அமைத்த தலைவா

உனக்கு என் முதல் மரியாதை

மனித இரத்தத்தில் 55 சதவிகிதம் ப்லாஸ்மா

உழைப்பவன் இரத்தத்திலோ 100 சதவிகிதம் கண்ணீர்

நிலாவில் அமிலம் வழியுமோ ?

ரோஜாவில் பாஸ்பரஸ் படருமோ ?

நீல வானத்தில் கருப்பு மை கொட்டியது யார் ?

டைரனோசரஸுக்கு முன்னே பிறந்த முதல் குடியை

மயிலாப்பூர் கொசு அழிக்குமோ ?

உன் கண்ணின் சிவப்பில் மார்சுக்கு பெயின்ட் அடிக்கலாம்

உன் சொல்லின் வெப்பத்தில் மின்சாரம் படைக்கலாம்.

எழுந்திரு, புதிய புரட்சி படைத்திடு

தலைவர்- தம்பீ எல்லா உவமையும் நீங்களே சொல்லிட்டா எப்படி ?

எனக்கும் கொஞம் விட்டு வைங்க.

ஆமா, எந்த என்சைக்லொபீடியா வாங்கறீங்க ?

எனக்கு ஒரு காப்பி அனுப்புங்க.

டிக்சனரி இல்லாமல் நீங்க திட்டுறீங்களா, பாராட்டறீங்களான்னு தெரியல

நானும் பொது உடைமைக்காரந்தான்.

டிவி பேரன்: தாத்தா என்ன சொல்றீங்க. டிவி, கேபில், மளிகைக் கடை இத்யாதி

இத்யாதி எல்லாம் என்ன ஆவது ?

தலைவர்: பயப்படாதே பேரா.

நான் அண்ணாவைப் பாக்கலேன்னா பொது உடைமைக்காக போராடியிருப்பேன்னுதான் சொன்னேன்.

அதுதான் அண்ணாவை பாத்துட்டேனே.

நம்ம உடைமை நம்ம உடைமை

பொது உடைமை நம்ம உடைமை. புரிஞ்சுதா ?

கவிஞர் : நாளைக்கு அமெரிக்கா சென்று கோல்டன் கேட் பற்றி ஒரு கவிதை வடிக்க வேண்டும்.

அப்ப நான் வரட்டுமா ?

தலைவர்: பொழைக்க தெரிஞ்ச ஆளு நீங்க.

—-

kundalakesi_s@yahoo.com

Series Navigation