கவிதைக்குள் நான்
சேவியர்.

ஒரு நீள் மெளனம்
ஒரு ஆழ் அமைதி
சத்தமிடாத காற்று,
ஒரு கவிதை.
கவிதையை படிக்கிறேன்
மெல்ல மெல்ல
சத்தங்கள் வந்து
என்
செவிப்பறை கொத்துகின்றன.
ஆழமாய் ஆழமாய்
படிக்கிறேன்
சத்தம் அதிகமாகி
பின்
தேய்ந்து, தேய்ந்து
ஆழமான ஓர் அமைதிக்குள்…
அதற்குமேல்
என் கைகளில்
கவிதை இருக்கவில்லை,
இருந்ததெல்லாம்,
ஒரு நீள் மெளனம்
ஒரு ஆழ் அமைதி
சத்தமிடாத காற்று,
நான்.