திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கடிதம் செப்டம்பர் 30,2004

This entry is in the series 20040930_Issue

சுமதி ரூபன்


காஞ்சனாவிற்கு,

கதையைக் களவு எடுக்குமளவிற்கு எனது கற்பனை ஒன்றும் வரண்டு விடவில்லை. குமார்மூர்த்தி எழுதிய ‘சப்பாத்து ‘ கதையை பா.அ.ஜெயகரன் நாடகமாகவும் கனடாவில் மேடையேற்றினார். நானும் அதைப்பார்த்திருக்கின்றேன். மறைந்த குமார்மூர்த்தி எனது நண்பனும் கூட. அவருடைய ‘சப்பாத்து ‘ கதை ஒரு வயது வந்த இளைஞன் தனது காலுக்குப் பொருத்தமாக சப்பாத்து ஒன்றை வாங்குவதற்காக கனடாவில் கடைகடையாக ஏறி இறங்கி தேடி வாங்கி கடைசியாக கோவிலில் தொலைத்து விடுவதாக அமைத்திருக்கின்றார். எனது சப்பாத்துக் கதை எனது குடும்பத்தில் எனது அக்காவின் மகன் ஆசையாக ‘நைக்கி ‘ சப்பாத்து தனது பிறந்த நாளிற்கு வாங்கி முதல் நாள் பிள்ளையார் பால் குடிக்கின்றார் பார்க்க வா என்று நண்பர்கள் அழைத்துச் சென்று பறிகொடுத்தது. இரண்டிலும் சாயல் இருக்கின்றது. அண்மையில் இலங்கையில் எடுக்கப்பட்ட ‘செருப்பு ‘ என்ற குறுந்திரைப்படத்திலும் எனது சப்பாத்தில் வருவது போல் ஒரே சாயலான காட்சி- அதாவது பிள்ளை சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தை தாயார் தனது தேவைக்காக எடுப்பது போல், வந்திருந்தது.. அப்போது அந்தத் திரைப்படத்தைப் பார்த்த எனது நண்பன் கூறினார் சுமதி….இந்த ‘செருப்பு ‘ திரைப்படத்தைப் பார்த்து விட்டு சுமதி ரூபன்.. செருப்பைக் களவு எடுத்து விட்டார் என்று கூறினாலும் கூறுவார்கள் என்று. அதே வேளை இலங்கையில் ஒரே நேரத்தில் ஒரே கருவைக் கொண்ட செருப்பு, சைக்கிள் எனும் இரு குறுந்திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. எதற்காக காஞ்சனா என்ற பெயரிற்குப் பின்னர் பதுங்கி கோழைபோல் என்மேல் காழ்புணர்சி காட்டுகின்றீர்கள். என் திறமையில் எனக்கு சிறிது சந்தேகம் இருந்தது. முதல் முதலாக உலத்தமிழர் நாடாத்திய திரைப்படவிழாவில் எத்தனையோ அனுபவமிக்க திறமைசாலிகளின் குறுந்திரைப்படங்களுக்குள் எனது படைப்பான ‘இனி ‘ பேசப்பட்டபோது எனக்குள் முழுமையான நம்பிக்கை வந்து விட்டது. 3வது சர்வதேச திரைப்படவிழாவிலும் பலர் எனக்குக் கைகொடுத்து மிகத்திறமையாச் செய்திருக்கின்றீர்கள் என்றும் இனி தமிழ் மக்களுடன் நேரத்தை வீணடிக்காது அதற்கு அடுத்த படிக்குச் செல்லுங்கள் என்று வாழ்த்தியவர்கள் பலர். அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கின்றேன். எனது குறுந்திரைப்படங்களான ‘இனி ‘, ‘மனுஷி ‘, ‘உஷ் ‘ போன்றவை பேசப்பட்ட அளவிற்கு ‘சப்பாத்து ‘ பேசப்படவில்லை. அதன் கரு ஆழமற்றது என்று தெரிந்தும் எனது பிள்ளைகளிற்காக அதனைச் செய்தேன். மூன்று தரமான குறுந்திரைப்படங்களைத் தரும் திறமைகொண்ட சுமதி ரூபன் சப்பாத்து போன்ற ஒரு கருவைக் களவாட வேண்டிய அவசியமில்லை என்றே நம்புகின்றேன். காஞ்சனா அவர்களே! வேண்டுமானால் எனது குறுந்திரைப்படப் பிரதிகளை உங்களிடம் சேர்ப்பிக்கின்றேன் தாங்கள் அது எங்கிருந்து உருவி எடுக்கப்பட்டது என்பதை எனக்குத் தெரியப்படுத்தலாம்.

காழ்ப்புணர்ச்சியில் காலத்தைக் கடத்தாது எதையாவது சாதிக்க முயலலாமே..

உங்கள் சேவைக்கு நன்றி

சுமதி ரூபன்

Series Navigation

About சுமதி ரூபன்

சுமதி ரூபன்

View all 26 articles →

கடிதம் செப்டம்பர் 30,2004

This entry is in the series 20040930_Issue

சண்முகம்


அ கா பெருமாள் அவர்கள் எழுதிய மக்கள் தெய்வங்களின் கதைகள் மனசை கவர்ந்தன. நான் குமரிமாவட்டம் அருகே பணகுடியை ச்சேர்ந்தவன். என் குலதெய்வம் பூலங்கொண்டாளம்மன். ஆனால் கதை தெரியாது .என் அப்ப அம்மா யாருக்குமே அது தெரியாது. சும்மா கேள்விப்பட்டதோடு சரி. இப்போதுதான் படிக்கிரேன். உக்கிரமான கதை. மனதை அறுக்கும் நிகழ்வுகள். இதைபோல ஒரு நாவல் நாம் ஏன் எழுதவில்லை என்று எண்ணவைக்கிறது. நம் எழுத்தாளார்களுக்கு எழுத எவ்வளவு பெரிய சொத்து உள்ளது. இவர்கள் சும்மா லத்தீனமேரிக்கா மாயங்களை எழுதி கழுத்தறுக்கிறார்கள்

. பெருமாளுக்கு வாழ்த்துக்கள்

சண்முகம்

பரோடா

sivasuntharasanmugam@rediffmail.com

Series Navigation

About சண்முகம்

சண்முகம்

View all 1 articles →