This entry is in the series 20110410_Issue

ந.மயூரரூபன்



வீதி வெயிலில்
காய்ந்து சுருண்டிருக்கும்
உலர்ந்தபின்னும் காற்றதன் மேல்
தொங்கிக்கொண்டிருக்கும்.
பேய்த்தேர் ஆடியசையும்
சலனங்கள் மட்டும்
வீதியில் விழுந்துகொண்டிருக்க
இமை பொசுங்கிய கண்கள்
குலுங்கும் பையொன்று
மேற்குருட்டு வளைவில்
சோம்பியசையும்.
பேய்த்தேர் இழுத்துவரும்
ஒப்பனை வெள்ளமொன்று
வீடு தேடியிறங்குகிற உலர்பொழுதுகளில்
ஒவ்வொன்றாய் பைவிழிகள் விழும்.
ஊறிக்கலைந்த ஒப்பனையில்
காய்ந்தெரியும் காற்றறைய
பேய்த்தேரெழுதிய வாசல்கள்
சலனமற்று எங்கும் திறந்துகொள்ளும்.
புலனழிய ஓடும் தலையொன்று
விறைத்தலையும் வீதியில்
தன்விழி தொலைத்தோடும்.

-ந.மயூரரூபன்

Series Navigation