சூர்ப்பனகை என்றும் தவறானவள் தானா ?

This entry is part [part not set] of 33 in the series 20110424_Issue

சமீரா நீம்


அன்பு அய்யா ,

புதிய மாதவியின் கட்டுரைக்கு நீங்கள் அளித்த விளக்கங்களும் ,எடுத்துக்காட்டுகளும் நன்று.. அதைவிட நன்று ஆண்களின் பார்வையை நீங்கள் உறுதிப்படுத்த எடுத்துக்கொண்ட நேரம் . அது பண்டைய வாத்மீகியோ இன்றைய குஷ்வந்த் சிங்கோ , யாராக இருந்தாலும் மனதின் ஆழங்களில் வேரோடிய கறை தீர்ந்த ஆணாதிக்கம் வியக்கவும் வைக்கிறது சில நேரங்களில் .. அதெப்படி புதிய மாதவி வக்கிர புத்தியால் எழுதியிருக்கிறார் என்று இவ்வளவு எளிதாக சொல்லி விட்டீர்கள் ?

உங்களின் விளக்கத்தில் இரண்டு முக்கியமான பெண்களின் பெயர்களை குறிப்பிட்டீர்கள். அவர்கள் இருவரும் கெட்ட குணங்கள் படைத்தவர்கள் அல்லவா…கைகேயியும் சூற்பனகையும் போராட்ட குணம் படைத்தவர்கள்.. தங்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வுடன் இருந்தவர்கள். அதை பயமின்றி சொன்னவர்கள்.. வெறும் கொலு பொம்மை போலின்றி அறிவுள்ளவர்களாகவும் இருதவர்கள் ,ராஜ்ய தந்திரங்கள் ,யுத்த முறைகள் பயின்றவர்கள். அதனால் அவர்கள் கெட்ட குணங்களை படைத்தவர்களாக சித்தரிக்கப்பட்டு விட்டார்கள்.

ராமன் யுத்த முறைக்கு எதிராக ஒளிந்திருந்து அம்பெய்தினாலும் அவனுக்கு வாத்மீகி கொடுத்த பட்டங்கள் நேர்மையானவன், கடவுளின் அவதாரம் என்றெல்லாம் தானே .நீங்கள் சொன்னது போலவே இதிகாசங்கள் வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்டதாக இருந்தால் ,அச்சம் கொள்கிறேன் எத்தனை நூற்றாண்டுகளாக பெண்களை அடிமைப்படுத்த மட்டுமே ஆண்களால் கற்பனையும் இலக்கணங்களும் அலங்கார சாஸ்திரங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை எண்ணி பார்க்கும் போது.. சீதையை நல்லவளாக சித்தரித்திருந்தார் வாத்மீகி . ஒன்றும் தெரியாத ஒரு ஐயோ பாவம் பெண். யாருக்காக இந்த பாவம் ஆட்டின் குட்டி . ..

இன்றும் ஒரு சராசரி இந்திய ஆண் ,அவன் படித்தவனோ பாமரனோ ,எப்படியெல்லாம் ஒரு பெண் இருக்கவேண்டும் என்று நினைக்கிறானோ கற்பனை செய்கிறானோ அதை நூற்றாண்டுகளுக்கும் முன்பே வாத்மீகி பதிவு செய்திருக்கிறார். இன்றும் அந்த கற்பனையை சுமந்து வரும் ஆண்களின் மன சுமையை புரிந்துக்கொள்ள முடிகிறது .சுதந்திரமற்ற ஒரு வாழ்க்கையை பெண்களுக்கு ஏற்படுத்தி அதை இவ்வளவு காலவும் கண்ணின் மணியை போல காப்பாற்றி, செயல்படுத்தி வருவது கடினம் தான். பிறவியின் ,,வாழ்க்கையின் எளிமையை அழகை உணர சுதந்திரமான மனம் வேண்டும்.

ஆண்களின் மனமும் குணமும் பெண்களின் ஒரு சில சிறு அசைவுகளாலேயே மாறி விடுகிறது என்று பார்க்கும்பொழுது ஒன்று சரியாக புரிந்துவிட்டது. அவர்களின் மனது வாத்மீகி காலகட்டத்திலிருந்தே அவர்களிடம் இல்லை என்றும் பிறரின் செயலில் வார்த்தையில் கட்டுண்டு கிடக்கிறது என்றும் . இதை காலாக்காலங்களாக நிரூபித்து விடுகிறார்கள் . இதை தவிர என்ன சொல்வது.

சீதை சூர்பனகையை பார்த்தபோது சீதைக்கு வாத்மீகி வடித்த மனோ நிலைதான் சரி என்று சொல்வது அவரின் கற்பனை கதை என்று பார்க்கப்படும்போது மட்டுமே.. ஆனால் அந்த கதையின் மீது உருவாக்கி வைத்திருக்கும் கலாசாரம், நம்பிக்கை இவை அனைத்தும் சமூகத்தின் பாதிவரும் பெண்களுக்கான சட்டங்கள் என்று மாறிய போது கொஞ்சம் யோசிக்கும் பெண்களும் உருவானார்கள். (இதை போன்று உருவான கிரேக்கு கதைகளை இன்றைய தலைமுறையினர் கதைகளாக மட்டுமே பார்க்கிறார்கள். ) அப்படி சிந்திப்பவர்களில் ஒருவர் தான் புவனேஸ்வரி . பாட்டியின் கதைகளுக்கு ஒரு அரசியல் பின்பலத்தை அளித்து அவரெழுதிய கதைகள் நிச்சயமாக வாசிக்கப்பட வேண்டியவை .புவனாவின் கதைகளை நீங்கள் வாசிப்புக்கு எடுக்க வேண்டும் . யோசிக்க முயற்சிக்கும் பெண்கள் கேள்விகள் கேட்கட்டும். பதில்கள் அவர்களுக்கு நன்றாக தெரிவதினால் தான் கேள்விகள் உருவாகியது. கொஞ்சம் கூட மாற்று யோசனையை ஏற்று கொள்ள முடியாதவர்கள் பதிலற்றவர்களாக அதனாலேயே கேள்வியற்றவர்களாக இறுக்கமான குறுகிய மனநிலையில் இருக்க வேண்டியது தான். இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக கொஞ்சம் கூட மாறாமல் கடைபிடிக்கும் மனநிலை ,சுமைகள், நம்பிக்கைகள், உணர்ச்சிகள்….நீங்கள் அப்படியே அந்த விதையை சுமந்து வாழுங்கள்.. ஆனால் பெண்களும் அதை சுமக்க வேண்டும் என்று அடம் பிடிக்க வேண்டாம் . யோசிக்கும் பெண்கள் மட்டுமே விழிப்புணர்வுடனான சமூகத்தின் ஆதாரங்கள்

அய்யா புதிய மாதவி மகள் என்றால் நானும் உங்களுக்கு அப்படியே

அன்புடன்
சமீரா நீம்

Series Navigation

சமீரா நீம்

சமீரா நீம்