திருவிழாவுக்குப் போன ஒரு கதை

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

சாரங்கா தயாநந்தன்


தெய்வத் திருமுருகன் கோவிலில்

திருவிழாவாம் தம்பர் சொல்ல

உய்யும் வழியந்த வேலவனைப்

பார்ப்பது தான் போஎன்று

செய்யும் வேலைகளைச் சீர்திருத்தும்

என்பாட்டன் சொன்ன தனால்

கையில் கிடந்த வேலையெலாம்

கைவிட்டுப் புறப்பட்டேன் போவதற்கு.

இச்சைதீர இருபத்து நிமிடத்தில்

குளித்து முடித்துப் பின்

பச்சைக் கரையிட்ட வேட்டியினை

சுற்றி திருப்பிச் சுற்றி

எச்சமயத்திலும் பூசும்

இனியமணத் தைலம் இட்டு

உச்சமாய் அருள்வேண்ட இருசில்

உருளியதை உருட்டிக் கொண்டேன்.

சென்றவன் போன வேளை

செவ்வேள் தேரதன் மேலே

கொன்றைப் பூ மஞ்சள் தன்னில்

குமரன் ஒளிர்ந் திருந்தான்.

என்றைக்கும் கண்மறவா இனிய

இக்காட்சி தன்னில்

நன்றாக மூழ்கிப் போனேன்

நான் கண்ணை மூடிக் கொண்டேன்

மூடிய கண்ணின் உள்ளே

முழுமதிக் கந்தன் மட்டும்

பாடிய மனதின் உள்ளே

பண்ணிறை தேவாரங்கள்

கூடிய எண்ணம் எல்லாம்

குமரனில் மட்டும் மட்டும்

தேடிடும் வேலை தருவாய்

நேர்த்திகள் செய்வேன் என்றேன்

அஞ்சுதல் அகற்றும் அழகுக்

கந்தனை அகத்தில் கொண்ட

நெஞ்சிலே எழுந்த எண்ணம்

நிச்சயம் அருளே செய்வான்

வஞ்சமில் இறையை வாழ்த்தி

விழிகளைத் திறந்தேன் அங்கே

பஞ்சாபி போட்ட அழகுப்

பதுமையைக் கண்டேன் நானும்.

இத்தரை மீதில் இதுபோல்

எழிலினைக் கண்டதில்லை.

தத்தையில் வைத்த கண்ணைத்

திருப்பிட வழியும் இல்லை

பத்தரை மாற்றுத் தங்கம்

பசும்பொன்னில் செய்த மேனி

வித்தக வேல் எதற்கு ?

வனிதையின் காலே போதும்

பிறைநுதல் அழகில் சிக்கி

புருவத்தின் எழில்பருகி

இறையவன் படைப்பை வியந்து

இருவிழி தன்னில் நானும்

உறைந்தொரு கணத்தின் பின்னே

ஒரு சிறுதிலகம் கண்டேன்

நிறைமஞ்சள் கழுத்தின் மீது

நெளிந்ததோர் மாலை கண்டேன்

சித்திர விழியாள் கண்ணும்

சிலகணம் என்னில் படர

நித்திய இன்பம் கண்டேன்

நிலையாக நிமிர்ந்து நின்று

பத்திர மாகச் சின்ன

சிரிப்பினைச் சிந்திக் கொண்டு

அத்திசை நோக்கிப் போனேன்

அரிவையோ முகம் சினந்தாள்.

மெல்லி யலாள் மனதில்

முன்னரே காதல் உண்டோ ?

சில்மிஷ வேலை எல்லாம்

சின்னவள் வெறுப்பாள் தானோ ?

பல்லெல்லாம் போன பின்னும்

பார்க்கவே தூண்டும் விழிக்

கல்லாலே எறிந்து விட்டாய்

கருணைசெய் தேவி என்றேன்

மனதினுள் பல கதைத்தேன்

மறுகினேன் மீண்டும் பார்த்தேன்

கனதிகள் யாவும் தீர

கண்டேன் அக்காட்சி தன்னை

சனம் நிறை கூட்டம் தன்னில்

சற்றுமே மறைந்து கொண்டு

விநயமாய் சிரித்தாள் கன்னி

விரிந்தது எந்தன் உள்ளம்

எண்ணங்கள் பின்னப் பின்ன

ஏங்கினேன் ஓர்சொல் கூற

திண்ணமாய்ச் சொல்லிக் கொண்டேன்

திருவே நீ எந்தன் வாழ்வு.

கண்களால் கலந்து கொண்டோம்.

காதல்தான் மலர்ந்து கொள்ள

விண்ணிலே பறந்தாற் போல

விளைந்ததே உணர்வுக் கோலம்

தேர்ச்சில்லு உருளத் தொடங்கும்

திசையிலே நானும் சென்றேன்

கோர்த்த சொல் சொல்லவேண்டி

கோதையாள் அருகில் சென்றேன்

ர்த்தமே ளங்கள் முழங்க

அரோகரா கோஷம் மேவ

வேர்த்தவென் உள்ளம் முழுதும்

வேலில்லை வனிதை மட்டும்

சுற்றிய உலா முடிய

சுந்தரிக்குக் கிட்ட வந்தேன்

பற்றிய சை சேர

பத்துக்கிலோ வழிந்து கொண்டு

முற்றிய அன்பு சொல்லி

முடிவினைக் கேட்க நின்றேன்

சொற்களை விரித்தேன் நானும்

பெண்ணவள் திரும்பிப் பார்த்தாள்

எங்கைநீர் இருக்கிறனீர்

என்னபேர் உமக்கு என்றேன்

நங்கையும் தான் சிவந்தாள்

நானும் தான் நாணிப் போனேன்

தங்கையின் வயது எனினும்

திருமண உறவு என்றால்

மங்கையிடம் முதல் கதைக்க

மனமொரு மாதிரித் தானே

செவ்விதழ் மலர்ந்து ஏதோ

சொல்லவே விழைந்தாள் பூவை

‘இவ்வெழில் எனக்கே ஆனால்

இனியென்ன வேணும் ‘ என்றே

சவ்வுபோல் நீளும் சிந்தை

சடுதியாய் அடக்கிக் கொண்டேன்

அவ்வேளை ஆங்கோர் பையன்

அருகிலே வந்து நின்றான்

அம்மா நான் அப்பாவோடை

ஐஸ்கிறீம் வாங்கப் போறன்

சும்மா நிண்டால் வரட்டாம்

சொல்லியே ஓடிப் போனான்.

அம்மாடி ஏங்கிப் போனேன்

அரைக் கண்கள் செருகிப் போக

வம்புஏன் என்று சொல்லி

வருமக்கட் திரளுள் மறைந்தேன்

இறப்பொடு பிறப்பும் எழுதும்

கடவுளே! கார்த்திகேயா!

மறக்கவே முடியாப் பாடம்

தந்தாய்நீ தணிகை வேலா!

கறந்திடும் பால்போல் தூய

மனதொடு வாழ்வேன் இனிமேல்

சிறந்ததோர் வேலை தருவாய்

செவ்வேளே போற்றி! போற்றி!

—-

nanthasaranga@gmail.com

Series Navigation

சாரங்கா தயாநந்தன்

சாரங்கா தயாநந்தன்