தேவதைகளின் சொந்தக் குழந்தை — விமர்சன கூட்டம்(பன்முக விமர்சனங்கள்)

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

அசன் மைதீன்


அண்மையில் நாகர்கோவிலில் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் சார்பாக எச்.முஜீப் ரஹ்மானின் ‘தேவதைகளின் சொந்தக் குழந்தை ‘ என்ற சிறுகதைத் தொகுப்பு பற்றிய விமர்சன கூட்டம் நடைப்பெற்றது.விமர்சன கூட்டத்தில் சி.சொக்கலிங்கம்,அசன் மைதீன்,நட.சிவகுமார்,விஜயகுமார்,யூசுப்,கலைவாணன்,ஹெச்,ஜி.ரசூல்,சிவராமன் உள்ளிட்ட பலர் விமர்சனங்களையும்,விவாதங்களையும் முன்வைத்தனர்,

சி.சொக்கலிங்கம்

மாநிலச்செயலாளர்

“தமிழ்ச்சுழலில் பின்நவீனத்துவம் சார்ந்த படைப்பிலக்கிய முயற்சிகள் பரவலாக கவனத்தைப்பெற்று வரும் சூழலில் இக்கதைத்தொகுப்பு புதிய பரிணாமங்களை வழங்கியுள்ளது.நாம் மேஜிகல் ரியலிசம் பற்றி அதிகம் விவாதித்துக்கொண்டிருக்கிறோம்,மேஜிகல் ரியலிசம் உலக வரைபடத்தில் நிகழ காரணமான விஷங்கள் என்ன என்று பார்க்க வேண்டியிருக்கிறது.எதார்த்தவாத கலையிலக்கிய மரபு பெரும்செல்வாக்கை செலுத்திய போதும் அதன் ஒற்றை அர்த்த நிலைபாடும் பன்முக எதார்த்தங்களை சுட்டிக்காட்டாத விதமும் நவீனத்துவத்தின் தாக்கம் உளவியல் எதார்த்தமாக சர்ரியலிசமாக,இருத்தலியல் வாதமாக ஒலித்த போது முன்வைக்கப்பட்டது.நவீனத்துவம் ஒருகாலச்சூழலாக உருவாகிய போது ரஷ்யாவில் சோசலிச எதார்த்தவாதம் தலைதூக்கியது.அப்போது பிரான்ஸ் ராஹ் என்பவர் 1920களில்

போஸ்ட் எக்ஸ்பிரசனிச ஓவியங்களாக மேஜிகல் ரியலிசம் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்.இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக மேஜிகல் ரியலிசம் புழக்கத்துக்கு வந்தது.லத்தீன் அமெரிக்கச் சூழலில் அமெரிக்க எகாதிபத்தியத்துக்கு எதிராக அது பயன்படுத்தப்பட்டது.இன்று உலகமுழுவதும் பின்நவீன கலையுத்தியாக திகழ்ந்து கொண்டிருக்கும் மேஜிகல் ரியலிசம் தமிழில் தொண்ணூறுகளில் வந்தது.மேஜிகல் ரியலிசத்துக்கும் பாண்டசிக்கும் இடையே பாரதூரமான உறவே காணக்கிடக்கிறது.

இந்தியசூழலில் ஜாதியகட்டுமானம் கொண்ட சமூகத்தில் விக்கிரமாதித்தியன் கதைகள் போன்று நிறைய காணக்கிடக்கிறது.மேலும் வாய்மொழி கதைமரபுகளும் நிறைய இருக்கிறது.இன்று பின்காலனித்துவம் பேசும் சூழலில் மூன்றாம் உலக நாடுகளின் மரபுகள் பேணபடவேண்டும் என்ற குரல் ஒலிக்கையில் மரபுகள் எனும் சொல்லாடலின் உள்கட்டுமானங்களையும் நாம் கணக்கிலெடுக்கவேண்டும்.நமக்கான மரபுகள் எது,தொன்மங்கள் எது,நம்பிக்கைகள் பழக்க வழக்கங்கள் போன்றவற்றின் மீது சரியான அணுகு முறையுடன் பார்க்காவிடில் ஜாதியமரபுகளை நாம் ஏற்றுக்கொண்டதாக மாறிவிடக்கூடும்.நமது சூழலில் நவீனத்துவம் கூட மதநீக்கம் செய்யப்படாமல் மதத்தோடு தான் பயணித்தது.இந்த தொகுப்பை பொறுத்தவரையில் தமிழில் முக்கியமானதாகவே படுகிறது.பின் நவீனத்துவம் படைப்புரீதியாக சரியாக உருவாகியுள்ளதா என்பதை பார்க்கும் போது இந்த கதைகள் மிகவலுவாக இருக்கிறது.பழையன புகுதலும் புதியன கழிதலும் என்பதில் என்க்கு உடன்பாடில்லை.ஆனால் கதைகளில் சொல்லபடும் மேஜிகல் ரியலிசத்தை நான் பழையதாக பார்க்கவில்லை.இது முற்றிலுமாக புதியது.கதைகளைப் பொறுத்தவரையில் உப்பாவைச் சொல்லும் கலை மரபான கதைகளுக்கு எதிரான தளத்தில் இயங்குகிறது.இந்த கதையில் சொல்லப்படும் உப்பா யார் என்ற விவாதமே கடைசியில் வாசகனிடம் உருவாகிறது.பன்முக வாசிப்பில் மாத்திரமே இந்த கதையை புரிந்து கொள்ள இயலும்.மிகவும் வித்தியாசமான இந்த கதையில் கடைசிவரை உப்பாவை சொல்லவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.அதைத்தொடர்ந்து கனவை வரைந்து பார்க்கும் கனவியல்வாதி மேஜிகல் ரியலிச வகைப்பட்டதாகும்.இக்கதைகளில் நிலதோற்றங்களும்,நம்பகதன்மையும் இல்லாமல் சித்தரிப்புகளின் வாயிலாக ஒரு உலகை பார்ப்பதுபோல இருக்கிறது.புனைவு தர்க்கங்கள் மீறப்பட்டுள்ளன என்று சொல்லமுடியும்.இக்கதைகளின் தன்மைகள் பொதுவாக அறிவாதார மூலங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனமாக இருக்கிறது.”

முக்கிய குவிமையங்கள்:

ஃ மேஜிகல் ரியலிசத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

ஃ இந்தியகதைமரபுகளின் அரசியல்

ஃ இந்திய நவீனத்துவத்தின் செயல்பாடுகள்

ஃ தமிழில் பின்நவீனத்துவம்

ஃ கதைகள் பற்றிய விரிவான பார்வை

விவாதமையங்கள்:

ஃ மேஜிகல் ரியலிசத்துக்கும் பாண்டசிகுமான வேறுபாடுகள்

ஃ மெட்டாபிக்சனுக்கும் ஸ்பெகுலெட்டிவ் பிக்சனுக்குமான வேறுபாடுகள்

ஃ போர்ஹே,இடலோ கால்வினோ படைப்புகளின் குணங்கள்

பதிவுகள்:

10 கதைகள் பற்றிய மரபான விமர்சனமுறையிலிருந்து சற்று மாறுபட்டிருந்தபோதும் விமர்சன பார்வை மரபான அணுகுமுறையிலேயே அமைந்திருந்தது.

20 தகவல்கள் பிரயோஜனமாக இருந்தது.இன்னும் அதிகமாக கதைகள் பற்றி விவாதிக்கவில்லையோ என்று தோன்றுகிறது.

கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்

படைப்பிலக்கியம் மற்றும் இஸ்லாமிய ஆய்வாளர்.

தமிழ் சூழலில் ஊடிழைப்பிரதி,பிரதியின் இன்பம்,வாசக தனம் வேறுபாடான கண்ணோட்டத்துடன் தொழிற்ப்பட்டிருக்கிறது.அது போல பழமையின் பூரிப்பு என்பதும் சரியாக உருவாகவில்லை.பின்நவீனத்துவம் சார்ந்த உரையாடல்களில் நாம் தொடர்ந்து இவைப் பற்றி விதாதித்த போதும் படைப்புகளில் சரிவர உருவாகவில்லை.அதி எதார்த்தம் கூட பேசுகிறோம்.பயனீட்டு மதிப்பையும்,பரிவர்த்தனை மதிப்பையும் தாண்டி குறியீட்டு மதிப்பு எப்போது உருவானதோ அதுவே அதி எதார்த்தம் எனப்படும்.மீபிரதி படைப்புகள் வாசக ஊடாட்டத்துடன் புதிய தளத்தில் உருவாகியுள்ளது.வாசகனை இன்னொரு உலகுக்கு கொண்டு செல்லும் மாஜிகலும்,பாண்டசியும் கூட மரபான இலக்கிய வடிவங்களிலிருந்து புதுவகை இலக்கிய படைப்புக்குள் சென்று கொண்டிருக்கிறோம் என்பவைகளுக்கு அத்தாட்சியாக இருக்கிறது.நவீனத்துவம் தமிழில் உருவ ரீதியாகவும் உள்ளடக்க ரீதியாகவும் தனிமனிதனுக்கு முக்கியத்துவத்தை அளித்தது.ஆனால் பின்நவீனத்துவமும் சரி பின்காலனியமும் சரி விளிம்புகளை கவனத்தில் கொள்கிறது.அப்போது படைப்பின் குணங்களும் மாறத்தொடங்கியது.முஜீப்பின் இத்தொகுப்பை பார்கிற போது மரண ஓலங்கள்,அழுகைகள்,கொடூரங்கள்,வன்முறைகள்,கதறல்கள் ஆகியவை திருப்பி திருப்பி எதிரொலிக்கிறது.சாதாரணமாக மாஜிகலிலும்,பாண்டசியிலும் சொல்லப்பட்டிருந்தாலும் மனித உணர்வுகளை கசக்கி பிளியும் கதைகளே நிறைய இருக்கிறது.அதீததமான புனைவை நாம் மனிதவாழ்க்கையின் பல்வேறு நெருக்கடிகளை இன்னொரு புனைவின் மூலம் போர்த்தும் போது ஜீவமரண போராட்டங்களே இதன் குணமாக மாறும் புனைவின் வினோத குணம் மொழியின் தன்மை வாசகனை மெல்ல மெல்ல எதர்த்தத்தை புரிந்து கொள்ள வழிவகை செய்கிறது.நமது தொன்மங்களாகட்டும்,பழங்கதைகள் ஆகட்டும்.தேவதை கதையாகட்டும் எல்லாமே வலுவான எதார்த்தச் சூழலைக் கொண்டிருக்கிறது.இஸ்லாமிய மரபுகள் சார்ந்த ஆயிரத்தொரு அராபிய இரவுகளும்,சிந்து பாத் கதைகளு,அலிபாபா கதைகளும் மனித வாழ்வின் இருப்புக்கும்,மரணத்துக்குமான போராட்டமாக இருப்பதை காணலாம்.

இந்த கதை தொகுப்பில் சதுரங்க ஆட்டத்தில் அதிரும் மகோனதங்கள் என்ற கதை இருக்கிறது.சதுரங்க ஆட்டத்தில் தலைமூளையை பந்தயம் வைத்து விளையாடி,தோற்ற ஒருவன் மரணத்தினை ஒப்பு கொடுக்க வந்து கடைசியாக ஒருமுறை கூட விளையாடி தனது மரணத்தை ஒத்திப்போட்டுக்கொண்டே வந்து முடிவில் மரணத்தை ஜெயித்து விடுகிறான்.கதையுலகம் கற்பனையின் சாத்தியங்களை தீவிரமாக சொல்லி நிஜத்தை பாதுகாக்கிறது.மேலும்,தொகுப்பில் உப்பாவை சொல்லும் கலை என்பது பகடி செய்தலை முன்னிறுத்தி திராவிட அரசியலை அல்லது இஸ்லாமிய அரசியலை பேசுகிறது என்று சொல்லமுடியும்.இஸ்லாமிய கதைமரபுகள் இக்கதைகளில் ஊடிழைப்பிரதிகளாக மாறியிருக்கிறது என்பதை சொல்லமுடியும்.

முக்கிய குவிமையங்கள்:

ஃ பின்நவீன படைப்புச் சிக்கலகள்

ஃ அதி எதார்த்தம்,மீபிரதி படைப்புகள்

ஃ படைப்பின் குவிமையம் ஜீவ மரண போராட்டங்களே

ஃ இஸ்லாமிய கதை மரபுகள்

ஃ மரணத்தை ஒத்திபோடும் கதைகள்

விவாதமையங்கள்:

ஃ படைப்புக்கும் கோட்பாட்டுக்குமான சிக்கல்கள்

ஃ நவீன கதைக்கும் பின்நவீன கதைக்குமான வித்தியாசங்கள்

ஃ படைப்பில் மெட்டபர்,படிமம்,குறி,குறியீடு,குறிப்பான் செயல்படும் விதங்கள்

பதிவுகள்:

10 பன்முகத்தன்மை என்பதற்காக மரபு சார்ந்த ஆதிக்க வடிவங்களை பின்பற்றுவது கூட அராஜகமே

20 விமர்சன அராஜகம் மூலம் படைபினை சிதைத்தல் ஏற்புடையதன்று

சிவராமன்

தலித்திய சிந்தனையாளர்

நமது மரபுகளை ஏற்று கதைச்சொல்லும் போது ஆதிக்க கருத்தியலுக்கு மாறான மரபுகளை சொல்லுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.அதேசமயம் மாஜிகல் ரியலிசம் நமது மரபில் ஆதிக்க கருத்தியலுக்காக பயன்பட்டிருந்தது.பின் நவீனத்துவமும் தலித்தியமும் ஒரே காலத்தில் பயணித்தன என்றாலும் இரண்டுமே வெவ்வேறானவை.படைப்பு வேறு படைப்பாளி வேறு என்று பின்நவீனத்துவம் சொல்லுகிறது,ஆனால் தலித் படைப்பை தலித் தான் படைக்கமுடியுமென்றும் தலித் படைப்பாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது தலித்தியம்.இந்த சூழலில் பின்நவீனத்துவமும்,தலித்தியமும் இதுவரை உருவாக்கி வைத்திருந்த அத்தனை மதிப்பீடுகளையும் உடைத்தெறிந்தது,பின்நவீனத்துக்கும் வாழ்க்கையனுபவத்துக்கும் உள்ள வேறுபாடை தலித்தியம் ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனால் வாழ்க்கையனுபம் இல்லாமல் படைப்பு நிகழமுடியாது.முஜீப்பினுடைய இந்த தொகுப்பை பார்கிற போது இரண்டுவிதமான கருத்துக்கள் உள்ளன.முதலாவதாக இஸ்லாமிய மரபுகள் சார்ந்த கதைகள் தமிழ்சூழலில் புதுவகை அர்த்தங்களை உருவாக்கவல்லது.இரண்டாவது மற்ற பொதுவான கதைகள் பின்நவீனத்துவ கோட்பாடுக்கு வலுசெய்யும் விதமாக உருவாக்கப்பட்டவை.எனவே இவை விமர்சன பூர்வமாக தான பரிசீலிக்க இயலும்.உண்மைக்கும் கற்பனைக்குமான வித்தியாசங்களை நாம் அவ்வகையில் தான் பார்க்கவேண்டியிருக்கிறது.சிறுவர்கள் படிக்கும் அம்புலிமாமா கதைகளில் வாழ்க்கையனுபவம் இல்லை.அதே போல உருவாகியிருக்கும் பல கதைகளில் எனக்கு உடன்பாடே இல்லை.

தமிழ்ச்சூழலில் பின்நவீனத்துவ படைப்புகள் பரபரப்பாக பேசப்பட்டாலும் அவற்றில் எதார்த்தத்தை மறுதலிக்கும் போக்கே பிதானமாக இருக்கிறது.எதார்த்தத்தை மறுதலித்துக்கொண்டு நாம் சாதிக்க போவது என்ன ? நமது ஜாதிய முரண்பாடுகளில் இருக்கும் சமூகத்தை மாற்றியமைக்க இவ்வகை கதைகள் என்ன பங்கு வகிக்கிறது ?

என்ற கேட்விகளை விவாதத்துக்காக வைக்கிறேன்.

விவாதம் ஒன்று:

அசன்:- சிவராமனின் கருத்துக்கள் இக்கால சூழலில் ஏற்புடையதன்று.காரணம் படைப்பனுபமும் சரி படைப்பாளியும் சரி போராட்ட குணம் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்வது வறட்டு சோசலிச எதார்த்த வாதமாகும்.

விவாதம் இரண்டு:

யூசுப்:- பின் நவீனத்துவமும் சரி பின் நவீன படைப்புகளுக் சரி வாசகர்கள் மீது சொல்லப்படாத அதிகாரத்தைத் திணிக்கிறது.எதார்த்தம் தவறுதல் என்பது மனநிலை பிறழ்வேயாகும்

விவாதம் மூன்று:

சி.சொக்கலிங்கம்:-எதார்த்தம் என்பது ஒன்றல்ல.பல இருக்கிறது.இந்த படைப்புகளில் எதார்தம் இல்லை என்று சொல்லமுடியாது.ஆனால் எதார்த்தம் சொல்லப்பட்ட முறைதான் மாறியிருக்கிறது.

விவாதம் நான்கு:

ஹெச்.ஜி.ரசூல்:- சிவராமனது கருத்து சிவரானது கருத்தேயன்றி தலித்திய கருத்து அல்ல.அர்ஜின் டாங்கிளே,சித்தலிங்கையா போன்ற அறிஞர்கள் பின் நவீனத்துவத்துக்கும் தலித்தியத்திற்குமான உரையாடல்களை திறந்தமனதோடு விரும்புகிறார்கள்.தமிழில் அவ்வாறு இருக்க வில்லை.எதார்த்தம் என்பதன் அளவுகோல் என்ன ? என்பதை நாம் விவாதிக்க வேண்டும்.

விவாதம் ஜந்து:

விஜயகுமார்:- குழந்தைகள் பார்கிற படிக்கிற விஷங்கள் யாவும் பெரியவராலும் விரும்பபடுகிறது.குழந்தைகள் கதைகளை கதைகளாக தான் பார்கிறது.அது போல பெரியவர்கள் இருந்து விட முடியுமா ?

சிவராமனது பதில்:

நமது கதைச்சொல்லும் மரபு வெறுமனே மனமகிழ்சிக்குதான் என்றிருக்கிறது.ஆனால் கதைகள் அவற்றை தாண்டி சமூகத்தை காட்டுவதாக எதார்த்தத்தை காட்டுவதாக இருக்கிறது.எதார்த்தம் எனும் போது பிரதிபலித்தலை அல்ல குறைந்த பட்சம் வாழ்வோடு சம்பந்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே எனது அளவுகோலாக இருக்கிறது.கலை கலைக்காக தான் என்பது ஆதிக்க வாதிகளின் குரலேயன்றி வேறல்ல.

பதிவுகள்:

10 சிறுகதைகள் பற்றி விமர்சிக்காமல் வேறேதல்லாமோ விவாதிக்கப்பட்டிருக்கிறது.விவாதங்களும் அவரவர் கருத்தை நியாயப்படுத்தும் விதமாக இருந்தது.

20 மீண்டும் மீண்டும் நாம் இலக்கிய உலகில் சர்ச்சை செய்யும் விஷயங்களாக இருக்கிறதே அன்றி புதுமையாக ஒன்றுமில்லை.

கவிஞர் நட.சிவகுமார்.

தலித்திய எழுத்தாளர்

முஜீப் ரஹ்மானின் சிறுகதை தொகுப்பை வாசிக்கிற போது கிடைத்த அனுபவம் எச்பிஓ சானலை பார்பதற்க்கு ஒப்பானது.சிறந்த கதைகள் என்பவை பொதுவாக படைப்பனுபவத்தை வாசக அனுபவமாக மாற்ற வேண்டும்.அந்த விததில் இக்கதைகள் வெற்றிப்பெற்றுள்ளது.உதாரணமாக நான் ஒரு பறவை மனிதன் கதையானது இஸ்லாமிய நம்பிக்கைகளையும்,அனுபவங்களையும் கொண்டிருக்கிறது.இஸ்லாம் சார்ந்த விஷயங்கள் எதார்த்தமானவை தானே.கதையில் கதைச்சொல்லி பறவையாக உருமாறும் போது எதார்த்தமும் உருமாறி விடுகிறது.காப்காவின் கதாநாயகன் உருமாறுவானே அது போல.இந்த கதை காலங்களை குலைத்து போடுவதினூடாக கதையை நகர்த்திக்கொண்டே இருக்கிறது.கதையில் வருகிற சூபியும்,வினோத நூலும் இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த உரையாடல்களை சொல்லுவதாக அமைகிறது.முஜீப்பினுடைய கதைகளுக்கு வலுவான தளம் இருக்கிறது.புனைவுகள்,தத்துவம்,கோட்பாடுகள்,மரபுகள்,வரலாறுகள்,விமர்சன நோக்குகள் போன்ற பல்வேறு பிண்ணனிகளே இப்படி எழுதப்பட்டிருக்கிறது.தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய மாந்திரீக எதார்த்த கதைகளில் முஜீபின் கதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.இக்கதைகளை எழுதுவதற்க்கு பின்னாலுள்ள முயற்சிகளை நாம் பார்க்கும் போது மட்டுமே இதன் பலம் புரியகூடும்.பின்நவீனத்துவம் சார்ந்து எழுதுகிற மேலைநாட்டு கதைகளில் போர்ஹே,கால்வினோ போன்றோர்களின் தாக்கத்தை நாம் இப்படைப்புகளில் காண முடியும்.

உப்பாவைச் சொல்லும் கலை காலச்சுவடில் முதன் முதலாக பிரசுரம் ஆன போது தமிழ்ச்சுழலில் கடந்த பத்துவருடங்களில் வந்த சிறந்த கதைகளில் ஒன்றாக விமர்சிக்கப்பட்டது.அந்த கதையிலிருந்து ஒவ்வொருகதையும் அதனதன் தனித்துவத்துடன் இருப்பதை நாம் காணமுடியும்.சூரியன் உதிக்கும் திசை மேற்கு கதை வந்த போது தமிழில் மிகச்சிறந்த கதையாசிரியர்களில் ஒருவராக மாறியிருப்பதை பலரும் சொன்னதை கேட்டிருக்கிறேன்.இந்த புகழுக்கு காரணமான உழைப்பை நாம் கண்டும் காணாமலும் விடமுடியாது.அதுபோல சமூக பிரக்ஞையுள்ள கதைகளாக இவை இருப்பதை காணலாம்.பின்லேடன் விவகாரம்,தடாசட்டம்,பலியிடுதல் தடைச்சட்டம்,அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு,தலித்திய ஆதரவு,வரலாற்று எழுத்தின் அரசியல்,இஸ்லாமிய முரண்பாடுகள்,பாலின பேத எதிர்ப்பு போன்ற பல்வேறு விஷயங்களும் கதைகளாக மாறியிருக்கிறது. தமிழில் வெளிவந்துள்ள பின்நவீனசிறுகதைகளிலேயே சிறந்த கதைகளாக இவையிருக்கிறது என்று என்னால் சொல்லமுடியும்.

முக்கிய குவிமையங்கள்:

கதையனுபவம் வாசகஅனுபவமாக மாறவேண்டும்

இஸ்லாமிய வாழ்க்கை என்பதும் எதார்த்தமே

கதைக்கான பின்னணியும்,உழைப்பையும் கவனபடுத்தவேண்டும்

சமகால சமூக பிரக்ஞைமிக்க கதைகள்

விவாதமையங்கள்:

படைப்பனுபவம் வாழ்க்கையனுபமா இல்லையா

சமூக பிரக்ஞை முக்கியமா அல்லது காலத்தை கடந்த கேள்விகள் முக்கியமா

படைப்பில் கோட்பாட்டின் தாக்கம் முக்கியமானதாக இருக்காதா

பதிவுகள்:

10 கதைகளை விமர்சன பூர்வமாக அணுகாத குறை இருக்கிறது.

20 விமர்சன அளவீடுகள்,மதிப்பீடுகள் படைப்பளியை முக்கியத்துவ படுத்துவது இன்றைய காலத்துக்கு பொருத்தமானதல்ல.படைப்பு வெற்றியடைந்துள்ளதா இல்லையா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.

குளச்சல் மு.யூசுப்

மொழிபெயர்ப்பாளர்

முஜீப் ரஹ்மானின் கதைகளும் சரி,பின்நவீனத்துவமும் சரி மொழிவிளையாட்டை பிராதான

படுத்துகிறது.இலக்கியம் ஒருபோதும் மொழிவிளையாட்டாக மாற சாத்தியமே இல்லை.பின் நவீனத்துவம்,மேஜிகல் ரியலிசம் போன்ற கருத்துக்கள் ஏகாதிபத்திய சிந்தனைகளாகும்.இதன் மூலம் மற்றவர்களின் இருப்பை குலைத்துவிடலாம் என்று எண்ணுகிறது.இந்த வாதத்துக்கு வலுசேர்க்கும் விதமாக எழுதப்பட்ட கதைகள் ஆபத்து நிரம்பியவை என்று மட்டுமே சொல்லமுடியும்.

விஜயகுமார்

விமர்சகர்

ஒரு கதையை வாசிக்கும் போது ஏதாவது வகையில் மனதுக்குள் ஒரு நெருடல் தோன்றுமேயானால் அந்த கதை நல்ல கதைதான்.முஜீப் ரஹ்மானின் கதை மொழி இலகுவாக தான் இருக்கிறது.ஆனால் சரியாக எதை சொல்ல வருகிறார் என்ற குழப்பமே ஒவ்வொருதடவையும் வருகிறது.இதைச் சொல்லுகிறாரோ அல்லது அதை சொல்லுகிறாரா என்ற அனுமானத்தை வைத்து கொண்டு சொல்லுவது சரியான முறையாகாது.

கலைவாணன்

எழுத்தாளர்

முஜீப் ரஹ்மானின் மொழி இடுகுறி தன்மை வாய்ந்தது.எதை சொன்னால் நன்றாக இருக்கும் என்ற தேர்வு அவரிடம் வலுவாக உள்ளது.அவரது மொழியும்,புனைவும் திறந்த தன்மைகொண்டதினால் முற்றான முடிவாக இதைத்தான் சொல்ல வருகிறார் என்று சொல்ல முடியவில்லை.மற்றபடி கதைகள் வாசிப்பதற்க்கு நல்ல அனுபவமாக இருக்கிறது.

அசன் மைதீன்

எழுத்தாளர்

இங்கே முன்வைக்க பட்ட விமர்சனங்கள் யாவும் அர்த்தம் பற்றிய விஷயத்திலேயே அதிகம் கவனம் கொண்டது.ஆனால் ஒரு படைப்பில் விமர்சன தகுதியுடைய விஷயங்கள் நிறைய இருக்கிறது.இக்கதைகளைப்பொறுத்தவரையில் விளையாட்டு, வாய்ப்பு, விதிமீறல்,

காலியாகுதல்,மெளனம், process, performance, participation, deconstruction,

antithesis, absence, dispersal, text, intertext, rhetoric, syntagm, parataxis, metonymy, surface, combination, against interpretation, misreading,

signifier,scriptable, anti-narrative, petite histoire, idiolect, polymorphous போன்ற விஷங்களில் இருந்தே அவரது கதைகள் உருக்கொள்ளுகிறது.பின் நவீன கதைகள் என்று சொல்லிக்கொள்ள இக்கதைகளுக்கு அருகதை இருக்கிறது.

பொது நிகழ்வு:

ஒரு இலக்கிய கோட்பாடின் படி இலக்கியம் படைக்க இயலுமா என்று பொதுவான கேள்வி முன்வைக்கப்பட்டது.அதற்கு விளக்கமளித்த கவிஞர் ஹெச்.ஜி.ரசூல், கோட்பாட்டின் படி எந்த எழுத்தாளர்களும் எழுதுவதில்லை.ஆனால் கோட்பாடின்றி இதுவரை எந்த எழுத்தாளரும் இலக்கியம் படைத்ததில்லை.இலக்கியம் தன்னளவில் ஒரு இலக்கிய கோட்பாட்டை வெளிப்படுத்துகிறது.இவ்விலக்கியக் கோட்பாடு இலக்கியத்திலிருந்து தான் செயல்படுகிறது என்று சொன்ன நியால் லூசி என்ற மேற்கத்திய விமர்சகரின் வார்த்தைகள் முக்கியமானது என்று பதிலளித்தார்.அதை தொடர்ந்து புரியாமல் எழுதுவது தான் இலக்கியமா என்ற கேள்வி எழுப்பபட்டது.அதற்கு பதிலளித்த ஆய்வாளர் சி.சொக்கலிங்கம் ஒரு இலக்கிய படைப்பு என்பது ஒரு மனநிலை அந்த மனநிலையை வாசக அனுபவமாக மாற்றுவது தான் எழுத்தாளரின் வேலையாகும்.ஒரு கலையனுபவம் விசேஷ குணங்களை பெற்றிருக்கும் போது அதை உணர்ந்து கொள்ளும் பக்குவம் வாசகருக்கு இல்லாமல் போனால் புரியாமல் இருந்துவிடுகிறது.கடைசியில் இது பற்றி விளக்கமளிக்க வந்த கவிஞர் நட.சிவகுமார்,மாடர்ன் ஆர்ட் நம்மில் பலருக்கு புரிவதில்லை.இருந்தாலும் நாம் அதை ரசிக்கிறோம்.ரசிக்கின்ற போது நாம் ரசிப்பதற்க்கான காரணம் எது என்று யோசிக்கும் போது அது என்னவென்று புரிந்துவிடுகிறது.எனவே நல்ல ரசனையுடையவர்கள் எளிதில் புரிந்து கொள்கிறார்கள்.மற்றவர்கள் புரிகிறபோது ரசிக்கிறார்கள்.

தொகுப்பும் எழுத்தும்

அசன் மைதீன்

Series Navigation

அசன் மைதீன்

அசன் மைதீன்