சுமைகளின் பாரம் தாங்காமல்
மரக்கிளையில் அமர்ந்து
ஆகாசத்தின் எல்லைகளை
ஏக்கத்துடன் பார்க்கிறது
நேற்றுவரைப் பறந்து திரிந்த
அந்தப் பறவை.
காதல் முத்தங்களின்
கண்மூடிய தருணங்கள்
மீண்டும் மீண்டும்
பற்றி எரிய
கொஞ்சம் கொஞ்சமாய்
சிறகுகள் எரிவது தெரியாமல்
கழிந்துப்போனது
கண்ணாடிக்கூடுகளில்
அதன் காலம்
எப்போதும்
எல்லோருக்காகவும்
எதையும் சுமக்கவே
தயாராக இருப்பதால்
வரிசைவரிசையாக
காத்திருக்கும் நட்சத்திரங்களுக்காக
சூரியனை இழந்துப் போனது
பறவையின் ஆகாயம்.
“நட்சத்திரங்களும் சூரியந்தானாம்”
ஆறுதலாய் இருக்கிறது
இப்போதைக்கு
இந்த உண்மைமட்டும்தான்.
“பறக்கும் துணிவிருந்தால்
அத்தனை சூரியனும்
என் ஆகாசத்தில் வசப்படும்”
தனக்குத்தானே பேசிக்கொள்கிறது
எரிந்த சிறகுகளை
ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே
அந்தப் பறவை.
என்னை பெயர் சொல்லி அழைக்கும் போது ஓடோடி வருவேன். காற்றின் இழைகளினூடே ஊடுருவிப் பாய்ந்து என் சப்தம் எப்படி ரகசிய பயணம் செய்கிறது என்பதை கண்டுபிடிக்க இயலாமல் பல தடவை தவித்திருக்கிறேன். வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது அன்றொருநாள் என் தாயைப் பற்றி யோசித்தேன். ஞாபகங்களுக்கு உட்படாத அந்த சிறுவயதில் தாயின் மடியும் பயமானது. என் அலகுகளின் வழி குஞ்சுகளுக்கு பலநூறுதடவை இரையூட்டிய பாசத்தின் நிழல் விரிப்பும் திரும்பத் திரும்ப என்னை தொல்லைப்படுத்தின. என் இனத்தை விட்டொழிந்து ஏவல் அடிமையாய் தொழில் புரிகிற என்மீதே எனக்கு வெறுப்புப் படர்கிறது.
என் உடன் பிறவா சகோதரியின் மரணம் வெகுவாக என்னை பாதித்தது. மதிற்சுவரில், து காயப்போட்டிருக்கும் அசையில் மாமரக் கொப்பில், கிணற்று வலையில் எங்கெல்லாம் இளைப்பாற முடியுமோ அங்கெல்லாம் உட்கார்ந்து பழகியவள் மின்சாரக் கம்பியில் தெரியாமல் உட்காந்தபோது தான் அந்த சம்பவம் கழ்ந்தது. மரத்திருந்த அவளை எப்படி அடக்கம் செய்வது ஒன்றுமே புரியவில்லை. அந்தரத்தில் தொங்கிய அந்த உடலை தொட்டுத் தூக்கி குளிப்பாட்ட எத்தனித்தபோதுதான் நடைமுறைச் சிரமம் தெரிந்தது. காற்றில் குழியெடுத்து உடலை அடக்கச் சொன்னக் குரலைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். தனிமையின் பாரம் மேலொங்க தல்கீது சொல்லி சடங்குகளை நிறைவு செய்தேன். ஹஜ்ஜின் போது கட்டப்படும் இரு வெள்ளைத் துண்டுகளாலான இஹ்ராம் போல் மய்யித்தை குழுப்பாட்ட கபின் பொதிய மோதியார் யாருமில்லை.
அடர்ந்த வனாந்திரக்காடுகளில், அலைமோதும் கடற்புறாக்கள் மேகங்களை தொட்டுரச முயலும். மலைமுகடுகளின் அடிவாரத்தில் எங்கெங்கும் எனது அன்றாட தரிசனம். தனிமையும், கூட்டையும் சந்தோசமும் கலந்ததொரு வாழ்வுலகம் என்னில் மிச்சமிருந்தது. எக்காலத்தையும் உறவுகளையும் பூமியில் மட்டத்திற்கு மேலே முறைப்படுத்திக் கொண்டதால் எப்போதாவது தான் இந்த மண்ணோடு தொடர்பு ஏற்பட்டது.
என்னை நேசித்தவர்களுக்கு என்றுமே துரோகத்தை இழைத்ததில்லை. எங்கு பார்த்தாலும் இல்லை. பூமியில் ஆட்சி செய்பவர்கள் எல்லாம் கலீபாக்கள், மன்னர்கள் துளிக்குக் கூட பெண் யாருமில்லை. என் எஜமானனின் கட்டளையை மீறி, காத்திருப்பையும் தாண்டி தேடல் வேட்டை நிகழ்ந்தது. நட்சத்திர உலகினூடே பறந்துசென்று ஒரு அதிசயத்தை கண்டுபிடித்தேன். அதிகாரமும், ஆட்சியும், அரியணையும் கொண்டதொரு உலகம். என் பறத்தலில் ஸபாவிண்மீனில் பல்கீஸ் பெண்ணொருத்தி அரசியாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்ததை உலகின் செவிகளுக்கு அம்பலப்படுத்தினேன். அல்லாஹ்வின் தூதரென அறியப்பட்ட என் எஜமானன் சுலைமான நபி இதைக் கேட்டு அதிர்ச்சியுற்று மயங்கினார்.
எனது பாஷையை என் எஜமான் சுலைமான் நபி எப்படி கற்று வைத்திருந்தாரென சொல்லத்தெரியவில்லை. மிகுந்த பயபக்தி கொண்ட தொழுகை வணக்கங்களில் அன்றாடம் கவனம் செலுத்தும் அவர் என்னை ஒரு ஏவல் அடிமையாக ஊழியம் செய்யப் பணித்தார். பாலைவன மண்ல் பாதங்கள் பிணைந்து நடமாடும் காட்டின் சுவடுகளில் கால்கள் தளரும். நீண்ட தூர பயணங்களில் காலம் கரைந்துபோகும். தொழுகை நேரம் வந்ததும் உடலைத் தூய்மைப்படுத்த ஒளு செய்யத் தண்ணீர் தேடுவார். எனது வேலை என்பதே உயரே பறந்து கொண்டே மூச்சாலும் மனத்தாலும் வெட்டவெளி பூமிக்கடியில் நீரிருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவருக்குச் சொல்வதுதான். சுலைமான் நபி அந்த இடத்தை தனது கைகளால் தோண்டுவார். அப்போது அங்கு ஊற்றுத் தண்ணீர் குமிழியிடும். வறட்சியும், கோடையும், வெம்மையும் கக்கி எடுத்தாலும் இது மட்டும் நிகழும்.
என் இனத்திற்கென்று தனித்திருக்கும் இயல்புகளை எல்லாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு பெயர் சொல்லி, காரணம் சொல்லாமல் அழித்துப்போட்டனர். தெற்குத் திசைக்காற்றில் சிறகு அடித்து விரித்து கடந்து செல்வதும், பல நேரம் குமிழியிடும் காற்றைக் கிழித்து சிறகை அடிக்காமல் நீட்டி நீந்திச் செல்வதும் விதவிதமான வழக்கம்.
இருபுறமும் அசைந்து பறக்கும் உடம்பின் அசைவுகளைப் பார்த்து என் நிழல்கள் கூட அல்லாஹ்வை சிரம் பணிந்தும், துதி செய்தும் வாழ்கின்றன என ஒரு ஆலீம்பயான் சொல்லிக் கொண்டிருந்தார்.
புன்னைமரக்காடுகளின் பொந்தினுள் கண்களை உருட்டியவாறு காகங்களை அதன் குஞ்சுகளைத் தின்னும் கூகையாக உருவெடுத்தேன். ஒரு மனநோயாளியாகி விட்டதுபோல் குரூரமாக நரமாமிசம் உண்ணும் ஜீவனாக குழந்தைகளைச் சாப்பிட்டு பார்க்கும் தாயைப் போல. தோற்றமெடுத்ததற்கு உண்மையிலேயே வெட்கப்பட்டதுண்டு. சில நேரம் எனக்கு பகல் முழுவதும் கண் தெரியாது. மரக்கிளைகளில் கூட்டம் கூட்டமாய் தலைகீழாய் தொங்குவேன். இருளில் அரசாங்கத்தை கைப்பற்றிபோது கண்கள் எனக்கு கால்களாக மாறிப்போனது.
மரங்கொத்தி கொத்தி அலகுகள் சிதைந்தபோதும் வெவ்வேறு ரூபங்களில், நிறங்களில் என் இருப்பும், பறப்பும் தொடர்கிறது. ஒன்றல்ல நான் பலப்பலவாக உருமாறுகிறேன். நான் எப்போதா வந்து துளைக்கப்போகும் ஒரு துப்பாக்கிக் குண்டிற்காகவும் எனது உடல் படத்தட்டத்தோடு காத்துக்கிடக்கிறது.