காகிதங்கள் + கனவுகள் = மீரா

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

நெப்போலியன்


மீ.ராசேந்திரன் எனும் மீரா நம்மை விட்டுப் பிரிந்து இரண்டு வருடங்கள் (1-09-2002) ஓடிவிட்டன. ஆனால், மீரா என்ற பீனிக்ஸ் தமிழ் இருக்கும்வரை உயிர்த்தெழுதலுடன் இலக்கியவானில் சிறகசைத்துக் கொண்டுதான் இருக்கும். அர்ப்பணிப்பான வாழ்க்கையை இறுதிவரை இயக்கி முடிக்கும் இயல்புகொண்டோரை காலம் அவ்வளவு எளிதில் உதிர்த்து விடுவதில்லை மீரா என்ற இலக்கியவாதியை, பதிப்பகத்தானை, நேசமிகு மாமனிதனை தமிழ்

இலக்கியவரலாறு தன் கருப்பையின் கருவாய் சுமந்தபடியே இருக்கும். சிவகங்கை அன்னம் அகரம் என்ற சாகாத வானத்தில் மீரா எனும் வெள்ளி மீன் சிமிட்டிக்கொண்டுதான் இருக்கும்.

மீரா ஒரு அர்ப்பணிப்பு ஆத்மா…

‘நவீன இலக்கியத்தின்பால் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தமிழுலகில் உருவான ஈர்ப்புக்கு மீரா தொடங்கிய அன்னம் பதிப்பகத்தின் செயல்பாடு மிக முக்கியமான காரணம். வலிமையான இலக்கியச் சூழலை உருவாக்குவதில் ஒரு பதிப்பகத்துக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. கவிதைகளிலேயே இயங்கி வந்த மீராவும் ஏதோ ஒரு கட்டத்தில் இப்படி நினைத்ததால்தான் தன் இயங்கு தளத்தை மாற்றிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. ‘

—- பாவண்ணன்

மீரா ஒரு பொதுநலப்பூங்கா…

‘1959 முதல் துவங்கி 1965 – 1966 ம் ஆண்டுகளில் உள்ள அவரது கவிதைகளின் நோக்கமும் , தாக்கமும் மிக மிக அதிகம். மீராவின் கவிதைகள் முதன் முதலில் 1965ல் வெளியானது பிறகு அவரின் அடுத்த பதிப்பு 2002ல்தான்

வெளியானது. இந்த 37 ஆண்டுகால இடைவெளிக்கு என்ன காரணம் ? ‘ —- மு.மாரிமுத்து

மீரா ஒரு சிந்தனைச்சிவப்பு…

‘திராவிட இயக்கத்தில் வளர்ந்து மலர்ந்தவர் மீரா. அண்ணாவாலும்,கலைஞராலும் பாராட்டப் பெற்றவர் அவர்.

70-களில் படிப்படியாக இடதுசாரித் திசையில் நகர்ந்து உறுதியான இடதுசாரிப் படைப்பாளியாகவும்,

சிந்தனையாளராகவும் விளைந்தார். ‘ — பொன்னீலன்

மீரா ஒரு புதுமரபி…

‘தமிழ் இலக்கியத்தில் மரபுக்கவிதை சவலை நோயால் பீடிக்கப்பட்டு கவலைக்கிடமாகி நலிவுறும் நிலைக்கு வந்தபோதுதான், கவிஞர் மீரா புதுக்கவிதை என்னும் சிவப்பு அணுக்களை அதன் ரத்தத்தில் பாய்ச்சினார். ‘

—- கவிஞர் பவேரா

மீரா ஒரு பதிப்பகத்தேனீ…

‘மீரா ஒரு கவிஞர் மட்டுமல்ல வணிக நோக்கம் இல்லாத பதிப்பக உரிமையாளர். ஜீவநேசமும் தோழமையும் குடிகொண்ட மாமனிதர். சிறந்த சிந்தனையாளர். கல்லூரி முதல்வர். ‘ — தேனிசீருடையான்

மீரா ஒரு அங்கதப்பூ…

‘அவரைக் கடைசி முறையாகப் பார்த்தது ஒரு குதூகலமான சூழ்நிலையில். ஒரு விநாயக சதுர்த்தி நாளன்று

கவிக்கோவுடன் என் வீட்டிற்கு வந்திருந்தார். கொழுக்கட்டைகள் தந்து உபசரித்தார் என் மனைவி. உங்க

வீட்டிற்கு வரும்போது கொழுக்கட்டை கிடைக்கலாம் என்று நினைத்துக்கொண்டுதான் வந்தேன் என்றார்

கவிக்கோ. அவருக்கு டயாபடாஸ் கேட்டாலும் கொடுக்க வேண்டாம் என்று சொல்லத்தான் நானும் கூட வந்தேன் என்றார் மீரா. அறை முழுக்கச் சிரிப்பு. அதை நினைத்தால் இப்போது மனம் கனத்துப் போகிறது. ‘— மாலன்

மீரா ஒரு கிரியாவூக்கி…

‘நான் பதிப்பாளன் ஆனதற்கு ஒருவகையில் மீராதான் காரணம் என்று சொல்ல வேண்டும் ‘ — காவ்யா சண்முகசுந்தரம்

மீரா ஒரு வினைத்தொகை…

‘அவர் கவிதையை வாழ்க்கையாகவும், வாழ்க்கையை கவிதையாகவும் ஆக்கியவர். சிவகங்கையில் மீராவுக்கு ஒரு

நினைவு நூலகம் அமைக்க வேண்டும் என்பது என் ஆசை. நல்லவர்கள் அதை நிறைவேற்றித் தருவார்கள் என்று

நம்புகின்றேன் ‘ — கவிக்கோ.அப்துல் ரகுமான்

மீரா ஒரு குருபீடம்…

‘கவிஞர் மீராவின் மாணவர்கள் மற்றும் சீடர்களைப் பற்றிக் குறிப்பிடுவது அவசியம். முனைவர் ம.பெ.சீனிவாசன்

(சிவகங்கை), முனைவர் இரா.பாலச்சந்திரன்(ஆங்கிலப்பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்),

பேராசிரியர் சாகுல் அமீது(புதுக்கல்லூரி சென்னை), முனைவர் கே.ஏ.குணசேகரன்(பாண்டிச்சேரி) ஆகியோர். அவருக்கு சீடர்கள் பலர். அவர்களில் முனைவர் சுபாசு சந்திரபோசு(திருச்சி), முனைவர் மு.பழனி இராகுலதாசன்(தேவகோட்டை) முக்கியமானவர்கள். ஓய்வுபெற்ற ஆசிரியரும் அவருடைய உறவினருமான முகவை சோ.சண்முகம் மீரா நடத்திய இலக்கிய விழாக்களில் ஒத்துழைத்தார். அவரின் மாணவர் ரா.பாஸ்கரன். மீராவின் இறுதிக்காலத்தில்

அவருடன் நெருங்கிப் பழகிய இரண்டு இளைஞர்கள் குறும்படத்தயாரிப்பாளரும் எழுத்தாளருமான செழியன், அடுத்தவர் சந்திரகுமார். ‘ —- நா.தர்மராஜன்

மீரா ஒரு சமர்க்களச்சிங்கம்…

வார்த்தை வசீகரங்களுக்காக எந்தக் கொள்கையையும் எழுதியவர் அல்ல மீரா. பிள்ளைகளுக்கு கலப்பு திருமணம் செய்து வைத்தார். சொந்தமென்று ஏற்றுக்கொண்ட கோட்பாடு காரணமாகச் சொந்தச் சாதி

ஆதிக்கக்காரர்களோடு சமரசம் செய்துகொள்ளாமல் சமர்க்களத்தில் இறங்கிய வரலாறு அவருக்கு உண்டு.

பணிபுரிந்த கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக சாதி அபிமானங்களைத் தூரத்தள்ளியவர்

இந்த இலட்சியக்கவிஞர். ‘—- கவிஞர் சிற்பி

மீரா ஒரு கற்பகதரு…

‘மீரா ஓராயிரம் பெயர்களை ஊட்டி வளர்த்த ஒற்றைப்பெயர் . எப்படிப் போட்டாலும் பூ விழும் நாணயம். ‘

—- பழநிபாரதி

மீரா ஒரு காரணி…

‘மீராவின் படைப்புகள் மிகப் பொருத்தமான தேவையான நூல்கள். சமுதாயத்தை விழிப்படையச் செய்யக்கூடிய நூல்கள். மனித சமுதாயத்திற்கு ஏற்புடைய நூல்கள். ‘—- கலைஞர் மு.கருணாநிதி

மீரா ஒரு புதுக்குறிஞ்சி…

‘அவர் ஒரு குறிஞ்சிப்பூ. போதிய அளவு கண்டு போற்றப்படாத கவிஞர் அவர். திராவிட இயக்கக் கவிஞர்களுக்கு நேர்ந்த கதிதான் அவருக்கும் நேர்ந்தது. துதி பாடத் தெரியாதவர்கள் அங்கே தலை நிமிர்தல் இயலாது. மீரா எனும் பாவலன் தனித்திறன் உடையவன். மரபுப்பாடல்களில் பல சித்து விளையாட்டுக்கள் கண்டவன். அவனது உரை வீச்சுக்கள் ஒப்பற்றவை. உள்ளடக்கமும் புதுமையுடையது. வடிவ யாப்பும் புதிய பரிணாமம் காட்டுவது ‘

—- அறிஞர் தமிழண்ணல்

மீரா ஒரு காகிதச்சிற்பி…

‘மீராவின் காகிதங்கள் கல்வெட்டுக்களாய் காலத்தை வென்று வாழக்கூடியவை. அக்காகிதங்களில் அவர் தமிழ் இலக்கியமாக நிலைத்து நின்று நீடித்து வாழ்வார். ‘—- இரா.சுப்பராயலு

மீரா ஒரு விழிப்புணர்வுவாக்கியம்…

‘தமிழக மக்களிடையே புத்தகப் புத்தாடைகளை வாங்கும் பழக்கத்தை ஊக்குவிக்க பிற பதிப்பாளர்களையெல்லாம் ஒன்று கூட்டிப் புத்தகக் கண்காட்சி நடத்தும் திருவிழாவிலும் மீரா ஒரு அறங்காவலர் போல விளங்கினார் ‘

—- சு.குழந்தைநாதன்

மீரா ஒரு தேமா…

‘மீரா இந்த தேமாச் சீருக்குரிய ஈரசைப் பெயர், பெற்ற புகழ் இணையற்றது. மீரா இந்தப் பெயரை

நினைக்கும்போது பெண்மைக்கேயுரிய நல்லியல்புகள் யாவும் நம் முன் தோன்றும். ராசேந்திரன் இந்த இயற்பெயரை எண்ணும்போது ஒரு பெரு வீரனுக்கே உரிய வீறும் வினைத்திறமும் விளங்கித் தோன்றும். அவரது கவிதைகளில் இவ்விரு இயல்புகளையும் கண்டு மகிழலாம். ‘—- ம.பெ.சீனிவாசன்

மீரா ஒரு போராளி…

‘அறிஞர் அண்ணா மீராவின் கவிதைகளைப் படித்ததோடு, கவனித்தும் வந்த காரணத்தால் அண்ணாவின் கடைசி மடலில் திராவிட இயக்கக் கவிஞர்களில் மீ.ராசேந்திரன் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார். அண்ணா தன் இயக்க மாநாட்டுக்குத் தொண்டர்களை அழைத்து எழுதிய கடிதத்தில் ‘சாவா சந்திப்போம், வாழ்க்கை நமக்கென பூவா புறப்படுவோம், புல்லியரைத்தூள் செய்வோம் ‘ எனும் போர்க்குணம் மிக்க மீராவின் கவிதையை மேற்கோள்

காட்டியுள்ளார் ‘ —- சுபாசு சந்திரபோசு

மீரா ஒரு மையம்…

‘அறுபதுகளின் பிற்பகுதியில்… சென்னை வந்தால் திருவல்லிக்கேணியிலிருந்து கோட்டை,அங்கிருந்து பிராட்வே,அப்படியே மூர் அங்காடிப் பழைய புத்தகக்கடை, மீண்டும் திருவல்லிக்கேணி,பழைய புத்தகக்கடை வரிசை என்று ஒரு நிதானமான சூறாவளியாய்… ஏதாவது கேட்டுத் துளைத்துக் கொண்டே வரும் தம்பிமார்கள் கொண்ட ஒரு

சின்ன மேகக்கொத்தைத் தள்ளிக்கொண்டு நடந்தே திரிந்து வந்த அந்தக் கால்கள் மிகுதியும் வாங்குவது புத்தகங்கள்தாம். அந்தச் சுமையைப் பறித்தாலும் தர மறுத்துத் தாமே சுமந்து வரும் அந்த உறுதியான கைகள்… மறுபடியும் மாலையில் மரீனா மணலில் வளையும் பெரியசாமி தோளில் கைபோட்டு உந்தியபடி இலக்கியம்

பேசிக்கொண்டு முந்தி எட்டுவைத்துப் போகும் இவரைப் பார்த்தபடி பொன்னம்பலம் கேட்பான். ‘அன்ணனுக்குக்

கால் வலிக்கவே செய்யாதா ? ‘ ‘ஒரு சொல்லைக்கூட இழந்துவிடக்கூடாது ‘ என்று ம.பெ.சீ.யும், ப.கா.வும்,

ஞானசேகரனும், இராசரத்தினமும் நானும் ஈடுகொடுத்து நடக்க என்னதான் முயன்றாலும் ஓரடி முந்தியே

போய்க்கொண்டிருக்கும் இந்தக் கால்கள். எந்த ஊரில் இருந்தாலும் பார்க்கச் சென்றால் பேருந்து நிலையம் வரை கூடவே நடந்து வந்து வழியனுப்பிவிட்டுச் செல்லும் அந்தக் கால்கள்… ‘ —- இக்பால்

மீரா ஒரு சினேகமழை…

‘இறுதியாக நினைத்து மகிழ்வதற்கு மனிதநேயர்களிடம் கண்டதும் கொண்டதுமான நட்புதான் இருக்கும் என்று

நம்புகிறேன். முதல் நாள் காட்டிய அன்பையும் பரிவையும் வாழ்வின் இறுதிவரை காட்டுபவர்களை நினைத்துப்

பார்க்கும்போது அவர்கள் காட்டும் அன்பும் பரிவும் அவர்களது இயல்பு என்ற முடிவுக்கு வருகிறேன். கவிஞர் மீரா அவர்கள் இயல்பும் அதுதான். ‘—- இன்குலாப்

மீரா ஒரு கனவு…

‘மீரா உடல்நலக் குறைவினால் சிறைப்பட்டுவிட்டார் என்று அறிந்து சிவகங்கை போனேன். மனம் கனத்துக்

கிடந்தது. அண்ணி, பஞ்சு வந்திருக்கிறார் என்றவுடன் எழுந்து வந்தார். தாடியோடு கூடிய அந்த முகத்தைப்

பார்க்கப் பார்க்க எனக்கு அழுகையாக வந்தது. சமாளித்துக் கொண்டு ‘என்ன அண்ணே இது ? ‘-அவரும்

கலங்கினார். ‘கி.ராஜநாராயணன் எப்படி இருக்கிறார் ? ‘- விசாரித்துப் பேச்சை மாற்றினார். ‘படுக்க வைத்து

விட்டது ‘ என்பதுதான் அவரால் சகித்துக்கொள்ள முடியாத துயரமாக இருந்தது. ‘ —- க.பஞ்சாங்கம்

மீரா ஒரு அசராஅலை…

‘அப்போது சிவகங்கையிலிருந்து சென்னைக்கு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்தின் ஒரே பேருந்துதான் இருந்தது. வசதியான சாய்வு இருக்கைகள் இருக்காது. சென்னையிலிருந்து சிவகங்கை வந்தால் நாள் முழுக்கத் தூங்கினாலும் அழுப்புத் தீராது. ஆனால் பயணங்களில் அவருக்கிருந்த ஆர்வம் அதிசயமானது. சென்னையிலிருந்து காலையில் வருவார். ஒன்பது மணிக்கு மதுரைக்கு கிளம்புவார். திருச்சி,பிறகு பொள்ளாச்சி, கோயம்புத்தூர் , கூட்டங்கள், சந்திப்புகள், பதிப்பகவேலைகள், ஒரு சாம்பல் நிறப்பெட்டியுடன் கிளம்பிவிடுவார். உடன் சதுரம் சதுரமாக சசியின் புத்தகக்கட்டுகள். அவர் வாழ்நாளின் பெரும்பகுதி பயணங்களிலேயே கழிந்தது. மதுரையிலிருந்து சிவகங்கைக்கு வரும் கடைசி இரவுப் பேருந்துகளில் குறைந்தது வாரம் இரண்டு முறையாவது அவரைப் பார்க்க முடியும். இத்தனை உழைப்புக்கிடையில் கேட்பவருக்கெல்லாம் முன்னுரை எழுதினார். பாரதி நூற்றாண்டு விழா

நடத்தினார். நவீன வாசனையற்ற செம்மண் நிலத்தில் கவிதை இரவு நடத்தினார். புத்தகங்கள் மீதான அவரது

காதல் அளவிடமுடியாது. வீட்டில் திரும்பும் இடமெல்லாம் புத்தகங்கள். கையெழுத்துப் பிரதிகள். வடிவமைப்பு

பற்றியும் புத்தகங்களைப் பற்றியும் ஆர்வமாகப் பேசுவார் ‘ —- செழியன்

மீரா ஒரு விருது…

‘வாழ்ந்த வாசம் மட்டும்தான்… மீராவின் குடும்பம் சுவைக்க முடிந்த அவரின் சொத்து. அவரின் பெட்டியில் இருந்தவையெல்லாம் ஒரு வேட்டியும் நூறு ரூபாய்வரை கொடுத்து வாங்கும் சட்டையும் தவிர முழுவதும் பலரின் எழுத்துக்கள்தான். இன்று பேசப்படும் பல புத்தகங்கள் அவர் தீண்டியதால் கலை வடிவமானவை. வார்த்தைகளையும் வரிகளையும் செதுக்கி அழகியல் கொள்ள மறைந்து தொழில் செய்தவர். படைப்பாளியாக மட்டும் மீரா செயல்பட்டு இருந்தால் தமிழ் இலக்கியத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கும் ‘—- க.வை.பழனிசாமி

மீரா ஒரு வானம்…

‘குறிப்பாக, எழுதுபவர்களுக்கு வலதுகையில்தான் அதிக இயக்கம். வலது கையில் கடிகாரம் கட்டிக்கொண்டால் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை நிறுத்தாமலே நேரம் பார்த்துவிடலாம். வலது கைக்கு கடிகாரத்தைக்

கொண்டு வந்து கட்டிய காரணம் இது என்ரு வெகு சிலர்க்கே தெரிந்திருந்தது. அவர்களுள் கவிஞர் மீரா ஒருவர். மீரா உலக மக்கள் எல்லோரும் கவிதை எழுத வேண்டுமென்றும் முடிந்தால் அவை அத்தனையும் புத்தகங்களாகப் போட வேண்டுமென்றும் நினைத்தார். கவிதை வெளிப்பாட்டில் அவ்வளவு விரிந்த மனம் மீராவுக்கு ‘ — கந்தர்வன்

மீரா ஒரு யுகம்…

‘எனது மனைவியை அழைத்துக்கொண்டு சிவகங்கையில் அவர் வீட்டுக்குச் சென்றபோது, மனித நேயராக கடைசி

நிமிடம் வரை வாழ்ந்த ஒரு கவிஞன் மரணமற்ற பெருவாழ்வில் இருப்பதையும் அதே சமயம் அவர் வசித்து வந்த அந்தத் தேகம் அசைவற்றுக் கிடந்ததையும் பார்த்துக் கலங்கினேன். கை குவித்தேன் ‘—- பெ.சிதம்பரநாதன்

மீரா ஒரு புத்தகச்சந்தை…

‘புத்தகம் சம்பந்தமாய் வந்தாய் — ஒரு

புத்தகச் சந்தையில் பார்த்துக் கொண்டோம்

புத்தகமாகவே ஆனாய், நண்பனே. ‘—- கி.ராஜநாராயணன்

மீரா ஒரு தராசு…

‘மீரா என்ற கல்லூரி ஆசிரியரின் போராட்ட முகத்தையும் நாம் உற்று நோக்கவேண்டும். எமக்குத் தொழில் கவிதை என்பதை முகமூடியாய் அணிந்து கொண்டு தன்னை அவர் தனிமைப்படுத்திக் கொண்டதில்லை. கல்லூரியில்

நேருக்கு நேர் நின்று எதிர் கொண்ட போர்க்குணம் அவருடையது. ஆசிரியர் நலன் காப்பதற்கான

போராட்டங்களின்போது உண்ணாவிரதம் இருப்பதற்கோ, கைதாகிச் சிறைச்சாலைகளில் அடைபடுவதற்கோ அவர் என்றைக்கும் பின்வாங்கியதே இல்லை. கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக அண்ணா

சாலையில் ஒரு நாள் முழுக்கச் சுட்டெரிக்கும் வெயிலில் உடலை வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருந்ததை இன்று நினைதாலும் நெஞ்சம் பதைக்கும் ‘—- இளம்பாரதி

மீரா ஒரு இளகியநிலவு…

‘எழுத்தாளர்கள்மீது மிகுந்த மரியாதையும் அக்கறையும் கொண்டவராக இருந்தார் மீரா. அவர்களில் பலர்

வாழ்க்கை நன்றாக இல்லையே என்று வருந்தியிருக்கிறார். மலையாள எழுத்தாளர்கள்போல் அவர்களுக்கும்

போதிய வருமானம் உத்திரவாதம் செய்யப்படவேண்டும். அதற்காக அங்கிருப்பதுபோல் எழுத்தாளர் கூட்டுறவு

பதிப்பகம் தோன்ற வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார் ‘ —- எஸ்.விஸ்வநாதன்

மீரா ஒரு உலகம்…

‘மீரா வெறும் கவிஞர் மட்டுமன்று. அவர் சிறந்த வாசகர். பேராசிரியத் தன்மையற்ற பேராசிரியர். மனிதர்கள்

சாகிறபோது அவர்களுக்குள் உலகங்கள் சாகின்றன என்றும் சொல்வார்கள். கவிஞர் மீரா மறைந்தபோது எனக்குள் பல இலக்கிய உலகங்கள் இறந்து போய்விட்டன ‘ —- இந்திரன்

மீரா ஒரு ஒளி…

‘திராவிட முன்னேற்றக்கழகம், இடதுசாரி இயக்கங்கள், பல்கலைக்கழகங்கள், மூட்டா, பதிப்பகத்துறை,

படைப்பாளிகள், சாகித்ய அகாதமி, தமிழ் வளர்ச்சித்துறை இவற்றின், இவர்களின் எந்த வெளிச்சமும் மீராவின் மீது

உரிய நேரத்தில் உரிய அளவில் விழவில்லை ‘ —- கல்யாண்ஜி

மீரா ஒரு சமத்துவப்புறா…

‘புதுமைக்கவிஞன், போர்க்களப்புலவன், அறத்தின் நாயகன் , அனைவர்க்கும் தோழன், சமத்துவ வேட்கையால்

சரித்திரம் படைத்தோன், தன்னலமின்றித் தமிழ்ப்பணி புரிந்தோன், தமிழ் உள்ளவரை அவன் புகழ் வாழும் ! ‘

—- தி.க.சிவசங்கரன்

மீரா ஒரு நம்பிக்கை…

‘கவிஞர் மீரா நம்பிக்கை மனிதர். தனக்கு எதிராக உலகமே சுழன்று தாக்கிய போதிலும் நம்பிக்கை மனிதர்கள் தளர்ந்து விடுவதில்லை. கம்பீரமாக எழுந்து நின்று தனக்காக வாழ்க்கையைப் பிரபஞ்சத்தில் பதிவு செய்து

விடுகிறார்கள் ‘ —- சி.மகேந்திரன்

மீரா ஒரு தோழமைக்கடல்…

‘இப்படியொரு கலப்படமற்ற அன்பை, நிபந்தனைகளற்ற நட்பை இனி யாரிடம் பெறப் போகிறோம். பூமிக்

கிண்ணத்தில் வார்க்கப்பட்ட அவரது வாழ்வென்னும் பாலினை ஓர் துளியும் மிச்சம் வைக்காது அருந்திவிடும் அன்னம். ஆம் அவரது வாழ்வும் கலப்படமற்றது. அது அகரம். ‘ —- கலாப்ரியா

மீரா ஒரு சரி…

‘அன்னம் பதிப்பகத்தின் நூல்களையெல்லாம் அச்சிடத் தாமே அகரம் என்ற பெயரில் அச்சகம் ஒன்றையும்

நடத்தினார். பிழைகள் இல்லாது நூல்களை அச்சிட்ட பெருமை அகரத்திற்கு உரியது ‘—- பு.இராசதுரை

மீரா ஒரு முரண்…

‘மீராவின் கனவுகள் ஏதும் நனவாகுமா என்பது தெரியவில்லை. ஆனாலும் அவர் கனவொன்று பொய்த்ததை இங்கு சொல்ல வேண்டும். மீரா நாத்திகராக வாழ்ந்தார். தனது சாவிலும் கூட அவர் அவ்வாறே வாழ முடியும் என கற்பனைகள் செய்திருக்கக்கூடும். பகுத்தறிவு, பொதுவுடைமைச் சிந்தனைகள் மீதும் இயக்கங்கள் மீதும் பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். ஆனாலும் அவரது உடல் இந்து மதச் சடங்குகளோடு எரியூட்டப்பட்டது. தன்னை ஏங்கல்ஸின் மாணவன் என்று பெருமையோடு தன் காதலியிடம் அறிமுகம் செய்து கொண்டவர் அவர். அவரது மரணத்தையும் விஞ்சிய அழுத்தத்தை அவரது உடல் எரியூட்டு உண்டாக்கியது. பாரதி குடில் உருவாக்க அவர் நினைத்த இடத்தில் அவரை அடக்கம் செய்திருக்கவேண்டும். ‘—- குருசாமி மயில்வாகணன்

மீரா ஒரு கறையிலாக்கவிதை…

‘மீரா ஓர் இனிய கவிதை. மீரா கடவுள் எழுதிய கவிதையா… காலம் எழுதிய கவிதையா… சமூகம் மாற்றி வடிவமைத்த காவியமா… ? ‘ —- தனுஷ்கோடி ராமசாமி

மீரா ஒரு வரலாறு…

‘உ.வே சாமிநாதய்யரால் பல பழைய இலக்கியங்கள் நமக்குக் கிடைத்தன. மீரா இருந்திராவிட்டால் நமக்குப் பல புதிய இலக்கியங்கள் கிட்டியிரா ‘ —- நீலமணி

மீரா ஒரு காதலன்…

‘குழல் ஊதும் கண்ணனைக் காதலித்தால் மீரா. இனிதான பாடும் குரலுக்காக என்னைக் காதலித்தார் கவிஞர் மீரா

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளைங்கலைப் பட்டம் முதலாண்டு படித்த

காலம் 1979. எங்களுக்கிடையே காதல் அரும்பிய காலம் அது. ‘ —- கே.ஏ.குணசேகரன்

மீரா ஒரு பன்முகவெண்பா…

‘சமணர் மொழியில் சொன்னால் அவர் ஒரு பக்குவ சீவன். பேராசிரியர் கூற்றில் சொன்னால் அவர்

புதுக்கவிதையின் உ.வே.சா. மூட்டாவினர் கருத்துப்படி அவர் கோரிக்கைகள் நிறைவேற்றிய கோடிக்கைகள். அரசுக்கல்லூரி ஆசிரியர் பார்வையில் அவர் கல்லூரி ஆசிரியரின் குரல். சுருங்கச் சொன்னால் மனிதம் என்பதின் மருதுவின் கோட்டோவியம் அவர். ‘—- க.முத்துச்சாமி

மீரா ஒரு சிவகங்கை…

‘என் தந்தையையொத்த வயதில் ஒரு நெருங்கிய நண்பரைப்போல் மூத்த சகோதரரைப்போல் தனது

இறுதிக் காலங்களில் என்னோடு அவர் கொண்ட அன்பு . சிவகங்கை எனும் ஊரின்மீதான பாசத்தைத்தான்

விதைத்து விட்டிருக்கிறது. மீரா அவர்களின் ஊர்ப்பாசம் தாய்ப்பாசத்திற்கு நிகரானது. ‘—- சந்திரகுமார்

‘மீரா எனக்குச் சிறுகதவாய் இருந்தார். லேசாகத் தொட்டாலே திறந்து கொள்ளும் கதவு. மீராவுக்கு ரொம்பவும்

நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் நான். ஆனால், அந்த மீராவை நேரிலோ கூட்டங்களிலோ ஒரு முறை கூட நான் பார்த்ததில்லை. சந்தித்ததில்லை. பெரிய இழப்பாக உணர்கிறேன் இப்போது ‘

என்று சொல்லும் பெருமாள் முருகனின் வார்த்தைகள் எனக்கும் பொருந்தும்…

காரணம் நான் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருந்த அந்த மாகவியின் படைப்புகளிலேயே எனக்குள் அவன்.

பார்த்ததில்லை… பேசியதில்லை… பழகியதில்லை… இருப்பினும்,

மீரா எனும் வார்த்தையும் அது செய்த இயக்கமும் என் ஆத்ம நெருங்குதலின் இனிய பதியமாய் என்றென்றும்…

மீரா என்ற புல்புல்லின் நினைவோசை அவர் படைத்த சாகாத வானத்தில் சஞ்சரித்துக்கொண்டுதான் இருக்கும் எந்நாளும்…

விடியலின் ஒவ்வொரு பூபாளமும் மீரா என்ற கீர்த்தனையை இசைத்துக் கொண்டுதான் இருக்கும்

யுகத்தின் இறுதிவரை…

மீரா நம்மை விட்டுப் பிரிந்த வருடங்கள் தங்களின் தொலைவைச் சொல்லலாம் ஆனால், தோன்றி மறைந்து மறையாமல் இருத்தலின் உயிர்ப்பை உணர்கின்ற ஓவ்வொரு படைப்பாளிக்குள்ளும் மீரா வாழ்கிறார்…

—- நெப்போலியன்

சிங்கப்பூர்

( இந்தக் கட்டுரையின் உயிர்நாதமாய் ‘காலத்தின் குரல் ‘ நூலில் அறிவுமதியாலும், கதிராலும் தொகுக்கப்பட்ட மீராவைப்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அவர்தம் இலக்கிய நண்பர்களின், படைப்பாளிகளின், ஒன்றாய் பணிபுரிந்த பேராசிரியர்களின், நெருங்கிய சிநேகிதர்களின், மாணவர்களின், ரசிகர்களின்… உணர்வு வரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. )

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்