எம் மண்

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

எம்.ரிஷான் ஷெரீப்




நடந்து நடந்து பாதங்கள் வெடித்தன
வாழ்விடம் குறித்த கனவுகள் பெருகி
ஏக்கங்கள்
தாண்டும் பொழுதுகளிலெல்லாம் வழியலாயிற்று
சொந்தத் தரை மண்ணிட்டுப்
போற்றி வளர்க்கும் செடியொன்றின்
கிளைப் பூக்களுக்கு அவாவி
எல்லா இடர்களுக்குள்ளும்
எம் சுவடுகள் திரிகின்றன

நிலவும் பார்த்திற்று சூரியன் கொண்டுபோன
நீர்த்துகளும் பார்த்திற்று
இன்னும் அனைத்தும் பார்த்திட
வாழ்வின் அறுவடைக்கு முன்னர்
விடியலைத்தான் காணவில்லை

‘வரிசை வரிசையாய் மனிதர்கள்
ஆயுதங்கள் கொண்டு
இடையில் கோடுகிழித்துச் சலனங்களை
ஏற்படுத்து
சுமைகளை அந்தரத்தில் விட்டு
திசைக்கொன்றாய்ச் சிதறி ஓடிப்போகட்டும்
மனிதர்கள் எறும்பல்லவே
ஒன்றுகூடுதல் ஆபத்து
அவர்களுக்குள் மொழி இருக்க
தேசம் பற்றிய இலட்சியங்கள் இருக்க
தாய்மண் தந்த வீரம் வழிநடத்துகிறது’
எனக் குறிப்புகளெடுத்து
அப்பாவி ஜீவன்களின் உயிரெடுத்தல் குறித்துப்
பாடங்கள் நடத்து

தாய்மண் குறித்த
நம்பிக்கைகள் வழிநடத்த
சாவுக்கொன்றும் பயந்தவர்களில்லை நாங்கள்
உன்னைப் போல


– எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

நன்றி – யுகமாயினி (பெப்ரவரி – 2009)
mrishanshareef@gmail.com

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்