எல்லைகளைப் போடாதீர்!

This entry is part [part not set] of 29 in the series 20030119_Issue

வ.ந.கிரிதரன்


என் நிறத்தை
என் மொழியை
என் இயல்பை
என் பிறப்பை வைத்து
என் நாட்டை
வரையறுக்கும்
மூடர்களே!
உங்களுக்கு
ஒன்று சொல்வேன்.
கவனமாகக் கேளும்.
இந்தப் பிரபஞ்சத்தின்
ஒரு துளி நான்.
இந்தப் பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு துளியும்
எனக்குச் சொந்தம் தான்.
என் உடம்பில் விரையும்
அடிப்படைத் துகள்கள்
தான் இந்தப் பெரு வெளியிலும்
பிரிக்க முடியாதபடி
விரவிக் கிடக்கின்றன.
என்னால் முடிந்தால்
இதன் அகன்ற பரப்பில்
எந்த மூலையிலென்றாலும்
சென்று என் இருப்பை
உறுதி செய்ய
எனக்கு உரிமை உண்டு.
அதே உரிமை
உமக்கும் உண்டு
என்பதை நான்
பெருந் தன்மையுடன்
ஏற்றுக் கொள்கின்றேன்.
இதிலெனக்கு ஏதும்
தயக்கம் கிடையாது.
இந்தக் கிரகத்தின்
ஒவ்வொரு மூலையிலும்
எனக்குச் சொந்தம்
உரிமையுண்டு.
இதற்கு
எல்லைகளைப் போட்டு
என் உரிமையை
நீர் பறிப்பதை அனுமதிக்க
முடியாது.
வெளிக்குள் விரையுமிந்தக்
கோளின்
கதியையொரு கணம்
நினைவில் கொள்வீரென்றால்
எல்லைகளைப் போட்டுக்
கிணற்றுத் தவளையாய்
விளங்குமும் மடமை
உமக்கே
புரியும்.

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்