மூன்று குறும்பாக்கள்
Published September 10, 2001 • By
பசுபதி
பசுபதி

[ Limerick என்ற ஆங்கிலக் கவிதை வடிவினைக் ‘குறும்பா ‘ வாகத் தமிழில் முதலில் உருவாக்கினவர் ஈழத்துக் கவிஞர் ‘மஹாகவி ‘ (உருத்திரமூர்த்தி). ]
1.
பட்டணத்தில் படிக்கின்ற கிட்டு
பந்தயத்தில் போக்கிடுவான் துட்டு !
. . கொட்டினாள்தாய் சுடுசொல்லை;
. . குணத்தையவன் விடவில்லை.
சட்டென்று போட்டாள் ‘கால் கட்டு ‘ !
2.
ஊரிலுளோர் ஊமையெனுங் காசி
ஆரிடமும் பேசாச்சங் கோசி !
. . காரிருளில் பெண்நின்றாள் ;
. . ‘காட்டெனக்கு வழி ‘யென்றாள்.
மாறிவிட்டான் மங்கையுடன் பேசி!
3.
உணவுக்குப் பின் ‘பாதாம் கீரை ‘
உறிஞ்சிடுமோர் மங்கைபெயர் தாரை!
. . அணங்கினெடை ஏறிடவே
. . அருந்துகிறாள் ‘மடக் ‘கெனவே
உணவுக்குப் பதிலாய்த்தண் ணீரை !