27 வருட போர் – முகலாயரின் தோல்வியில் சிவாஜியின் பங்கு

This entry is part [part not set] of 29 in the series 20100502_Issue

கேதார் சோமன்


சிவாஜியின் ஆளுமைக்காக தக்காணம் போரிடவில்லை. ஆனால், அவருடைய தொலைநோக்கு, அவர் உணர்த்திய விழுமியங்களுக்காக தக்காணம் போரிட்டது. மராத்தியர்கள் அவரது தொலைநோக்கு பார்வையை உணர்ந்து அதில் ஊறி அதனை தமதாக்கிகொண்டனர். அதன் பிறகு அவர்கள் தங்களுடைய நாயகருக்காக போரிடவில்லை. தங்களுக்காகவே போரிட்டார்கள். முகலாய பேரரசிடம் மராத்தியர் சரணடைய மறுத்ததற்கு சிவாஜியின் வீரதீர சாகங்கள் காரணமில்லை. அதன் காரணம் வேறிடத்தில் இருக்கிறது. அந்த ரகசியம் அவர் கொண்டுவந்த சீர்திருத்தங்களில் இருக்கிறது.

அவர் ஆண்ட மிகக்குறுகிய காலத்தில் சிவாஜி ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். இந்த உரையாடலுக்காக நான் அவற்றை நான்கு பிரிவுகளாக பிரித்துகொள்கிறேன். அவை அரசாள்மை சீர்திருத்தம், அரசியல் சீர்திருத்தம், பாதுகாப்பு சீர்திருத்தம், சமூக சீர்திருத்தம் ஆகியவை.

அரசாள்மை முதலாவது. தான் முடிசூட்டிய பின்னால், அஷ்ட பிரதான் என்ற எட்டு அமைச்சர்கள் கொண்ட அரசை உருவாக்கினார். இவர்கள் அந்த காலத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அரசியல் அறிஞர்கள். இவர்கள் பொருளாதார கொள்கை, வெளிநாட்டு கொள்கை போன்ற அரசாங்கத்தின் அடித்தளத்தை அமைத்தனர்.

வதன், ஜாஹீர் என்ற அமைப்புகளே முகலாயர்கள் காலத்தில் இருந்தன. இது புவியியல் ரீதியான அரசாட்சி அமைப்பு முறை. வதன் அமைப்பில் ஒரு பிரதேசத்தின் அனைத்து வேலைகளும், மேலாண்மையும் ஒரே ஆளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அதனை நிர்வகிப்பவர் ஜாகிர்தார் ஆவார். இதனை vertical decentralization என்று கூறலாம். சிவாஜி இதனை தன் பிரதேசங்களில் மாற்றி ஒரே ஒரு அமைச்சர் தனது பேரரசு முழுவதும் ஒரே ஒரு வேலையை செய்பவராக உருவாக்கினார். (தற்போதைய நிதி மந்திரி, ராணுவ மந்திரி போல, நாட்டின் முழு நிதி நிலைமைக்கும் பொறுப்பாளராக ஒரே ஒரு அமைச்சர்) இதனை Horizontal decentralization என்று சொல்லலாம். இது நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் ஒரே சட்டதிட்டங்களையும் வரிகளையும் கொண்டுவந்தது. இதனால் பேரரசின் உள்ளவர்களுக்கு ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்துக்கு போகவும், அங்கு வியாபாரம் செய்யவும் எ:ளிதாக ஆகிறது. அதே நேரத்தில் நாட்டில் உள்ள அனைவரும் ஒரே நாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வையும் தருகிறது. இவ்வாறு பிரிக்கப்பட்டதால், ஒரு அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் மற்ற துறைகளை கண்காணிக்கவும், அந்த துறைகள் கட்டுக்கடங்காமல் செல்வதை தடுப்பதற்கும் உதவுகிறது. இவ்வாறு பிரிக்கப்பட்டதால், ராணுவம் ராணுவ காரியங்களில் மட்டுமே முனைப்புடன் இருக்க அனுமதித்தது. அதே வேளையில் தளபதிகள் மற்ற தளபதிகளுக்கு இடையூறாக இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்தது. ராணுவ முயற்சிகளுக்கு அரசாங்க ராஜரீக பாதுகாப்பு, உதவி ஆகியவற்றையும் செய்ய இப்படிப்பட்ட அமைச்சுகள் உறுதி செய்தன.

இரண்டாவது பாதுகாப்பு போர்தந்திர சீர்திருத்தங்கள். கெரில்லா போர்முறை, அதிக பளு இல்லாத காலாட்படை, கூடவே 300க்கும் மேற்பட்ட உறுதியான கோட்டைகள் சிவாஜியின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு போர்தந்திரத்தை காட்டின. ராஜ்புத்திரர்கலை போல, சிவாஜி, பழங்கால போர்முறை ஒழுக்க மதிப்பீடுகளில் சிக்கிக்கொள்ளவில்லை. பாரசீகர்களும் முஸ்லீம்களும் முகலாயர்களும் போர்முறையின் ஒவ்வொரு ஒழுக்க நிலைப்பாடுகளையும் உடைத்தாலும் ராஜபுத்திரர்கள் போர் அறத்தை மீறி போர் புரியமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்து தோற்றார்கள். ஆனால், சிவாஜி அவர்களுக்கு பதிலுக்கு பதிலடி அளித்தார். அதே போல மராத்தியர்களும் எதிராளி எப்படி போர்புரிந்தானோ அதே முறையில் திருப்பி அடித்தார்கள். மராத்தாக்கள் கெரில்லா போர்முறையையே இறுதிவரை பின்பற்றினார்கள். தேவைப்பட்ட போது மட்டுமே பொது போர் களத்தில் நின்று போர் புரிந்தார்கள். கில்ஜி போலவோ அல்லது முகம்மது கோரி போலவோ பெண்களை கேவலப்படுத்தவில்லை. நிச்சயமாக அவர்கள் இந்திய ஒழுக்க மதிப்பீடுகளையும் அறங்களையும் பின்பற்றினார்கள். ஆனால், தேவைப்பட்டால், இரவு நேரத்தில் எதிரியை தாக்குவதிலிருந்து பின்வாங்கவில்லை. அரசியல் குறிக்கோள்களை மனதில் கொண்டார்களே அல்லாமல், தனி மனித வீரதீரச் குறிக்கோள்களை அதிகம் மனதில் கொள்ளவில்லை.

கூடவே, சிவாஜி இருந்தபோதே கப்பல்படையையும் தோற்றுவித்திருந்தார். மராத்தியர்களின் கப்பல்கள் சிறியவையாகவும் அவர்களது கப்பல்படை ஆயுதங்கள் தொழில்நுட்பத்தில் குறைப்பட்டவையாகவும் இருந்தாலும், இது மராத்தாக்களை கடலை ஒரு போர்முனையாக்க உதவியது. மராத்தாக்களின் கப்பல்படை, சூரத்திலிருந்து அவுரங்கசீப் தனது தளவாட உணவு சப்ளையை நடத்துவதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது.

ஏராளமான சமூக சீர்திருத்தங்களை சிவாஜி செய்திருந்தார். இவை தோற்கடிக்க முடியாத மராத்தா போர்சக்தியை மக்கள் மனதில் உருவாக்கியிருந்தது. பொதுமக்கள் இவற்றுக்காக போர் செய்தனர். முந்தைய அரசாங்கங்களின் தீக்கனவுக்கு செல்வது என்பது எடுக்க முடியாத தேர்வாக இருந்தது.

பொருளாதார முனையில் பெரும் வரி சீர்திருத்தத்தை செய்தார். முந்தைய அரசாங்கங்கள் கொடூரமான வரி விதிப்பை செய்திருந்தன. சில நேரங்களில் குரூரமானதாகவும் இருந்தது. அவர்கள் ஜமீன் தார்களை உருவாக்கியிருந்தார்கள். இந்த ஜமீந்தார்கள் பேரரசின் பெயரில் வரி வசூல் செய்யும் உரிமை பெற்றிருந்தனர். பேரரசின் கஜானாவுக்கு செலுத்த வேண்டிய வரி முன்னரே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜமீன் தார்கள் மக்களிடம் எவ்வளவு வரி வசூலிக்கலாம் என்பது ஜமீந்தார்களிடமே விடப்பட்டிருந்தது. ஆகையால், இந்த வாய்ப்பை பயன்படுத்திகொண்ட ஜமீந்தார்கள் தங்களது சொந்த கஜானவை நிரப்பிக்கொள்ள கொடுமையான வரி வசூலில் இறங்கியிருந்தனர். இது விவசாயிகளை போண்டியாக ஆக்கியிருந்தது. ஜமீந்தார்கள் பெரும் கோட்டைகளையும் மாளிகைகளையும் கட்டிக்கொண்டிருந்தனர். தங்களுக்கு என்று சொந்த ராணுவத்தையும் வைத்துகொண்டனர். தங்களுக்கென நீதிமன்றம் என்று வைத்துக்கொண்டு குட்டி ராஜாக்களாக இருந்தனர்.

இந்த முறையை ரத்து செய்த சிவாஜி விவசாயிகளிடமிருந்து வசூலிக்க வேண்டிய வரியை எல்லோரும் அறிய நிர்ணயித்தார். அதிகார வரி வசூல் செய்வது மட்டுமே செய்யக்கூடிய அதிகாரிகளை குறைவான அதிகாரத்துடன் நியமித்தார். இந்த அதிகாரிகளை அடிக்கடி இடம் மாற்றினார். இவர்கள் அந்தந்த பிரதேசங்களில் ஊன்றி ஊழல்வாதிகளாக ஆவதை தவிர்த்தார். ஒரு சில வருடங்களில் மழை பெய்யவில்லை என்றால், அந்த பிரதேசங்களில் இருக்கும் விவசாயிகள் வரி கொடுக்க வேண்டாம் என்று அறிவித்தார்.

சிவாஜியின் நிதி ஆதார கொள்கைகளை கன்சர்வேடிவ் என்று கூறலாம். ஆகவே தாஜ் மஹால் போன்றோ முகலாய தோட்டங்களை போன்றோ சிவாஜி கட்டவில்லை. இருப்பினும் அவருக்காக நாட்டின் மக்கள் உயிர்தியாகம் செய்ய தயாராக இருந்தனர். இவரது நிதி ஆதார கன்சர்வேடிவ் கருத்துக்களை இன்னொரு தொலைநோக்குடைய தலைவரோடு ஒப்பிடலாம். அமெரிக்க புரட்சி போருக்கு பின்னால், பிரிட்டிஷ் வைசிராய் கட்டியிருந்த மாளிகையில் ஆடம்பரமான நடன அரங்கு ஒன்றை நிர்மாணிக்க பணம் கேட்டபோது நிர்த்தாட்சண்யமாக தாமஸ் ஜெபர்ஸன் கொடுக்கமுடியாது என்று மறுத்தார். “இப்படிப்பட்ட மாளிகைகள் வரி கொடுப்பவர்களின் பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்வதற்கு ஒப்பம்” என்றார்.

இதோடு பார்க்கும்போது, தக்காண சுல்தான்களும், முகலாயர்களும் மக்களின் நலத்தில் எந்த வித அக்கறையும் செலுத்தவில்லை. தாஜ்மஹால் கட்டிய 22 வருடங்களில் மூன்று வருடங்கள் பெரும் பஞ்சத்தை இந்தியா சந்தித்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பஞ்சத்திலும் பட்டினியிலும் உயிரிழந்தார்கள். ஆனால், ஷாஜஹான் தனது மனைவிக்கு கல்லறை கட்ட அத்தனை பணத்தையும் உழைப்பையும் மக்களிடமிருந்து உறிஞ்சிக்கொண்டிருந்தார்.

ஆனால், இந்தியாவின் அடையாளமாக தாஜ்மஹால் ஆகியிருக்கிறது. இந்தியாவின் மக்களின் முதலாவது சுயராஜ்யத்தை உருவாக்க முதுகெலும்பாக இருந்த சிவாஜியின் கோட்டைகள் கவனிப்பார் இன்றி பாழடைந்து கிடக்கின்றன

(தொடரும்)

Series Navigation

கேதார் சோமன்

கேதார் சோமன்