“மும்பை டப்பா வாலாவுக்கு ஜே…ஏஏ!!!”

This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

புதியமாதவி, மும்பை


எங்க ஊரு டப்பா வாலா அருமை, அடடா அமெரிக்காவின் ஹைடெக் பார்க்கோட் அடையாள வாசிப்புகள் அனைத்துக்கும்
ஒரு ‘பெப்பே’ காட்டிட்டு சிரிக்கும் போது முதல் முறையாக ரொம்பவும் பெருமையாக இருக்கிறது நான் ஓர் இந்தியன் என்பதிலும் மும்பைவாசி என்பதிலும்.

அப்படி என்ன அமெரிக்க வல்லரசின் அறிவுத்திறமையும் அறிவியல் ஆற்றலும் செய்ய முடியாததை எங்கள் மும்பை டப்பாவாலாக்கள் செய்துவிட்டார்கள்? செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று உங்களில் ப்லர் நினைக்கக்கூடும். அண்மையில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ்சீல் பயணம் செய்த ஒருவரின் இரண்டு பெட்டிகள் அவர் இறங்கும் இடத்தில் வந்துச் சேரவில்லை. என்னடா என்று விசாரித்தால் கடந்த ஆண்டு மட்டும் (Last year, more than 4 million of the 700 million bags checked for domestic U.S. travel were
mishandled and the rate for lost baggage has been increasing for the past four years. Last year U.S. airlines spent an estimated $400 million on lost luggage– money that went to reimbursepassengers and deliver late bags to hotels and homes.) 700 மில்லியன் பெட்டிகளில் 400 மில்லியன் பெட்டிகள் சரியான நபரிடன் உரிய நேரத்தில் சேர்ப்பிக்கப்படவில்லை! அமெரிக்க ஏர்லைன்ஸ் சற்றொப்ப 400 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை இந்த இழப்பிற்கான நஷ்ட ஈடாக பயணிகளுக்கு வழங்கியிருக்கிறது. இதற்கு சொல்லப்படும் காரணங்கள் எவ்வளவுதான் எந்திர உலகில் தவிர்க்க முடியாதவை என்று சமாதானம் செய்து கொண்டாலும் அமெரிக்காவின் RFID (Radio-Frequency ID) technology எஙகள் மும்பையின் டப்பாவாலாக்களின் “அன்பட் குறியீடு”களுக்கு (படிப்பறிவில்லாதவன் -அன்பட்) ரொம்பவும் அற்பமாக காட்சி தருகிறது.

முதலில் மும்பை டப்பாவாலாக்கள் பற்றிய சின்ன அறிமுகம்:

டப்பா என்றால் சப்பாடு எடுத்துச் செல்லும் டிபர் கேரியர்.
டப்பாவாலாக்கள் என்றால் சப்பாடு எடுத்துச் செல்லும் நபர் என்றுதான் அர்த்தம். சப்பாடு கூடைக்காரி என்று சென்னை வாசிகளுக்குச் சொன்னால் புரியும். டப்பாவாலாக்களின் தொழில் இன்று நேற்று உருவானதல்ல. நூற்றாண்டுகளாக தொடரும் தொழில் இது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்கள் அலுவலகங்களில் வேலைச்செய்த நம்மவர்களுக்கு ஆங்கிலேயர்களின் உணவு பழக்க வழக்கங்கள் ஒத்துவராததால் தங்கள் இல்லத்திலிருந்து வீட்டு சாப்பாட்டை எடுத்துவர ஆள் தேவைப்பட்டது. இப்படித்தான் டப்பாவாலாக்களின் தொழில் மும்பையில் ஆரம்பமானது.

மும்பையில் மட்டும் சற்றொப்ப 5000 டப்பாவாலாக்கள் இருக்கிறார்கள். தினமும் 200,000 டப்பாக்களை அவர்கள் எடுத்துச் செல்கிறார்கள். மும்பையில் மின்சாரவண்டிகள், சாலைகள், BEST பேருந்துகள் என்று எங்கும் மனிதர்கள் நிரம்பி வழியும் இடங்களில் தான் அவர்களின் பயணமும் பணியும். காலையில் 9.30 மணிக்கு டப்பாவாலா நம்பர் 1 வந்து வீட்டில் டப்பாவை வாங்கிக்கொண்டு போவார். அவர் கையில் மணிபார்க்கும் கடிகாரம் இருக்காது. ஆனால் அவர் வீட்டு மணியை அடிக்கும்போது சரியாக 9.30 மணியாக இருக்கும். வெள்ளை பைஜமா, வெள்ளை நிறத்தில் தலையில் காந்தி தொப்பி அணிந்திருப்பார். எல்லா டப்பாவாலாக்களுக்கு கிட்டத்தட்ட இது தான் சீருடை மாதிரி.

டப்பாவை சைக்கிளிலோ நடந்தோ எடுத்துச் சென்று அருகில் உள்ள ரயில் நிலையத்தில் காத்திருக்கும் டப்பாநம்பர் 2 டம் சேர்த்துவிடுவார். சாமான்களை எற்றிச் செல்ல அனுமதிக்கப்படும் புறநக்ர் மினசார வண்டிக்குள் டப்பாவாலாவின் டப்பாக்கள் அடங்கிய பெட்டி ஏற்றப்படும். எல்லா டப்பாக்களும் தாதர் ரயில் நிலையத்தில் இறக்கப்படும். அங்கிருந்து டப்பாக்களில் எழுதப்பட்டிருக்கும் குறியீடுகளுக்கு ஏற்ப டப்பாக்கள் வெவ்வேறு ரயில் நிலையங்களில் இறக்கப்படும். என்ன பெரிய குறியீடுகளை வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள். எனக்குத் தெரிந்த நான் பார்த்த சில குறியீடுகள்: சுவஸ்திக், சின்ன வட்டம், வட்டத்திற்குள் மஞ்சள், கருப்பு, சிவப்பு புள்ளிகள், மஞ்சள், சிவப்பு, பச்சை, வெள்ளை நிறத்தில் சாய்வான கோடுகள்… இவ்வளவுதான். இதை வைத்துக்கொண்டு மும்பை மாநகரத்தின் எந்த அலுவலகத்திற்கும் சரியாக பகல் 12.30க்கு சாப்பாட்டுக் கேரியரை வைத்துவிடுவார்கள். அதைப்போலவே பகல் 2 லிருந்து 2.30க்கு காலி டப்பாவை எடுத்துச் சென்று மீண்டும் காலை வந்த வழியே
திரும்பி பயணம். இதில் டப்பாக்கள் மாறி இருக்கிறதா என்று கேட்டால் ,அதிசயமாக இருக்கும் உங்களுக்கு!

(According to a recent survey, there is only one mistake in every 6,000,000 deliveries. efficiency of the process have earned the dabbawallas a six-sigma rating from Forbes magazine. The Six-sigma rating means that they have a 99.99 % efficiency in delivering the lunch-boxes to the right people)

ஆறு மில்லியன் டப்பாவுக்கு ஒரு டப்பா தவறுதலாக சேர்க்கப்பட்டிருக்கும். அதனால் தான் போர்பஸ் இதழ் டப்பாவாலாக்களின் இத்திறமைக்கு அதிக மதிப்பெண்கள் 99.99% வழங்கியுள்ளது.

வேலையில் இருக்கும் போது மதுவருந்தக் கூடாது. சரியான நேரத்தில் வர வேண்டும். ஞாயிறு மட்டுமே விடுமுறை. மாத வருமானம் சற்றொப்ப ரூபாய்.5000. ஒவ்வொரு டப்பா குழுமத்திலும் குறைந்தது 33 பேராவது இருப்பார்கள். மழை, இடி, புயல், வேலைநிறுத்தம், தீவிரவாதிகளின் தாக்குதல்… எது நடந்தாலும் சரி.. இவர்களின் ஓட்டம் நிற்பதில்லை. டப்பாவாலாக்களில் பெரும்பாலோர் ஆரம்பக்கல்வியைக் கூட எட்டாதவர்கள்.

ஒரு முறை டப்பாவை எடுத்துச் செல்லும் போது மும்பை சாலையில் விபத்து ஏற்பட்டது. ஆனால் அந்த டப்பாவாலாவிடம் இருந்த எல்லா டப்பாக்களும் சரியான நேரத்தில் சரியான நபரிடன் சேர்ப்பிக்கப்பட்டது. ஆம்.. டப்பாவாலாவின் விபத்துச் செய்தி பரவ, டப்பாவாலாவின் டீம் லீடர் விபத்துக்குள்ளானவரை மருத்துவ மனையில் சேர்க்கவும் இன்னொரு டப்பா வாலா டப்பாக்களை டெலிவரி செய்யவும் ஏற்பாடு செய்துவிட்டார். டப்பாக்களில் எழுதப்பட்டிருக்கும் (வரையப்பட்டிருக்கும்!) குறியீடுகளை எந்த டப்பாவாலாவும் வாசித்து விட முடியும்.

இந்திய சுதந்திரத்தின் பொன்விழா சிறப்பு மலரில் இந்தியாவின் 50 பெருமைகளில் ஒன்றாக மும்பையின் “டப்பாவாலா” இடம் பெற்ற போது அந்தப் பக்கத்தைப் புரட்டிவிட்டு அலட்டிக்கொள்ளாமல் இருந்தது நினைவுக்கு வருகிறது.

இங்கிலாந்தின் இளவரசர் சார்லஸ் இந்தியா வந்த போது மும்பை டப்பா வாலாக்களுடன் கலந்துரையாடல், புகைப்படம் என்று மும்பை பத்திரிகைகள் பக்கங்களை நிரப்பியபோது ‘சரிதான்.. இதுவும் ஒரு காமெடி சீன் தான்’ என்று ரசித்துவிட்டு மறந்துவிட்டேன். சார்லஸின் (இரண்டாவது) திருமணத்திற்கு இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட இரண்டு நபர்களில் ஒருவராக இருந்தவர்கள் ‘டப்பாவாலா’. மணமக்களுக்கு டப்பாவாலாக்கள் எடுத்துச்சென்ற திருமணப்பரிசு டப்பா, புடவை, காந்தி குல்லா. பி.பி.சி மும்பை டப்பாவாலாக்களைப் பற்றி டாகுமெண்டரி தயாரித்து ஒலிபரப்பியது.

எனவே அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 400 மில்லியன் நஷ்ட ஈடாக அழறதை விட்டுட்டு எங்க ஊரு டப்பாவாலாக்களை வேலைக்கு அமர்த்தலாம்.. வேறு வழியில்லை. டப்பாவாலாக்களைத் தருவித்து குரியீடுகள் குறித்து மேனேஜ்மெண்ட் பாடங்களைச் சொல்லித்தரச் சொல்லலாம்தான். ஆனால் என்ன செய்வது மேனேஜ்மெண்ட் வகையறாக்களுக்கு புரியற மாதிரி ஹைடெக் ஆக எங்க மும்பை டப்பாவாலாவுக்குச் சொல்லிக்கொடுக்கத் தெரியாது! இதுதான் சிக்கல்.

எது எப்படியோ இப்போதெல்லாம் எங்க மும்பையில் பிளாட்பாரத்தில் இடித்துக் கொண்டு ஓடும் டப்பாவாலாவைப் பார்த்தால்
கோபம் வருவதில்லை! பெருமையாக இருக்கிறது!!

எங்க டப்பா வாலாவுக்கு வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமக்கள் எல்லோரும் எழுந்து நின்று ஒரு “ஜே” போடுங்கள்.

“மும்பை டப்பா வாலாவுக்கு ஜே…ஏஏ!!!””


Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை