சீனி பூசிய தாலிபானிசம் – ரூமியின் ‘இஸ்லாம் எளிய அறிமுகம் ‘

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

சூரியா


நேசக்குமாரின் கட்டுரையைப் படித்தேன். ரூமியின் இந்தப் புத்தகத்தைப்பற்றிய இந்த மனஓட்டத்தை என்னிடம் வெளிப்படுத்தியவர்கள் இதற்குமுன்னால் மூவர். மூவருமே எலக்டிரிக் ரயிலில் புத்தகம் படிப்பவர்கள் ஒருவருக்கொருவர் புத்தகம் கொடுப்பார்கள். ஒரே புத்தகம்தான் என்று நினைக்கிறேன். எலக்டிரிக் ரயிலில் எனக்குப் பழக்கமானவர்கள்.

இந்தபுஸ்தகம் அப்படி ஏன் ஒரு ஆர்வத்தை உருவாக்கியது என்றால் இரண்டு காரணங்களைச் சொல்லலாம். அதன் பின்னட்டைக் குறிப்புதான் முக்கியமானது. இஸ்லாம் அமைதியின் மார்க்கம் என்ற அதன் குறிப்பு சராசரி இந்துவுக்கு மிகவும் மனநிறைவை அளிக்கிறது. காரணம் அவன் சராசரி முஸ்லீமிடம் உள்ள பல குணங்களைக் கண்டு அஞ்சிக் கொண்டிருக்கிறான். ஒரு தனிக் குழுவாக தன்னை பிரித்துக் கொள்ளுவது, பிறரிடம் அளவான உறவை கவனமாக வைத்துக் கொள்வது, பிடிவாதமான கண்மூடித்தனமான மத நம்பிக்கைகள், குழுவாகவே சிந்திப்பது, கும்பலாகவே செயல்படுவது , இனவாதச்சார்பு போன்ற பல விஷயங்கள் சராசரி முஸ்லீமிடம் அவன் மனதை கஷ்டப்படுத்துகின்றன. இந்தியாவின் எதிர்காலம் பற்றிய அச்சம் எல்லா இந்துக்கள் மனதிலும் உள்ளது. மதவாதம் பேசும் இந்துத்துவ சக்திகளை இந்துக்கள் நிராகரிப்பது இதன் காரணமாகத்தான்.

இந்நிலையில் ஒரு பகுத்தறிவுள்ள நட்பான சமநிலை உள்ள முஸ்லீமை சந்திக்க அவன் ஏங்குகிறான் . தான் இந்துமதவாதம் போன்றவற்றை நிராகரிப்பதுபோல முஸ்லீம்கள் இஸ்லாமிய இனவெறி மதவாதம் போன்றவற்ரை நிராகரிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறான். அப்படி நிராகரிக்கும் முஸ்லீமை விரும்புகிறான். ஆனால் அப்படி ஒருவரை அவன் சந்திப்பதேயில்லை. இந்துக்களில் உள்ள இடதுசாரிகள் — நான் சொன்ன மூவருமே இடதுசாரிகள்- அப்படிப்பட்ட முஸ்லீம்களுக்காக மிகவும் ஏங்குகிறார்கள். அவர்களை சுட்டிக்காட்டி இந்துத்துவ வாதம் பேசுபவர்களுடன் தர்க்கம் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். அப்படி இஸ்லாமை விளக்கும் நூல் வந்தால் நல்லது என்று நினைக்கிறார்கள். இடதுசாரி இதழ்களில் பலர் இப்போது அடிப்படைவாத இஸ்லாமிய நூலைக்கூட இப்படி அடையாளப்படுத்த முயல்கிறார்கள்.

இந்த நூல் அந்த நம்பிக்கையை உருவாக்கியது. சமிபகாலமாக மிக அதிகமான புஸ்தகங்கள் தமிழில் முஸ்லீம் அமைப்புகளால்தான் போடபடுகின்றன. இஸ்லாம் அமைதிமார்க்கம் போன்ற முழக்கங்களுடன் வரும் இம்மாதிரியான நூல்களை பொதுவாக இந்துக்கள் கண்டுகொள்வது இல்லை. காரணம் அவை மதவெறி அமைப்புகளால் வெளியிடப்படுபவை. ஆனால் இந்தநூல் பொதுவான இந்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஆகவே இதன்மீது ஒரு எதிர்பார்பு உருவானது. அதைப்போல இன்னொரு விஷயம் இந்நூல் ஒரு மத இயக்கவாதியால் எழுதப்படவில்லை ஒரு நவீனக் கவிஞராக அறிமுகமான நாகூர் ரூமியால் எழுதப்பட்டது.

இந்நிலையில் இந்தநூலைப் படிக்க தேள்கொட்டியதுபோல ஒரு துன்பம் அவர்களுக்கு ஏற்படுகிறது. அதைத்தான் நண்பர்கள் ஒரேபோல பகிர்ந்துகொண்டார்கள். அவர்களுக்கு பொதுவாக தோன்றிய கேள்விகள் இவையே. பிற மதங்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில் தவறானவை இஸ்லாம் மட்டுமே எதுவுமே தவறாக இல்லாத முற்றிலும் முழுமையான மார்க்கம் என்பது ஒரு அடிபப்டைவாத மத நம்பிக்கை அல்லவா ? அந்த நம்பிக்கையுடன் எப்படி ஒருவர் விவாதிக்க முடியும் ? இந்நம்பிக்கை கொண்ட ஒருவர் பிறமதங்களுடன் எப்படி உரையாட முடியும் ? மோதல்தானே வரும் ? இஸ்லாம் எப்படி அமைதிமதம் ஆகும் ? இதேபோல இஸ்லாம் தவ்று என்றும் தன்மதம் சரி என்றும் சொல்லும் ஒருவரிடம் இஸ்லாமியர் அமைதியாக பேசுவார்களா ? என் நம்பிக்கை மட்டுமே சரி உன் நம்பிக்கை முற்றிலும் தவ்று இதை நீ ஒப்புக் கொண்டால் நம்மிடையே அமைதி நிலவும் என்றுதானே இதற்கு அர்த்தம் ?

ரூமி தன் நூலில் குர் ஆன் ஒரு வரிகூட மாற்றம் தேவைப்படாததும் எல்லாருக்கும் எக்காலத்துக்கும் உரியதான நூல் என்ற இஸ்லாமிய நம்பிக்கையை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அதை ஐயப்படுவதே துரோகம் என்ற அளவுக்குச் செல்கிறார். நபி செய்த எந்தவிஷயம் மீதும் அவர் எவ்வித விவாதத்தையும் மேற்கொள்ளவில்லை. அப்படி விவாதித்தவர்களை வசைபாடுகிறார்.

ஒரு ஜோக். அரேபிய ஷேக் ஒருவருக்கு ஒட்டகத்துக்கு எத்தனை பல் என்ற சந்தேகம் வந்தது. தன்னுடைய முல்லா மந்திரிகளிடம் கேட்டார். அவர்கள் கூடி அமர்ந்து குரானையும் ஹதீதுகளையும் வைத்து மாதக்கணக்கில் விவாதித்தார்கள். நூல்களில் தெளிவாகச் சொல்லப்படவில்லை. முடிவு எட்டப்படவில்லை. தாங்கமுடியாத ஒட்டகக் காவலாளி சொன்னானாம். ‘வாசலில்தான் இத்தனை ஒட்டகம் நிற்கிறதே ஒன்றின் வாயைத்திறந்து எண்ணிப் பார்த்தால் என்ன ? ‘ அத்தனை முல்லாக்களும் சேர்ந்து ‘மதத்துரோகி ‘ என்று அவன் மீது பாய்ந்தார்களாம். அவனை கொன்றார்களாம்.

இன்னொரு ஜோக். கலிஃபா ஒருத்தர் கான்ஸ்டாண்டி நோபிளுக்கு படையெடுத்துப்போய் அங்குள்ள மாபெரும் நூலகத்தைக் கைப்பற்றினாராம். இங்குள்ள நூல்களில் எவை குரானுக்கு ஆதரவானவை என்றாராம். பாதி நூல்கள் ஆதரவு மீதி நூல்கள் எதிர்ப்பவை என்றாராம் நூலகர். எதிர்ப்பு நூல்களை உடனே எரியுங்கள் அவை மதவிரோதம் என்றானாம். ஆதரவு நூல்களை இரண்டாவதாக எரியுங்கள் குர் ஆன் இருக்க அவை எதற்கு என்றானாம்.

இதே அணுகுமுறைதான் ரூமியின் நூலில் உள்ளது.

இஸ்லாமில் உள்ள அரபு இனமையவாதத்தை ரூமி அப்படியே ஏற்கிறார். இறைவனின் அருள்வாக்கு நேரடியாக அரபுமொழியில்தான் வந்தது ஆகவே அது உயர்ந்த புனிதமொழி போன்ற கூற்றுக்கள் அவரால் எளியமுறையில்கூட கேள்விக்குள்ளாக்கப்படவில்லை.

இன்று சாதாரணமானவர்களுக்கு உள்ள ஐயம் இஸ்லாமிய நாடுகளில் , இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களில் உள்ள சகிப்பே இல்லாத வன்முறை நோக்கு பற்றியதாகும். தாலிபான் ஒரு உதாரணம்தான். இஸ்லாம் பெண்களின் கல்வி மற்றும் சுதந்திரத்தை ஒடுக்குகிறதா, பிற மதங்களை அழிக்கிறதா என்பதாகும். ஏன் பாகிஸ்தானிலும் வங்காளத்திலும் இந்துக்கள் படிப்படியாக அழிகிறார்கள் ஏன் அவர்களுக்கு வெளிப்படையாகவே அடிபப்டை உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பதாகும். இதற்கெல்லாம் சாக்குபோக்கு சொல்ல ரூமி முயல்கிறாரே ஒழிய இந்த வன்முறைகளுக்கு எதிரான குரலே அவரிடம் இல்லை. சன்னமாகக்கூட.

இஸ்லாம் அறிவியலுக்கும் சுதந்திர சிந்தனைகளுக்கும் எதிரான சக்தியாக உலகமெங்கும் விளங்குவதை இந்துக்கள் ஐயப்படுகிறார்கள். ஏன் இன்னும் பரிணாமக் கொள்கையைக்கூட முஸ்லீம்கள் ஏற்கவில்லை, பல நாடுகளில் அது கற்பிக்கப் படுவது இல்லை என்ற கேள்வி உள்ளது. மதம் அதை ஏற்கவில்லை என்பதற்கு அப்பால் வேறு ஏதேனும் அறிவியல் கோட்பாட்டை முஸ்லீம்களால் சொல்ல முடிகிறதா என்ற ஐயம். ரூமியின் நூலில் மேலும் மேலும் குர் ஆன் மேற்கோள்கள் தான் உள்ளன.

இஸ்லாம் மதத்தில் ராடிக்கல்களுக்கு இடமே இல்லாமல் இருப்பதையும் முழுக்கமுழுக்க முல்லா மதமாக அது இருப்பதையும் அவர் கேள்விகேட்கவில்லை. சராசரி மனிதன்மீது மத அமைப்பு — மத நம்பிக்கை அல்ல– இத்தனை கட்டுப்பாடுகளை விதிக்கலாமா என்ற கேள்வி இல்லை.

அமைதியின்மதம் பரவிய மத்திய ஆசியப்பகுதியில் கடந்த ஆயிரத்தி ஐநூறு வருடமாக ஒருநாளும் இனச்சண்டை ஓய்ந்தது இல்லை, ரத்த ஆறு ஓடாத வருடமே இல்லை என்ற வரலாற்று தகவலை அவர் விளக்கவில்லை. இஸ்லாமுக்குள் உள்ள மாபெரும் இனச்ச்ண்டைகளுக்கு குர் ஆன் பொறுப்பல்ல என்றால் சாதிப்பூசல்களுக்கு மட்டும் இந்து மதம் பொறுப்பு என்று மேடைதோரும் இஸ்லாமியர்கள் ஏன் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதை விளக்கவில்லை.

இந்துக்களில் முக்கால்பங்கினர் இந்து அடிப்படைவாதத்தை எதிர்க்கிறார்கள். சிறுபான்மையினரை தங்கள் ஆட்சியாளர்களாக ஏற்கிறார்கள். ஆனால் வங்க தேசத்தில் இந்துச் சிறுபான்மையினரை இஸ்லாமியப் பெரும்பான்மியினர் வேட்டையாடியதைக் கண்டித்த ஒரேஒரு எழுத்தாளர் அதேகாரணத்தால் படுகொலைக்கு பத்வா விதிக்கபட்டு ஊர் ஊர்ராக வேட்டையாடப்படுகிறார். அவரை ஆதரித்தோ அப்படுகொலைகளைக் கண்டித்தோ ஒரேஒரு இஸ்லாமியர்கூட குரல் எழுப்பவில்லை. அதை சொல்லிக்காட்டிய எஸ் வி ராஜதுரை போன்ற மார்க்ஸிஸ்டுகளைக் கூட இங்கே வசைபாடினர். இந்த ஓரவஞ்சனையை ஒரு இடத்தில்கூட ரூமி சுட்டிக்காட்டவில்லை.

எல்லாத்துக்கும் சரியான தீர்வு குர் ஆன் வழி அரசு அமைவதே என்பார்கள் இவர்கள். அப்படி ஒரு அரசு எப்போதாவது அமைந்ததா , அமைக்கப்பட்ட அரசுகள் எல்லாம் தாலிபான் காட்டுமிராண்டித்தனமாகத்தானே அமைந்தன என்ற கேள்விக்கு விடை இல்லை.

இஸ்லாம் அமைதி மார்க்கம் என்றால் தீவிரவாதிகளை மதநீக்கம் செய்து பத்வா விட மதத்தலைவர்களை கட்டாயப்படுத்துங்கள் என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லமுடியாது இவர்களால். சினிமா பார்த்தவர்களை , இந்துக் கோவிலில் சப்பர அலங்காரம் செய்தவர்களை மதநீக்கம் செய்கிறீர்களே அதேபோல செய்யலாமே. மாறாக தீவிரவாதிகள் தனி மத கெளரவத்துடன் தியாகிகளாக அடக்கம் செய்யப்படுகிறார்கள். ரூமி அதைப்பற்றி ஏன் சொல்லவில்லை ? தீவிரவாதிக்கு மசூதியில் சவ அடக்கம் செய்ய முடியாது என சொல்லுங்கள். இஸ்லாம் அமைதிமார்க்கம் என நம்பலாம்.

அடிப்படைவாதத்தை எவ்வகையிலும் இந்நூல் கண்டிக்கவில்லை. மாறாக இஸ்லாமிய அடிப்படைவாதம் அமைதியை நோக்கமாகக் கொண்டது என்று நிறுவ முயல்கிறது. அதை மற்றமதத்தினர் ஏற்கவேண்டும் என்று வாதாடுகிறது.

மொத்தத்தில் ரூமியின் நூல் கடந்த பதினைந்தாண்டுகளில் உலகமெங்கும் சீராகப் பரப்பப்படும் வஹாபிய மதவெறிக் கருத்துக்களை ‘மென்மையான ‘ மொழியில் சொல்ல முயல்கிறது. இதுகூட சமீபகாலமாக உள்ள ஒரு போக்குதான். இது இந்துக்களைக் குறிவைத்து பேசப்படுவதனால்தான் இந்த ‘மென்மை ‘ . காரணம் கடுமையாகச் சொல்லப்போனால் அது இந்துத்துவ வாதிகளுக்கு சாதகமாகப் போய்விடுமல்லவா ? மானுட வசந்தம் போன்ற இஸ்லாமியப் பிரச்சார நிகழ்ச்சிகளில் இந்த மென்மையைக் காணலாம். ஆனால் இஸ்லாமியர்களுக்கான நூல்களில் இந்த மென்மை இருக்காது. அங்கே அப்பட்டமான மதவெறியும் வெறுப்புமே பிரச்சாரம்செய்யப்படும். ஜிகாத் என்றால் இந்துக்களிடம் பேசும்போது ஒரு பொருள். மசூதியில் வேறு ஒரு பொருள்.

இது ஒரு போர்த்தந்திரம் மட்டுமே

***

இவ்வகையான அறிவுஜீவிகள் எப்போதுமே வன்முறையையும் வெறியையும் வெள்ளைபூசவே பயன்படுகிறார்கள் என்பதே உண்மை.

அப்துற் ரஹீம் என்ற பேரறிஞர் எழுதிய இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் என்ற புகழ்பெற்ற தமிழ் நூலில் ஈடி அமீன் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிரது என்பதைக் காணலாம். ஏறத்தாழ மூன்று பக்கம் கொண்ட இக்குறிப்பில் ஈடி அமீன் மிக மிக புகழ்ந்து குறிப்பிடப்பட்டுள்ளார். [ ஒளரங்கசீப் முதல் அனைத்து இஸ்லாமிய வரலாற்று நாயகர்களும் மிகவும் சாதகமாகவே சொல்லப்பட்டுள்ளனர் ]

ஈடி அமீனின் குடும்பம் பிறப்பு முதலியவை சொல்லப்படுகின்றன. பிறகு ‘ இவர் படிப்படியாக முன்னேறி 1962 அக்டோபர் மூன்றாம்நாள் உகாண்டா சுதந்திரம் பெற்றபோது அதன் பிரதம தளபதியாகவும் அதிபர் மில்டன் ஒபாட்டேயின் வலதுகரமாகவும் ஆனார். 1971ல் ஜனவரி மாதத்தில் சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள மில்டன் ஒபோட்டே சென்றிருந்தபோது இவர் ராணுவப்புரட்சியை செய்து ஆட்சியைக் கைப்பற்றி உகாண்டாவின் அதிபர் ஆனார்.

இவர் உகாண்டாவின் அதிபர் ஆனதை அண்டையிருந்த கிறிஸ்தவ நாடுகள் விரும்பவில்லை. அவ்விதமே ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் விரும்பவில்லை. எனினும் இவர் தம் மக்களால் தாதா [தந்தை] என்று அழைக்கப்படுகிறார். ‘ ‘

இதன் பிறகு அவரது செயல்கள் புகழ்ந்துரைக்கப்படுகின்றன. 1972ல் ஆசியர்கள் துரத்தப்பட்டதை பாராட்டாகச் சொல்லி ‘ இதுகண்டு உலகமே கூக்குரலிட்டது ‘ என்கிறார் ரஹீம். டான்சானியாவின் படை தாக்கவந்தபோது அதை ‘முறியடித்து வாகைசூடினார் ‘ என்று அமீனை புகழ்ந்து உரைக்கிறார்.

ஆரம்பத்தில் இஸ்ரேலில் இவர் பயிற்சி பெற்றார் என்பதை சொல்லும் ரஹீம் பிறகு கடாஃபியை சந்தித்த பிறகு இவர் இஸ்ரேலிய எதிர்ப்பாளராக ஆகி இஸ்ரேலிய தூதரகங்களை மூட உத்தரவிட்டார் என்கிறார்.

‘ ‘ … இதன் பிறகு யூதர்களை நன்கு விளங்கிக் கொண்ட இவர் ‘ இரண்டாவது உலகப்போரின்போது ஹிட்லர் அறுபது லட்சம் யூதர்களை தீயிட்டுக்கொன்றது சரியான செயலேயாகும் ‘ என்று கூறினார். ‘ ‘

1974ல் இவர் மக்கா சென்று ஹஜ்ஜு கடமையை நிறைவேற்றிவந்தார் என்று சொல்லும் ரஹீம் ‘ ‘ அனைத்துலக அடிப்படையில் முஸ்லீம்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு நிறுவனம் வேண்டும் என்றும் அதன் தலைவராக இருக்க மன்னர் ஃபெய்ஸலே முழுக்க முழுக்க பொருத்தமானவர் என்றும் இவர் கூறினார் ‘ ‘ என்கிறார்

‘ ‘ இவர் ஆழ்ந்த மதபக்தி உள்ளவர்.அரசாங்க அதிகாரிகளும் ஊழியர்களும் தம் மதக்கடமைகளை பேணிநடக்கவேண்டும் என்றும் இல்லையேல் அவர்களுக்குதண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார். ‘நம் முன் எதிர்ப்படும் பிரச்சினைகளை சமாளிக்க இறையருள் இன்றியமையாததாகும் ‘ ‘ என்றும் இவர் கூறினார்.

‘ ‘இவருக்கு 12 அண்மக்களும் 6 பெண்மக்களும் உள்லனர் . இதுவும் ஒரு சாதனைதான் என்று கூறினார் இவர் ‘ ‘

‘ ‘இவரைக் கொல்ல பல சதிகள் நிகழ்ந்துள்ளன.ஆஅனால் அவற்றிலிருந்தெல்லாம் இவர் தப்பினார். ‘ ‘நான் சாக வேண்டுமென எப்போது இறைவன் விதித்துள்ளானோ அப்போதே நான் சாவேன்.அதுவரை எவராலும் என்னைக் கொல்ல முடியாது ‘ ‘ என்றார். ‘ ‘

**

சராசரி இஸ்லாமிய அறிஞர்களிடம் உள்ள அப்பட்டமான மதவெறி , ஏன் கொலைவெறி போன்றவற்றைச் காட்ட இந்தக் கலைக்களஞ்சியமே போதுமானதாகும். இநூல் முழுக்க பிற மதத்தினர் ‘உருவத்தொழும்பர் ‘ என்றே சொல்லப்பட்டுள்ளனர். [ தொழும்பர் :இழிந்தவர்]

வரலாற்றை தங்கள் இனவாத நோக்கத்துக்கு ஏற்ப எப்படியும் திரிக்கும் இயல்பும் அதில் தயக்கமே இல்லாத தன்மையும் இவர்களுக்கு உண்டு. சிறிய அளவில்கூட தங்கள் தரப்பை விமரிசனம் செய்யாத தன்மை இவர்களின் குணம். ஜின்னாவை ரூமி புகழ்கிறார் என்றால் ஆச்சரியமே இல்லை. ஒருவன் முஸ்லீமாக இருந்தால் அவனை அவர் புகழ்ந்தே ஆகவேண்டும். அவர் இடி அமீனைக்கூட புகழாமல் இருக்க முடியாது.

கவிஞர் ஆனாலும் முல்லா ஆனாலும் எல்லாம் ஒன்றுதான். கல்லில் நார் உரிக்க கனவுகாணும் நண்பர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்

—-

suurayaa@rediffmail.com

Series Navigation

சூரியா

சூரியா