நவீன மதவாதத்தின் முகங்கள்

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

சூரியா


விரும்பியதல்ல என்றாலும் மீண்டும் திண்னையில் சில விஷ்யங்களை சொல்லத்தோன்றியது. அது ரவி சீனிவாஸ் , ரோசா வசந்த் ஆகியோரின் பேச்சுகளில் உள்ள மதவெறி மனநிலை குறித்து.

அ] கண்ணன்,சோக்கல் விவகாரம் :

இங்கே அள்ளி இறைக்கப்பட்டுள்ள சொற்களை தவிர்த்து சுருக்கிப்பார்க்கிறேன்.

பின்னணி

1] சோக்கல் பின்நவீனத்துவ கட்டுரைகளின் பாணியை போலிசெய்து ஒரு கட்டுரை எழுதுகிறார் 2] அதை உயர்தர அதிகாரபூர்வ பின்நவீன இதழ் ஒன்றுக்கு அனுப்புகிறார் 3] அவர்கள் அதை பலமாதகால ஆராய்ச்சிக்கும் பரிசீலனைக்கும் பிறகு வெளியிடுகிரார்கள் 4]சோக்கல் தான் எழுதியது பொய்க்கட்டுரை என்று அறிவித்து பின்நவீனத்துவம் ஒரு போலி அறிவுத்துறை அதற்கு தனக்குரிய மெய்காண்முறை இல்லை என்று நிறுவுகிறார்.5] இது சோக்கலின் தந்திரம் என்று புகழ்பெறுகிறது. மார்க்ஸியர்களுக்கு உற்சாகம் அளித்த விஷயம். அவர்கள் உலகமெங்கும் அதைபேசுகிறார்கள் 7] இந்து இதழில் அது குறித்து பலகட்டுரைகள் வந்தன. ஜெண்டில்மேன் இதழ் வெளியிட்டது. தமிழ்சிற்றிதழ்களிலும் பேசப்பட்டது 8] நடைமுறையிலும் கல்வித்துறைக்குவெளியே குறியியல் , மொழியியல் அதற்கிருந்த கவற்சியை இழக்க இது காரணமாக அமைந்தது. உண்மையிலேயே இது பின்நவீனத்துவத்துக்கு பெரிய அடிதான்

விவாதம்

1] சோக்கலின் கட்டுரையை பின்நவீனத்துவத்தை பேசும் கட்டுரை என்று நம்பி சுருக்கி மொழிபெயர்த்து கறுப்பு இந்த கட்டுரையை வெளியிடுகிறது 2] பி நவீனத்துவத்தை அலசி ஆராய்ந்த அறிஞர்களாக தங்களை சொல்லிக் கொள்ளும் கறுப்பு இதழின் ‘மேற்பார்வையாளர்களான ‘ அ.மார்க்ஸ் பொ வேல்சாமி முதலியோர் இதை கண்டுபிடிக்கவில்லை 3] வாசகர்கள் அதைக் கண்டு கறுப்பு இதழுக்கு எழுதுகிறார்கள் 4] காலச்சுவடு கண்ணன் இதைப்பற்றி எழுதி , இக்கட்டுரையை கூட அடையாளம்தெரிந்துகொள்ள முடியாத இவர்களின் வாசிப்புத்தகுதியை கேள்விக்குள்ளாக்குகிறார்

நடப்பது என்ன ?

ரவி சீனிவாஸ் கண்ணனை வசைபாடி கறுப்பை ஆதரித்து எழுதுகிறார். அவர் என்னென்ன சொல்லியிருக்கலாம் ? 1] கறுப்பு வெளியிட்ட கட்டுரை சோக்கலின் அந்த கட்டுரை அல்ல 2] கறுப்பு ஆசிரியர்குழு அதை தெரிந்தே வெளியிட்டது 3] அக்கட்டுரை பின் நவீனத்துவக்கட்டுரைதான். சரி , இதையெல்லாம் சொல்லாமல் பின் நவீனத்துவ பானியில் அக்கட்டுரையை அப்படி வாசிக்கலாம் என்றாவது சொல்லியிருக்கலாம். நானாக இருந்தால் அக்கட்டுரையை அவர்கள் சுருக்கியதே ஒரு மாற்றுவாசிப்புதான் என [விதண்டா] வாதமாவது செய்திருப்பேன்

ரவி சீனிவாஸ் என்ன சொல்கிறார் ? சோக்கல் அக்கட்டுரையில் வேறு பல விஷயங்களை சொல்கிறாரே என்கிறார் . சரி அதனால் என்ன ? சோக்கல் சுந்தர ராமசாமி புகழும் ஒரு கட்டுரையாளரை மறுக்கிறாரே என்கிறார். சரி அதனால் என்ன ? கண்ணனுக்கு சோக்கல் பற்றியும் பின்நவீனத்துவம் பற்றியும் ஒன்றும் தெரியாது என்கிறார். சரி அதனால் என்ன ? காலச்சுவடு பல தப்பான கட்டுரைகளை வெளியிட்டுள்ளதே என்கிறார். அதனாலும் என்ன ?

அடிப்படை கேள்வி கறுப்பு ஆசிரியர் குழு அவர்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பின்நவீனத்துவத்தை படித்திருக்கிறார்களா, குறைந்தது அடிப்படை கேள்விகளிலாவது அறிமுகம் உண்டா என்பதே.னப்படி இல்லையென்றால் அவர்கள் சொன்ன பிற கருத்துக்களுகு உரிய மதிப்பு என்ன என்பதே. அதற்கு என்ன பதில் ? ஒன்றுமில்லை. ஆனால் ரவி சீனிவாஸ் பக்கம் பக்கமாக எழுதுகிறார். கூகிள் மூலம் கிடைக்கும் எல்லா இணையதள முகவரிகளையும் அளிக்கிறார். இதென்ன விவாதம் ? இப்படித்தான் இவர் சொல்லும் ‘உலக அறிவுத்தளங்களில் ‘ விவாதங்கள் நடக்கின்றனவா ?

++++++++++++++++++++

ஆ] நீலகண்டன் அரவிந்தன் விவகாரம்

பின்னணி

1] நீலகண்டன் அரவிந்தன் குவாண்டம் அறிவியல் பற்றி ஒரு கட்டுரை எழுதுகிறார். 2] அதில் அறியும்பொருள் அறியும்முறையை சார்ந்தே உள்ளது என்ற கருத்து சாங்கியம்- பெளத்தம் நிகழ்த்திய விவாதம் போல இருக்கிறது என்று டேவிட் ஹாரிஸன் சொன்ன வரியை மேற்கோள் காட்டுகிறார்.

விவாதம்

ரோசா வசந்த் அதை ஓர் இந்துமதவாத சதியாக காண்கிறார். அவர் என்ன சொல்லியிருக்க வேண்டும் 1] அந்த அறிவியலாளர் அப்படி சொல்லவில்லை . 2] அவர் சொன்னதை அ. நீலகண்டன் திரிக்கிறார் 3]குவாண்டம் இயற்பியலுக்கும் கீழை சிந்தனைகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை . 4] அது குறித்து அறிவியலாளர் எதுவும் சொன்னது இல்லை

ஆனால் ரோசாவசந்த் என்ன சொல்கிறார் 1] நீலகண்டன் அரவிந்தன் அவ்வரியை மேற்கோள் காட்டியது தவறு, உள்நோக்கம் கொண்டது . 2] அம்மேற்கோளை சொல்லிய டேவிட்ஹாரிசன் ஒரு அறிவியலாளரே அல்ல . [அதற்கு ஆதாரம் ? அவர் அம்மேற்கோளை சொல்லியதுதான் ! . இதுதான் மதவாத தர்க்கம். என் மத நூலை மடையர்களும் பாவிகளுமே மறுக்கமுடியும். அவர்கள் மறுப்பதே அவர்கள் பாவிகள் மடையர்கள் என்பதற்கு ஆதாரம்] எந்த மேலோட்டமான வாசகனும் இணையம் மூலம் டேவிட் ஹாரிஸன் ஒரு முக்கியமான அறிவியலாளர் என்று காணமுடியும். ஆனால் ரோசாவுக்கு இது ஒரு பொருட்டே அல்ல. டேவிட் ஹாரிசன் ஆர் எஸ் எஸ் காரராக இருப்பாரோ என்று சந்தேகம் வேறு [ மதவாதம்.! என்னை மறுப்பவர் என் எதிரியை ஏற்பவரே]

ரவி சீனிவாஸ் இங்கே நுழைகிறார். இணையதளங்களின் பல்லாயிரம் விலாசங்களை கையில் வைத்திருக்கும் அவர் ரோசாவை திருத்தியிருக்கவேண்டும். செய்வது என்ன ? நீ அரவிந்தனை திருத்த முயல்கிறார் . எப்படி ? 1] அறிவியலில் கீழை தத்துவமரபுகளுக்கும் நவீன அறிவியல் கோட்பாடுகளுக்கும் உறவின் நீட்சி இருப்பதாக சில அறிவியலாளர் சொல்லியிருக்கலாம், ஆனால் அது அறிவியலில் ஏற்கப்பட்ட கோட்பாடு அல்ல. 2] பெரும்பாலான அறிவியலறிஞர்களுக்கு கீழைதத்துவமே தெரியாமல் இருக்கக் கூடும் 3] அப்படி நீட்சி இருப்பதாக சொன்னவர்களை /சொல்பவர்களை கூடுமானவரை நம்பக்கூடாது . இதெல்லாம் அவரது வாதங்கள்

மூச்சு முட்டுகிறது இந்த சர்ச்சை . எளிய வாசகனுக்கு தெரியும் சில உண்மைகள் , இணையதளமுகவரி சேர்ப்பாளர்களுக்கு புரியாதவை இதோ

1] தத்துவம் , அது கீழையொ மேலையோ ஒருபோதும் அறிவியலின் செய்முறைதளத்துடன் உரையாடுவது இல்லை. அறிவியலின் முன் ஊகக் கோட்பாட்டு தளத்துடன் அல்லது அறிவியலின் தத்துவத்துடன்தான் அது உரையாடுகிறது . அதாவது கோட்பாடுகளுக்கு அவசியமான ஊகங்களை உருவாக்கும்போது அச்சிந்தனையின் மிக விரிவான பகைப்புலமாக தத்துவ சிந்தனை செயல்படுகிறது. கலாச்சாரத்தின் பல விஷயங்கள் அப்படி பகைப்புலமாக செயல்படுகின்றன. ஆகவே பிளேட்டோவையே போதுமான அளவுக்கு தெரியாதவர்களாக பெரும்பாலான அறிவியலாளர் இருக்கலாம். அதனால் தத்துவத்துக்கும் அறிவியலுக்கும் தொடர்பில்லை என்று சொல்லிவிடமுடியுமா என்ன ?

2] மேலை அறிவியலின் பின்புலமாக இருந்த கிரேக்க தத்துவமரபுடன் கூடவே இப்போது இந்தியசீனதத்துவ மரபுகளும் இடம் பெறுகின்றன . இது திட்டவட்டமான கூற்றுகள் மூலம் மேலை அறிவியலின் மேதைகள் ஒப்புக் கொண்ட விஷயம். நீலகண்டன் அரவிந்தன் சொன்னது இதுமட்டுமே.

3] எந்த இடத்திலும் அவர் நவீன இயற்பியலின் கண்டுபிடிப்புகள் எல்லாமே கீழை சிந்தனைகள் சார்ந்தவை என்று சொல்லவில்லை. அப்படி இங்கு உள்ள பொருட்படுத்த தக்க எவருமே சொன்னதும் இல்லை , சுஜாதாகூட! நவீன இயற்பியலின் அடிப்படைகள் கீழைமரபுடன் பிணைக்கமுடியாதவை என்று கூட சொல்லவில்லை. மாறாக கீழைஞானத்தை புறக்கணிக்க முடியாது என்கிறார்கள்.

4] கீழைச்சிந்தனைகள் இவ்வாறு நவீன அறிவியல் விவாதங்களின் தளத்துக்குள் வருவதனால் அவற்றை இங்குள்ள சிந்தனையாளர்கள் பொருட்படுத்தவேண்டும் பயில வேண்டும் என்று இங்கே பலர் சொல்வது போல நீலகண்டன் அரவிந்தனும் சொல்கிறார். முக்கியமான இடதுசாரிகள் அப்படி சொல்லியிருகிறார்கள். நான் கேள்விப்பட்டது சரியென்றால் இ எம் எஸ் நம்பூத்ரிப்பாடு தேபிபிரசாத் சட்டோபாத்யாய ஆகியோர்சொல்லியிருக்கிறார்கள்

5] இங்கே ஆரம்ப அளவில்கூட இந்திய சிந்தனை மரபு கல்வித்துறையில் அறிமுகப்படுத்தப்படாத நிலையில் , பட்ட மேற்படிப்பு படித்த மாணவன் கூட சாங்கியம் என்ற பெயரையே கேட்டிருக்கமாட்டான் என்றநிலையில் இந்த கருத்து முக்கியமானது. ஒட்டுமொத்தமாக மதக்குப்பை என்றெல்லாம் இச்சிந்தனைகளை உதாசீனம் செய்வதும்சரி , அவற்றைப் பயில எண்ணும் எளிய முயற்சிகளைக்கூட மதமீட்பு என்று முத்திரைகுத்தி கீழ்த்தர அரசியலுக்கு ஆளாக்குவதோ தவறு என்ற கருத்தும் இன்று வலிமைபெற்றே வருகிறது.

இங்கேதான் மதவாத மனநிலை என்று நான் சொல்வது வருகிறது . கண்மூடித்தனமான நம்பிக்கையாக ஓரு நிலைபாட்டை எடுத்தல். அதை அப்படியே கண்மூடித்தனமாக நம்பி அதை சார்ந்தே சிந்தித்தல். தர்க்கங்களை வளைத்து அதற்கு கொண்டு செல்லுதல். அப்பட்டமான உண்மைகளைக்கூட காணாமலிருத்தல். எல்லா எதிர்தரப்பையும் தனக்கு சாதகமாக திரித்து அதற்கு பதில் சொல்லுதல். . தன் ஆள் என்றால் எதையுமே ஏற்றல் ‘மாற்றான் ‘ என்றால் அவன் என்ன சொன்னாலும் அதை முமுமூச்சாக மறுத்தல் . மாற்றானை அடிமுட்டாள் , சதிகாரன் என்றெல்லாம் முத்திரை குத்துதல் — இதெல்லாம் தான் மதவாத மனநிலை. ரோசா வசந்த் , ரவி சீனிவாஸ் ஆகியோரிடம் காண்பது இதுதான்.ஆகவே இவர்களிடம் பேசுவதே வியர்த்தம். கண்மூடித்தனமான வெட்டித்தர்க்கம் மீண்டும் மீண்டும் வரும்.- இந்த 25 வருட தமிழிலக்கிய விவாதங்களில் கண்ணனிடம் ரவிசீனிவாஸ் நடத்துவதே சிறந்த வெட்டிவிவாதம் என உறுதியாக சொல்வேன்

இதில் பெரியாரியர்களிடம் உள்ளது மூடத்தனமான ஒரு வேகம். இந்தியாவின் மரபு ‘மதக்குப்பை ‘ என்று பெரியார் சொல்லிவிட்டார் . அது ‘இறக்கியருளப்பட்ட வேதம் ‘ அதை மறுப்பவன் ஒன்று முட்டாள் அல்லது அயோக்கியன். ஆகவே அது குப்பைதானா என்றறியக்கூட அதை படித்துப்பார்க்கவேண்டியது இல்லை. சாங்கியம் பெரியார்கூட ஏற்றுக்கொள்ளக் கூடிய பொருள்முதல்வாதத் தன்மைகொண்ட , இறைக் கோட்பாடே இல்லாத சிந்தனை என்பது கூட தெரிந்திருக்கவேண்டாம். பெளத்தம் ஆன்மீகமான நாத்திகம் ஒன்றை முன்வைப்பது என்று கூட தெரிந்திருக்கவேண்டாம். எல்லாமே ஒட்டுமொத்தமாக இந்துமத, உயர்சாதி, பழங்குப்பைகள். கொளுத்து . இதுதான் மதவெறி. இதைத்தான் பெரியார் உண்டுபண்ணினார் . ஆக்கபூர்வமான எந்த விவாதமும் நடக்கமுடியாதபடி இந்த மண்னை மாற்றிவிட்டு போய் சேர்ந்தார்! பெரியார்மதமே இன்று தமிழ்நாட்டில் உள்ள மிகக் கண்மூடித்தனமான மதம்!

எங்கல்சும் ரவிசீனிவாசும்

ரவி சீனிவாஸ் மீண்டும் ‘ஒரு எழுத்தாளர் ‘ பற்றி எழுதியுள்ளார். அக்கட்டுரையில் ‘ஒரு எழுத்தாளர் ‘ எங்கல்ஸின் மேற்கோள் ஒன்றை சுட்டிக்காட்டி பழந்தமிழ்நாட்டில் தாய்வழி சமூகம் இருந்திருக்கலாம் என்கிறார் . [இருந்தது என்றல்ல. ] ரவிசீனிவாஸ் சொல்கிறார்: எங்கல்ஸின் கோட்பாடும் அதற்கு அடிப்படையாக அமைந்த மார்கனின் மானுடவியலும் மறுக்கப்பட்டுவிட்டது , ஆகவே எங்கல்ஸின் நூல் தவறாக ஆகிவிட்டது. ‘இதைக்கூட தெரியாமல் ‘ அந்த அப்பாவி எழுத்தாளர் எங்கல்ஸை மேற்கோள் காட்டியிருக்கிறார். இந்த உண்மையை சொல்லும் தார்மீக பொறுப்பு அறிஞரான ரவி சீனிவாசுக்கு வந்துள்ளது.ஆனால் இப்புனிதகடமையை அவர் செய்தால் அவரை பேராசிரியர்கள் பழிக்கிறார்கள். பாவம்தான்.

தமிழவனின் ‘ஸ்டக்சுரலிசம் ‘ நூல் பற்றி ஜெயமோகன் எழுதிய ஒரு குறிப்பு நினைவுக்கு வருகிறது. அந்நூலில் ஆரம்பம் முதலே தமிழவன் உற்சாகம் பொங்க அமைப்பியல் எப்படி பழைய ‘பாடாவதி ‘ சிந்தனைகளை ‘குப்பைக்கூடைக்குள் ‘ தள்ளிவிட்டது என்பார் . கருத்துமுதல்வாத புது பிளேட்டோவாதம் , ஹெகலிய வரலாற்றுவாதம் , ஃபினாமினாலஜி எல்லாம் பழைய புத்தகக் கடைக்குள் சென்று சேர்ந்தன என்றவரி பிரபலமானது . முதல் அத்தியாயத்தில் இதற்கு சமானமான வரிகள் மட்டுமெ 14 வருகின்றன .அமைப்பியல் வெள்ளம் அனைத்தையும் கழுவி விட்டது என்றார் அவர். ஆனால் துரதிருஷ்ட வசமாக அந்நூல் எழுதிமுடிப்பதற்குள்ளாகவே புதுவரலாற்றுவாதம் தலைதூக்கியது . ஹெகல் மேலும் முக்கியமாக ஆனார். அமைப்பியல் உள்ளிட்ட சிந்தனைகள் எல்லாமே நிரூபணவாதத்துக்கு எதிரானவை [anti empirical ] என்ற புரிதல் இல்லாமல் அவை பலவற்றை முழுமுற்றாக ‘நிரூபித்து ‘ விட்டன என்று நம்பியதே தமிழவனின் பிழை. இது ‘வெள்ளைக்காரன் சொல்றான்பா ‘ என்று படித்து பழகிய நம்முடைய கிராமிய மனநிலை. என்ன படித்தாலும் சிலருக்கு இது அழிவது இல்லை .

எங்கல்ஸின் கோட்பாடுகளுக்கு அடிப்படையான மார்கனின் மானுடவியலை மறுக்கும் 10 கோட்பாடுகளாவது மானுடவியலில் வந்து விட்டன.இதெல்லாம் எல்லாருக்குமே தெரிந்தவை. தமிழில் கூட பேசபப்ட்டவை கடைசியாக வந்து பேசப்பட்ட லெவி ஸ்ட்ராஸின் அமைப்புவாத மானுடவியலும் டான் ஸ்லேட்டர் , நாம் சாம்ஸ்கி போன்றோரால் மறுக்கப்பட்டுவிட்டது . நாம் சம்ஸ்கியோ ஸ்டாவன் பிங்கரோ இன்றைய தொகுப்புமுறை உளப்பகுப்பாளர்களால் மறுக்கப்பட்டுவிட்டார்கள் . . மறுக்கப்பட்டவையெல்லாம் பொய்ப்பிக்க்ப்பட்டவை அல்ல . அப்படிப்பார்த்தால் மறுக்கப்படாத எந்தக் கோட்பாடுமே சமூக அறிவியல் தளங்களில் இல்லை என்பதை இத்துறைகளில் அறிமுகம் உள்ளவர்கள் அறிவார்கள். லெவி ஸ்ட்ராஸ் மிக விரிவாக ஆதார பூர்வமாக மறுக்கப்பட்டாலும்கூட [அவர் தன் முடிவுகளை செவ்விந்தியர்களை சார்ந்தே உருவாக்கினார்.]அவரது கோட்பாடு அழிந்து போவது இல்லை. ஏன், எங்கல்ஸின் எல்லா கோட்பாடுகளும் மறுக்கப்பட்டுவிட்டனவே. அவர் காலாவதியானவரா என்ன ? மறுக்கவே படாத எந்த சிந்தனை உலகில் உள்ளது ?

சமூக அறிவியல் தத்துவம் போன்ற துறைகளில் கோட்பாடுகள் என்பவை ‘பார்வைகள் ‘ மட்டுமே. அவை நிரூபிக்கப்பட்டவை அல்ல. ஆகவே நிராகரிக்கப்பட்டவையும் அல்ல. மறுப்பு என்பது இத்துறைகளில் உள்ள டைலக்டிகல் வளர்ச்சியின் விளைவேயாகும். ஒன்றையொன்று மறுத்தே இவை முன்னகர முடியும்.

எங்கல்ஸ் மறுக்கப்பட்டார். ஆகவே நிகழ்ந்தது என்ன ? எங்கல்ஸ் தந்தைவழி சமூகங்களுக்கு முந்தையதாக தாய்வழி சமூகங்கள் இருக்குமென்பதை ஓர் உலகளாவிய சமூகவியல் விதியாக காணமுயல்கிறார். இது மறுக்கப்பட்டது. ஆனால் தாய்வழி சமூக அமைப்பு உண்மையிலேயே இருக்கும் இடத்தில் அவரது ஆய்வுமுறை பயன்தருவதே .மறுக்கப்பட்டமையால் ஸ்ட்ராஸ் மானுடவியல் ஆய்வுகளில் மேற்கோள் காண்பிக்கப்பட்டமல் இல்லை. எங்கல்ஸின் சமூகப்பரிணாமவாதமும் சரி, ஸ்ட்ராஸின் அமைப்புவாதமும் சரி கருவிகள் மட்டுமே. ஒரு குறிப்பிட்ட நோக்கை உருவாக்க, ஒரு இடத்தை விளக்க அவர்கள் உதவுகிறார்கள். அக்கட்டுரையில் அவ்வாசிரியர் எங்கல்ஸில் இருந்து அந்தக் கோணத்தை ‘தொடங்கலாம் ‘ என்கிறார். எங்கல்ஸே ஆதாரம் என்று அல்ல.

முன்சொன்ன கட்டுரையில் கட்டுரையாசிரியர் 1] கேரளம் புராதன தமிழ்ப்பண்பாடு கொண்ட , புவியியல் இயற்கை காரண்ககளினால் வளர்ச்சிதடைபட்டு நின்ற நிலப்பகுதி என்கிறார் 2] அங்கே நூறுவருடம் முன்புவரை தாய்வழி சமூக அமைப்பு இருந்தது என்று சொல்லி அதன் பலத்தனித்தன்மைகளை அளிக்கிறார் 3] எங்கல்ஸை மேற்கோள்காட்டி தந்தைவழி அமைப்பு வருவதற்கு முன்பு தமிழகத்திலும் தாயவ்ழி சமூக அமைப்பு இருந்திருக்கலாம் என்கிறார் 4] அதன்மூலம் தமிழ் பழைய மரபில் உள்ள நெகிழ்வான பாலியல் ஒழுங்கு, பரத்தையர் என்ற தனி சமூகம் போன்றவை எழுப்பும் வினாக்களுக்கு பதில் சொல்லலாம் என்கிறார் 5] தமிழில் உள்ள எண்ணற்ற பெண்தெய்வங்கள் , அன்னைவழிபாடு முதலியவற்ரை அவை தாய்வழிசமூக எச்சங்கள் என விளக்கலாம் என்கிறார் 6] தாய்வழிச்சமூக மனநிலைகள் இலக்கியத்தை தீர்மானிக்கும் அடிப்படைக் கூறுகளாக உள்ளந என்கிறார்.

இது ஒரு கோணம் . இது நம் பண்பாடு குறித்த ஒரு வாசிப்பை அளிக்கிறது. இதை வாசிக்கும் எவருமே இதனுடன் முரண்பட்டு விவாதித்து அந்த டைலக்டிகலான இயக்கம் மூலம் ஒரு முடிவை அடைகிறார்கள். இதை பொய் என்றோ மெய் என்றோ புறவயமாக ‘நிரூபிக்க ‘ இயலாது . இதன் தளத்தில் இதன் தர்க்க அமைப்பையே கையாண்டு மறுக்கலாம். எப்படி ? 1] கேரளம் தமிழ் பண்பாட்டுடன் தொடர்பில்லாதது என்று சொல்லலாம் 2] தமிழகத்தில் தாய்வழிபாடு இருந்திருக்கவே நியாயமில்லை என்று மறுக்கலாம் 3] பாலியல் ஒழுங்கு பரத்தையர் அன்னைவழிபாடு முதலியவ்ற்றுக்கு வேறு ஒரு விளக்கம் அளிக்கலாம்.

அப்போதுகூட முதல் தரப்பு பொய்ப்பிக்கப்படுவது இல்லை .அதன் மறுதரப்பாக இது நிற்கும் . இருதரப்பும் இணைந்து உருவாகும் டைலக்டிகலான ஒரு விவாதமே அடுத்த கட்டம் நோக்கி போகும். இதுதான் எப்போதுமே நிக்ழவது.

ஒரே ஒரு விதத்தில் மட்டுமே ரவிசீனிவாஸ் சொன்னது சரியாகும் . தாய்வழி சமூகமே தந்தைவழிச் சமூகத்தின் முன்னோடி என்பது பொதுவிதி என்று எங்கல்ஸ் சொன்னதை மட்டுமே ஆதாரமாக கொண்டு , அதற்கு சாத்தியமே இல்லாத ஒரு இடத்தில் இந்த ஆசிரியர் இந்த ஊகத்தை நிகழ்த்தியிருந்தால் தான் அது. . அப்படி நிகழவில்லை . அவர் சமீப கேரள யதார்த்தத்தையே ஆதாரமாக கருதுகிறார் .

இப்படித்தான் ரவிசீனிவாஸின் விவாதங்கள் நடக்கின்றன. சோக்கல்- கறுப்பு விவாதத்தில் ஒரு அப்பட்டமான அறியாமையை மறைக்க அவர் எடுக்கும் யத்தனங்களை கவனியுங்கள் . அதேசமயம் சமூக அறிவியல் மற்றும் தத்துவ விவாதத்துக்கும், அறிவியல் விவாதத்துக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாடு கூட அவருக்கு தெரியவில்லை. மேற்குறிப்பிட்ட கட்டுரையை சார்ந்து ஒரு எட்டு கூட அவர் முன்னகர்ந்து சிந்திதிருப்பதாக தெரியவில்லை . தகவல் ரீதியாக எதையாவது சொல்லமுடியுமா என்று பார்த்து ஒரு தகவலை சொல்லவே அவர் மனம் முயல்கிறது. எந்த கருத்தைப் பார்த்தாலும் ‘யார் சொன்னது அதை ? யார் மறுத்தது அதை ? ‘ என்றுதான் அவரால் யோசிக்க முடிகிறது. எங்கல்ஸ் மேலைநாட்டில் உண்மையிலேயே பொய்ப்பிக்கப்பட்டிருந்தால்கூட ஏன் தமிழ்ச்சூழலில் அக்கோட்பாட்டுக்கு மதிப்பு இருக்கக் கூடாது ? பல கோட்பாடுகள் அப்படி மீண்டும் மீண்டும் கண்டடையப்பட்டுள்ளன . சிறிதளவு யோசித்தால் கூட ஒன்று தெரியும் எங்கல்ஸின் கருத்தை எந்த அடிப்படையில் பிறகுவந்த மானுடவியலாளர் மறுத்தார்களோ அந்த அடிப்படைகளை கேரள உதாரணத்தால் மறுக்க முடியும். கேரள சமூகம் போல நன்குவளர்ந்த தாய்வழிச் சமூகம் வேறு எங்கும் ஆய்வுக்கு உட்படுத்தபடவில்லை . ரவி சீனிவாசுக்குஆப்படி ஒரு எளிய சிந்தனைகூட ஓடவில்லை. நான்கு இணையதளமுகவரிகள் கண்டுபிடிக்கத்தான் மனம் தாவுகிறது. மார்கனைவிட்டு மானுடவியல் முன்னகர்ந்த சங்கதி அவருக்குமட்டுமே தெரியுமென்ற உற்சாகமும் அவருக்கு ஏற்படுகிறது.

இந்த ஒரே இதழில் பல தள அறிவுகளைப்பற்றி பிறருக்கு ஒன்றுமே தெரியாது என்ற கோணத்தில் அவர் எழுதிய கட்டுரைகளை வைத்து ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். வெறும் தகவல்களுக்கு அப்பால் ஒருவரிகூட சுயமாக சிந்திக்க முடியாத ஒருவராக அவர் இருப்பதை அந்தரங்கமாகவாவது அவர் உணரவேண்டும். எந்த ஒரு எழுத்து குறித்தும் தர்க்க ரீீதியாக அவர் சொல்பவை மிக மேலோட்டமான விதண்டாவாதங்கள். இப்பலவீனத்தை தன்னில் உணவதனால்தானா அவரது ஆவேசம் இப்படி எல்லா திசைகளுக்கும் பரவுகிறது ? இது மதவாதத்தைவிட சற்றும் குறையாத வேறு ஒரு கண்மூடித்தனமாகும்.

——————————————

suurayaa@rediffmail.com

Series Navigation

சூரியா

சூரியா