தேவகுமாரன் வருகை
ராஜரங்கன்

குவலயம் காக்கும் தேவகுமாரன்
கொட்டிலில் பிறந்தது ஏன் ?
அவனியில் உயிரினம் எல்லாமே அவன்
அன்புக் குகந்ததனால்.
முள்முடி தாங்கி முகடேறுகையில்
முகமும் வாடியதேன் ?
கள்வெறி மாந்தர் கயமை இன்னும்
காணக் கிடப்பதனால்.
சிலுவை யிரத்தம் சிறு ஊற்றாகச்
சீறிப் பெருகுவதேன் ?
மலினப்பட்ட மானுடர் பாபம்
மறையக் கழுவுவதால்.
கடவுள் புதல்வன் வருகை நோக்கிக்
காத்து இருப்பது ஏன் ?
கடலைப்போலக் கருணை உண்டெனக்
கவலை தீருவதால்.
—————————————————
dr_mrr@hotmail.com