ஒரு மலையாளியின் மன நோயாளியின் உளறல்கள்…

This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue

இளையபாரதி


————————————————————————–

‘ ‘கலைஞருக்கு இலக்கியத்தில் இடமில்லை. ‘ ‘

‘ ‘இன்குலாப் எழுதுவது ஒருவரிக் கூட கவிதை இல்லை. ‘ ‘

‘ ‘க.நா.சு.வைவிட நானே சிறந்த விமர்சகன். ‘ ‘

‘ ‘என்னால்தான் புதுமைப்பித்தன் வலைதள ஏடுகளில் பிரபலமாகிறார் ‘ ‘ என்றெல்லாம்

பிதற்றும் இந்த ஜெயமோகன் என்ற நபர் யார் ?

இலக்கியத்தின் விழுமியங்களையும் நேர்மையையும் அறத்தையும் பற்றி பேசும் இந்த யோக்கிய சிகாமணியின், ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு பத்திரிகையிலும் நஞ்சை உமிழும் இந்த குரூரனின் அசல் முகம் என்ன ? ‘இலக்கியவாதிகளே இவ்வளவுதானா நீங்கள் ? ‘ என்று கேட்கும் இவரின் தகுதி எவ்வளவு ?

வலைதள (Net Magazin) இதழ்களிலும் தன் விஷத்தை கக்கிக்கொண்டே இருக்கிறார். உதாரணத்திற்கு இந்த நூல் வெளியீட்டு விழாப்பற்றியும் கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் ஆகியோரைப்பற்றியும் அவதூறாக ‘திண்ணை ‘ என்ற வலைதள இதழில் விஷத்தைக் கக்கி இருக்கிறார் வழக்கம்போல. தேவைபடுவோர் திண்ணை டாட் காமில் பார்த்துக்கொள்ளலாம்.

ஜெயமோகன் கலைஞரை இலக்கியவாதியல்ல என்று சொன்னதன் காரணம் இப்போதுதான் புரிகிறது. இவரைப்போல மலையாளத்திரைப்பட இயக்குனர் கே. ழ். ஜார்ஜ் இயக்கிய ‘இரைகள் ‘ திரைப்படத்தை தழுவி ‘ரப்பர் ‘ என்ற நாவலை எழுதி அகிலன் நினைவுப் பரிசுக்கு அனுப்பி பரிசையும் வாங்கி பையில் போட்டுக்கொண்டு அகிலனும், நா. பார்த்தசாரதியும் எழுத்தாளர் இல்லை என்று சமத்தாக பேசத்தெரியாததால் கலைஞரை இவரைப் போன்ற இலக்கியவாதி இல்லை என்று சொல்கிறார்போலும். கிரீடம், பூவே பூச்சூடவா, 16 வயதினிலே போன்ற திரைப்படங்களின் காட்சிகளை அப்படியே எழுத்துருவாக்கம் செய்து ‘வாழ்விலே ஒரு முறை ‘ (தலைப்பு: அசோகமித்திரனுடையது) என்று கட்டுரைத் தொடராக இவர் எழுதியதைப் போல் கலைஞரும் செய்யாததால் அவரை மறுக்கிறார்போலும். விக்கிரமாதித்தியனின் ‘தட்சணாமூர்த்தியாயன ‘ என்ற கவிதையை அப்படியே ‘மாடன் மோட்சம் ‘ என்று சிறுகதையாக இவர் எழுதியதைப்போல் கலைஞர் எழுதாததால் கலைஞருக்கு இலக்கிய தகுதி வாய்க்கவில்லை போலும். கலைஞர் எழுதி சிறப்பித்த சங்கத்தமிழை கொச்சைப்படுத்தி புறநாநூறுக்கு புரம்பான தகவல்களைப் போட்டு அபத்தமான இவரைப்போல் ‘சங்கச் சித்திரங்கள் ‘ என்ற பெயரில் கலைஞருக்கு கிறுக்கத் தெரியாததால் அவருக்கு நவீன இலக்கியத்தில் இடமில்லைபோலும்.காடு, கன்யாகுமரி போன்ற இவரின் நாவல்களை எந்த மலையாளப் படத்தைப் பார்த்து எழுதினார் என்பதை இனிமேல் படித்துவிட்டுத்தான் சொல்லவேண்டும்.

லஷ்மணன் எழுதி பழநியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட ‘இந்திய தத்துவ ஞானம் ‘ என்ற நூலை வரிக்குவரி நகல் செய்து ஜெயமோகன் எழுதியுள்ள ‘இந்திய தத்துவ தரிசனம் ஆறுமுகங்கள் ‘ என்ற நூலின் திருட்டை ‘நிறப்பிரிகை ‘ ஆசிரியர் குழுவைச் சேர்ந்த தஞ்சாவூர் பொ.வேல்சாமி அம்பலப்படுத்தியுள்ளார். பொ. வேல்சாமிக்கு பதில் சொல்ல தன்பக்கம் நியாயம் இல்லாத ஜெயமோகனுக்கு இலக்கிய நியாயத்தைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது. திருடனுக்குத் தீர்ப்பு கூற யோக்கிதை ஏது ?

மகாகவி பாரதிக்கு நிகராகச் சொல்லப்படும் நவீன கவிஞன் பிரேமிள் ‘விமர்சன மீட்சிகள் ‘ என்ற நூலில் இப்படிச் சொல்கிறார். ‘ ‘தமிழில் ‘பாரதி ‘யின் மறைவிற்குப் பிறகு தான் ‘பாரதி பரம்பரை ‘ என்ற பிரயோகமான இது பிறந்திருக்கிறது. இந்தப் பிரயோகத்தின் தாத்பர்யம் பாரதியன் கவிதை உபாசனையிலிருந்து அவனது சமூகதர்சன உபாசனை வரையில் காட்டும் ஈடுபாட்டையே குறிக்கும். ‘வர்ணாஸ்ரமமே ‘ நீதித்வம் என்ற கொள்கை நிலவிவந்த ஒரு சமூக மனோமண்டலத்தினை பாரதி நேர்முகமாக எதிர்த்தவன். இதனால்தான் பாரதியிடமிருந்து பாரதிதாசனும், பாரதிதாசனிடமிருந்து அண்ணாதுரையும் கருணாநிதியும் ஒரு பரம்பரைத் தொடர்ச்சியைக் காட்டுகின்றனர். கவித்துவமாக பாரதியிடம் பிறந்த நவீனத் தொனியை புதுமைப்பித்தன் பின்னலான, சிந்தனைச் செறிவுகொண்ட உரைநடைத் தொடராககக் கண்டாலும், பாரதிதாசன், புதுமைப்பித்தன், அண்ணாதுரை, கருணாநிதி யாவருமே ஒரு புதிய மனோதர்ம எழுச்சியினை எழுத்தியலாகப் பயின்றவர்களாவர். இவர்களுள் புதுமைப்பித்தனின்இலக்கிய சாதனை வீறு ஒரு சக்ரவர்த்தியாக அவரைக் காட்டுகிறது. நவீனத் தொனி, சிந்தனைச் செறிவு ஆகியவற்றை பின்வைத்து, பாமரப் பெருவாரி மக்களிடையே இந்த புதிய மனோதர்மத்தைப் பரப்பி வேரூன்றச் செய்ய எழுந்த ஈ.வெ.ரா. ராமசாமி(பெரியார்) இயங்கிய நேர்முகத் தன்மையை பாரதிதாசன், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் ஆதர்சித்து எழுதியிருக்கிறார்கள். எழுத்து வடிவங்களிலிருந்து கிடைக்கும் சாட்சியங்கள் இவை. இந்த இலக்கியத்தின் நாடகத்துறை வெளியீடு மிகக் காட்டமாக பெரியாருடன் இயங்கிய எம். ஆர். ராதாவிடமும், சினிமா வெளியீடு கவர்ச்சித்தன்மையாக, அண்ணாதுரை, கருணாநிதியும் இயங்கிய எம்.ழ். ராமச்சந்திரனிடமும் பிறந்து பாமரப் பெரும்பான்மையினருள் ஊடுருவிற்று. எனவே இது ஒரு சமூகப் புரட்சித் தொடர் இயக்கம். இந்தப் புரட்சிகரம் மட்டுமே பாரதி பரம்பரை என்ற பிரயோகத்தின் நியாயமாகும். ‘ ‘

‘ ‘இவ்விடத்தில் கருணாநிதியை படைப்புக் கோணத்திலிருந்து குறைவுபடுத்திக் காட்டுகிறவர்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். அவரது ‘மந்திரிகுமாரி ‘யும் ‘பராசக்தி ‘யும் வெகுஜனத்தளத்தில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படத்திய படைப்புகள். அவற்றுக்கு இணையாக வெகுஜனத்தினரை எட்டக்கூடிய புரட்சிகரத்தை ஜெயகாந்தன் கூட வெளியிட்டதில்லை. ஜெயகாந்தன் செய்தது மலிவு விலை தர்மப்பிரசாரத்தைத்தான். கருணாநிதி இந்த தளத்துக்கு கீழிறங்கி எழுதுகருவியை கனவிலும் தொட்டதில்லை. மேலும், ‘ ‘அடேய் பூசாரி! முதலில் உன் ஜாதகத்தைக் கணித்துக்கொள்! ‘ ‘ என்ற கருணாநிதியின் ‘பராசக்தி ‘ வசனத்தில் ‘ ‘பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே ‘ ‘ என்ற பாரதியின் தீர்க்கதர்சனம் அபாரமான விடம்பன வடிவம் பெறுகிறது. பெற்று, அடிமட்ட பாமர உள்ளங்களில்கூட பாய்ந்து அதிரடி தருகிறது! இப்படி மேலும் உதாரணங்களைத் தர இடமுண்டு. இது கருணாநிதியின் ‘அரசியல் ‘க்கும் புறம்பாக நாம் காணக்கூடிய எழுத்தியல் விபரமாகும்.

‘ ‘கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை ‘ ‘ என்பதும், ‘ ‘கடவுளை மற, மனிதனை நினை ‘ ‘ என்பதும் பெரியாரின் கொள்கைகள். ‘ ‘அச்சமே கடவுளை உருவாக்குகிறது. அச்சம் இல்லை, எனவே கடவுளும் இல்லை ‘ ‘ என்பதும் ‘ ‘தனியாக இருந்து ஒருவன் தன்னை அறியமுடியாது. பிறருடன் ஏற்படும் அன்றாட உறவுகளில் தனது மனக்கிளர்ச்சிகளை இடைவிடாமல் அவதானிப்பதன் மூலம் மட்டுமே தன்னை அறியமுடியும் ‘ ‘ என்பதும் கிருஷ்ணமூர்த்தியின் முக்ய கருத்துக்களுள் அடங்கும்.

இங்கே ‘பெரியாரியம் ‘ பிரமிக்கத்தக்க விதத்தில் ஒரு புதிய பரிமாணத்தினை அடைகிறது என்று காணலாம். பிசுபிசுத்த ‘பாரதி பரம்பரை ‘ என்ற பிரயோகம் இங்கே தவிடுபொடியாவதையும் காணலாம். ஏனெனில் பாரதியினால் பெரியாரை உணரவும் முடியவில்லை, கிருஷ்ணமூர்த்தியின் மேற்படி கருத்துக்களை கிரகிக்கக்கூடிய விதமான மனப்பின்னணியை பாரதியின் எந்த எழுத்திலும் காணக்கூட காணோம். மாறாக, ‘ ‘யார் அம்பாளா பேசறது ? ‘ ‘ என்று கேட்கும் பூசாரியிடம் ‘அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள், அறிவு கெட்டவனே! ‘ ‘ என்று கேட்கிறார் கருணாநிதி தமது ‘பராசக்தி ‘யில். இந்த வெகுஜனத்தளத்து வெளியீடு, நேரடியாக பெரியாரின் ‘ ‘கடவுள் இல்லை ‘ ‘, கிருஷ்ணமூர்த்தியின் ‘ ‘அச்சம் இல்லை, எனவே கடவுளும் இல்லை ‘ ‘ என்று பார்வைப் பிரதிபலிக்கிறது. ‘ ‘

தத்துவ மேதை ஜே.கே. என்கிற ஜே. கிருஷ்ணமூர்த்திக்கு நிகராக, ஜெ.கே. என்கிற ஜெயகாந்தனுக்கு மேலாக பிரேமிள் கலைஞரை நிறுவுவதை நினைவில் கொள்ளவேண்டும். இந்த ஜெயமோகன் என்ற நபரை ‘ ‘வெண்டைக்காய் மூளை ‘ ‘ என்று பிரேமிள் கூறியதையும் இங்கு பதிவு செய்யவேண்டும். புதுமைப்பித்தனுக்கு சமதையாக கலைஞரை நிறுவும் பிரேமிளின் பெருந்தன்மை எங்கே ? கடுகிலும் சிறிய மனிதனாகிய இந்த போலியின் சிறுமை புத்தி எங்கே ?

‘பணத்திற்காகவும் புகழுக்காகவும் ‘ எழுத வரவில்லை என்று பம்மாத்து செய்யும் இந்த நபர் சுஜாதாவைவிட சிறந்த விஞ்ஞானக் கதைகளை எழுதியவர் என்று காஞ்சனா தாமோதரனை பாராட்டியது ? காஞ்சனா தமோதரன் எழுத்தாளர். அகிலன் எழுத்தாளர் இல்லை. இப்போது யார் எறியப் போகும் எலும்பு துண்டுகளுக்காக கலைஞரை இலக்கியவாதி இல்லை என்று குரைக்கிறார். இவர் பொள்ளாச்சி நா. மகாலிங்கத்திற்கு பாதபூசை செய்வது எதற்காக ? கலைஞரை நான்கு பேர் மேடையில் புகழ்ந்தால் அது இலக்கிய அங்கீகாரமாகிவிடாது என்று கூறும் இந்த நபர் தன்னை ஜெயகாந்தன் புகழ்ந்துரைத்தது தன் திறமையை மெச்சியே என்று அதனை மட்டும் ஒரு அங்கீகாரமாக மாற்ற முயற்சிப்பது எப்படி ?

வக்கிரம்: வக்கிரம் எல்லாம் வக்கிரம். ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு மூவாயிரம் பேருக்குமேல் திரண்டுவிட்டார்களே என்ற வக்கிரம். அந்த நபரே சொல்கிறார். ‘அங்கே மாபெரும் கூட்டம் ‘. முடிந்தால் நீயும் திரட்டு. அது முடியாமல் ஏன் அடுத்தவன் மேல் சேற்றை வாரி வீசுகிறாய். கலைஞரை தாக்கும் சென்சேஷனல் ஸ்டேட்மெண்ட்களின் மூலம் விளம்பரம் பெற நினைக்கும் மலிவான யுத்தியா ? இல்லை ஆளும் அரசின் அன்பைப் பெற்று பரிசு பெற நினைக்கும் அற்பப் புத்தியா ?

வடக்கே வாஜ்பாய் கவிதைத் தொகுதியை சோனியா காந்தி வெளியிடுகிறார். அந்த அரசியல் நாகரிகம் இங்கே வரவேண்டும் என்கிறோம். ஆனால் கலைஞரின் மேடையில் அசோகமித்திரன் ஏறினால் இலக்கிய ஆச்சாரம் கெட்டுவிடுமாம். ஜெயமோகனின் ஆர்.எஸ்.எஸ். குரல் அலறுகிறது. ‘ ‘சமூக ஏற்றத்தாழ்வுகள் அற்ற பகுத்தறிவு பூர்வமான இயக்கங்களை வேரறுக்கும் ஏற்றத் தாழ்வுகங்காணிகள் இந்தியாவில் அழகியலை வர்ணாஸ்ரமச் சார்புள்ள இயலாகவே பயின்று வருகின்றனர். காரணம் வர்ணாஸ்ரமமே தர்மம், நீதி, நியதி என்ற இந்திய மனோவியாதியின் தொடர்ச்சியாகும் ‘ ‘ பிரேமிள் கூறும் இந்த மனோவியாதி கங்காணிதான் ஜெயமோகன் என்பவர். நோபல் பரிசுபெற்ற எழுத்தாளர் மார்க்யூஸுக்கும் க்கீயூபாவின் அதிபர் பெடல் காஸ்ட்ரோவுக்கும் உள்ள நட்பையும் இந்த நபர் இப்படித்தான் கொச்சைப்படுத்துவார் என்று நினைக்கிறேன். ஒரு இஸ்லாமிய நண்பனின் வீட்டுத் திருமணத்திற்கு செல்வதால் இந்து மதம்மாறியவனாகி விடுவானா ? சுபமங்களா இலக்கிய இதழில் செய்த முயற்சியைதான் இந்த நூல் வெளியீட்டு விழாவிலும் செய்தோம். விரிவான தளத்திற்கு இலக்கியத்தை எடுத்துச் செல்லும் முயற்சியாக நடந்த செறிவான விழாவின்மீது சேற்றை வாரி வீசுகிறார். விழாவில் பங்கேற்ற படைப்பாளிகள் யாவரும் தனித்தனி பார்வையும் கொள்கையும் கொண்டவர்கள். அவர்கள் புனிதம் பற்றி ஜெயமோகன் கவலைப்படவேண்டாம். கலாப்ரியாவும் கல்யாண்ஜியும் இன்குலாப்பும் கலைஞரை துதிபாடியதாக சொல்லி ஒரு மாயையை உருவாக்கி வாசகர்களை மோசடி செய்கிறார். தன் பெறாமையால் பொய் மூட்டையை விரிக்கிறார். ஜெயமோகனின் கவலையெல்லாம் இவர்களையெல்லாம் ஒரே மேடையில் கூட்டி ஒரு வெற்றிகரமான விழாவை நடத்திவிட்டார்களே என்பதுதான். சா. கந்தசாமியும், வண்ணநிலவனும், பூமணியும் பாவண்ணனும், பா. செயப்பிரகாசமும் பார்வையாளர்களாக மகிழ்ச்சியோடும் நெகிழ்ச்சியோடும் பங்கேற்ற பல நூறு கலைஞர்களில் சிலர். உங்கள் விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது என்று ஜெயகாந்தன் நேரில் தெரிவித்தார். இவர்களுக்குரிய பக்குவத்தையும் பெருந்தன்மையையும் சுயமோகமும் சுய லாபநோக்கும் கொண்ட ‘நபும்சகன் ‘ ஜெயமோகனிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்.

தலைமுறையை உவாகிய கலைஞரின் எழுத்தை வெறும் பிரச்சார எழுத்து என்று கூவும் இவரின் ஆன்மீகத் தேடலான ‘விஷ்ணுபுரம் ‘ நாவல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அறிக்கைதானே.

இந்தித் திரைப்பட கலைஞர் பால்ராளி சஹானிக்கு நிகரான நடிகர் எம். ஆர். ராதா கலைஞருக்கு கொடுத்த பட்டம்தான் ‘கலைஞர் ‘ என்பது. காலத்தால் நிலைத்தது. மக்கள் மனசெல்லாம் நிறைந்தது. அந்தக் கலைஞரை ‘கலைஞர் ‘ என்று சொல்ல மாட்டாராம். தன்னேத் தானே பாராட்டி தனக்குத் தானே வாசகர் கடிதம் எழுதிக்கொள்ளும் நிலையில் உள்ள, எல்லா அற்பத்தனங்களும் செய்யும் இந்த இலக்கியப் பதர் மட்டும் கலைஞனாம்.

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்துள்ள பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்தாலும் பூரணத்தைச் சேர்த்தாலும் எஞ்சுவது பூரணமாகவே இருக்கும் என்ற உபநிஷத் வாக்கியத்தைப் போல் கலைஞரின் சாதனைகளைப் பற்றி யார் என்ன சொன்னாலும் எஞ்சுவது அவரின் சாதனையாகவே இருக்கும். காலத்தைப் பருகித்தீர்க்க காளானின் வேர்களுக்கு சக்தி உண்டா ? கலைஞர் காலத்தின் சின்னமாக நிற்கிறார்.

ஜெயமோகனின் வக்கிரங்கள் தொடர்ந்தால் கவிஞர் ஞானக்கூத்தன் சொன்னதுபோல் இந்த நபரைப் பற்றி ஒரு புத்தகமல்ல இரண்டு புத்தகங்கள் எழுதவேண்டியிருக்கும். கலைஞரை அளக்க வருகிறார் இந்த நபர். கண்ணன் வாமன வடிவம் எடுத்து அளந்ததைப் போல் கலைஞர் தன் காலடியை வைத்தால் எங்கேயிருப்பார் ஜெயமோகன் என்ற நபர் ?

====================================================================

smkumar_g@rediffmail.com

(சில வரிகள் நீக்கப் பட்டுள்ளன – திண்ணை குழு)

Series Navigation

இளையபாரதி

இளையபாரதி