ரோஸா வசந்த் அவர்களுக்கு பதில்

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

சின்னக்கருப்பன்


எங்கள் கோவில்களில் கோழி, ஆடு பலி கொடுத்துக்கொண்டிருக்கிறோமே. எதற்காக என்று நினைக்கிறீர்கள் ? இதனை எதிர்ப்பது யார் என்று பார்த்தால், மேற்கு படிப்பு படித்த மெத்த மேதாவிகள்தான். ராமன் குகன் கொண்டுவந்த மீன்களை சாப்பிட்டான். உங்கள் வீட்டுக்குள் என்ன பேசுகிறீர்கள் என்பது யாருக்கும் பொருட்டல்ல. என் கோவிலுக்கு வந்து நீங்கள் என்னை அவமானப்படுத்துகிறீர்களா என்பதுதான் கேள்வி. எல்லா சாதிகளிலும், வீட்டுக்குள் சமநிலையில் அல்லது கீழே அல்லது மேலே இருக்கும் வேறு ஜாதியினரைப்பற்றியும் கேவலமாக விமர்சனம் நடக்கும். அது மேல் நிலை சாதிகளுக்கு மட்டும் உரித்தானது அல்ல. அது ஒரு காரணமாக நீங்கள் சொன்னால், ஆச்சரியம்தான். பார்ப்பனர்கள் தனியாக விடுதி நடத்துவதிலோ, அல்லது நாடார்கள் உறவின் முறை கட்டிடத்தை ஒவ்வொரு முருகன் கோவிலுக்குப் பக்கத்திலும் கட்டிவைத்திருப்பதிலோ, அதில் அவர்களுக்கு தனிச் சாப்பாடு வழங்கப்படுவதிலோ யாருக்கும் பிரச்னை இருக்க முடியாது. அவரவருக்கு உணவுப்பழக்கம் வெவ்வேறு என்றால், அவரவர் தனித்தனியாக உணவருந்துவதில் என்ன தவறு இருக்க முடியும் ? அசைவ உணவு ஒருசாராருக்கு அருவருப்பாக இருக்கிறது என்றால் அதனை மதித்துச் செல்வதுதான் அழகு. எந்த சாதியாக இருந்தாலும் ஆரம்பத்தில் கும்பிடுவது பிள்ளையார்தான். மற்ற கடவுள்கள் மறுக்கப்படுவது என்பது பிராம்மணராக இருந்தாலும் சரி தலித்தாக இருந்தாலும் சரி கிடையவே கிடையாது. எந்த பிராம்மணர், பிள்ளைமார், முதலியார், ரெட்டியார், தேவர்கள் ஆகியோர் என்றாவது சுடலை மாடன் என்பது கடவுள் கிடையாது, அய்யனார் கடவுள் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள் ? எந்த தலித் விஷ்ணு கடவுள் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள் ? சொல்லப்போனால், எந்த இந்துவாவது, தலித்தாக இருக்கட்டும், பிராம்மணனாக இருக்கட்டும், யேசுவை கடவுள் இல்லை என்றோ, அல்லாவைக் கடவுள் இல்லை என்றோ பேசி சொல்லி கேட்டிருக்கிறீர்களா ? கீதையிலேயே இதற்கு அனுமதி இருக்கிறது.

***

தலித்தை மலம் தின்ன வைப்பது என்னைக்கேட்டால் சமீபத்திய சாதனை என்று தான் சொல்லவேண்டும். சதி என்பது தெற்கில் இல்லாமல் இருப்பதற்கும் வடக்கில் ஆயிரம் ஆண்டுகள் தோன்றி வளர்ந்ததற்கும் வேறு காரணங்கள். சமூக ரீதியான காரணங்களுக்கும் சமய ரீதியான காரணங்களுக்கும் பல வேற்றுமைகள் இருக்கின்றன. ஒளிமயமான காலம் என்று நான் இறந்த காலம் எதனையும் கருதுவதில்லை. வருங்காலம் சென்ற காலத்தை விட வளமையாகத்தான் இருக்கும் என்றே நம்புகிறேன். அதற்கு, கடந்த கால இந்தியாவைவிட, இந்த கால இந்தியா வளமையாக இருப்பதும், இனக்குழுக்களுக்கு இடையே போர்கள் இல்லாமல் இருப்பதும், அதிக பசி பட்டினி இல்லாமல் இருப்பதும், அப்படி வரும்போது, இந்தியாவின் ஒரு மூலையிலிருந்து மறு மூலைக்கு தான்யங்கள் மான்யங்களாகச் செல்வதும் உதாரணங்கள். அசுரர்கள் என்பது திராவிடர்கள் என்று விக்டிமைஸ் பண்ணிக்கொள்ளாதீர்கள். ஈரானியர்கள் தான் அசுரர்கள். தேவ அசுர கதையை ஈரானியர்கள் அப்படியே சொல்கிறார்கள். அவர்கள் கதையில் அசுரர்கள் நல்லவர்கள், தேவர்கள் கெட்டவர்கள். தேடிப்படித்துப் பாருங்கள். பொய்யை ஆயிரம் முறை சொன்னாலும் அது உண்மையாகிவிடாது. அசுரர்கள் திராவிடர்கள் இல்லை. வெள்ளையர்கள் சொன்னாலும் உண்மையில்லை. அவர் வழி வந்த திக சொன்னாலும் உண்மை இல்லை.

***

தவம் செய்த சம்புகனின் தலையை வெட்டியது உத்தர காண்டத்தில் இருக்கிறது. ராமாயணத்தை எழுதிய வால்மீகியே உத்தர காண்டத்தில் வருகிறார். ராமாயணத்தை எழுதிய வால்மீகி ஒரு தலித். பிராம்மணர் அல்ல. வால்மீகிகள் என்ற ஒரு இந்துக்கள் இன்றும் பாகிஸ்தானில் வசித்து வருகிறார்கள். தலித்துகளாக உரிமைகள் இன்றி, பாகிஸ்தானில் கொத்தடிமைகளாக வாழ்ந்துவருகிறார்கள். ஆயினும் இன்னும் இந்துமதத்தை விட்டு வெளியேறாமல்.

***

ஒரு வழியாக திராவிடர் இயக்கத்தில் சகிப்புத்தன்மை இல்லாமலும் இருந்திருக்கிறார்கள் என்று ஒப்புக்கொண்டுவிட்டார்கள். ஓ. நான் காங்கிரஸ் எதிர்ப்பாளன் என்பதால், பாஜக ஆதரவாளன் ஆகிவிட மாட்டேன்.

***

வால்மீகி ராமாயணம். தசரதன் இறந்ததும், செய்தி அறிந்து துக்கம் கொண்ட ராமனுடன் ஒரு ரிஷி உரையாடுவதைப் படித்துப் பாருங்கள். வால்மீகி ராமாயணம் கடையில் கிடைக்கிறது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பார்வையில் பெரியாரைப் பார்க்கிறார்கள். நீங்கள் பார்க்கும் பார்ப்பனிய எதிர்ப்பைத்தான் பெரியாரிடம் பலரும் பார்க்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் கொண்ட கறுப்பின எதிர்ப்பு எப்படி ஒரு இனவெறியோ அது போலத்தான், கறுப்பினத்தவர் கொள்ளும் வெள்ளை இன எதிர்ப்பு. அதுவும் ஒரு இனவெறிதான். அதனைத் தாண்டியவர் தான் மண்டேலா. நமக்குத் தேவை மண்டேலாக்கள்தான். ரெகன்ஸிலியேஷன் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார் மண்டேலா. என் இன்னொரு கட்டுரையில் எப்படி இந்திய அரசியல் அமைப்பு, ரிகன்ஸிலியேஷனை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லியிருக்கிறேன்.

***

பிராம்மணர் சாப்பிடும் இடம் பற்றிய உங்கள் கேள்விக்கு பதில் தனிக் கட்டுரையாக வருகீறது.

***

பூணூல் என்பது பிராம்மணனின் அடையாளம் அல்ல. இருபிறப்பாளனின் அடையாளம். சத்திரிய, வைஸ்ய, பிராம்மணனின் அடையாளம். அது சூத்திரன் செய்யும் உடல் உழைப்பின் காரணமாக மறுக்கப்பட்டிருக்கலாம், அல்லது தேவைப்படாமல் இருக்கலாம். ஒரு தலித்துக்கு பாரதியார் பூணூல் போட்டு விட்டார். இன்று மனுதர்ம வர்ணங்கள் அற்ற ஒரு சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்ற எதிர்கால பாரடைம் ஷிஃப்டை அவர் உணர்ந்ததுதான் காரணம். அந்த சமுதாயத்தில் தன்னை இந்து என உணரும் அனைவரும் அதன் அடையாளமாகப் பூணூல் போடலாம் என்பதுதான் அவர் கொண்ட கொள்கையாக இருக்கலாம். பூணூலை அறுப்பது ஒரு வழி. எல்லோரும் பூணூலைப் போடுவது இன்னொரு வழி. விளைவு ஒன்றேதான். இரண்டாவது வழி, அடுத்தவனின் உரிமையை மறுக்காதது.

**

இறுதியாக, சின்னக்கருப்பன் நீளமாக பதில் போடுவார் என்ற எதிர்பார்ப்பை உடைக்கவேண்டாம் என்பதற்காகத்தான் எழுதினேன். இதனை எழுதுவதில் எனக்கு ஆர்வம் இல்லை.

எனக்கு ஆர்வம் வராததற்குக் காரணம் இருக்கிறது. தலைவர் எவ்வழி அவ்வழி நாம் என்பது நம்மில் ஊறிவிட்டது. திமுக பாஜகவோடு கூட்டு வைக்கும்போது, அதுவரை தீவிரமாக பாஜகவை சாமியார் கட்சி, கமண்டலக் கட்சி, வகுப்புவாதக் கட்சி என்று கூறிக்கொண்டிருந்த திமுகவினர் முதலில் அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர். அடுத்தது, பாஜக சார்பாகக் கூட பேச ஆரம்பித்துவிட்டனர். ஜெயலலிதாவை மேடை தோறும் பாப்பாத்தி எனப் பேசிக்கொண்டிருந்த திகவினர், திடாரென்று அந்தப் பேச்சை விட்டனர். சொன்னால் ரஜினி மீது பாயும் அடியாள் படையாக ஆனார்கள். மேலே செய்யப்படும் டால்களுக்காகக் கீழே அடித்துக்கொள்வது, சேர்ந்து கொள்வது எனக்கு உடன்பாடில்லை என்றாலும் அது தமிழ்நாட்டில் நிதர்சனமான உண்மை. பாஜக, நாளை கிரிஸ்தவ ஜனநாயக முன்னணியுடன் கூட்டு வைத்துக்கொண்டால், அ.மார்க்ஸ் உடனே பாஜகவுக்கு ஆதரவாகப் பேசினாலும் அதிர்ச்சி அடையமாட்டேன். அரசியலில் எல்லோருக்கும் ஒரு விலை இருக்கிறது. உங்களுக்கும் எனக்கும் மட்டுமே தான் விலை இல்லை.

பிராம்மணர்களுக்கு மட்டுமல்ல, எந்த ஒரு சாதிக்கும் எதிரான சாதிவெறிப்பேச்சை ஆதரித்ததில்லை. நாளையும் ஆதரிக்க மாட்டேன். முஸ்லீம்களுக்கு எதிரான மத வெறிபேச்சை, கிரிஸ்தவர்களுக்கு எதிரான மதவெறிப்பேச்சை நேற்றும் ஆதரித்ததில்லை, நாளையும் ஆதரிக்க மாட்டேன். அதே போல, முஸ்லீம்களும், கிரிஸ்தவர்களும், கம்யூனிஸ்டுகளும் இந்துக்களுக்கு எதிரான மதவெறிப்பேச்சை பேசினாலும் நான் ஆதரிக்க மாட்டேன். அது தவறு என்று எதிர்ப்பேன். இன்று யாரேனும் ஒருவர் இந்துக்களுக்கு எதிரான மதவெறிப்பேச்சை பேசினால்கூட அவர் முற்போக்குவாதியாக ஆகிவிடுகிறார். கிரிஸ்தவர்களையும், கம்யூனிஸ்டுகளையும், முஸ்லீம்களையும் விமர்சித்தால்கூட அவர் பாஸிஸ்டாக ஆகிவிடுகிறார். இது எனக்கு ஒவ்வாதது.

**

வரலாற்றில் பல விஷயங்கள் நமக்குத் தெரியாதவை. அப்படி கொஞ்ச நஞ்சம் தெரிந்ததையும் திரித்து அதனை தங்கள் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப விரித்து இன்று அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் 100 வருடங்களுக்கு முன்னர் நடந்ததாகத் தெரிந்த வரலாறே மறைக்கப்படுகிறது. பல இடங்களில் 5000 வருடங்களுக்கு முன்னர் இதுதான் நடந்தது என ஆணித்தரமாக எழுதப்படுகிறது. புனைகதைகள் உருவாக்கப்படுகின்றன. இன்று இரண்டு ஆதிக்கச் சாதிகளிடையே நடக்கும் போருக்கு, 5000 ஆண்டுகால வரலாறு இருப்பதாக புனையப்படுகிறது. இந்த எஸ்டாபிலிஷ்மெண்ட் ஆன சித்தாந்ததுக்கு வெளியே ஏதேனும் அறிவியல் ரீதியில் கண்டுபிடிக்கப்பட்டால், அது பாஸிஸ புனைகதையாக மறுக்கப்படுகிறது. இன்னொரு எஸ்டாபிளிஷ்மெண்ட் சித்தாந்தத்தை உருவாக்க முனையும் பாஜகவினரோ, இன்னொரு புனைகதையை உருவாக்க முயல்கிறார்கள். எவ்வாறு ஆரியர்கள் வரும்முன்னர் தேனும் பாலும் தமிழ்நாட்டில் ஓடியது என்று ஒரு இயக்கம் பேசியதோ, அதுபோல, முஸ்லீம்கள் வரும்முன்னர், இந்தியாவில் சுபிட்சம் நிலவியது என்று பேச இவர்கள் முனைகிறார்கள்.

இவர்கள் இருவருக்கு இடையில் உண்மைதான் கொல்லப்படுகிறது.

***

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்