ஹ¤ருல்ஈன் தேவதையின் மடி

This entry is part [part not set] of 34 in the series 20060428_Issue

ஹெச்.ஜி.ரசூல்


பதிமூன்று நாளான பச்சக்குழந்தையின் காதில் ரகசியம் சொல்லிப் போன சொர்க்கத்து கண்ணழகி ஹ¤ருல்ஈன் தேவதை திரும்பவும் அந்திக் கருக்கலில் முகம் பார்ப்பதாய் சொன்னது. பச்சகுழந்தைக்கு ஹ¤ருல்ஈன் தேவதை எந்த மொழியில் பேசியிருக்குமென ஊகிக்க முடியவில்லை. பகலெல்லாம் தூங்கி இரவு முழுதும் அழுது அடம்பிடிக்கும். மூச்சுவிடாமல் கதறும் குழந்தை தூக்கி வைத்துக் கொண்டு நஸீமாவும் உம்மாவும் மாறி மாறி லாயிலா சொல்லி தாலாட்டுவாள்.
ஊஞ்சோ ஊஞ்சோ மாமா ஊஞ்சோ
காயலுக்கு போன மாமா
கண்டாங்கி கொண்டு வாரும்
கண்டாங்கி இல்லையினா
புள்ளைகொரு கெட்டுசட்டை வாங்கிவாரும்.
நெளியும் குழந்தை மூத்திரம் பெய்யும். உம்மா உடுத்திருந்த பத்தாக்கைலியின் உள்இறங்கிப்பாயும், அணைச்சீலைத் துண்டுகளை நனைத்துக் கிடக்கும் மூத்திரம் உலர்வதற்குள் மீண்டும் மூத்திரம். மோண்டு பெருக்கும் பச்சக்குழந்தைக்கு என்ன பெயா வைப்பதென்று முடிவு செய்யவில்லை.
ஹ¤ருல்ஈன் தேவதை வந்துபோன கதை பற்றி நஸீமாவிற்கோ, உம்மாவிற்கோ எதுவும் தெரியவில்லை. பச்சக்குழந்தை நஸீமாவின் கைத்தொட்டிலில் இருந்தபோதுதான் அந்த தேவதை யாருக்கும் கேட்காதவாறு குழந்தையை மெல்ல பெயர்சொல்லி பேச அழைத்தது.
தாய்ப்பால் கொடுக்க தெரியவில்லையென நபுசத்மாமி கவலைப்பட்டாள். குழந்தை வாயால் மார்புக்காம்பை எவ்விப்பிடித்து நாக்கால் நுணக்கப் படிக்கும் வரைக்கும், பாலை நசுக்கி குழந்தை வாயில் கொடுக்க இவ இன்னும் படிக்கல… குழந்தைய பட்டினி போடுதா… அது குய்யோ முய்யோண்ணு மூச்சுவிடாம கத்துது… ஆசுபத்திரியிலிருந்து வீட்டுக்கு வந்து ஒரு வாரம் கழிஞ்சபோது பார்க்க வந்த நபுசத்மாமி பொரிந்து தட்டினாள்.
நிறைமாச சூலியா இருந்தபோது மடிநிறைச்சு கஞ்சிவப்பு பாத்திஹா ஓதணும்னு சொல்லி ஏற்பாடு நடந்துகிட்டு இருந்தது. அதுக்கிடையில வயித்து வலி வந்துட்டுது….
வீறிட்டு அலறும் குழந்தையின் அழுகையை எப்படி அமுத்துவது தெரியவில்லை. ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வந்து இண்ணையோடு ஏழுநாள் ஆயாச்சு. குழந்தை அழுகைக்கு டாக்டர்கிட்ட சொல்லி மருந்தும் வாங்கி குடுத்துப் பார்த்தாச்சு.
ஒருநாள் நள்ளிரவு குழந்தையின் அழுகை பொறுக்கமாட்டாமல் வீறிட்டு தொடர்ந்தபோது அம்சாபெத்தும்மா பக்கத்து வீட்டிலிருந்து என்ன ஏது என்று விசாரிக்க வந்துவிட்டாள். இங்கிலீசு மருந்து கொடுத்தா ஒண்ணும் சேலில்ல… நாளைக்கு நம்ம மேக்குதெருவுல உள்ள பொன்னானி வைத்தியன்டே மருந்து வாங்கி குடுத்து பார்ப்போம்… ஆலோசனை சொன்னாள்.
திடீர்திடீர்னு ஒழுக்கி பேண்டு அழிக்கும் பச்சக்குழந்தையின் ரெண்டுகால்களையும் தூக்கிப் பிடித்துக் கொள்வாள் உம்மா. பேசன் எடுக்க ஓடி, பீக்கு பிடித்து, ஆறுனவெந்நீரில் பீக்கழுவி குழந்தையை தொட்டிலில் போடுவாள். வயித்துல ஒண்ணும் இல்லாம குழந்தை திரும்பவும் அழும் பால்பவுடர் மாவு கலக்கி சின்ன நிப்பிள் பாட்டிலில் ஊத்தி அழும் குழந்தைக்கு கொடுப்பாள். கொஞ்ச நேரத்தில் தணியும் குழந்தையின் அழுகை திரும்பவும் விடாது தொடரும்.
பிறந்த குழந்தையை ஆஸ்பத்திரியில நர்ஸ் கொண்டு வந்து கையில தந்ததும் முதல்ல குழந்தையின் காதுல பாங்கும் இகாமத்தும் சொன்னாள் உம்மா. தாய்ப்பாலுக்கு முன்னரே இஸ்லாமியப்பாலை குழந்தைக்கு சப்தத்தின் மூலமாக ஊட்டுவதாக அதற்கு விளக்கமும் தந்தாள். பிரபஞ்சத்தின் முதல் தரிசனத்திலே தனக்கொரு அடையாளத்தை சுமத்துகிற பெற்றோரையும் சுற்றத்தையும் நோக்கி குழந்தை இன்னும் உரையாடல் எதையும் துவக்கியதில்லை.
குழந்தைக்கு அழுகையை நிறுத்த ஏந்திரம் ஒண்ணு எழுதி வாங்கி இடுப்பில போடலாம். வேத்துகாத்து அண்டாதிருக்கும். நபுசத்மாமி அபிப்ராயம் கூறியபோது எல்லோரும் ஆமோதித்தார்கள். குழந்தைக்கு அழுகை எப்படியும் நிக்கணும். அவ்வளவு தான். பள்ளியில் உள்ள அகமது எலப்பையை கூப்பிட்டு விஷயத்தை சொன்னபோது வெள்ளியால் ஆன குழல்ல தகடு எழுதி அடைச்சு தருவதாக பேச்சு முடிவானது. கூடவே தொட்டில் பாளையும் துடக்கு துஆ ஒண்ணும் எழுதித்தருவதாக ஒப்புக் கொண்டார். ஏந்திரத்தை இடுப்பில் ஒரு கயிறுகட்டி போடணும். அட்டையில் உள்ள துடக்குதுஆவை தொட்டில் கயித்துலகட்டித் தொங்க போடணும் சொல்லி முடித்தார் அகமது லெப்பை.
பொன்னானி வைத்தியர் தந்த நாட்டு மருந்தயும் புள்ளக்கு கொடுத்துப் பார்த்தாச்சு. அழுகை குறைஞ்சபாடில்லை. அடிக்கொரு தடவை மருந்து மாத்திரைன்னா பச்சப்புள்ள வயித்துக்கு ஒத்துக்கிடுமா… நஸீமாவின் அக்கறைக்கு விடை கிடைக்கவில்லை.
பச்சப்புள்ளய குளிக்க ஊத்ததுக்கு ரெண்டு பேரு வேணும். மிதமான ஆறுன வெந்நீரை குழந்தைக்கு ஊத்தும் போது காலையிலேயே அழுகை துவங்கும். குளிக்க ஊத்தி முடிஞ்சதும் காலைக்கழுவி நீரைக் குடின்னு சொல்லி புள்ளக்கு தலையில உடம்புல உள்ள ஈரத்த வெள்ளத்துணியால அப்பி எடுத்து, துடைச்சுவுடுவா
அன்னக்கு உம்மா இன்னொண்ணை வித்தியாசமா செய்தா, குளிக்க ஊத்திக்கிட்டே இருந்தபோது வீட்டுல இருந்த ”சொளவை எடுக்கச் சொன்னா… நஸீமா ஏன் எதுக்குண்ணு கேட்டுகிட்டு நின்னப்ப, சொளவு எடுக்கச் சொன்னா … சொளவ எடேன்… இதில் என்ன கேள்வி” … குளிக்க ஊத்திக் கொண்டே சத்தம் போட்டாள் உம்மா.
நஸீமா சொளவை எடுத்துக் கொண்டு வந்தாள். அரிசி உளுந்து பொடைக்கிற சொளவை தூசி துடைத்து உம்மாவிற்கு அருகில் வைத்தாள். குழந்தையை குளிக்க ஊத்தி முடிச்சதும் அந்தக் குழந்தையை சொளவின் மீது படுக்க வைத்தாள். குழந்தையை சொளவோடு மேலே தூக்கிக் கொண்டு பூமியை நோக்கி சொன்னாள்..
”பாரம் உனக்கு … குழந்தை எனக்கு” – மூணு தடவை சொன்னவள் சொளவை தரையில் வைத்தாள். குழந்தையை மட்டும் கையில் எடுத்துக் கொண்டாள். இனி குழந்தை ராத்திரி எல்லாம் அழாம தூங்கும் உறுதி சொன்னாள்.
குழந்தைக்கு வாப்பா உள்ளூருல இருந்தாலும் கடந்த ரெண்டு வாரத்துல ஒருதடவை மட்டும் தான் வீட்டுக்கு வந்துட்டு போயிருக்காரு. கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது நஸீமாவுக்கு. அன்னியோன்யமாக குழநதையை கையில எடுக்கதுல, அரவணைக்கதுல, கொஞ்சுறதுல அய்யூபு அக்கறை எதுவும் இல்லாம இருப்பதை நஸீமா உணர்ந்திருக்கிறாள்.
விடிய விடிய அழக்கூடிய குழந்தையை அமுத்த ஒரு தகப்பனால் ஏதாவது செய்யமுடியுமா அல்லது அதற்கான முயற்சி எதையாவது எடுப்பானா என்பது குறித்தெல்லாம் உம்மா யோசித்துப் பார்க்காவிட்டாலும் நஸீமாவிற்கு யோசனை வருவதுண்டு.
ராத்திரி தோறும் அழுதுமுடித்து குழந்தை அவஸ்தைப் படுவது தீரவில்லை. இரண்டொரு நாட்கள் கொடுத்த நாட்டு மருந்தாலும் பயனில்லை. குழந்தையை விசாரித்து வந்தபோதுதான் மைனி சாயிதா சொன்னாள்… புள்ளக்கு தொப்புள் ஊதி பெருசா இருக்குதே … அது வலிச்சு அழுமோ…
சில புள்ளகளுக்கு தொப்புள் கொடி உதிர்ந்த பொறவும் காத்துகுடிச்சு தொப்புள் பெருசா இருக்கும் புள்ள தவுண்டு கமுரத்துவங்கினா தன்னால அது சரியாயிடும். அதனால ஒண்ணுமில்ல வைத்தியருட்ட சொல்லியும்காணிச்சாச்சு… உம்மா ஏற்கனவே சொன்ன பதிலைத்தான் திருப்பிச் சொன்னாள்.
மாலை மஅரிபு நேரம். பட்சிப் பறவைகளெல்லாம் கூடடையப் போகிற சமயத்திலதான் ஹ¤ருல்ஈன் தேவதை குழந்தையின் பக்கம் பறந்து வந்தது. கண்ணுக்கு தெரியாத ரூபம். உம்மா நஸீமா, நபுசத் மாமி சூழ நின்றாலும் யாருக்கும் தெரியவில்லை. தொட்டிலில் கிடந்த குழந்தையோடு திரும்பவும் ரகசியம் பேசிய தேவதையிடம் பச்சக்குழந்தை ஏதோ விம்மி விம்மி பதில் பேசியது.
சற்று நேரத்திற்கெல்லாம் அந்த வீடே அமர்க்களப்பட்டு விட்டது. உம்மா பரக்க பரக்க விழித்தாள். நஸிமாவுக்கு மயக்கம் வருவதுபோலிருந்தது. அழுது துடிதுடித்து தொட்டிலில் கிடந்த குழந்தையைக் காணவில்லை. எல்லோரும் பதைபதைக்க தேடி அலறி அலைபாய்ந்துக் கொண்டிருந்தார்கள்.

”கருவில் பதிந்த குரல்ரேகை இதுவாக்கும். மூணுமாசமா கருவாக இருக்கும்போதே கேட்டிருப்பாயே… உன் வாப்பா சொன்ன பேச்ச உன் காதற்ற காது கேட்டிருக்குமே”.

வான்தாண்டி மேலே மேலே பறந்து கொண்டிருந்த ஹ¤ருல்ஈன் தேவதையின் சிறகு மடியில் இப்போது குழந்தை இருந்தது.

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்