இரு பேரப்பிள்ளைகள்

This entry is part [part not set] of 23 in the series 20020317_Issue

விந்தன்


‘பெற்ற பிள்ளையும் கொண்ட மருமகளும் தான் தன்னை அலட்சியப்படுத்துகிறார்கள் என்றால், பேரப்பிள்ளையும் அலட்சியப்படுத்த வேண்டுமா ? – சீ, இந்த வாழ்வும் ஒரு வாழ்வா ? ‘ என்று வழக்கம்போல் அலுத்துக்கொண்டபடி, ஒளியிழந்த கண்களுக்குத் தன் கையால் ஒளியைத் தேக்கிக் கொடுத்துக் கொண்டே திண்ணைக்கு வந்தார் பெரியண்ணா.

அப்போது, ‘என்ன பெரியவரே, செளக்கியமா ? ‘ என்று கேட்டுக்கொண்டே வந்தார் எதிர் வீட்டுச் சின்னண்ணா.

சின்னண்ணாவும் அப்படியொன்றும் சிறியவரல்ல; அவரும் பெரியவரே. ஆனாலும் அந்தப் ‘பிள்ளைக்குறும்பு ‘ இன்னும் அவரை விட்டபாடில்லை ‘

‘என்னமோ, இருக்கிறேன் ‘ ‘ என்றார் பெரியண்ணா, தான் இருப்பதையே ஒரு பெரிய குற்றமாகக் கருதுபவர்போல்.

* * *

அவர்கள்தான் என்ன செய்வார்கள், பாவம் ‘ வாலிபத்தில் அவர்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு மனைவிமார்கள்; அந்த மனைவிமார்களை மஞ்சள் – குங்குமத்தோடு அனுப்பி வைத்துவிட்ட பிறகு, அவர்களுக்கு இருந்த இரண்டாவது பொழுதுபோக்கோ தொணதொணப்பு ‘ – அந்தத் தொணதொணப்புக்கு இந்த ‘ராக்கெட்யுக ‘த்தில் யார் அவ்வளவு எளிதில் இரையாகிறேன் என்கிறார்கள் ? அப்படியே ஓரிருவர் இரையாகக் கிடைத்தாலும் ‘படம் கொண்ட பாம்பின் வாயில் பற்றிய தேரைபோலல்லவா ‘ அவர்கள் விழுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் ‘

அதற்காக அவர்கள் இருவரும் அயர்ந்து போய் விடுவதும் இல்லை; தங்களுடைய தொணதொணப்புக்கு வேறு யாரும் இரையாகவில்லையென்றால், அவர்களே ஒருவருக்கொருவர் இரையாகிக் கொண்டு விடுவார்கள் ‘

ஆம், அவருக்கு யாரும் கிடைக்காவிட்டால் அவர் இவரைத் தேடிக்கொண்டு வந்துவிடுவார்; இவருக்கு யாரும் கிடைக்காவிட்டால் இவர் அவரைத் தேடிக்கொண்டு போய் விடுவார்- அன்றைய சந்திப்புக்கும் அதுவே காரணம் ‘

* * *

காரணம் அதுவாயிருந்தாலும் காரியம் என்று ஒன்றும் இருக்கத்தான் இருந்தது. அந்தக் காரியம் வேறொன்றுமில்லை; ஒரு சிட்டிகை ஓசிப் பொடி ‘

முதலில் அதை வாங்கிப் போட்டுக் கொண்டு, ‘எப்பொழுது கேட்டாலும் ‘என்னமோ இருக்கிறேன் ‘ ‘ என்பதுதானா ? அப்படி என்ன குறைச்சல் ஐயா, உமக்கு ? ‘ என்று கேட்டார் சின்னண்ணா.

‘என்னத்தைச் சொல்வது, போங்கள் ‘ என்னுடைய பையனைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். அவனிடம் யாராவது வந்து, ‘என் அப்பா எனக்கு இதை வைத்துவிட்டுப் போனார், அதை வைத்துவிட்டுப் போனார் ‘ என்று அளந்தால் போதும்; ‘என் அப்பாவும் என்னை அப்படியொன்றும் வெறுங்கையுடன் விட்டுவிட்டுப் போவதாக இல்லை; திவசம் வைத்துவிட்டுப்போகப் போகிறார், திவசம் ‘ என்று என் காதில் விழும்படிச் சொல்கிறான் ‘ ‘ என்றார் பெரியண்ணா, அழாக்குறையாக.

‘சரி, விடும். நீரும் நானும் அதைத் தவிர வேறு என்னத்தை வைத்துவிட்டுப் போகப் போகிறோம் ? ‘ என்றார் சின்னண்ணா அலட்சியமாக.

‘அவன் தான் அப்படியென்றால் அவனுக்கென்று வந்து வாய்த்த மனைவிக்கோ நான் ஒரு வத்தல் ‘ ‘

‘வத்தலா ‘ ‘

‘ஆமாம்; வாசலில் வத்தலைக் காய வைத்துவிட்டு, அந்த வத்தலோடு வத்தலாக என்னையும் வெய்யிலில் காயவைத்துவிடுகிறாள் அவள் ‘ எனக்கென்ன கண்ணா தெரிகிறது, காக்காயை விரட்ட ? ‘

‘அந்த விஷயத்தில் மட்டும் நீர் கொஞ்சம் ஜாக்கிரதையாயிரும்; உம்மையும் வத்தலென்று நினைத்துக் காக்காய் கொத்திக் கொண்டு போய்விடப்போகிறது ‘ ‘

‘இந்த வீட்டில் எது நடக்கும், எது நடக்காது என்றே சொல்வதற்கில்லை. காலையில் பாருங்கள், ‘இங்கே உட்கார்ந்து கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பதைவிட, அங்கே வந்து உங்களுடன் பேசிக் கொண்டாவது இருக்கலாமே ? ‘ என்று நினைத்தேன். இப்பொழுதெல்லாம் நினைத்தால் நினைத்தபடி வந்து விட முடிகிறதா ? கண்தான் தெரியவில்லை என்றால், காலுமல்லவா இடறித் தொலைக்கிறது ? அதற்காகப் பேரப் பிள்ளையைக் கூப்பிட்டேன், துணைக்கு. அவன் என்னடா என்றால், ‘நீ போ தாத்தா, எனக்கு வேலை இருக்கு ‘ ‘ என்று என் தலையில் அடித்தாற்போல் சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான், பம்பரம் ஆட ‘ அந்தப் பயலுக்கு ஒரு முறை ‘டிப்தீரியா ‘ வந்திருந்தபோது, அவனுக்காக நான் எடுத்துக் கொண்ட சிரமம் இருக்கிறதே, அதை ஏன் கேட்கிறீர்கள், போங்கள் அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் ‘ ‘

‘உம்முடைய பேரப் பிள்ளையைப் பார்க்கும்போது என்னுடைய பேரப் பிள்ளைகள் எவ்வளவோ தேவலை போலிருக்கிறதே ? ‘

‘உங்களுக்கு ஏதய்யா, பேரப் பிள்ளைகள் ? ‘

‘ஏன் இல்லை, ஒருவருக்கு இருவர் இருக்கிறார்களே, சுவாமி ‘ ‘

‘இதே ஊரிலா ? ‘

‘ஆமாம் ‘ ‘

‘ஆச்சரியமாக இருக்கிறதே ? ‘

‘அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், அவர்கள் நான் கூப்பிடும்போது பம்பரம் ஆடப்போவதுமில்லை; பட்டம் விடப்போவதுமில்லை ‘ ‘

‘கொடுத்து வைத்தவர்தான் ‘ ‘

‘அவர்களுக்கு இதுவரை ‘டிப்தீரியா ‘வும் வந்தது கிடையாது; ‘டான் ‘ஸிலும் வந்தது கிடையாது ‘ ‘

‘வரவேண்டாம்; அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு எதுவுமே வர வேண்டாம். ‘

‘அவர்கள் என்னை அவமதிப்பதுமில்லை; அலட்சியப் படுத்துவதுமில்லை ‘ ‘

‘தீர்க்காயுசாக இருக்கட்டும் ‘ ‘

‘நான் எங்கே கூப்பிட்டாலும் சரி, எப்பொழுது கூப்பிட்டாலும் சரி – அவர்கள் என்னுடன் வரத்தயார் ‘ ‘

‘கிலோ கணக்கில் சாக்லெட் வாங்கி, கேட்கும் போதெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களோ ? ‘

‘அதெல்லாம் ஒன்றும் கிடையாது; பகவத் கீதை படிக்காமலே, பலனை எதிர்பாராமல் கருமம் செய்கிறவர்கள் அவர்கள் ‘ ‘

‘அப்படியானால் ஒரு நாள் இருபத்துநாலுமணி நேரமும் அல்லவா அவர்கள் உங்களுடன் இருந்தாக வேண்டியிருக்கும் ? ‘

‘ஆமாம்; ஒரு கணங்கூட அவர்கள் என்னை விட்டுப் பிரிவது கிடையாது ‘ ‘

‘அப்படியிருந்துமா அவர்களை நான் இதுவரை பார்க்கவில்லை ? ‘

‘உமக்குக் கண் தெரிந்தால்தானே பார்ப்பதற்கு ? ‘

‘அதனாலென்ன, அவ்வளவு அருமையான குழந்தைகளை நான் தடவிப் பார்த்தாவது உச்சி முகரக் கூடாதா ? எங்கே, அவர்களைக் கொஞ்சம் அருகே வரச் சொல்லுங்கள் ? ‘

‘இதோ அவர்கள் உங்களுக்கு அருகிலேயே இருக்கிறார்கள், தடவிப்பாருங்கள் ‘ ‘ என்றார் சின்னண்ணா, தம்முடைய பேரப்பிள்ளைகளை அவருக்கு அருகே தள்ளி.

ஆவலுடன் அவர்களைத் தடவிப் பார்த்த பெரியண்ணா, கண்களில் நீர் துளிக்கச் சொன்னார்:

‘ஆஹா ‘ மூக்குக் கண்ணாடியையும் கைத் தடியையுமே பேரப்பிள்ளைகளாகக் கொண்டுவிட்ட நீங்கள்தான் எவ்வளவு பெரிய பாக்கியசாலி ‘ ‘

Series Navigation

விந்தன்

விந்தன்