This entry is in the series 20030504_Issue

வேதா


உன் மீசை முடி குத்தி
என்
முகமெல்லாம் பூக்க வேண்டும்!

உன் பார்வைப் பொறிபட்டு
என்
பெண்மை காய்க்க வேண்டும்!

உன் பக்கத்துக் காற்றில்
என்
பாதி குளிர வேண்டும்!

உன் கைகள் கோர்த்துக் கொண்டு
என்
கவலை போக்க வேண்டும்!

உன்னைக் கட்டிக் கொண்டு
என்
இரவைத் தீர்க்க வேண்டும்!

உன் உதட்டு ஈரத்தில்
என்
உடலெல்லாம் நனைய வேண்டும்!

உன் முத்தம் முடிவதற்குள்
என்
மொத்தமும் முடிய வேண்டும்!

என் உள்ளங்கைகளில்
உன் முத்தம்
உயிர் உள்ளவரை இனித்திருக்கும்…

என் உயிருக்கு உணவாக,
உணர்வுக்குச் சிறையாக,
ஓடி நீ வருவாயோ ?

நான்
தேடிய இன்பமெல்லாம்
கோடியாய் தருவாயோ ?

இல்லை, இந்த முறையும்
இரக்கமே இன்றி ஏமாற்றுவாயோ ?

அச்சோ…
சீக்கிரம் வந்துவிடேன்,
இனியும் இல்லை,
என்னிடம் விரல் நகங்கள்!

piraati@hotmail.com

Series Navigation