This entry is in the series 20060818_Issue

தியாகு


நிலையில்லா உலகும்
நிக்காத பணமும்
எங்களுக்கா மாரியம்மா
ஏழைக்குதான் காளியம்மா!

கடன் வாங்கி விதைச்சு புட்டோம்
கதிரறுக்க காசில்ல
வட்டி கடை காரனுக்கு
வருசம்பூரா பணமிருக்கே!

நிலையில்லா…………..

அறுத்த நெல்லை குறைவாக
வந்த விலைக்கு வித்துபுட்டு
விதைநெல்ல வச்சுறுக்கோம்
மாசி மாதம் பொங்கவைக்க!

நிலையில்லா…………..

விடியலில எந்திருச்சு
விவசாயம் பாக்கபோனோம்
விடியலத்தான் காணலியே -வாழ்க்கை
இருள் மட்டும் மாறலையே

நிலையில்லா…………..

ஏர்புடிச்ச கைகளுக்கு
ஏனிந்த பாரபட்சம்
வேர்புடிச்ச மரத்துக்கு
வேணுமா கல்லடிதான்

நிலையில்லா…………..

ஆயிரம் கண்ணுனக்கு
உள்ளதுன்னு சொன்னாங்க
ஆயிரத்தில் ஒன்ன தொறந்து நீ பார்த்தாக்க -அந்த
ஒரு கண்ணு அழுத கண்ணீர்
உலகத்தை நிறைச்சிடுமே!

நிலையில்லா…………..

-தியாகு

Series Navigation