வரலாற்றில் பெண்கள்
கவிதா நோர்வே
பெண்ணின் கருவறை
பற்றிய கேள்விகள்
மாயையாகிக் கிடந்த
பொழுதொன்றில்…
அது நடந்தது
பெண்
பிரம்மனாயிருந்தாள்!
பெண்ணே அனைத்துமானாள்.
அவள் வாழ்வின் காற்தடங்கள்
கவனத்துடன் துடைத்தெறிந்து
ஆண் உருவில்
ஆண்டவன் பிறந்தான்
தீக்குச்சியிலிருந்து
தீப்பந்தமாய்
ஆண்கள்
கடவுள்கள் ஆக்கினர்
தாமே ஆகினர்
இன்றெல்லாம்
இடி மின்னலிலோ
மலைப்பனி மேகத்திலோ
அரசனிலோ
குருகளிலில் இருந்தோ
ஆண்டவர்கள் ஆள்வதில்லை
தந்தையில்
சகோதரனில்
மாமனில், மைத்துனனில்
கணவனில் என்று
அதையும் கடந்து
உணவு மேடையையும்
படுக்கை விரிப்பையும்
போர்த்திவிட்ட உடைகளையும்
வீடென்ற சிறைகளையம்
தாண்டி
முக்கியமாக
பெண்களின் தலைக்குள்ளே
கூடுபாய்ந்தனர்
ஆண் உருவில் பிறந்த
ஆண்டவரெல்லாம்!
பெண்ணே
உன் சிந்தை முடிவுகள்
உனக்கே சுமையாய்
இருப்பதில்
என்ன வித்தை
-கவிதா நோர்வே
19.03.2009