மு.தவின் மரணம்

This entry is part [part not set] of 27 in the series 20020819_Issue

மு.பொன்னம்பலம்


மு.தவின் மரணம் பற்றி திண்ணையில் நடந்துவரும் சர்ச்சைகள் பற்றி நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டபோதும் அவ்விவாதத்தில் தலையிடவேண்டும் என்ற ஆவல் எனக்கு எழாமல் போனதற்குக் காரணம் ஏற்கனவே இது தொடர்பாக சு.ரா அவர்கள் ‘தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம் ‘ என்ற கட்டுரையிலும், சி.மோகன் அவர்கள் ‘நடைவழிக் குறிப்புகள் ‘ என்ற நூலில் எழுதிய கட்டுரையிலும் மு.தவின் மரணம் பற்றி அநேகமாக சரியாகவே குறிப்பிட்டிருந்தனர் என்பதனாலேயே. இவற்றில் பெருந்தவறுகள் நேர்ந்திருப்பின் நாம் சுட்டிக்காட்டியிருப்போம். இருந்தாலும் இப்போது எமது பெயர்களும் இதில் இழுக்கப்பட்ட பின்னர் சிலவற்றை தெளிவு படுத்துவது அவசியம் என நினைக்கிறேன்.

நான் மு.த நடாத்திய சகல விஷயங்களிலும் பங்கு பற்றியவன். அவரை நிழல்போல் தொடர்ந்தவன். 1971ன் நடுப்பகுதியில் தனது சாதி எதிர்ப்பு போராட்டத்தை தீவிரப்படுத்தி, புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில் கிணறுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் தண்ணீர் அள்ளுவதற்கு உரிமை வழங்கும்படி எதிரே இருந்த காளி கோவிலில் மு.தவும், சு.வில்வரத்தினமும் (கவிஞர் சு. வில்வரத்தினம். அப்போது அவருக்கு வயது இருபது) உண்ணாவிரதம் இருந்தபோது பொலிசாரின் படுமோசமான குண்டாந்தடிப் பிரயோகத்திற்கு இலக்காகினர். பின்னர் சிறையில் தள்ளப்பட்டனர். சிறைக்குள் J.M.O வால் சிகிச்சை அளிக்கப்பட்டனர். ஒரு மாதம் கழித்து சிறையை விட்டு வெளிவந்த இருவரும் யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள டொக்டர் பிலிப்பிடம் சிகிச்சை பெறுவதற்காக சென்றனர். அவர்கள் உடல்களில் ( முதுகுப்புறத்தில் ) வரிக்குதிரைகளின் கோடுகள்போல இருந்த காயங்களைக் கண்ட அவர், அதிர்ச்சியுற்று அவற்றை புகைப்படம் எடுக்கச் செய்ததோடு இதற்குப் பொறுப்பாய் இருந்த பொலிஸ் அதிகாரியோடு தொலைபேசியில் வாக்குவாதப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளித்தார்.

தளையசிங்கம் பொலிசாரிடம் அடிவாங்கிய பின் 1 3/4 வருடங்களே உயிருடனிருந்தார். 1971ன் நடுப்பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம், அதன்பின் ஒரு மாதச் சிறை. அதன்பின் உடல் நலம் குன்றிய நிலையில் அடிக்கடி நோயுற்று பாடசாலைக்கு போகாது லீவு எடுத்து நிற்றல். 1973ன் ஆரம்பத்தில் நோய்வாய்ப்பட்டு தனது எழுத்து, இயக்க வேலைகள் அனைத்தையும் துறந்த நிலையில் 3 மாதங்கள் நோயோடு கிடந்து, இறப்பதற்கு முதல் நாள் வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அடுத்த நாள் நோயின் காரணம் என்னவென்று தெரியாத சிக்கலான நிலையில் தனது 37வது வயதில் இறந்து போகிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் செய்தவை மிகச் சொற்பமே: பூரணி இதழை வெளியிடுவதில் ஆர்வங்காட்டியமை. அதை ஒரு ஆசிரியர் குழுவின் கீழ் இயங்க வைத்தமை. அதற்கு சில கட்டுரைகள் எழுதியமை. என்.கே. மகாலிங்கம் அவர்களின் திருமண நிகழ்ச்சியில் பங்கு பற்றியமை. மண்டைதீவு இலக்கியக் கூட்டத்தில் பங்கு பற்றியமை.

மு.த பொலிசாரிடம் அடிவாங்குவதற்கு முதல் எதிலும் உற்சாகமாக இயங்கியவர். ஆனால் பின்னர் அடிக்கடி நோய்வாய்ப் படவும் கடைசி மூன்று மாதம் தொடராக நோயில் கிடந்து இறந்து போகவும் பொலிசாரின் அடியே காரணம் என்பதை ஊரில் எவரும் அறிவர்.

***

mahalingam3@hotmail.com

muttu@earthlink.net

Series Navigation

மு.பொன்னம்பலம்

மு.பொன்னம்பலம்