This entry is in the series 20101002_Issue

மராத்தி மூலம் : அனுராதா படேல் ஆங்கிலத்தில் : சந்தோ ~; பூம்கர் தமிழில் : எல்.பி.சாமி



மழை வரப்போகிறது இப்போது !
சாலையோர அனாதைப் புல்வெளிகள்
முகமற்ற மனிதர்கள்
மண்டிக்கிடக்கும் செடிகொடி
இலைகள் ஆகியவற்றில் படிந்துகிடக்கும்
அழுக்குகளைத் துடைத்துச் செல்லும்.

எல்லா திசைகளும்
சிறு நம்பிகைகளும்
வெளிச்சம் பெறும்
சில நேரங்களில்
நான்கூட கவிஞனாவேன்.

நீலவானத்தின் கீழுள்ள
எந்தக் கிராமமும்
என்னுடையதாகும்.

நான் நடக்கும் பாதை
எல்லையற்று விரியும்
தொடுவானத்திற்கு அழைத்துச்செல்லும்.
அங்கே
என்னைச் சிறைப்படுத்திய காற்று
கட்டவிழும்.
உதிர்ந்து சிதறிய இலைகளின் மீது
நடக்கும்போது
சூறைக்காற்றும் அஞ்சும்
நானுந்தான்.

எல்லா காலத்திலும்
புல் மற்றும் புவியின் வாசம்
எனது வாழ்க்கையை
இயல்பாய் வருடி
திரும்ப இயலாத பாதையில் இட்டுச்செல்லும்.

அதற்குப் பின்னால் … .. ..
கட்டுக்கடங்காமல் எங்கோ எரியும்
காட்டுத் தீயின் சூட்டால்
வானமும் சிவக்கும்.
நட்சத்திரங்களின் நடுவில் கிடக்கும்
கருப்பு புலிகள் மீண்டும் கண் விழிக்கும்.
புனிதமான அமைதி பரவும் எங்கும் !
மழை வரப்போகிறது இப்போது !

lpsamy@ymail.com

Series Navigation