மரணச் சமாதியின் குருவி
ஹெச்.ஜி.ரசூல்

கிணற்றுநீரில் மிதந்த நிலவை
கைதூக்கிவிட யாருமில்லை.
இருளில் மூழ்கியது நிலவு.
வெளியேற்றப்பட்ட நட்சத்திரங்கள்
பொடிப் பொடியாய் பொடிந்து
அந்தரத்தில் நொறுங்கிக் கொண்டிருக்க
எல்லாதிசைகளிலும் உதிக்கும்
அபூர்வதருணத்தை எதிர்நோக்கி
மெளனமாய் காத்திருந்தது வானம்.
செடிகளில் பூத்த பிச்சிகள்தோறும்
உட்கார்ந்திருந்த பனித்துளிகளில்
கண்ணீர்துளியும்
அழுகைதுளியும்
ரத்தத் துளியும்
மாறி மாறி உருக்கொள்ள
துளிகளில் உருண்டோடும் காலம்.
கொம்புமுளைத்த ராட்சச பூதங்கள்
ஒவ்வொன்றாய் உருமாறி எழுகின்றன.
எங்கும் பிணக்காடு
வனங்களிலும்
பதுங்குக் குழிகளிலும்
வெடிச் சிதறல்களில் முகமிழந்த
கூடிழந்த சின்னஞ்சிறு புறாக்களின்
அம்மாக்களை காணவில்லை.
விடுதலையை மீட்கமுயன்று
தோற்றுப் போகாமல்
பிணமாகிப் போனவர்களின்
உயிர்த்தெழுதல் குறித்து யோசிக்கிறது
மரணச் சமாதியின் குருவி.
mylanchirazool@yahoo.co.in