பிதாவே..எங்களை மன்னியும்!

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

புதியமாதவி


====

பரமப்பிதாவே.. எங்களை மன்னியும்
பிழைத்திருப்பதற்க்காக
நன்றி சொல்ல
எங்களால் முடியாது.
பிழைத்திருப்பதே
பிழையாகிப்போனதால்
அச்சுப்பிழையில்
அர்த்தமிழந்துவிட்டது உன் வாசகம்.

பரமப்பிதாவே எங்களை மன்னியும்
கோழிமிதித்து குஞ்சுகள் மாண்டன
கருவறையே கல்லறையானது
முலைப்பாலில் உயிர்க்கொல்லி
ஒப்பாரியில் உன் சங்கீதம்.
பரமப்பிதாவே…
எங்களை மன்னியும்..!

பரமப்பிதாவே.. எங்களை மன்னியும்
இப்போதாவது-
உயிர்த்தெழுவது எப்படி என்பதை
எங்கள் துடுப்புகளுக்கு
சொல்லிக்கொடும்..
உடைந்தப் படகுகளிலிருந்து
விரியவேண்டும் எங்கள் வலைகள்.

—-
புதியமாதவி,மும்பை.
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை