This entry is in the series 20051014_Issue

நாகூர் ரூமி


====

எப்போதுமே மோனத்திலிருக்கின்றன
உன் பாறையின் இதழ்கள்.
எனினும்
நுரையீரல் நிறைக்கிறது
அவ்விதழ்களின் நறுமணம்.

ஊழிப்பேரலைகள்
உருண்டுவந்தடைத்தாலும்
பாதை மாற்றிக்கொள்ளாது உன் மெளனம்.

வாக்குத் தவறுவதும்
வாழ்க்கை தவறுவதும்
ஒன்றுதான்.
பேச்சில் பயனில்லை
மூச்சைக் கவனி.

ஒரே பாடல்
ஒரே மெட்டு.

எனக்குத் தெரிந்த எந்த வரிசையிலும்
வைக்க முடியவில்லை
உன் பாடலை.

கனவுகள் காணாத உன் கண்களே
என் கனவுகளாகிப் போயின.

உன் நறுமணத்தை நான் நேசிக்கிறேன்
பஞ்சடைத்த நாசியுடன்
படுக்க வைக்கபட்ட என்
தலைமாட்டுப் பக்கம் வாசமூட்ட
அது பயன்படாத வரை.

உன் மெளன முட்டைகளை
நான் கவனமாக அடைகாப்பேன்
சம்மதக் குஞ்சுகள்
வெளிவரும் வரை.

(வெள்ளை ரோஜாவுக்கு)

ruminagore@gmail.com
1:51 PM 10/8/2005

Series Navigation