This entry is in the series 20040226_Issue

திலகபாமா


வடை சுட்ட பாட்டி இறந்த பின்னும்

கதை சொன்ன முப்பாட்டனுக்கப்புறம்

மூணு தலைமுறை கல்லூரி போன பின்னும்

இன்னும் கண்ணில் படுகின்றன

காகங்கள் வடையோடும்

காலடியில் பல நரிகளோடும்

காகம் மனம்திறந்து

பாடும் கானம் சுகந்தமென்று

காத்திருப்பதாய்

எச்சில் ஒழுக நரிகள் கதைக்க

வடை பறிபோகும் பயத்தில்

கால் மாற்றியும் அலகு மாற்றியும்

நரிகளுக்காய் பாடித் தொலைக்கும் காகங்களை

முட்டைக்குள் சிறை இருக்கும்

நாளைய காகங்கள் கேலி செய்கிறது.

இத்தனை பிரயத்தனங்களோடு

நரிகளுக்கேன் நம் கச்சேரி என்று

திறக்கின்ற பாடல்களின் போது

வடைகளோடு காகமும்

விழுந்து விட வேண்டுமென்ற

பிராத்தனைகளோடு நரிகளும்

—-
mathibama@yahoo.com

Series Navigation