நி னை வு ப் பு கை

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

ஞானவள்ளல்


r e m i n i s c e n c e

My soul arose at dawn and, listening, heard

One voice abroad, a solitary bird,

A song not master of its note, a cry

That persevered into eternity.

My soul leaned out into the dawn to hear

In the world ‘s solitude its winged compeer

And, hearkening what the Angel had to say,

Saw lustre in midnight and a secret day

Was opened to it. It beheld the stars

Born from a thought and knew how being prepares

Then I remembered how I woke from sleep

And made the skies, built earth, formed Ocean deep.

– sri aurobinder

—-

—-

ஆமாம். நான் விழித்துக் கொண்டு விட்டதாகவே நினைக்கிறேன். நல்லமைதி. வெளியே சுத்த ரகசியம் போன்றதோர் உலகம். அது அறியக் காத்துக் கிடக்கிறது என்றே தோன்றுகிறது. இந்த அனுபவம் என்னைத் தவிர யாருக்கும் வாய்க்கவில்லை என்பதே பிரமிப்பானது. சந்தோஷமானது. மனநிறைவானது. கண்களை எப்போது யார் செல்லமாய் மூடி மறைத்தார்கள் தெரியாது. அந்த தேவதைகள்ி தற்போது விரலை நெகிழ்த்திக் கொண்டனர் போலும். சரி, கண் அப்போது, திறநதிருந்ித போது கண்ட காட்சிப் பதிவுகளின் தொடர்ச்சியாக இல்லையே… புலப்படாத வேறு உலகமாக அல்லவா இது இருக்கிறது. ஆகா, நான் வேறு உலகத்துக்குள் வந்து விட்டேனா. உலகம் இத்தனை இணக்கமாகவும் அழகாகவும் அமையும் என யூகிக்கவும் ஒருவராலும் கூடாது எனவே நினைத்து, அது எனக்கு வாய்த்ததை எண்ணி அந்த ரகசியப் பகிர்வின் ஆனந்தத்தில் புளகங் கொள்கிறன். உலகம் உனக்கானது… ஆம், இதோ இது, இந்த உலகம் எனக்கானது. சரி, எனில் உன்னை இநத உனக்கான உலகத்துக்கு அனுமதித்த தேவதை யார் ? உலகம் தேவதைகளால் ஆனது. அதை உணர மனிதர்களுக்கு தேவதைகள் அபூர்வ கணங்களில் மனது வைக்கின்றன போலும்.

நான் விழித்தது தற்செயல்தான்…. என் செயல் அல்ல என்கிற அளவில்… என நினைத்த கணம் ஓர் சிறகதிர்வு எனக்குத் துல்லியப் படுகிறது. தனக்கே தெரிகிற இதயநாதம் போலிருக்கிறது அது. ஆயினும் வெளிக்காற்று உடலினுள் நுழைகிறாப்போல அதை உணர்கிறேன். ஒரு பறவை என்னில் இருந்து பறக்கக் கிளம்புகிறதா என்ன ? இத்தனை நாள் அப்பறவை என்னில் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. என்னில் இருந்து வெளிக்கிளம்புகிறதோ அல்லது என்னுள் எனைநோக்கி வந்து அமர்கிறதோ என்றே சரியாகப் புரியவில்லை. சில தருணங்களின் அழகில் இவை பொருட்டல்ல என்றே ஆகிவிடுகிறது. உள்ளே சிலுசிலுக்கும் காற்று நிறைகிறதைப் பார்க்கையில் அது ஒருவேளை வெளிக் கிளம்பும் என்றே எடுத்துக் கொள்ளலாமாய் இருக்கிறது. ஆமாம் அது வெளியே சிற்றுலாவல் எனக் கிளம்புவதான எத்தனமும் தெரிகிறது. ஏனென்றால் அந்த இதயத்தின் புத்ததிர்வு இப்போது அடங்கி விட்டது. காற்றின் குளிர்ந்த ஸ்பரிசமும் சிறிது வெப்பம்-மாறிவிட் டிருக்கிறது.

பறவைதான் அது. அதோ தெரிகிறது. நான் அதைப் பார்வையால் பின்தொடர முடிகிறது. அது குயிலா காகமா தெரியவில்லை. அது விசேஷமல்ல. சிற்றாய்வுகளுக்கான கணம் அல்ல, அல்ல அது. கவிதைக் கணம் அல்லவா ? விநோதமான ஒரு சப்தத்தை அது வாயிலிருந்து சிந்துகிறது. சுருதிஒழுங்கற்ற சிற்றொலி என்றாலும் என்ன, அந்த ஒலியில் கிடந்த உண்மை – அது சிலாக்கியமானது அல்லவா ? சுருதி என்பது மனிதப்போலி மதிப்பு. இது இயற்கையின் சுருதி. ரகசியப் பரிவர்த்தனை மகோற்சவம். என்ன அழகான ஒரு சிர்ப். எதையோ பார்த்தபடி அது செல்வதாகவும், பார்க்கிற காட்சிகளைப் பதிவு செய்ய சிறகை விரிய விரித்து அது அலையெடுக்கிறதாகவும் காற்றில் நீந்துவதாகவும… என்ன அழகான சப்தம் அது. என்னால் அதைப் புரிந்து கொள்ள இயலுமானால் எத்தனை சிலாக்கியமாய் இருக்கும். எனது பார்வையை விட்டு அது வெளிவானத்தில் துீர விலகிக் காணாமல் கரைந்துகொண்டே போகிறது. அது கிளம்பி எதையோ அறிவித்தபடி ஆனால் காட்சியில் இருந்து அது மறைந்த கணம் சிற்றொளிக் கதிரை வானில் என்னால் காண முடிகிறது.

பறவை என்னை நோக்கி ஒளியொன்று புறப்பட்டு வருகிறதை அறிவிக்க முன்வந்ததா தெரியாது. மிகச் சன்னமான நுணுக்கமான இழையான ஒளி. காலையின் ஒளியா அது. மழையில் போலும் அதில் குளிக்க மனங் கொள்கிறது உடல். ஒளிக்குளியல். தளிர்க்குளிர். பறவையை இக்கணங்களில் மறந்துவிடலாமாய் இருக்கிறது. ஒளி அல்ல உளியோ ? மெல்ல ஒரு பனிச் சிற்பமாய் நானே என்னில் இருந்து உருவாகிறேனா தெரியவில்லை. உணர்வின் சூட்சுமங்கள் உசுப்பப் படுவதான சிற்றொலிகள் என்னில் வேறுவிதமான அதிர்வுகளை உணர வைக்கின்றன. நான் எனக்குப் பரிச்சயமானதோர் பூமியை சல்லாத் துணியடியில் போல பதிவு செய்து கொள்ளலாமா ? இதுவோர் வேடிக்கை அல்லவா ? வெண்துகில் என என்னை நோக்கி கிரணம் ஒன்று வந்த கணம், அது எனக்கு வெண்துகில் விலக்கி – அதுவும் எனக்கு முன்பரிச்சயமானதோர் உலகம் போன்றதை மீளவும் அறிமுகம் செய்வதாய் இருக்கிறது.

அதல்ல விஷயம். நானே பறவை. நானே ஒளி. நானே சகலமும். இதோ வெண்துகிலை விலக்குகிறவன் நானே. இந்த உலகைச் சமைத்துக் கொண்டிருக்கிறவன் நானே என ஆகிறேன்.

அதிகாலை விடிகிறது.

—-

from the desk of sankarfam@vsnl.net

Series Navigation